பார்த்திக்கு ஊட்டிக்கொண்டிருந்த நிலவழகியின் முகம் இன்னும் சோர்ந்துதான் இருந்தது. நிலாவை சுற்றி சிறுவர்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
மயில்சாமி அருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகராஜின் பார்வை நிலாவைத்தான் வருடிக்கொண்டிருந்தது. ‘பார்த்திக்கு நான் ஊட்டிக்கிறேன்.. நீ போய் மாப்பிள்ளைக்கு சாப்பிட கொடு..” என அம்பிகா நிலாவிடமிருந்து தட்டை வாங்க.. ‘நான் சாப்பிட லேட் ஆகும் ஆன்ட்டி.. பார்த்திக்கு ஊட்டி முடிச்சிட்டே வரட்டும்..” என்றான் கலையரசன்.
நாத்தனாரின் மகள் கல்யாணத்திற்கு போகவேணாம் என நேற்று தந்தை சொன்னதிலேயே அதிர்ச்சியானவள் தற்போது கலை பேசியதை நினைக்க உள்ளுக்குள் பயம் வந்ததோடு கீதாவிற்கு பசியே போய்விட்டது.. அவன் சொல்வதுபோல் தன் வீட்டு விசேஷத்திற்கு தாய் தந்தையர் வரவில்லையென்றால் அவளின் மாமியார் மூத்தார் மனைவி என அனைவரும் கீதாவை ஒரு வழியாக்கிடுவார்கள்.. கூடவே அவளின் நாத்தனாரும் சேர்ந்து கொள்வாள்.
ஆனாலும் தன் மகள் இருக்கும் இடத்தில் நிலா இருப்பதுதான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்.. நாம் நினைத்தது மட்டும் நடந்திருந்தால் கடைசி வரை தான் வைத்ததே இங்கு சட்டமாகியிருக்கும்.. அனைத்தும் இவளால்தான் என நிலாமீதுதான் கோபம் வந்தது. எனினும் வெளிகாட்ட முடியாத இயலாமையில் அமர்ந்திருந்தாள்.
கீதா அமைதியாக அமர்ந்திருக்க.. தட்டில் அனைத்தும் பரிமாறி எடுத்து வந்த செல்வி.. ‘கலை புதுப்பொண்டாட்டியோட உக்கார்ந்து சாப்பிடுவான்.. நீ எதுக்கு நடுவுல.?” என முனுமுனுத்து அவளின் மடியில் டிபனை வைத்து.. ‘உனக்கு சுடச்சுடதான சாப்பிட பிடிக்கும்.. இப்போவே சாப்பிடு..” என்று தானும் சாப்பிட அமர்ந்தாள்.
‘நிலாம்மா.. டிபன் பிரமாதம்..” என மயில்சாமி பாராட்ட.. சின்னதாய் சிரித்தாள். அனைத்தும் ருசித்த கீதா.. ‘சமையல் செய்தே எல்லாரையும் கவுத்துடுவா போலவே..” என மருகினாள்.
‘சட்னி வைக்கட்டுங்களா.?” என செல்வராணியிடம் வந்த சுவாதி.. ‘அப்பாகிட்ட எப்போ கேட்பிங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க கிளம்பிடுவோம்..” என கிசுகிசுத்தாள் தவிப்போடு.
‘சாப்பிட்டு முடிக்கட்டும்..” என தானும் கிசுகிசுத்து.. ‘அப்புறம் மாமா.. லாக்டவுன்ல பிஸ்னஸ் ரொம்ப டல்லாயிருக்கும்ல..?” என மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் செல்வராணி.
‘லாக்டவுன்ல கொஞ்சம் சரிவுதான்னாலும் ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடியே பிஸ்னஸ் டல்லாகிடுச்சிம்மா.. அப்போ மாதிரி இப்போ வருமானம் கிடையாது.. இப்போ நாலஞ்சு கடைங்களுக்குத்தான் கொடுத்திட்டிருக்கோம்.. ஆள்கூலி பராமரிப்பு போக பதினைஞ்சிலயிருந்து இருபதாயிரம் வரைக்கும்தான் வருமானம் வருது.. ஆனா அது ஒன்னும் பிரச்சனையில்லை.. லட்சங்கள்ல புரளும்போதே வீட்டு செலவை அம்பிகா பத்தாயிரத்துக்குள்ள முடிச்சிக்குவா.. இப்போ கதிரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டான்..” என்றார் எதையும் மறைக்காமல்.
முன்பு நிறைய சம்பாதித்தேன் என்ற கர்வமும் இல்லை.. தற்போது அது குறைந்து விட்டது என்ற வருத்தமும் இல்லை.. என நாகராஜனை பெருமையாய் நினைத்தவள்.. ‘ஏன் கதிர்.. அப்பா பிஸ்னஸ்ல உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா.?” என்றாள்.
‘இன்ட்ரஸ்ட் இல்லன்னு இல்லைங்க.. அவர்தான் படிக்கல.. நாங்களாவது படிக்கனும்னு எங்களை தறி பக்கமே கூட்டிட்டு போக மாட்டார்.. ஆயுத பூஜைக்கு மட்டும்தான் குடும்பத்தோட போவோம்.. எனக்கு நெய்யவும் தெரியாது.. தெரியாத வேலைல எதுக்கு இறங்கனும்னு தெரிஞ்ச வேலையை பிடிச்சி செய்துட்டிருக்கேன்..” என்றான்.
தன் அக்கா இப்படி தேவையில்லாததை பேசும் ரகமில்லையே என்பதுபோல் பார்த்தான் கலை. தம்பியின் பார்வை புரிந்தாலும்.. ‘ம்.. உன் தங்கை கல்யாணத்துக்கு நீ என்ன செய்த..?” என்றாள் கதிரவனிடம்.
‘இத்தனை வருச பிஸ்னசுல எத்ததை பேரை பார்த்திருப்பேன்..” என சிரித்தவர்.. ‘அவ எதுனா தங்கைக்கு செய்யனும்னு உங்களை என்கிட்ட ரெக்கமண்ட் செய்ய கேட்டாளா.?” என்றார் நாகராஜ்.
‘மா..மா..” என செல்வராணி தடுமாற.. ‘எனக்கு தெரியாம நிலா வாங்கிக்கமாட்டா..” என பெருமையோடு சொல்லி.. ‘நிலாக்கு செய்யனும்னு என் பேரனோட அப்பா சொல்லி அவங்கம்மா உங்ககிட்ட கேட்டிருக்கா.. அதானம்மா.?” என்றார்.
ஆம் என்பதுபோல் செல்வராணியின் தலை தன்போல் ஆட.. நாகராஜன் நிலாவைப் பார்க்க.. ‘அப்பா..” என நிலா தடுமாற..
நாகராஜன் கலையரசனை பார்க்க.. ‘இந்த விசயம் எனக்கு தெரியாதுங்க அங்கிள்..” என்க.. நாகராஜ் அம்பிகாவைப் பார்க்க.. கணவன் என்ன சொல்வாரோ என பதட்டத்தோடிருந்த அம்பிகா செய்வதறியாத பார்வை பார்த்தார்.
குமார் மனம் புண்படும்படி ஏதும் சொல்லிடுவாரோ என யோசித்த கலையரசன்.. ‘இந்த வியசம் தெரியலன்னாலும் குமாரண்ணாக்கு நிலாமேல உள்ள பாசம் தெரியும் அங்கிள்.. நிலா மாத்திரை சாப்பிட்டதும் என் வீட்டுக்கு வந்துட்டு போய்ட்டிருக்க ஒரே சொந்தம்னு ரொம்ப கலங்கினாரு.. நீங்க கல்யாணத்துக்கு கூப்பிடலயேன்னு வராம இருந்திடாதிங்கன்னு ஆன்ட்டி சொன்னதுக்கு..
சற்று முன் எத்தனை வேதனையடைந்தார்.? கண் கலங்கினார்.. தோத்துட்டேன்னு அதையும் எத்தனை இலகுவா சொல்றார்.. என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லையே என்ற குழப்பத்தோடு செல்வி பார்க்கவும்..
‘என் பொண்ணு செய்தது ஊர் உலகத்துல நிறைய நடக்குதுதான்.. ஆனா எனக்குத்தான் இன்னமும் அதை சாதாரணமா எடுத்துக்க முடியல.. அப்பாம்மாக்கு தெரியாம கல்யாணம் செய்யிறது தப்புன்னு புரியுது.. அவங்களை நாம பிரிச்சிடுவோம்ன்ற பயத்துல முன்யோசனையோட போலீஸ்டேசன் வரைக்கும் கூட போக தெரியும்.. இப்படி வீட்டுக்கு தெரியாம ஓடிப்போய் செய்துக்கிற கல்யாணத்துனால பெத்தவங்களுக்கு எத்தனை வேதனை அவமானம்னும் தெரியும்.. அத்தனையும் தெரிஞ்சே செய்யிறவங்களை நான் எதுக்கு மன்னிக்கனும்.?”என்றார் கோபமாக.
கலை..‘அங்கிள்..” என நாகராஜனின் கையை ஆதரவாய் பிடிக்கவும்.. ‘அன்னைக்கு அவ காணாம போனப்ப கூட காலம் கெட்டு கெடக்குதே.. காலேஜ் போய்ட்டு வர வழியில எதோ தப்பு நடந்திருக்கும்னுதான் நினைச்சனே தவிர.. ஒருத்தனை காதலிக்கிற அளவுக்கு நம்ம பொண்ணுக்கு பக்குவம் வந்திருக்கும்னு நான் யோசிக்கவே இல்லங்க தம்பி..” என கண்கலங்க..
‘ஒரு குழந்தை பிறந்ததும் அவதான் நம்ம வாழ்க்கைன்னு நினைச்சி.. இப்படி வளர்க்கனும் அப்படி ஆக்கனும்னு பல கனவுகளோட வளர்க்கிறோம்.. கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம் நீ எப்படியும் ஆக்க வேணாம்.. எல்லாம் நானே பார்த்துக்கிறேன்னு என்னை தூக்கியெறிஞ்ச பொண்ணு.. இப்பவும் எனக்கு வேணாம்தான்..” என திடமாக சொல்லி..
‘ஆனா அவளை ஒதுக்க முடிஞ்ச என்னால என் பேத்தி பேரன்களை ஒதுக்க முடியலயே..” என்றார் உடைந்த குரலில்.
‘அப்பா..” என தந்தையருகே தவிப்போடு வந்தாள் நிலவழகி.
‘எத்தனை கோபம் உங்கக்கா மேல இருந்தாலும்.. அது என்னோட போகட்டும்.. எனக்குத்தான அவ துரோகம் செய்தா..?” என்றார் இலகுவாக.
‘அப்பா..” என நிலா கண்கலங்க.. ‘ம்.. எதுக்கு இந்த பொய் அழுகை..” என நாகராஜன் செல்லமாய் முறைக்க.. தந்தை முறைப்பு பொய்யென அறியாத நிலாவின் கண்ணீர் அதிகமாக..
‘மருமகனே.. கவிபாப்பா பிறக்கும் போது நிலா நாலாவதுதான் படிச்சிட்டிருந்தா.. எத்தனை மிரட்டினாலும் அடிச்சாலும் கவிகுழந்தையை பார்க்காம இந்த நிலாகுழந்தை வீட்டுக்கு வந்ததில்ல.. லீவ் நாள்ல எனக்கு தெரியாம குழந்தையை பார்க்க போகவேண்டி.. அவங்ண்ணன்கிட்ட அப்பா கேட்டார்ன்னா எதுனா பொய் சொல்லி சமாளின்னு திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டு, இப்போ எதுக்கு இந்த அழுகைன்னு கேளுங்க..”என சிரித்தார்.
தந்தையின் சிரிப்பில் மகிழ்ந்த நிலா.. தான் ஏமாற்றி சென்றதும் தந்தைக்கு தெரிந்திருக்கிறதா என அசடாய் முழிக்கவும்.. ‘இருநூறு பேர் பக்கம் நம்ம தறியில வேலை செய்தாங்க.. அத்தனை பேரோடு குடும்ப பின்னனியும் தெரிஞ்சி வச்சிருப்பேன்.. அப்படியிருக்க என் பொண்ணு எங்க போறா வாரன்னு பார்க்காம விட்ருவனா.?” சிரிப்போடு கேட்டு..
‘என் கோபம் உங்கக்காமேலயும் அவ புருசன் மேலயும்தான்.. என்னை ஏமாத்தினாலும் புருசனும் பொண்டாட்டியும் உன்மேல உசிராத்தான இருக்காங்க..? அதனாலதான் நீ அங்க போய் வரதை பெருசா கண்டுக்காம விட்டேன்..” என எடுத்துரைத்து..
‘உனக்கு என்ன செய்யறனோ அதுல கொஞ்சமும் குறையாம கவிபாப்பாக்கு செய்யபோறேன்.. உங்கக்கா இல்லாமத்தான் கவிம்மாவும் பார்த்தியும் வந்தாங்களா.? அவங்களுக்கு செய்ய எனக்கு உரிமை இருக்கும்போது.. அவங்க உரிமையை நான் எதுக்கு மறுக்க போறேன்..?” என்றார்.
‘அப்பா..” என்ற நிலாவின் முகம் ஒளிவெள்ளம் வீச.. ‘ஆனா ஒன்னு..” என்றார் கூரிய பார்வையோடு.
நிலாவின் முகம் மீண்டும் பதட்டமாக.. ‘உங்கக்கா உறவு உங்களோட மட்டும்தான் இருக்கனும்.. என் வரை வரக்கூடாது..” என்றார் சற்றே கடினமாக.
நிலாவின் முகம் சட்டென வாடிட.. ’தவறை மன்னிக்கலாம்.. தப்பை மன்னிக்க முடியாது.. காதல் தப்பில்ல, ஆனா பெத்தவங்களுக்கு தெரியாம அவங்களை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கிறது என்னை பொருத்தவரை மாபெரும் தப்பு.. அதை மன்னிச்சா நாளைக்கு அவ குழந்தையும் அதையே செய்யும்..
உங்கக்கா புருசன் நல்லவனா இருக்கவும் ஆச்சு.. எல்லாரும் ஒன்னுபோல இருக்கமாட்டாங்க.. இன்னும் ஐஞ்சாறு வருசத்துல கவிபாப்பா ஒரு பையனோட வந்து நின்னா எந்த முகத்தை வச்சிட்டு ரெண்டுபேரும் மகளை தண்டிப்பாங்க..?” என்றார்.