நிலா பெரிதாய் பதற.. ‘நெருப்புனா சுட்டுடாது.. ஆனா அது சுடும்னு தெரியப்படுத்தறது நம்மளோட கடமை.. தப்பு கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு குழந்தைங்க மனசுல பதியக்கூடாது.. என்னை பொருத்தவரை தப்புனா அது எப்பவும் தப்புதான்..
இன்னும் கொஞ்ச நாள்ல தாத்தா ஏன் நம்ம அப்பாம்மாகிட்ட பேசறதில்லன்னு கவிம்மா யோசிப்பா.. இதுதான் காரணம்னு தெரியும்போது அதையே நாமும் செய்ய கூடாதுன்னு கண்டிப்பா நினைப்பா..” என்றார் நம்பிக்கையாக.
தந்தையின் கோபத்தில் நியாயம் இருப்பதோடு அது பின்வரும் சந்ததிகளுக்கு நண்மையே எனப் புரியவும்.. ‘அக்கா உங்களை கஷ்டப்படுத்த மாட்டாங்கப்பா..” என்றாள் தானும் நம்பிக்கையாக.
அச்சோ.. இதென்ன இத்தனை வருசப்பகை இப்படி புஷ்வானமா போச்சி.? என ஏமாற்றமடைந்தாலும்.. ம்.. பார்க்கலாம் இந்த அநாதைப் பையன் அப்படி என்னத்தை செய்துடறான்னு.. என நினைத்த கீதாவிற்கு அவளின் கணவனிமிருந்து அழைப்பு வரவும்.. ‘ம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடறேன்..” என சுருக்கமாய் பேசி முடித்தாள்.
தற்போதுதான் கணவன் சாப்பிடாமல் இருப்பது நியாபகம் வர சங்கடத்தோடு கலையை பார்த்தாள்.. ‘என்னை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல போய் எதுனா சாப்பிட எடுத்து வா..” என்றான் சிரிப்போடு.
ஆனந்தன் வர.. ‘குளிச்சி வர இவ்வளோ நேரமா.. ? வந்து உக்காருங்க..” என செல்வராணி சாப்பிட அழைக்கவும்.. ‘வாங்க மாமா.. நானும் இனிதான் சாப்பிடனும்..” என பக்கத்தில் இடம் காட்டினான் கலையரசன்.
‘பதினொன்ற மணியிலயிருந்து பனிரண்டரை வரைக்கும் நல்ல நேரம்.. அந்த நேரத்துக்கு கிளம்பளாங்களா சம்பந்தி..” என்றார் நாகராஜ்.
மயில்சாமி..‘எல்லாருங்களா.? நீங்க போய் வாங்க சம்பந்தி.. இங்க மாடு கன்னுகுட்டியை விட்டுட்டு எங்கயும் நகரதுக்கில்ல..” என்றார் தன்மையாக.
நாகராஜன்..‘கல்யாணம் முடிச்சி முதல்முறையா போறோம்.. எல்லாரும் போனாதானுங்க நல்லாயிருக்கும்..” என அதீத ஆசையோடு சொல்ல..
‘இன்னொரு நாளைக்கு இரண்டு நாளைக்கு தங்கற மாதிரி வரோம்ங்க..” என இவர்கள் பேசிக்கொண்டிருக்க..
தன்னையும் தன் தகப்பனையும் அவமதித்த கீதா முன்பே பணத்தை கொடுத்து கலையையும் நிலாவையும் பெருமைபடுத்த வேண்டும் என நினைத்த சுவாதி மேலே போய் பணத்தை எடுத்து வந்து.. ‘ஏங்க..“ என குமாரிடம் பேகை கொடுக்க.. கீதா ஆவலோடு பையை பார்க்க.. பையை வாங்கியவன் ‘சார்.. இதை வாங்கிக்கோங்க..” என கலையிடம் நீட்டினான்.
பையை பார்த்து பணமாத்தான் கொடுப்பாங்க போல.. ஆனா என்னவோ லட்சரூபாவை கொடுக்கிற மாதிரி பையோட கொடுக்கிறான்.. என யூகித்த கீதாவிற்கு எவ்வளவு இருக்கும் என அறிய ஆவல் எழ.. பையையே பார்த்திருந்தாள்.
குமார் ஆச்சர்யமாய் பார்க்கவும்.. ‘என்ன குமார் அப்படி பார்க்கிறிங்க.?” என்றான் ஆனந்தன்.
‘இத்தனை வருசத்துல இப்பதானுங்க என்னைப் பத்தி பேசுது.. வீட்டுக்கு வரும்.. குழந்தைங்ககிட்டயும் சுவாதிகிட்டயும் மட்டும்தான் நிலாம்மா பேசும்.. நான் எதாவது கேட்டா கூட அவங்கக்காகிட்ட பதில் சொல்லிட்டு ஓடிடும்..” என்றான் சந்தோசத்தோடு.
இது கதிரவனுக்கும் அம்பிகாவிற்கும் தெரியும்தான்.. ஆனால் நாகராஜனுக்கு ஆச்சர்யமாய் இருக்கவும் மகளை அப்படியா என்பதுபோல் பார்க்க.. ‘அது..” என தடுமாறியவள் அப்படித்தான் என்பதுபோல் தலையசைக்க.. மகளை பெருமையாய் பார்த்தவர்.. ’டிபன் பார்த்து பரிமாறுடா..” என்றார்.
நிலவழகி பரிமாற.. இதென்ன பணத்தை வாங்கிக்காம சாப்பிட ஆரம்பிச்சிட்டான்.. இவர் வேற கடுப்புல இருக்கார்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பனுமே.. என்ன கொடுக்கிறாங்கன்னு தெரியாம எப்படி கிளம்புறது.? என உள்ளுக்குள் புலம்பிய கீதாவால் அதனை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை… ‘கலை.. ஒரு சகலை ஆசையா அன்பளிப்பு கொடுக்கிறார்.. அதை வாங்காம சாப்பிட உக்கார்ந்துட்ட.. அவருக்கு கஷ்டமா இருக்கும்ல..?” என்றாள் அக்கறையான குரலில்.
அட.. அட.. என்ன ஒரு அக்கறை..? என உள்ளுக்குள் சிரித்த கலை.. கொஞ்ச நேரம் மண்டையை உருட்டட்டும் என்று.. ‘வாங்கிக்கலாம்க்கா.. பசி வயித்தை கிள்ளுது.. சாப்பிட்டு வாங்கிக்கிறேன்..” என சாப்பிடலானான்.
‘ம்.. சார் போடாம இதை வாங்கிக்கோ கலைன்னு உரிமையா கொடுக்க சொல்லுங்க மாமா.. வாங்கிக்கிறேன்..” என்றான் கலை.
இந்த குமார் தராதரம் தெரிஞ்சி நடந்துக்கிட்டாலும் இவனுக்கு அது புரியலயே.. மடையன்.. மடையன்.. எவ்வளோ பெரிய பிரபலம் இவன்.. எத்தனை பெரிய போஸ்ட்ல இருக்கான்.. ஆனாலும் யாரை எங்க நிறுத்தனும்னு தெரியாத முட்டாளா இருக்கான்.. என கலையை கடுப்போடு பார்த்தாள்.
‘வாங்கிக்கோங்க கலை..” என குமார் சொல்ல.. கலைக்கு அழைப்பு வரவும்.. ‘அந்த ங்க.. கட் பண்ணிட்டு வாங்கிக்க கலைன்னு சொன்னாதான் வாங்குவேன்..” என கட்டளையிட்டு தன் மொபைல் அழைப்பை ஏற்றவன் பேசிக்கொண்டே அதிவேகமாக சாப்பிட்டலானான்.
‘ம்.. ம்.. இங்கருந்து ஒரு இரண்டரை மணிநேரம்..” என யோசித்து எதோ மனகணக்கு போட்டவன்.. நைட் ஏழு மணிக்கு நான் வந்துடறேன் சார்..” என மீண்டும் பத்து நிமிடம் பேசி இணைப்பை துண்டித்து நிலாவை பார்த்தவன்.. ‘என்ன பார்க்குற.? இன்னும் கொஞ்சம் போடு..” என கேட்க.. ‘எது வேணும்.? பொங்கலா கிச்சடியா.? கேசரியா..?” என்றாள்.
‘ம்..” என்ற முறைப்போடு பரிமாறி.. முதல்ல சாப்பிடட்டும் அப்புறம் பேசிக்கலாம் என அமைதியானாள்.
பின்னே அதையும் இரண்டு நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தவன்.. ‘மாமா.. இன்னும் அரை மணிநேரத்துல கிளம்பனும்.. அப்போதான் அங்க கொஞ்சநேரம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்.. நைட் ஏழு மணிக்கு நான் திருச்சி வந்தாகனும்..” என்றான்.
இதுக்குத்தான் காலைல அலாரம் வச்சிருப்பாங்களோ என நிலா யோசிக்க.. ‘இதை வாங்கிக்கோ கலை..” என பையை நீட்டினான் குமார். ம்.. என மெச்சுதலான பார்வையோடும் சின்ன சிரிப்போடும் பையை வாங்கியவன் அதை பார்த்ததும் அதிர்ந்துதான் போனான்.
‘அண்ணா.. என்ன இது இவ்வளோ பணம்..?” என அதனுள் இருந்த ஐந்து கட்டுகளையும் வெளியே எடுக்க.. அனைத்தும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள்.. ஒரு கட்டு ஒரு லட்சம் என வைத்துக்கொண்டாலும் ஐந்து லட்சமா..? கொழுந்திக்கு இத்தனை செய்யும் அளவிற்கு இவன் வசதியானவனா.? என அதிர்ந்து போனாள் கீதா.
கீதாவின் பார்வையறிந்தவன்.. ‘பெத்தவங்க அண்ணன் தம்பிங்கன்னு யார் உதவியும் இல்லாம.. தொழில்ல பல துரோகத்தை சந்திச்சாலும் மனம் தளராம உழைச்சி முன்னேறியிருக்கிங்க..” என கீதாவை பார்த்தவாறே பாராட்டி..
‘வயசுலயும் என்னை விட பெரியவங்க.. இப்போ சகலையாகிட்டோம்.. இனி இப்படித்தான் உரிமையா கூப்பிடனும்..” என அறிவுருத்தி.. ‘இரண்டாயிரம் தாள்களில் பத்து மட்டும் எடுத்துக்கொண்டவன்.. ‘உங்க அன்பு மட்டும் போதும்ண்ணா… மீதியெல்லாம் என் மகளுக்கும் மகனுக்கும் ஆனது.. அப்புறம் பார்த்தி என்னை டிஸ்யூம் செய்திடுவான்..” என சிரிப்போடு திருப்பினான் பணத்தை.
‘ப்ளீஸ் கலை.. இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசம்..” என்ற சுவாதி, எடுத்து சொல் என்பதுபோல் பரிதவிப்பாய் நிலாவைப் பார்த்தாள்.
‘உங்களுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கிறேன் கலை.. நீங்க யாரை கல்யாணம் செய்திருந்தாலும் எதாவது செய்யனும்னுதான் நினைச்சிருந்தேன்.. இப்போ என் நிலாம்மாவை கட்டியிருக்கிங்க.. இதெல்லாம் கம்மிதான்.. ப்ளீஸ் வாங்கிக்கோங்க..” என குமார் கலையிடம் பணத்தை திணித்தான்.
சுவாதியின் தவிப்பறிந்த நிலா.. ‘ம்.. எல்லாம் நிறைய இருக்கவும்தான கொழுப்பெடுத்து போய் செய்யிறாங்க..? பணத்துக்கு செலவா இல்ல..? கொடுங்க.. கொடுங்க பத்திரமா உள்ள வைக்கிறேன்..” என கலையின் கையிலிருந்து பணத்தை வாங்கியவள்.. ‘அத்தை.. சீக்கிரம் போய் உள்ள வைங்க.. இல்ல பாக்ஸர் பணத்தை திருப்பி கொடுத்திடுவார்..” என கலாவிடம் திணித்தாள் சிரிப்போடு.
கலா கலையரசனைப் பார்க்க.. ‘கலை.. இது குமாரோட கௌரவப் பிரச்சனை.. நீ வாங்கிக்கிறதுதான் அவருக்கும் மரியாதையை கொடுக்கும்.. மருமகளுக்கும் சந்தோசமா இருக்கும்..” என்றார் மயில்சாமி.
ம்.. கீதாக்காவை நினைத்துதான் அப்பா பேசுகிறார் எனப்புரிந்தவன்.. கவிபாப்பா விசேஷம் வரும்போது நிறைய செய்துக்கலாம்.. அப்பொழுதான் தனக்கு யாருமில்லை என்ற எண்ணமும் குமாரண்ணாவிற்கு குறையும் என நினைத்து.. ‘உள்ள வைம்மா..” என்றான் அன்னையிடம்.
‘அவர் சாப்பிடும்போதே காபி போட்டுட்டேன்..” என பிளாஸ்கோடு வந்த செல்வராணி அதனை ஊற்றி கொடுக்க.. தனக்கும் வேணும் என கலையும் குடிக்க ஆரம்பிக்க.. ஏழு மணிக்கெல்லாம் திருச்சில இருக்கனும்ன்னாங்களே.. என ஃபோனில் கலை பேசியதை எண்ணியவள்..
‘ஆமா..? அந்த திருச்சி மலக்கோட்டையை பிடிக்கத்தான் காலைல நாலு மணிக்கெல்லாம் அலாரம் வச்சிங்களா..? அப்புறம் ஏன் நான் எழுப்பியும் எழுந்து கோட்டையை பிடிக்க போகாம கோட்டை விட்டிங்க..?” என நிலா கேட்டதுதான் தாமதம்… கலைக்கு காபி பொறை ஏற..
‘அச்சோ.. பார்த்து பார்த்து..” என நிலா பதற.. கலை நிலாவை முறைக்க.. ‘ஓ…ஹோ.. அலாரசம் வச்சும் கோட்டை விட்டாச்சா..?” என ஆனந்தன் முனுமுனுத்து சிரிக்க.. ‘மாமா..” என ராகமிழுத்தவன் முகம் சிவக்க.. விசயம் புரிந்த குமார்.. ‘நிலாம்மா எழுப்பியும் இப்படி கோட்டை விட்டுட்டிங்களே கலை..” என ரகசிய சிரிப்பு சிரிக்க..
நிலவழகி தன்னிடம் நேரடியாக பேசியதில் சந்தோசமடைந்த குமார்.. ‘நிலாம்மா..” என சிரிப்போடு ஆரம்பிக்க.. கணவனை முறைத்த சுவாதி.. ‘நிலா.. மாமா பதினொரு மணிக்கெல்லாம் கிளம்பனும்னு சொன்னாங்க.. இப்பவே பத்தரை ஆகிடுச்சி.. போய் கிளம்பற வழியப் பாரு..” என விரட்டினாள்.
‘ம்.. க்கா..” என அறைக்குள் புகுந்தாள். ‘நீங்களும் வாங்க.. எல்லாம் பேக் பண்ணனும்.” என குமாரை அழைத்துப் போக.. ‘சரி மாப்பிள்ளை.. நிலா சமையல் சூப்பரா இருக்கு.. இங்க வந்து சாப்பிடுங்கன்னு உங்கக்கா கூப்பிட்டதால வந்தேன்.. கொஞ்சம் வேலையிருக்கு நான் கிளம்பறேன்.. அங்க போயும் உடனே கிளம்பிடாம இரண்டொரு நாள் தங்கிட்டு வா..” என உபதேசித்து ஆனந்தன் கிளம்பினான்.
நிலா முகம்கழுவி வெளியே வர.. முறைத்துக் கொண்டிருந்தான் கலையரசன்.. ‘என்ன விறப்பா நின்னுட்டிருக்கிங்க.? ஸ்டேசன்ல இருந்து போன் எதுவும் வந்ததா.?” என அசால்ட்டாய் கேட்க..
‘எதுக்கு இத்தனை நேரத்துக்கே எழுந்தன்னு மாமா கேட்டாங்க.. அலாரம் அடிச்சதால எழுந்துட்டேன்னு உண்மையை சொன்னேன்.. இதுக்கெதுக்கு உங்களுக்கு இத்தனை கோபம் வருது..?” என தானும் முறைத்தாள்.
கதவை தாழிட்டவன்.. ‘பத்தே பத்து நிமிசம் போன் பேசினேன்.. பேசிட்டு பார்த்தா அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டிருக்க.. இதுக்கும் மணி ஒன்பதரைதான் ஆனது.. ஃபர்ஸ்ட் நைட்ல எவனுக்காவது இந்த கொடுமை நடக்குமா.? விடியகாலம் மூனு மணி வரைக்கும் எனக்கு தூக்கமே வரல..” என்றான் கடுப்போடு.
நிலா.. ‘அது.. காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்துட்டனா.. மதியமும் தூங்கலயில்ல..? அதான் தூக்கம் வந்துடுச்சி..” என அசடாக சொல்லி.. ‘சரி என்ன பேசனுமோ இப்போ பேசுங்க..” என ஆவலாக கட்டிலில் அமர்ந்தாள்.
‘அடிப்பாவி பேசறதுக்குத்தான் மூனுமணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தனா.?” என கோபத்தோடு நிலா அருகே நெருங்க.. ‘நிலா.. நிலா..” என கவிப்பிரியா கதவை தட்ட.. நிலவழகி சிரிக்க.. முறைப்போடு கதவை திறந்தான்.
‘நாம நம்ம வீட்டுக்கு சித்தாவ கூட்டிட்டு போறோமாம்.. சீக்கிரம் கிளம்பு..” என நிலாவிடம் சந்தோசத்தோடு சொல்ல.. பின்னே சிறுவர் பட்டாளம் அத்தனையும் உள்ளே வர.. ‘அக்கா பத்து நிமிசத்துல கிளம்ப சொல்லி ஆயாவும் தாத்தாவும் சொல்ல சொன்னாங்க..” என்றாள் மதுமிதா.