கதிர் அவனின் அறையில் இருக்க.. கிச்சனில் சத்தம் வரவும் அங்கே செல்ல.. சுவாதி பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். ‘அக்கா நான் பார்க்கிறேன்..” என நிலா சொல்ல.. ‘நீ போய் கலைக்கு தேவையானதை செய்.. இன்னும் கொஞ்சம்தான் நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்.
‘அவர் குளிச்சிட்டிருக்கார்.. மாத்திக்க டிரெஸ் எடுத்து வச்சிட்டேன்.. இன்னுமென்ன..?” என்றவள் அடுப்பை துடைக்க ஆரம்பிக்க.. ‘ப்ச்.. ரெண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க.. நான் பார்த்துப்பேன்..” என்றார் அம்பிகா.
சமைத்து வைத்திருந்த வகைகளை பார்த்தவள்..‘எதுக்குமா இத்தனை சிரமப்பட்டுருக்கிங்க..?” என கோபித்தாள் நிலா.
‘என் மருமகன்களுக்கு செய்யிறதுல எனக்கென்ன சிரமம்..?” என்றவர் சுவாதியைத்தான் பார்த்தார். ம்.. கலைக்கு போல் தன் கணவருக்கு பாசமும் அன்பும் கிட்டவில்லை என்ற ஏக்கம் நேற்றிலிருந்தே அவளின் முகத்தில் இருப்பதை கவனித்திருந்தார்.
‘நிலாக்காவது ரெண்டு வருசமா வீட்டு வேலை செய்து பழக்கப்படுத்தியிருக்கேன்.. உனக்கு இதெல்லாம் பழக்கமில்லதான.? அப்புறம் எதுக்கு செய்திட்டிருக்க..?” என அன்போடு கடிய.. அன்னையின் அன்பில் சுவாதி கண்கலங்கினாள்.
‘மருமகனுக்கு அப்பாம்மா அன்பும் கிடைக்கல.. மாமனார் மாமியார் அன்பும் கிடைக்கலன்னு நீ வருந்துறது எனக்கு புரியாம இல்ல சுவாதிம்மா..” என நேற்று கணவர் குமார் பற்றி நல்லவிதமாய் பேசியதையும் சொல்லி..
‘என்ன..? உங்க கல்யாணத்தைதான் உங்கப்பாவால இன்னும் ஏத்துக்க முடியல.. எதோ போறாத காலம் இத்தனை வருசம் இப்படி இருந்தாச்சி.. அப்பா பேசலன்னா என்ன.? நான் இருக்கேன்ல.? என் மூச்சு உள்ளவரை ரெண்டு மருமகன்களையும் பிரிச்சி பார்க்க மாட்டேன்..
நீயும் இப்படி வேலை செய்து கஷ்டப்படுத்திக்காத.. வேலை செய்யிறதெல்லாம் உன் வீட்டோட நிறுத்திக்க.. இந்த அம்மா வீட்ல கல்யாணத்துக்கு முன்ன எப்படி ஜாலியா இருப்பியோ அதுமாதிரிதான் இனியும் இருக்கனும்..” என்றார் பாசத்தோடு.
மகளின் ஏக்கங்களை புரிந்து கொள்வதில் அன்னைக்கு நிகர் யாருமில்லை என கலங்கியவள், ‘அம்மா..” என கட்டிக்கொண்டு அழ.. ‘ச்சு சுவாதி.. அழாத..” என அம்பிகா தேற்ற.. ‘என்னைக்கு இங்க பயந்து ஊரைவிட்டு போனேனோ.. அன்னைக்கே என் தப்பு எனக்கு புரிஞ்சிடுச்சுமா.. இப்படித்தான உன்னையும் பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்கன்னு கவிம்மா பிறந்தப்பவே அவரும் புரிஞ்சிக்கிட்டாராம்.. அப்பா கோபத்துக்கு மதிப்பு கொடுக்கனும்னுதான் அவரை பார்க்கிறது கூட இல்லம்பார்..
கலை மட்டும் ஆதரவு கொடுக்கலன்னா என்னவாகியிருக்கும்னு இன்னமும் அந்த சம்பவத்தை நினைச்சா கண்கலங்கிடுவார்.. நீங்க கலையை உயர்வா பார்ப்பிங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நினைச்சதில்ல.. ஏன்னா நாங்களே கலையை உயர்வாத்தான் நினைக்கிறோம்.. அவர் இல்லன்னா பார்த்தி நிலைமை என்னவாகியிருக்கும்..?” என கண்ணீர் விட்டாள் நன்றியோடு.
‘அழாதக்கா..” என நிலாவும் கண்கலங்க.. ‘என் மனசு கொஞ்சம் லேசாகிடுச்சி நிலா.. அப்பா பேசலன்னாலும் அவரை புரிஞ்சிக்கிட்டதே எனக்கு சந்தோசம்.. நீ மட்டும்தான் வீட்டுக்கு வந்துட்டிருந்த, இனி அது நடக்காதுன்னு கவலையா இருந்தது.. காலைல கதிர் இனிப்போட என்வீட்டுக்கு போறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோசமாகிடுச்சி..” என சந்தோசித்து..
‘நான் திரும்பவும் இந்த வீட்டுக்குள்ள வந்தது கலையாலதான்.. எவ்வளோ பெரிய துரோகம் செய்த என்னையே ஏத்துக்க வச்சிருக்கார்.. நம்ம குடும்பத்தை அன்பால இணைச்சிருக்கார்..
அதே போலதான் நீ அங்க இருக்கனும்.. அங்க கலையோட பெரிய அக்கா எதாவது பேசினாலும் நீ பெருசாக்கிடாத.. கலைக்காக அனுசரிச்சி போ.. அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்ப கத்தின மாதிரியெல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு கத்த கூடாது.. கலை சந்தோசம்தான் எப்பவும் உனக்கு முக்கியமா இருக்கனும்..” என்றாள் அக்கறையாக.
‘ம்..” என தலையசைத்தாள் நிறைந்த மனதோடு.
‘மாப்பிள்ளை குளிக்க போய் கால்மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. அவங்க வீட்லபோல போட்டிருந்த துணியை துவைக்க போறாரு.. போய் என்னன்னு பாரு..” என அம்பிகா விரட்ட.. இவளும் அக்கறையாக சென்றாள்.
பாத்ரூம் கதவு சாற்றியிருக்க.. ‘ஏங்க குளிச்சிட்டு மட்டும் வாங்க.. துணி நான் துவைச்சிக்கிறேன்..” என்றாள். கதவைத் திறந்து மனைவியை உள்ளிளுத்துக்கொள்ள துடித்தவன்.. எப்படியும் அறைக் கதவை தாழிட்டிருக்க மாட்டாள் என்றுணர்ந்து.. ‘ம்.. குளிக்க மட்டும்தான் செய்யிறேன்.. நீ போய் டீ வை..” என்றான் நல்ல பிள்ளையாக.
கொலுசு சத்தம் நிலா வெளியேறுவதை உறுதி செய்ய.. இத்தனை நேரம் துவைத்துக்கொண்டிருந்தவன் வேகமாய் குளிக்க ஆரம்பித்தான்.
‘அம்மா.. நான் துவைச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்.. குளிச்சதும் டீதான் வேணுமாம்..” என டீ வைக்க ஆரம்பித்தாள்.
நிலா டீ வைத்து ஐந்து நிமிடம் ஆகியும் கலை வெளியே வராமலிருக்க.. அறைக்கதவும் திறந்துதான் இருந்தது.. ‘இன்னுமா குளிக்கிறாங்க.. டீ ஆறிடும் போல..” என முனுமுனுத்து உள்ளே வர.. கதவருகே காத்திருந்தவன் அணைக்க.. ‘ஏ..ங்க..” என இவள் திணற.. ‘கவலைப்படாத.. இப்போ கதவை சாத்தமாட்டேன்.. ஆனா ஒன்னே ஒன்னு..” என கிசுகிசுத்து இதழ் தொட முனைய..
சற்றுமுன் சுவாதி கலை சந்தோசம் பற்றி பேசியது.. வெற்றுடம்போடு அவனின் சில்லென்ற அணைப்பு.. கலைமேல் இவளின் சோப்பின் மணம் என எல்லாம் ஒன்று சேர சிறு மயக்கத்தோடு ஒப்புகொடுத்தாள். சிலபல நொடிகள் கழித்து தானே விடுவித்தவன் மனைவியின் தடையற்ற ஒப்புதலில் கிறங்கி அணைப்பை விடாமல் இருக்க.. ‘டீ” என நிலா முனக..
‘எனக்கு செம்ம பசி.. டீ வைக்க சொன்னாதான் ஆறதுக்குள்ள குடிக்க கூப்பிட உள்ள வருவன்னு சொன்னேன்.. அது அப்புறம் சூடு பண்ணி குடிச்சிக்கலாம்.. இப்போ போய் சாப்பிட எடுத்து வை..” என விடுவித்தான்.
‘இவ்வளோ பசியோட எவ்வளோ நேரம் குளிப்பிங்க.? சீக்கிரம் டிரெஸ் போட்டுட்டு வாங்க..” என அதட்டி வெளியே சென்றாள்.
குடும்பம் மொத்தமும் தன்மேல் மிகுந்த அன்போடிருப்பதறிந்த கலைக்கும் அனைவரோடும் நேரத்தை போக்க ஆசை வர.. ‘வேண்டாம் இங்கையே சாப்பிடறேன்.. உள்ளன்னா திட்டிட்டே சோறு போடுவா..” என வந்தமர்ந்தான்.
‘கறிகடை இல்ல தம்பி.. சைவம்தான் சமைச்சேன்..” என அம்பிகா அதிரசம் எடுத்து வைக்க.. ‘ஆஹா.. அதிரசமா..? எனக்கு நான்வெஜ் விட ஸ்வீட்தான் ஆன்ட்டி ரொம்ப பிடிக்கும்..” என நாலஞ்சை சாப்பிட்டு.. பின்னே சாதம் சாப்பிட.. மகள் பரிமாறட்டும் என விலகினார்.
கலையையும் அழைத்தவன்.. ‘எல்லாரும் சாப்பிட்டாச்சா.?” என பேசிக்கொண்டும்.. ‘சமையல் சூப்பர் ஆன்ட்டி..” என பாராட்டிக்கொண்டும் சாப்பிட்டு முடித்தவன்..
‘நிலா என் டிரெஸ்..” என்க.. உள்ளே சென்றவள் துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு கோபத்தோடு வெளியே வர.. ‘முறைச்சா காய்ஞ்சிடுமா.? போய் காயப்போடு..” என்றான் முறைப்பாக.
‘ஏன் தம்பி நிலா செய்வாள்ல.?” என அம்பிகாவும் சங்கடப்பட.. ‘எனக்கு இது சிரமமில்ல ஆன்ட்டி.. திருச்சில காலேஜ் ஜாயின் பண்ணினதுலயிருந்து ஆறேழு வருசமா பழகிடுச்சி..” என்றான் இலகுவாக.
மயில்சாமி அழைத்தார்..’சொல்லுங்கப்பா.. ம் ஆமாம்ப்பா இங்கதான் இருக்கேன்.. ஒரு மணிநேரமிருக்கும்..” என்க..
‘அப்போ நைட் அங்க இருந்துக்கோ..” என்றார்.
‘அச்சோ அப்பா.. நாளைக்கு நான் திருச்சி வந்தாகனும்.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன்..” என்றான்.
‘மறுவீட்டுக்கு போய் ஒரு மணிநேரத்துல கிளம்பினா சம்பந்தி என்ன நினைப்பாங்க..?” என்றார்.
‘அவங்கள்லாம் என்னை புரிஞ்சிக்கிறாங்க.. நீங்கதான் திட்ருங்க..” என்றான் பாவமாக.
‘இந்த முறை வந்தா ஒரு வாரமாவது இங்க தங்காம திருச்சி கிளம்பகூடாது..” என்றார் கட்டளையாக.
‘சரி அப்போ ஒன்னு பண்றேன்.. இன்னைக்கு நைட் திருச்சில தங்கியிருந்து நாளைக்கு வேலையை முடிச்சிட்டு சாய்ங்காலம் வந்துடறேன்.. அதுக்கப்புறம் ரெண்டு நாள் ஃப்ரீதான்.. ஓ.கேவாப்பா..” என்றான்.
மருமகளோடு தனிமையை எதிர்பார்க்கிறான் எனப்புரிந்தவர்.. ‘சரி அப்படித்தான் செய்.. ஆனா நிலாவை வீட்டுல தனியா விட்டுட்டு ரொம்ப நேரம் வெளில இருக்காத..” என்றார்.
‘சரிப்பா.. பத்திரம்ப்பா..” என நாகராஜிடமும் பேசி இணைப்பை துண்டித்தார்.
கலையரசனிற்கு இது எதிர்பாராத சந்தோசம்.. நிலாவோடு தனிமையில் அவனுக்கு பிடித்த திருச்சியில்.. விசயத்தை நாகராஜனிடம் சொல்ல.. உங்க விருப்பம் என்றுவிட்டார்..
‘கொஞ்ச நேரம் படுங்க மாப்பிள்ளை..” என அம்பிகா சொல்ல.. ‘பகல்ல படுத்து பழக்கமில்ல ஆன்ட்டி..” என தனது அரட்டையை தொடர்ந்தான் கதிரவனோடு. இரண்டு மணிநேரம் கடந்திருக்க அனைவரிடமும் பேசியவாறு ஹாலிலேயேதான் இருந்தான்.
ஐந்து மணிபோல்.. ‘அங்கிள் நாங்க கிளம்பறோம்..” என்றான்.
‘கண்டிப்பாங்க.. குமாரண்ணாவும் சொன்னார்..” என ஒப்புக்கொண்டவன்.. ‘ஒரு பத்து நாள் பக்கம் ஆகட்டும்.. இங்க திருச்சிக்கு நிலாவை கூட்டிட்ட வந்ததுக்கப்புறம் வரோம்.. உங்களுக்கும் நிலாவை பார்க்கனும்னா அண்ணாவோட எப்போன்னாலும் வாங்க..” என ஆறுதலளித்தான்.
இரவிற்கான உணவோடு இரண்டு பெரிய பாத்திரத்தில் பலகாரம் கொண்டுவர.. ‘ஆன்ட்டி.. எதுக்கு இவ்ளோ.?” என சங்கடப்பட்டான்.
நிலா அவளிற்கான உடைகள் அடங்கிய பையோடு வெளியே வர.. இத்தனை நேரம் அமைதிகாத்த கதிரவன் தாளமுடியாமல் கண்ணீர்விட.. கலையரசன் கதிரவனை கட்டியணைத்து ‘நான் உங்க கலை கதிர்..” என ஆறுதல் சொல்ல.. நாகராஜிற்கும் அம்பிகாவிற்கும் மனம் நிறைந்துபோனது.
நாகராஜ்.. ‘டேய்.. கிளம்பும்போது என்னடா கலாட்டா..?” என மகனை அதட்டி.. ‘சந்தோசமா போய் வா நிலாம்மா..” என்றார் புன்னகையோடு. நிலாவிடம் பையை வாங்கி அனைவரிடமும் விடைபெற்று வெளியேற.. பலகார பாத்திரத்தை காருக்குள் வைத்த கதிரவன்.. தங்கையிடம்.. ‘என் ஃபிரண்டை நல்லா பார்த்துக்கோ..” என்றான் சிரிப்போடு.
கார் கிளம்ப.. ‘பார்த்தி கவியை பார்த்துட்டு போலாம்.” என்றாள்.
‘சரி போலாம்..” என ஐந்து நிமிடத்தில் குமார் வீட்டிற்கு வர.. ‘நிலா எங்கம்மா எங்க கூட இருக்கிற மாதிரி இனி நீ சித்தா கூடதான் இருக்கனுமாம்.. எங்கப்பா சொன்னார்..” என்றான் பார்த்திபன்.
குழந்தைகள் கேட்பார்கள் என சொல்லிவைத்திருக்கிறார் எனப்புரிந்தவள்.. ‘நான் போய் வரேன் மாமா..” என குமாரின் பாதம் பணிய போக.. ‘ஏய்.. நிலாம்மா..” என தடுத்தவன்.. ‘பார்டா.. நான் மாமாவாம்ல..?” என கிண்டலடித்து.. நிறைந்த மனதோடு.. ‘சந்தோசமா போய் வா நிலா..” என்க.. இருவரும் கிளம்பினர்.
கலை..‘என்ன திடீர்ன்னு..? பேசினதே இல்லன்னார்.. இப்படி பட்டுன்னு மாமான்னுட்ட..?” என ஆச்சர்யத்தோடு கேட்க.. அன்னையிடம் கணவனுக்கு உறவினர் யாரும் இல்லை என சுவாதி வருந்தியதை சொன்னவள்.. ’என்னை ரொம்ப பிடிக்கும் அவருக்கு.. உறவு சொல்லி கூப்பிட்டா சந்தோசப்படுவார்ன்னும் அவருக்கு செய்யிற மரியாதைன்னும் தோணுச்சி.. அதான்..” என்றாள். முகம் இன்னும் வாடித்தான் இருந்தது.
‘ம்.. கரெக்ட்தான்.. என்னை எப்படி சந்தோசப்படுத்த போற..?” என்றான்.
‘காதல் செய்து..” என்றாள் முனுமுனுப்பாக.
அடிப்பாவி எத்தனை ரொமான்ட்டிக்கான வார்த்தையை இப்படி எதோ போல சொல்றாளே என நினைத்து.. ‘என்ன…? என்ன.? காது கேட்கல திரும்ப சொல்லு..” என்றான் உற்சாகமாக.
‘நெசவாளியோட ரணப்பட்ட மனசை இரண்டு மருமகன்களும் சேர்ந்து அன்பால நெய்துட்டிங்க.. அதுக்கு முக்கிய காரணமாயிருந்த என் பு..” என நிறுத்தினாள் நாணத்தோடு..
‘ப்ச்.. போங்க..” என முகம் திருப்ப.. ‘சொல்லன்னா நான் எதாவது ஆரம்பிப்பேன்..” என்று இடையை வளைக்க.. ‘புருசன் குடும்பத்தை காதலால் நெய்யப்போறேன்..” என்றாள் சிவந்த முகத்தோடு.
சிவந்திருந்த நிலாவின் முகத்தில் பிறந்த வீட்டின் பிரிவுத்துயரம் குறைந்திருக்க.. நிலாவை முதலில் சந்தித்தபோது நினைத்தது என பழைய கதைகளை பேசி மனைவியை முழுதாய் இயல்புக்கு கொண்டு வந்தவன்..
‘அழகி.. என் அக்காவால பிரச்சனை வந்தா நான் பார்த்துக்கிறேன்.. மத்தபடி அவங்களை திருத்துறதெல்லாம் ஆகாத காரியம்..” என்றான்.
‘பிரச்சனை வந்தா நீங்க பார்ப்பிங்கதான்.. ஆனா அத்தை மாமாக்கு கூட மரியாதை தரமாட்றாங்க.. அதை அப்படியே விடக்கூடாது..” என்றாள்.
‘ஏய்.. அவங்க என் அக்காடி..” என பொய்யாய் பதற.. ‘யார் இல்லன்னா..? அவங்களை ஒதுக்க நினைக்கல.. ஆனா இனி அத்தை மாமாவை மரியாதையில்லாம பேசாத மாதிரி பார்த்துப்பேன்..” என்றாள் திடமாக.
ஒதுக்க நினைக்கல என்றதில் நிம்மதியடைந்தவன்.. ‘முதல்ல உன்னை காப்பாத்திக்கிறதே பெரிய விசயம்.. இன்னும் அவங்களை உனக்கு முழுசா தெரியல..” என்றான்.
‘ஏன் தெரியாம.? என்னை அசிங்கப்படுத்ததான நகையைப் பத்தி கேட்டாங்க.. எல்லாம் தெரியும்..” என அசால்ட்டாக சொல்லி..
‘காதலுக்காக உயிரை விடத் துணியறது பெரிய விசயமில்ல.. புருசன் குடும்பத்தை சிதைக்காம கட்டுக்கோப்பா மேல எடுத்து வரனும்.. அதுதான் உண்மையான காதல்ன்னும்.. இங்க நான் குடும்பம் நடத்துற பாங்குதான் பெத்தவங்களுக்கு பெருமைன்னும் அப்பா சொன்னார்.
என் அப்பா சிறுமையடையற மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன்.. அதே நேரம் இப்படி புருசனை பெத்துகொடுத்த என் மாமா அத்தையை யார்கிட்டயும் விட்டுகொடுக்க மாட்டேன்..
உங்க பாஷைல சொல்றேன்.. இவ்வளோ நாள் அத்தை மாமாகிட்ட உங்கக்கா டிஃபன்ஸ் மட்டும்தான் பார்த்திருக்காங்க.. இனி அஃபன்ஸ் பார்க்க போறாங்க..” என்றாள்.