நிலவழகியின் முகம் வெகுவாய் வாடியிருக்க, கலையின் முகத்தில் குறும்பு புன்னகை மிளிர.. ‘என்னம்மா இது.? இப்படி சோர்ந்திருக்க.? எங்கையாவது வம்பு வளர்த்துட்டானா.?” எனப் பதறினார் கலா.
‘அதெல்லாம் இல்லைத்த..” என்க.. ‘வேற என்னம்மா.? ஏன் டல்லா இருக்க.?” என்றார் மயில்சாமி.
‘நல்லாதான் மாமா இருக்கேன்..” என்று சின்ன புன்னகை சிந்த.. அச்சிரிப்பில் இயல்பில்லை எனப்புரிந்து.. ‘என்னடா..?” என்றார் சந்தேகமாக.
‘அப்பா.. மூனு நாளா வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சி.. அதுக்குத்தான் இப்படி இருக்கா..” என்றான் கலை.
‘நினைச்சேன்.. இப்படித்தான் பண்ணுவான்னு நினைச்சேன்.. இப்படி வேலையிருக்கும்போது நிலாவை இங்க கூட்டிட்டு வந்து விட்ருக்க வேண்டியதுதான.?” ஏன்றார் கோபமாக.
‘ப்பா.. இது நானே எதிர்பார்க்காதது.. இரண்டு நாள் முன்ன ஒரு பொண்ணை கெடுத்தாங்கள்ல.? அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல்லயிருந்து வீட்டுக்கு போனதும் கிருஷ்ணாயில் ஊத்தி கொளுத்திக்கிச்சிப்பா.. என் பொண்ணே போய்ட்டா.. மேலும் மேலும் எங்களை அலைக்கடிக்காதிங்க.. போதும் எங்களை விட்ருங்கன்னு அவங்கப்பாம்மா அழறதை கண்ணுல பார்க்க முடியல.. பனெண்டே வயசுதான் பெத்தவங்களுக்கு எப்படியிருக்கும்.?
அப்படியே விட்டா ரொம்ப ஈசியா வெளில வந்திடுவான்.. அதான் அவனுக்கு வேற ஒரு கேஸ் ஸ்ட்ராங்கா ஃபைல் பண்ணி வெளில வரமுடியாத மாதிரி செய்திருக்கேன்..” என அந்த குற்றவாளியின் நினைவில் கோபமாய் சொன்னவன்..
‘கலையரசன் பொண்டாட்டி.. அதுவும் ஒரு சிலம்ப வீராங்கனை.. இதுக்கெல்லாம் கோவிக்கலாமான்னு கேளுங்கப்பா..” என்றான் சிரிப்போடு.
காரணமில்லாமல் கலை எதையும் செய்யமாட்டான் என்றாலும் மருமகளின் நிலையும் பாவம் எனத்தோன்ற பரிதவிப்பாய் பார்த்தார். ‘லேட்டா வரல மாமா.. நைட்டெல்லாம் வரவே இல்ல..” என்றாள் கோபமாக.
மயில்சாமியின் முகம் கடினமாய் மாற.. கலை.. ‘ஒரே ஒரு நைட்தான்ப்பா வரல.. மீதி ரெண்டுநாள் வந்துட்டேன்..” என இடைபுகுந்தான்.
‘அந்த ரெண்டு நாள்ல ஒரு நாள் இரண்டு மணிக்கு வந்தாங்க..”என கலையை முறைத்து… ‘சித்தி ஃபோன் செய்திருந்தாங்க.. எல்லாம் சொல்லிவச்சிருக்கேன்..” என்றாள்.
‘ம்.. அப்புறமென்ன.? ஸ்ட்ராங்கான இடத்துலதான சொல்லி வச்சிருக்க.? இன்னும் அக்காகிட்ட வேற தனியா திட்டு வாங்கனும்..” என முறைத்து அறைக்குள் சென்றான்.
‘சமையல் செய்துட்டிங்களாத்த.?” என கேட்க..’எதுவும் செய்யல நிலா.. இன்னைக்கு செல்வி உங்களை விருந்துக்கு அழைச்சிருக்கா.. எங்களுக்கு இங்க கொண்டு வரன்னுருக்கா.. உனக்கு ஃபோன் செய்தேன்னாளே..” என்றார் கலா.
‘ஆமாம்த்த சொன்னாங்க.. நீங்களும் வாங்களே..”
‘இல்லம்மா.. நீங்க போய் வாங்க..” என மறுக்க.. ‘ம்.. நல்லா சொல்லு நிலா.. வாங்கன்னு எவ்வளோ கூப்பிட்டாலும் இந்த மாடு கன்னுகுட்டிய விட்டு எங்கயும் நகரதில்ல..” என நொடிப்போடு சொல்லி.. ‘எங்க போனான் உன் புருசன்..?” என கோபத்தோடு கேட்டு உள்ளே சென்றவள்.. ‘புது இடத்துல இப்படித்தான் தனியா விட்டுட்டு போவியா.?” என ஆரம்பித்து பத்து நிமிடம் வரை கலையை திட்டி தீர்த்து விருந்திற்கு அழைத்தாள்.
‘பத்து நிமிசம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்க்கா..” என பெட்டில் சரிந்தவன் தூங்க ஆரம்பிக்க.. ‘நிலா கலை தூங்கியெழுந்ததும் வாங்க.. நான் கிளம்பறேன்..” என கிளம்ப பார்க்க.. ‘டீ வைக்கிறேன் சித்தி..” என்றாள்.
‘அங்க வேலையிருக்கு நிலா..” என மறுத்து கிளம்பியிருந்தாள்.
காலை பதினொரு மணியென்பதால் இரண்டு மணிநேரம் வரை தூங்கட்டும் என நினைத்தாள்.. மூன்று நாட்களாய் சரிவர தூங்காததால் கலையும் அசந்து உறங்கிக்கொண்டிருந்தான். ‘நீயும் போய் கொஞ்சநேரம் படுக்கிறதுனா படும்மா..” என கலா சொல்ல.. ‘நான் நல்லாதான்த்த தூங்கினேன்.. அவருக்குத்தான் தூக்கமில்ல..” என்றாள்.
மயில்சாமி.. ‘ஆன்லைன் கிளாஸ் போய்ட்டிருக்காம்மா.? எத்தனை நாள் லீவ் போட்டிருக்க.?” என்றார்.
‘ஐஞ்சி நாள் சொல்லியிருந்தேன் மாமா.. வர திங்கள்ல இருந்து கிளாஸ் அட்டன் செய்யனும்..” என்றாள். பிறகு நிலாவின் சிறுவயது சம்பங்களை கேட்டறிவது இங்கே கலை படிப்பிற்காக செய்த அட்டகாசம் என பேசிக்கொண்டிருந்தனர்.
பனிரண்டரை மணிபோல் எழுந்தான் கலையரசன். நிலா பசி தாங்கமாட்டாள் என்பதால் அப்பொழுதே அக்கா வீட்டிற்கு கிளம்பினான். விருந்துண்டு மாலை போல் வந்தனர்.
செல்வி.. ‘நைட் அங்க இருக்க சொல்லி கெஞ்ச கெஞ்ச வந்துட்டான்.. அவர் சொல்லவும் நிலா கூட இருக்கத்தான் ஆசைப்பட்டா.. இவன் இருக்கானே..” என கலாவிற்கு அழைத்து ஆதங்கப்பட்டாள்.
கலை.. ‘உங்களையும் என்னையும் பிரிக்க பார்க்கிறாங்கம்மா.. நான் யாரு..? வந்துட்டோம்ல..?” என மீசையை முறுக்கி சிரிக்க.. ‘போடா டே.. இன்னும் இரண்டு நாளோ ஒரு நாளோ.. திருச்சிக்கு ஓடிடுவான்.. இதுல என் பொண்ணு பிரிக்க பார்த்தாளாம்..” என கலாவும் சிரிக்க.. இரண்டு நாட்கள் மிக அழகாய் நகர்ந்தது.
—– ——- ——-
‘ஒரு வாரம் இருக்கிறேன்னு வந்துட்டு என்னடா கிளம்பனும்ங்கிற.?” என்றார் கலா.
‘அர்ஜன்ட் ஒர்க் மா.. இப்போதான் ஃபோன் வந்தது.. உடனே கிளம்பல சாப்பிட்டு ஒருமணி நேரம் கழிச்சிதான் கிளம்பறேன்.” என்றான்.
நிலாவின் முகம் வெகுவாய் வாடிட.. ‘ஹே.. நீ என்ன சின்ன பிள்ளையா.? அங்க கூப்பிட்டாலும் வரமாட்டன்னுட்டு முகத்தையும் இப்படி வச்சிக்கிட்டா நான் எப்படி நிம்மதியா கிளம்ப..?” என்றான் சின்ன சிரிப்போடு.
‘நீயும் போம்மா..” என்றார் மயில்சாமி.
‘அங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. எனக்கு தனியா இருந்து பழக்கமே இல்ல..” என்றாள் பாவமாக.
மயில்சாமி.. ‘ரெகுலர் காலேஜ் ஆரம்பிச்சிட்டா எப்படியும் நீ அம்மா வீட்லதான் இருந்தாகனும்.. அது வரைக்குமாவது அவனோட இருந்தா பரவால்லையேமா.. அவன் தனியா இருக்கான்னுதான கல்யாணம் செய்யவே பேச்செடுத்தேன்..” என்றார் யோசனையாக.
‘இப்படி முக்கியமான வேலையிருக்கும்போது இங்கயே இருந்திடறேன்.. மத்த நேரம் அங்க போய்க்கிறேன் மாமா..” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
சந்தோசமாய் தலையசைத்தது.. ‘கல்யாணத்தால உன் படிப்பு நின்னதா ஆகிடக்கூடாது.. பி.ஜி படிக்கனும் ஆசையிருந்தாலும் திருச்சில ஜாயின் செய்துக்கோ..” என்றார்.
அப்பொழுதுதான் வந்த கீதாவிற்கு மயில்சாமி கடைசியில் சொன்னது காதில் விழ… மருமகள் மீது இத்தனை கரிசனம் காட்டும் தந்தைமீது அத்தனை ஆத்திரம் வந்தபோதும் விருந்திற்கு அழைக்க வந்திருக்கும்போது எதையும் காட்டிக்கொள்ள முடியாததால் உள்ளடக்கிய கோபத்தோடு உள்ளே வந்தாள்.
நிலா.. ‘ஆமாம்ல.. எங்க வீட்டுக்கு வந்துருக்கிங்க.. வாங்க வாங்க..” என இது என்வீடு நீ விருந்தாளி எனும் தோரணையில் சொல்ல.. கலா அதிர்வாய் பார்க்க.. மயில்சாமி பதட்டமாய் பார்க்க.. சான்சை பிடிச்சிட்டா என சின்ன சிரிப்போடு வெளியே வந்தான் கலையரசன்.
‘என்னது..? உன் வீடா..?”என முறைத்து..’என்னடா உன் பொண்டாட்டி இப்படி பேசுறா.. நீ சிரிக்கிற..” என கலையிடம் காய்ந்தாள்.
‘செல்வி வீட்டுக்கு போய்ட்டு எங்க வீட்டுக்கு வரலன்னா எங்க வீட்ல என்னை மதிப்பாங்களா.?” என்றாள் சற்று உயர்ந்த குரலில்.
‘உன்னை மதிக்கனும்ங்கிறதுக்காக என்னை மதிக்காத வீட்டுக்கு என்னால வரமுடியாது..” என தீர்க்கமாய் சொன்னவன்.. கீதாவை உறுத்துப்பார்த்து.. ‘விருந்துக்கு இப்படித்தான் அழைக்கனுமா.?” என்றான்.
கீதா புரியாமல் பார்க்க.. ‘விருந்துக்கு அழைக்கனும்னா அதுக்கு எங்க கல்யாணத்துக்கு உன் புருசன் வந்திருக்கனும்.. இரண்டாவது.. என்னை அழைக்க கூடாது.. எங்களை அழைக்கனும்..” என்றான் முறைப்பாக.
‘அவருக்கு காய்ச்சல்டா.. அதான் வரல..” என சமாளிப்பாக சொன்னவள்.. ‘உன்னை அழைச்சா அவளையும் அழைச்சமாதிரிதான.? நீ வேற அவ வேறையா.?” என்றாள்.
‘இந்த சப்பக்கட்டெல்லாம் அப்பாவோட வச்சிக்கக்கா.. என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது அவ்ளோதான்..” என்றான்.
விருந்துண்ண வரவிலையென்றால் தன் மாமியார் கொழுந்தன் மனைவியெல்லாம் அவ்வளோதானா உன் பிறந்த வீட்டின் உறவு என கேவலமாக நினைப்பார்களே என தவித்தவள்.. அன்னையை பார்த்தாள் பாவமாக.
தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என பார்வையால் பதிலளித்தார் கலா. ‘அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்க.. நான் போய் லன்ச் செய்யறேன்த்த..” என கிச்சனுள் நுழைந்தாள் நிலா.
கலையரன் சீருடையை ஐயர்ன் செய்ய ஆரம்பித்தான். ‘அப்பா.. அவனுக்குதான் புரியல.. நீங்களும் இப்படி அமைதியா இருந்தா என்னப்பா அர்த்தம்.?” என்றாள் சற்று உயர்ந்த குரலில்.
‘முதல்ல அப்பாகிட்ட இப்படி அதட்டி பேசுறதை நிறுத்து..” என்றான் கட்டளையாக.
‘என் அப்பாகிட்ட நான் பேசுவேன்..” என கீதா ஆரம்பிக்க.. கீதாவின் கைப்பிடித்து தனதறைக்கு அழைத்து சென்ற மயில்சாமி..‘அவன்கிட்ட ஏன் கத்துற.. என்மகன் மருமகள் உன் வீட்டுக்கு விருந்துக்கு வரது எனக்கே பிடிக்கல.. கல்யாணத்துக்கு அழைக்க வந்த எனக்கு ஒரு காபி வச்சி கொடுத்து மரியாதையா நடத்த துப்பில்ல.. இதுல விருந்துக்கு அழைக்க வந்துருக்கியா.?” என கடுமையாய் சாடி..
‘உன் புருசன் கல்யாணத்துக்கு வராத கோபத்தை விட.. என்னை இப்படி நடத்துனதுல கலை உன்மேல செம கோபத்துல இருக்கான்.. விருந்துக்கு அழைக்கிறேன்னு திரும்ப திரும்ப பேசி வீணா அவன்கிட்ட வாங்கி கட்டிக்காத..” என முறைத்து வெளியே வந்தார்.
வாடிய முகத்தோடு வெளியே வந்த கீதா.. ‘அம்மா நான் கிளம்பறேன்..” என்றாள் ஆற்றாமையோடு.
‘இரு கீதா.. நிலா சமைச்சிட்டிருக்கா சாப்பிட்டு போவ..” என்ற அன்னையின் சொல்லுக்கு.. ‘எல்லாருமா சேர்ந்து என்னை மொத்தமா தலை முழுகனும்னு முடிவு செய்துட்டிங்க.. சாப்பாடு மட்டும் எதுக்கு..?” என உடைந்த குரலில் சொல்லி கிளம்பியிருந்தாள்.
சமைத்து முடித்து நிலா வெளியே வர.. கலா..‘நிலா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதம்மா.. கீதா கொஞ்சம் கௌரவக்கரிதான்.. அதுக்காக பெத்த புள்ளைய வெட்டி விட்ற முடியுமா.? உன்னோடவும் உன் புருசனோடவும் பெரியவ.. கொஞ்சம் அனுசரிச்சி போம்மா..” என்றார் தன்மையாக.
‘அவங்களை வெட்டிவிடனும்ன்றது என் நோக்கமில்லத்த.. எந்த தப்புமில்லாத பட்சத்துல என்னை பேசுறதே தப்பு.. இதுல உங்களை மரியாதையில்லாம பேசுறது ரொம்ப ரொம்ப தப்பு.. தன்மையா போனா அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.. கொஞ்சம் திருப்பி காட்டினாத்தான் உங்க அருமை புரியும்.. கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும்.. போகப் போக புரிஞ்சிப்பாங்கத்த..” என்றாள் தானும் தன்மையாகவே.
கலா கலவரமாய் பார்க்க.. ‘பயப்படாதிங்கத்த.. அவங்க தரக்குறைவா பேசினா மட்டும்தான் பதில் கொடுப்பேன்.. மத்தபடி எதுவும் மரியாதைக் குறைவா பேசமாட்டேன்..” என்றாள்.