மூன்று மாதங்கள் கடந்திருக்க.. மயில்சாமி கலாவிற்கு நிலாவின் மேல் அளவிற்க்கதிகமான அன்பும் பாசமும் பெருகியிருந்தது. ஆன்லைன் வகுப்பென்பதால் தஞ்சையிலேயே தங்கிவிட்டாள் நிலவழகி.
கலாவை வீட்டு வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டதிலேயே செல்வராணிக்கும் நிலவழகி மீது மேலும் பாசம் கூடியது. சாணத்தின் வாடையை மனம் ஒப்புக்கொள்ள மறுக்க இந்த கட்டாந்தரைக்கு மட்டும் செல்ல மாட்டாள்.
நிலாவின் மேல் எந்த குறையும் சொல்லமுடியாமல் போக.. வீட்டு வேலை அதிகமாகட்டுமென இரண்டு மாதம் முன்பாக தன் பிள்ளைகளை இங்கு அனுப்பியிருந்தாள் கீதா. தரணியும் மதுவும் இங்குள்ளனர் என அறிந்ததும் வினோத்தும் இங்கு வர அடம் செய்யவே தன் மகனை அழைத்து வந்த செல்வராணி.. வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ள பரிந்துரைக்க.. மகளின் ஆலோசனை சரியெனப் பட துவைக்கவும் பாத்திரம் தேய்க்கவும் ஆள் போட்டுக்கொண்டார் மயில்சாமி.
கீதாமேலுள்ள கோபத்தை சிறிதும் அவளின் பிள்ளைகளிடம் காட்டவில்லை நிலவழகி. நிலவழகியின் சமையல் சிறுவர்களுக்கு பிடித்திட நன்றாக ஒட்டிக்கொண்டனர் பிள்ளைகள். அனைவரும் ஹாலில் அமர்ந்துதான் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பர். பிள்ளைகளோடு பிள்ளையாக நிலவழகி படிக்கும் பாங்கு மருமகள் என்ற தோற்றம் மறைத்து.. ஆசிரியர் இல்லாத நேரங்களில் மாணவர்களை வழிநடத்தும் வகுப்புத் தலைவியாகத்தான் தெரிந்தாள் ஆசிரியர் தம்பதிக்கு.
கீதாவின் நாத்தனார் பெண்ணிற்கு இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் வரவிருக்க.. மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லவேண்டி குழந்தைகளை அழைக்க வந்தாள். முதலில் செல்ல மறுத்த மதுவும் தரணும் அத்தை மகளின் திருமணம் என்பதால் வேறுவழியின்றி கிளம்பினர்.
வினோத் மட்டும் இருக்க.. ‘டேய்.. பிராக்டிஸ்க்கு டைம் ஆச்சு டி.வியை ஆஃ பண்ணு..” என்ற நிலாவின் கட்டளைக்கு.. ‘அக்காவும் தரணும் இல்லதானத்த..? இன்னைக்கு நானும் லீவ்..” என கெஞ்சி போக்கிமான் தொடரில் கவனம் செலுத்தினான் வினோத்.
‘உங்க மாமாலாம் ஒரு நாள்கூட பிராக்டிஸ் கட் பண்ணமாட்டார்.. அதனாலதான் பெரிய பாக்ஸர் ஆனார்.. இப்படி உன்ன மாதிரி கார்ட்டூன் பார்த்தா எப்படி பெரியாளா ஆகுறது..?” என அதட்ட.. ‘இன்னைக்கு மட்டும்த்த..” என மீண்டும் கெஞ்சி தொடரில் கவனமாக.. மேற்கொண்டு பேசவிடாமல் வாயைப் பொத்தியவாறு தனதறைக்குள் தூக்கிப்போனான் கலையரசன்.
உள்ளே வந்ததும் கதவை தாழிட.. ‘எதுக்கு தூக்கிட்டு வந்திங்க.? அத்தை மாமா பார்த்தா என்னாகுறது.?”என முறைத்து.. ‘எப்போ வந்திங்க.? வரன்னு சொல்லவே இல்ல..” என பிணங்கி திரும்பினாள்.
கடந்த மூன்று மாதமாக வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை இங்கு வருபவன் அன்றிரவு மட்டும் தங்கிவிட்டு அடுத்தநாள் கிளம்பிடுவான்.. தற்போது கடந்த இருபது நாளாக வராமல் போகவே நிலவழகி கோபத்தில் இருக்க.. கலையரசன் ஏக்கத்தில் இருக்க.. நிலவழகியின் முறைப்பு பிணக்கல் எதுவும் அவனின் கவனத்திற்கு எட்டவில்லை.. மனைவியின் கண் கன்னம் என ஆங்காங்கே சின்ன முத்தங்கள் வைத்துக்கொண்டிருந்தான்.
‘குளிக்காம எதையும் தொடமாட்டிங்க.. இப்போ என்ன.?” என திக்கி திணற.. ‘டியூட்டி முடிச்சி வீட்டுக்கு போய் குளிச்சிட்டுதான் வந்தேன்.. நான் உள்ள வரும்போது நீ கிச்சன்ல இருந்த.. முகம் கை கழுவி வெளிய வந்தேன்.. உன்ன தூக்கிட்டு உள்ள வந்துட்டேன்..”என கிசுகிசுத்தவன் நீண்ட இதழொற்றலுக்கு பிறகு கட்டிலில் சரிக்க..
‘அச்சோ மணி அஞ்சாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்துல விளக்கேத்த அத்தை கூப்பிடுவாங்க..” என பரிதவிக்க.. ‘உன் மாமா பால்காரண்ணாகிட்ட பேசிட்டிருக்கார்.. உன் அத்த மேல மாடில துணி எடுத்துட்டிருக்காங்க.. ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டுதான் உள்ள வந்தேன்.. உன்ன கூப்பிடமாட்டாங்க..”என கடுகடுத்தவன்.. ‘ப்ளீஸ் என்னை கவனிடி..” என படர்ந்தான் மனைவிமேல்.
மணி ஆறாகிருக்க குளித்து வந்தவள் தீயாய் முறைத்தாள் கலையை. ‘ஈ..ஈ..” என அசடாய் சிரித்தவன்.. ‘அது நான் வரும்போது எப்பவும் உன்னை சுத்தி எல்லாரும் இருப்பாங்க.. இன்னைக்கு பார்த்து மதுவும் தரணையும் அக்கா கூட்டிட்டு போய்டாங்கன்னு அம்மா சொன்னாங்களா.. வினோவும் டி.வி பார்த்திட்டிருந்தானா.. உன்ன பார்த்தும் இருபதுநாள் பக்கம் ஆச்சா.. அதான் கொஞ்சம் கிறுக்கு அதிகமாய்டுச்சி.. ஒருமணிநேரம் போனதே தெரியலல்ல..?” என வழிந்தவன்.. ‘போ..போ.. மாமனுக்கு ஒரு டீ வை..” என பொய்யாய் மிரட்டி குளயலறை புகுந்தான்.
இதுபோல் ஒருநாளும் பகலில் குளித்ததிராததால்.. பெரும் சங்கடத்தோடு வெளியே வந்தாள் நிலவழகி. பூஜையறையில் விளக்கெறிந்துகொண்டிருக்க.. சமையலறையில் சத்தம் கேட்கவும் அங்கே சென்றாள்.
வினோத்..‘அத்த.. ஆயாக்கு மகாபாரதம்லாம் தெரியுது.. கர்ணனைப் பத்தி சொன்னாங்க..”என்றான் பெரும் வியப்போடு.
‘ம்..” என சிரிக்க.. ‘ பிளாஸ்க்குல டீ இருக்கு பாரு நிலா.. கலை கேட்பான்னு வச்சேன்..” என இயல்பாய் பேசி நிலாவின் சங்கடம் போக்கி வினோத்தை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார் கலா.
வழக்கம்போல் அடுத்தநாள் கிளம்பியிருந்தான் கலையரசன். ம்.. தற்போதெல்லாம் கலையரசன் வந்தால் கீதாவிற்கு தகவல் தந்திடுவார் கலா.. அவள் எதாவது பேசி அதற்கு இவன் வெடித்து பிரச்சனை வேணாம் என இப்படி வழக்கப்படுத்தியிருந்தார்.
இரண்டு நாள் கடந்திருக்க.. கலையரசன் இல்லையென்பதை தெரிந்துகொண்டு கீதா பத்திரிக்கையோடு வந்தாள். ‘வாங்க..” என தண்ணீர் கொடுத்தாள் நிலா.
தண்ணீர் வாங்கி பருகியவள்.. ‘அப்பா.. என் நாத்தனார் பொண்ணுக்கு வர திங்ககிழமை கல்யாணம்.. எல்லாரும் வந்துடுங்க..” என பத்திரிக்கையை நீட்டினாள்.
‘எவ்வளோ பத்திரிக்கை அடிச்சிங்க..?” என வெகு இயல்பாகத்தான் கேட்டாள் நிலா.
‘அப்போ எதுக்கு ஒரு பத்திரிக்கைய வேஸ்ட் செய்துகிட்டு.? அதை நீங்களே வச்சிக்கோங்க.. வேற யாருக்காவது கொடுக்க யூசாகும்..” என்றாள்.
எதோ விசயத்தோடுதான் பேசுகிறாள் எனப்புரிந்தவள்.. ‘அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்.
‘இல்ல.. எப்படியும் என் அத்தை மாமாவை நான் கல்யாணத்துக்கு அனுப்ப போறதில்ல.. அப்புறம் எதுக்கு ஒரு பத்திரிக்கை வேஸ்ட் செய்துட்டு..?” என்றாள் அர்த்தப் பார்வையோடு.
கீதா.. ‘அவங்களை அனுப்ப நீ யாரு..? யார்கிட்ட என்ன பேசுறோம்னு புரிஞ்சி பேசு..” என்றாள் கோபமாக.
‘நான் அவங்க மருமக.. என் அத்தை மாமாக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு நான் அனுப்பமாட்டேன்..” என்றாள் திடமாக.
மயில்சாமி..‘என் மகன் கல்யாணத்துக்கு வராததால உன் நாத்தனார் பொண்ணு கல்யாணத்துக்கும் நான் வரமாட்டேன்னு முன்னவே சொல்லியிருக்கேனே கீதா..” என்றார் அலட்டாமல்.
கலா..‘ஏங்க.. பொண்ணு கொடுத்த இடத்துல எதுக்கு பிரச்சனை செய்துட்டு..? உங்களுக்கு விருப்பமில்லன்னா நான் மட்டும் போய் வந்துக்கிறேன்..” என்றார் தவிப்பாக.
சண்டை பெரிதாகிடுமோ என கலா செய்வதறியாது தவிக்க.. நிலா.. ‘சரி போகட்டும் விடுங்க.. என் அக்கா மகளுக்கு கல்யாணம்னு உங்க புருசனாவது நேர்ல அழைக்க வரனுமில்ல.? ஏன் வரல..?” என்றாள்.
‘அவர் வந்தா என்ன.? நான்வந்தா என்ன.? இதெல்லாம் கேட்க நீ யாரு.? யார் வீட்ல வந்து உக்கார்ந்துட்டு யார்கிட்ட சட்டம் பேசிட்டிருக்க.? இது என் வீடு.. என் அம்மாப்பாகிட்ட நான் பேசுறேன்.. உன்னை யாரும் அழைக்கல..” என்றாள் காரமாக.
‘நீங்க அழைச்சாலும் நான் வரப்போறதில்ல..” என தானும் முறைப்பாக சொன்னவள்.. ‘இது உங்க வீடுன்னா.. நீங்க இப்ப வாழ்ந்திட்டிருக்க வீடு உங்க நாத்தனார் வீடா.?” என்றாள் எள்ளலாக.
மயில்சாமி சின்ன புன்னகை சிந்த.. கீதா முறைக்க.. ‘ம்.. இல்லயில்ல..? உங்க புருசன் வீடுதான் உங்க வீடு.. இது உங்க அம்மா வீடு.. அதுதான உண்மை.. அதே போல என் அம்மா வீடு ராசிபுரம்.. இது என்வீடு..” என அதிகாரமாய் சொல்லி.. ‘என் மாமனார் மாமியாருக்கு நான்தான் கேட்பேன்..” என்றாள் உரிமையாக.
‘என் வயசென்ன.? உன் வயசென்ன.? இப்படித்தான் மரியாதையில்லாம பேச கத்துக் கொடுத்தாங்களா உங்கம்மா.?” என்றாள் காரமாக.
நிலா..‘என்னை பத்தி மட்டும் பேசுங்க.. என் அம்மாப்பா பத்தி பேசுனிங்க.. நானும் உங்களவுக்கு இறங்க வேண்டியிருக்கும்..”என்றாள் எச்சரிக்கையாக.
‘என்னடி செய்திடுவ.?”என அடிப்பதுபோல் எழ.. ‘கையேது வைக்கலாம்னு நினைச்சிடாதிங்க.. கம்பெடுத்தேன்னா இரண்டு சுழட்டுக்கு கூட தாங்க மாட்டிங்க..” என்றாள் அசராமல்.
‘நிலாம்மா..” என கலா பதற.. ‘அடிச்சிடுவியாடி என்னை..? அடிச்சிடுவியா.? எங்க அடிபார்ப்போம்..” என திமிறி நின்றாள் கீதா.
‘அத்தை.. நீங்க டென்சன் ஆகாதிங்க..” என தன்மையாய் சொல்லி..
‘வயசுக்கு மரியாதை கொடுக்கலன்னா எவ்வளோ கோபம் வரும்னு இப்போ புரியுதுங்களா.? கல்யாணத்துக்கு அழைக்க உங்க வீட்டுக்கு வந்த என் மாமனார்கிட்ட உங்க மாமியார் பேசியதும்.. அவங்க முன்னாடி நீங்க பேசுனதும்.. உங்க வீட்டுகாரர் வெளிய வராம இருந்ததும் சரியான்னு யோசிங்க..
எனக்கும் உங்களுக்கும் உள்ள வயசு வித்யாசத்தை விட.. உங்க புருசனுக்கும் என் மாமாவுக்கும் உள்ள வயசு வித்யாசம் அதிகம்.. உங்களை நான் பேசுறது தப்புன்னா உங்க புருசன் மாமாகிட்ட நடந்துகிட்டது எவ்வளோ பெரிய தப்பு..? அப்படி உங்க புருசனுக்கும் உங்க குடும்பத்துக்கும் அடங்கி போகனும்னு என் மாமாவுக்கு என்ன அவசியம் இருக்கு..?” என்றாள் அதிகாரக் குரலில்.
கீதா தந்தையை முறைக்க.. ‘பெத்த அப்பாவை முறைச்சி பார்க்கிற பழக்கத்தை உங்க புருசன் கத்து கொடுத்தாரா.? ஏன்னா.? சித்தியும் என் புருசனும் சரியாத்தான் இருக்காங்க.. நீங்க மட்டும்தான் இப்படின்னா கண்டிப்பா அது அங்கயிருந்து கத்துகிட்டதாதான் இருக்கும்..” என நக்கலாக சொல்லி..
‘பெத்தவங்களை பாசமா பார்க்கலாம்.. உரிமையா பார்க்கலாம்.. அன்பா பார்ககலாம்.. ம்.. செல்லமா முறைக்க கூட செய்யலாம்.. ஆனா இப்படி அவங்களை எதிர்த்து முறைக்கிறதெல்லாம் இனி விட்ருங்க..” என எச்சரிக்கையாய் எடுத்துரைத்து..
‘உங்க வீட்ல நடந்ததையெல்லாம் எனக்கு சொன்னது தரணியும் மதுவும்தான்.. மாமா இல்ல.. பெத்த புள்ளைங்களை படிக்க வைக்கிறது கட்டிகொடுக்கிறதுன்னு எல்லா கடமைகளையும் என் மாமனார் மாமியார் சிறப்பா முடிச்சிட்டாங்க.. இனி அவங்களை நிம்மதியாவும் சந்தோசமாவும் பார்த்துக்கிறதுதான் என் வேலை.. அவங்க நிம்மதியை கெடுக்கிற மாதிரி யார் நடந்துக்கிட்டாலும் சும்மா விடமாட்டேன்..
உங்க புருசனும் உங்க வீட்டு ஆளுங்களும் வரலன்னு என் கல்யாணம் நின்னு போய்டல.. அதேபோல எனக்கு வளைகாப்பு குழந்தை பிறக்கிறதுன்னு எங்க வீட்டு விஷேசத்துக்கு இனி வரலன்னாலும் அதுவும் நிக்க போறதில்ல.. ஏன்னா தாய்மாமனா என் அண்ணனும் அன்பான மகளுக்காக எங்கப்பாம்மாவும் வந்து சபையை நிறைச்சிடுவாங்க..
உங்களுக்கு அப்படியில்ல.. இனிதான் உங்க பிள்ளைகளை கரையேத்தனும்.. நாளைக்கு மதுக்கு ஏது கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி நாங்க வரலன்னா என்னாகும்னு யோசிங்க.. எவ்வளோ பணம் சம்பாதிச்சாலும் பிறந்த வீட்டு அனுசரனை ஒரு பொண்ணுக்கு எத்தனை பலம்னு.. அங்க கெத்து காட்ட எங்களை விருந்துக்கு அழைச்ச உங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பில்ல..
உங்களை ஒதுக்கி விடனும்னு இங்க யாரும் நிக்கல.. போனதெல்லாம் போகட்டும்.. இந்த கல்யாணத்துக்கு நாங்க யாரும் வரலன்னாலும்.. இனி வரும் விஷேசங்கள்ல நாங்க கலந்துக்கிற மாதிரி அத்தை மாமாகிட்ட அன்போடவும் மரியாதையோடவும் நடந்துக்கங்க.. இல்ல இங்கையும் அங்கையும் அல்லாடி அல்லாடி மொத்தமா நிம்மதியையும் தொலைச்சிடுவிங்க..” என போதித்தாள் ஆசான் வீட்டு மருமகள்.
கீதா.. ‘அப்பா உங்ககிட்ட நான் தனியா பேசனும்..” என எழ.. ‘நீங்க இங்கயே பேசுங்க.. நான் போறேன் என தனதறைக்குள் வந்து கதவை தாழிட்டாள்.
‘என்னப்பா அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறிங்களா.?” என்றாள்.
‘இவ்வளோ நேரம் என் மருமக பேசுனதுல நான்கூட எதோ உனக்கு புரிஞ்சிருக்கு போல.. நிலா முன்ன மன்னிப்பு கேட்க தயங்கி தனியா பேச நினைக்கிறேன்னு தப்பா எடை போட்டுட்டேன்.. உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுன்னு இப்போதான் தெரியுது..” என்றார் கடுப்பாக.
இத்தனை வருடங்களாக இங்கே தன் பேச்சிற்கு மறுத்து பேசாத அன்னையும் தந்தையும் தற்போது இப்படி பேசியதில் மனமுடைந்தவள்.. ‘முடிவா என்னப்பா சொல்றிங்க.?” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.
‘எல்லாத்துக்கும் பொருத்து போகவும்தான என் மகன் கல்யாணத்தை கூட அவங்களை கேட்டு செய்யனும்னு உன் மாமியார் என்னையே அதிகாரம் செய்தாங்க.? அத்தனையும் உள்ளயிருந்து கேட்டுட்கிட்டிருந்த உன் புருசனும் வெளிலயே வரல.. எல்லாத்துக்கும் மேல உன் மாமியார் முன்ன நீ என்கிட்ட பேசின விதம்..” என குற்றப்பார்வை பார்த்தவர்..
‘என் மகன் சொன்ன மாதிரி யாரை எங்க வைக்கனுமோ அங்க வச்சிருந்தா இப்படி நடந்திருக்காது.. இனி என் மகன் என்ன சொல்றானோ அதை மட்டும்தான் கேக்க போறேன்..” என்றார் மயில்சாமி.