பக்கென சிரித்தவன்.. ‘என் மச்சினன் அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டார் மாமா..” என்றான். அப்பொழுதும் நாகராஜனின் முகம் யோசனையோடிருக்கவும்.. ‘என்னாச்சி மாமா.?” என்றான்.
‘ஆறேழு மாசமா கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன் மாப்பிள்ளை.. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி மழுப்பிட்டிருந்தான். சரி மனசுக்கு பிடிக்காம கல்யாணம் செய்ய கூடாதுன்னு நானும் வேற வேற பொண்ணு பார்த்திட்டிருந்தேன்..
இன்னைக்கு அவங்கம்மா பிடிச்ச பிடியில என்னதாண்டா சொல்ற.? யாரையாவது மனசுல நினைச்சிட்டிருக்கியான்னு கேட்டா.. அப்படில்லாம் இல்ல.. ஆனா இந்த பொண்ணை வேணா கேட்டு பாருங்கன்னு சொல்றான்..
எந்த பொண்ணுடான்னு விசாரிச்சா.. அங்க நம்ம வீட்லதான் அந்த பொண்ணை பார்த்தேன்றான்.. காதலிக்கிறியான்னு கேட்டா.. அந்த பொண்ணுகிட்ட பேசினதேயில்லன்னு சாதிக்கிறான்..” என்றார் ஆற்றாமையாக.
நம்ம வீட்லயா என கலைக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. ‘எந்த பொண்ணை சொல்றார்.? பேர் தெரியுமான்னு கேளுங்க மாமா..” என்றான் ஆவலாக.
கதிர் முகம் தெரிய.. ‘அச்சோ.. என் மச்சினனுக்கு வெக்கமெல்லாம் வருதே.. அப்போ இது காதலேதான்..” என ஆர்பரித்தவன்.. ‘யார் கதிர் அந்த பாக்கியசாலி.. எங்க ஊர்ல உங்களை கவர்ந்த பொண்ணு பேரென்ன.?” என்றான் சந்தோசத்தோடு.
கலையின் பேச்சில் மயில்சாமி கலாவும் ஆவலோடு மொபைலையே பார்த்திருக்க.. ‘ நிஜமா பேர் தெரியாது கலை.. அப்புறம் காதல் கீதல்லாம் இல்ல.. அப்பா எதேதோ பொண்ணை காட்டிட்டிருந்தார்.. எல்லாரும் அழகாத்தான் இருந்தாங்க.. எனக்குதான் யாரோடவும் மனசே ஒட்டல.. இப்போ திடீர்ன்னுதான் இந்த பொண்ணு நியாபகம் வந்தது.. அதான் சொன்னேன்..” என்றான்.
‘இதெல்லாம் நம்புற மாதிரியா மாப்பிள்ளை இருக்கு..?” என இடைபுகுந்தார் நாகராஜ்.
‘இருங்க மாமா இரண்டு நிமிசத்துல கண்டு பிடிச்சிடலாம்..” என்றவன்.. ‘சரி எந்த பொண்ணுன்னு சொல்லுங்க.. நான் விசாரிக்கிறேன்..” என்றான் கதிரிடம்.
‘போன மாசம் நான் அங்க வந்திருந்தப்ப.. நம்ம வீட்டுக்கு பால் வாங்க வந்திருந்தா.. அவ்வளோதான் தெரியும்.. “ என்றான்.
‘பால் வாங்கவா.?” என யோசனையோடு தந்தையைப் பார்க்க.. ‘நம்ம வீட்டுக்கு பால் வாங்க வரவங்களுக்கெல்லாம் கல்யாண வயசுல பொண்ணிருக்கு கலை..” என யோசிக்க.. ‘ஏங்க.. அந்த தம்பி வந்திருந்தப்ப நம்ம ராணிக்கு உடம்பு சரியில்லன்னு அவ பொண்ணுதான் பால் வாங்க வந்தா..” என்றார் பதட்டமாக.
‘ராணி பொண்ணா..?” என தானும் அதிர்ந்து.. ‘அது நம்ம கீதாக்கு சொந்தமாச்சே கலை..” என்றார்.
யாரை சொல்கிறார்கள் என கலைக்கு விளங்காமல் போகவே.. ‘மாமா.. நீங்க கட் பண்ணுங்க.. நான் இன்னும் பத்து நிமிசத்துல கூப்பிடறேன்..” என இணைப்பை துண்டித்ததும்.. ‘கலை.. ராணிங்கிறது நம்ம பெரிய மாப்பிள்ளையோட சொந்தகார பொண்ணு.. அப்படியொன்னும் வசதி கிடையாது.. சம்பந்தி வசதி பார்க்கமாட்டார்ன்னாலும் கீதா சொந்தகார பொண்ணை ஏத்துப்பாரா.?” என்றார் பதட்டமாக.
‘அப்பா.. எனக்கு முதல்ல அந்த பொண்ணை பார்க்கனும்.” என்றான். மயில்சாமி ராணிக்கு அழைத்து பொண்ணை அழைத்து வர சொல்லவும்.. இப்படியென அறியாத ராணியும் பத்து நிமிடத்தில் மகளோடு வந்தார்.
‘உக்காருங்க..” என மயில்சாமி சொல்ல.. அத்தனை லட்சணங்களும் ஒருங்கே இணைந்திருந்த ராணி மகளை பார்த்தவன் தன் மச்சினனின் ரசனையை மனதில் மெச்சி.. ‘என்ன படிக்கிற.?” என்றான் மீசையை முறுக்கியவாறு.
கலை கேட்ட தோரணை ராணிக்கு பயத்தை கிளப்ப.. ‘ஏன் தம்பி.? பால் பாக்கிக்கேது எதாவது துடுக்கா பேசிட்டாளா.?” என்றார் பதட்டமாக.
மயில்சாமி..‘ராணி.. நான் என்னைக்கு உன் மககிட்ட பால்பாக்கி கேட்டிருக்கேன்.?” என்றார் சிரிப்போடு.
‘நீங்க கேட்டதில்லைங்க.. மூனுமாசமா பால்பாக்கி கொடுக்கலன்னு என் வீட்டுகாரர்கிட்ட நான் பேசிட்டிருந்தேன்.. கடன்லாம் ஏன்மா வாங்கறன்னு கம்மலை கழட்டி கொடுத்தா.. வயசுபுள்ள கம்மல் கூட இல்லாம இருக்க கூடாது.. உன் வேலையை பாருன்னு அதட்டினேன்..
‘கதிரவன் சந்திரா.. பேர் பொருத்தமே அம்சமா இருக்கு..” என்றவன்.. ராணியிடம் அழைத்ததற்கான காரணம் சொல்ல.. ‘சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. இந்த சம்பந்தம் எங்களுக்கு வேணாம்..” என மறுத்து எழவும்..
‘உக்காருங்க..” என அன்போடு சொல்லி.. கதிரவனின் குணநலன்களை விளக்கவும்.. ‘உங்க மச்சினனையோ அவங்க குடும்பத்தையோ நான் ஒன்னும் சொல்லலைங்க.. உங்கக்கா புருசன் சொந்தத்துல என் பொண்ணை கொடுக்க எனக்கு இஷ்டமில்ல..” என்றார் முடிவாக.
‘என் மாமாக்கும் இதுக்கும் சம்மதமே இல்ல.. என்னை நம்புங்க..” என ஒருமணிநேரம் வரை பேசி.. கதிரவன் போட்டோ காண்பித்து கிட்டதட்ட சம்மதிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருந்தான் தன் பேச்சால்.
அந்த நேரம் கதிரவன் அழைக்கவும்.. கட் செய்து வீடியோ கால் போட்டான்.. கதிர் அழைப்பை ஏற்கவும்.. ‘இந்த பொண்ணுதான் நீங்க சொன்ன பொண்ணா.?” என்றான் சந்திராவின் பக்கம் மொபைல் திருப்பி.
‘ஹே..ஆமாம் கலை..” என கதிரின் முகம் ஜொலிக்கவே.. நாகராஜிடமும் சந்திராவை காண்பித்தான். குலோப்ஜாமுனோடு வந்த நிலாவிடம்.. ’நமக்கு ரொம்ப வேண்டியவங்க.. இன்னும் எடுத்து வா..” என்றான் சந்தோசத்தோடு.
‘என் புருசன்கிட்ட கலந்துட்டு சொல்றேனுங்க..” என ராணி கிளம்ப.. ‘அங்க புருசன் ஒத்துப்பாராப்பா..” என கலை கவலையாய் கேட்க.. ‘அங்க ராணி வச்சதுதான் சட்டம்..” என்றார் மயில்சாமி.
பிறகு சந்திராவின் விபரம் சொல்லவும்.. கீதாவின் சொந்தம் என்பதால் நாகராஜ் ஒப்புகொள்ள மறுக்க.. ‘ராணி குடும்பம் வசதி கம்மின்றதால மாப்பிள்ளைக்கும் இவங்களுக்கும் பேச்சு வார்த்தையே இல்லைங்க.. ரொம்ப கண்ணியமான குடும்பம்.. குடும்ப கஷ்டம் தெரிஞ்சி வளர்ந்த பிள்ளை சந்திரா. ஒழுக்கமான பொண்ணு.. கதிருக்கு ஏத்த பொண்ணு..” என பெருமையாக சொன்னவர்.. ‘என்ன வசதிதான் இல்ல..” என்றார் குரலிறங்கி.
தற்போதுதான் விசயம் புரிந்த நிலாவும்.. ‘இவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா..” என்றாள்.
‘மாப்பிள்ளையும் சம்பந்தியும் சொல்றாங்க.. பொண்ணும் கண்ணுக்கு லட்சணமா இருக்கா.? வேற என்ன வேணும்.? அந்த பொண்ணையே பேசி முடிக்கலாம்..” என அம்பிகா சொல்லவும் சம்மதித்தார் நாகராஜன்.
‘நாங்கெல்லாம் மூனு வருசம் காத்திருக்கனும்.. உங்களுக்கு மூனு நிமிசத்துல ஓ.கே ஆகனுமா..? கல்யாணத்தை ஒரு மூனு வருசத்துக்கு தள்ளி போடுறேன்.. அந்த பொண்ணுகிட்டயும் பேச விடாம பண்றேன்..” என கதிரை ஏகத்திற்கும் கலாய்த்து இணைப்பை துண்டித்தான்.
‘நீ ஸ்வீட் செய்த நேரம் ஸ்வீட்டான விசயம் நடந்திருக்கு..”என நிலாவிற்கு ஒரு ஜாமுனை ஊட்ட போக.. ‘வேணாங்க.. என்னவோ சாப்பிட பிடிக்கல..” என தலையை பின்னே தள்ளினாள்.
மருமகளை தனியே அழைத்து சென்று விசாரிக்கவும்.. ‘ஆமாம்த்த.. இந்த மாசம் இன்னும் ஆகல..” என நிலா பிரகாசமாய் சொல்ல.. வெளியே வந்த நிலா கணவனிடம் விசயத்தை சொல்லி.. ‘கலை.. ஹாஸ்பிட்டல் போய் வா.. கன்ஃபார்ம் ஆனதுக்கப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்..” என்றார் சந்தோசமாக.
ரெடியாக அறைக்கு வந்த மனைவியை அணைத்தவன்.. ‘இன்னைக்கென்ன ஒரே இன்ப அதிர்ச்சியா இருக்கு..” என கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு நீண்டநேர அணைப்பிற்கு பிறகு டாக்டரை பார்க்க கிளம்பினான்.
அரைமணி நேரத்தில் முகம் நிறைந்த புன்னகையோடு கலையும்.. அதீத வெக்கத்தோடும் மகிழ்ச்சியோடும் நிலாவும் வீடு வந்தனர்.
மயில்சாமி நாகராஜிற்கு அழைத்து சொல்ல.. கலா செல்விக்கும் கீதாவிற்கும் சொல்ல.. கலை கதிருக்கும் குமாருக்கும் சொல்ல.. நிலா சுவாதியிடம் என அனைவரும் நிறைந்த சந்தோசத்தோடு பேசிக்கொண்டிருந்தனர்.
மகளை பார்க்கவென அடுத்த நாளே குடும்பத்தோடு கிளம்பியிருந்தார் நாகராஜ். ‘வாங்க.. வாங்க.. புது மாப்பிள்ளை..” என கதிரை அணைத்த கலையரசன்.. ‘முக ஜொலிக்கிறதை பார்த்தா உங்க தங்கையை பார்க்க வந்த மாதிரி தெரியலயே..” என கிண்டலடித்து.. ‘இப்போ மட்டும் எப்படி இ..பாஸ் கிடைச்சிச்சி..?” என்றான் நக்கலாக.
‘குமார்தான் ஏற்பாடு செய்தார்.. எனக்கொன்னும் தெரியாது..” என்றான் சிரிப்போடு. கலகலப்போடு நேரம் செல்ல.. செல்வியும் குடும்பத்தோடு வந்தாள். நிலாவிடம் சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்க.. நீண்ட நாள் கழித்து பார்க்கும் கவி பார்த்தியோடு சிறுவர் பட்டாளம் இணைந்து கொள்ள தனியுலகம் தேடி மொட்டை மாடிக்கு சென்றனர்.
அடுத்த அரை மணிநேரத்தில் கீதாவும் லோகேசும் வர.. மயில்சாமி வழக்கம்போல் லோகேசை கண்டுகொள்ளவில்லை. வரவேற்ற கலா லோகேசிற்கு தண்ணீர் கொடுத்தார். ம்.. இந்த நேரம் சென்றால்தான் இணைய முடியுமென கீதா வற்புறுத்தவும் வேறு வழியின்றி வந்திருந்தான் லோகேஷ்.
லோகேஷ் வந்தது செல்விக்கும் நிலாவிற்கும் பெருத்த ஆச்சர்யம்தான்.. ‘வாந்தி மயக்கம் இருக்கா.?” என அக்கறையோடு கேட்கும் பாவனையில் கடமைக்கு கேட்ட கீதாவிற்கு தானும் கடமையோடே பதிலளித்த நிலவழகியிடம்..
‘வீட்டிற்கு வந்தவரிடம் இப்படி இருக்காதே..” என அறிவுறுத்திய அம்பிகா.. லோகேசிடம் நலம் விசாரிக்க் வற்புறுத்தவும்.. நாங்க வந்திருக்கும்போது நீ இப்படியிருந்தா எங்களுக்குதான் கெட்ட பேர் என சுவாதியும் வற்புறுத்தவே.. லோகேசிடம் சென்றவள்.. ‘டீ குடிக்கிறிங்களா.?” என்றாள்.
சரியென்பதாய் தலையசைத்தான். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்ததும் ‘ராணியின் மகளைதான் கதிருக்கு பேசப்போறாங்க செல்வி..” என மயில்சாமி சொல்ல.. ‘என்னப்பா சொல்றிங்க.? இது எப்போ.?” என சந்தோசித்து.. கதிரவனை சந்தேகத்தோடு பார்த்தாள்.
சிரித்த கதிரவன்.. ‘பிடிச்சிருக்குதான்.. ஆனா அந்த பொண்ணுகிட்ட பேசினதேயில்ல..” என்றான்.
‘ராணி பொண்ணு ஒழுக்கத்துக்கும் குணத்துக்கும் அழகுக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்கான்..” என அனைவரும் சந்தோசத்தோடு பேசிக்கொண்டிருக்க.. தன்னை அசிங்கப்படுத்தவே அவர்களோடு சம்பந்தம் கலக்கிறார்கள் என மனைவியிடம் பொங்கினான் லோகேஷ்.
‘சரி மாப்பிள்ளை உங்க விருப்பம்..” என்றார். அவர்களுக்கு தகவல் சொல்லி.. மாலை போல் கதிரவன் பெற்றோரோடு கலையும் நிலாவும் பெண்பார்க்க சென்று வந்தனர்.
அவர்களுக்கு கீதா குடும்பம் பிடிக்காததே நாகராஜிற்கு சற்று நிம்மதியை தர.. அடுத்த மாதம் திருமணம் என பேசி முடித்தனர். எதேனும் செய்து திருமணத்தை தடை செய்ய கீதாவிற்கு லோகேஷ் சொல்ல.. கலையையும் நிலாவையும் நினைத்து அந்த நினைவை கைவிட்டாள் கீதா.
—– —— —– ——
மூன்று மாதத்திற்கு பிறகு.. கதிரவன் சந்திரா திருமணம் இனிதே முடிந்திருக்க.. கதிரவனின் வீடே சொந்தங்களால் நிறைந்திருந்தது. கோவிலிருந்து வந்ததும் சோர்வோடு கட்டிலில் சரிந்தாள் நிலவழகி.
‘கலக்கிட்டடா..” என தம்பியை மெச்சினாள் செல்வராணி.
‘குமாரண்ணா நிலாக்கு கொடுத்த காசைதான்க்கா ராணிம்மாக்கிட்ட கொடுத்து சந்திராக்கு செய்ய சொன்னேன்.. நான் கொடுத்ததை விட என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவங்க வாங்கிகிட்டதுதான் பெருசு..”என்றான்.
‘ஆமாம் கலை..”என ஆமோதித்து.. ‘சரி நிலாவும் முடியலன்னு படுத்துட்டா.. அத்தையும் சுவாதியும் தனியா அல்லாடிட்டிருப்பாங்க.. நான் போய் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்..” என அகன்றாள்.
‘கொஞ்ச நேரம்..” என அரைமணிநேரம் தூங்கியெழுந்து பிறகுதான் உடைமாற்றினாள். கொஞ்சம் தெளிவாக இருக்கவும்.. கணவனை பார்த்தாள் காதலோடு.
‘என்னடி அப்படி பார்க்கிற.? வேஷ்டில ரொம்ப அழகா இருக்கேனா.?” என்றான் மையலாக.
ஆமாம் என்பதாய் தலையசைத்து.. வெளியே எட்டிப்பார்த்து கதவை தாழிட்டவள் அமர்ந்திருந்த கணவனின் கன்னத்தில் முத்தம் பதித்து பேரன்போடு அணைத்தாள். ‘ஓய்.. வெளில அத்தனை பேர் இருக்க என்ன இப்படி கதவை சாத்திட்ட.?” என்றான்.
‘போடிங்க.. அது குமாரண்ணா கொடுத்த காசுதான்.. என்னவோ என்னை ரொம்ப புகழாத..” என்றான்.
‘ம் கவிபாப்பாக்கு செய்தா அவர் செய்ததே திருப்பி செய்த மாதிரியாகிடும்.. அது மரியாதையா இருக்காதுன்னும்.. அண்ணா மாமாகிட்ட சீர் வாங்கிக்க மாட்டாங்கனும் யோசிச்சிதான ராணிம்மா மூலமா மாமா அன்புக்கு மரியாதை செய்திங்க..” என்றாள் காதலோடு.
‘நீ புத்திசாலிதான்..” என நெற்றியில் முட்டி.. ‘எங்கக்காவையே ஒரு வழிக்கு கொண்டு வந்துட்ட போல.. பத்திரிக்கை வைக்காமலே கல்யாணத்துக்கு வந்துட்டாங்க..” என்றான் மெச்சுதலாக.
‘நேர்ல அழைக்காம ஃபோன்ல சொன்னதால இந்த கல்யாணத்துலயும் உங்க மாமாக்கு விருப்பமே இல்ல.. எதாவது செய்தா அதுவேதான் மது கல்யாணத்துல நடக்கும்னு சித்திகிட்ட சொல்லி பெரிய சித்திகிட்ட சொல்ல சொல்லிட்டேன்.. அதோட மதுவும் இப்பல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா.. எதாவது செய்தா பெத்த பொண்ணுகிட்ட அசிங்கமாய்டும்னுதான் அமைதியா கல்யாணத்துக்கு வந்துட்டு போனாங்க..
ம்.. என்ன முயற்சித்தும் இன்னும் உண்மையா திருந்தலையேன்றது வருத்தமா இருந்தாலும்.. உங்க மேல உள்ள பயத்துலயும்.. மது கல்யாணத்துல நான் பழிவாங்கிடுவன்றதாலயும் இப்போலாம் அத்தை மாமாகிட்ட மரியாதையா நடந்துக்கிறாங்க.. என்னையும் தரக்குறைவா பேசுறதில்ல.. இப்படி கொஞ்சம் முன்னேற்றம் பரவால்லதான.?” என்றாள் சந்தோசமாக.
‘அக்கா பசங்க அப்பாம்மான்னு எல்லார் மேலயும் அன்பு காட்டி.. திளைக்க திளைக்க என்னை காதலிச்சி பெருமை படுத்திட்டே இருக்க..” என்றான் காதலாக.
‘நீங்களும்தான் எங்கப்பா வாயாலயே உன் பெரிய மருமகனை வீட்டுக்கு வரசொல்லுன்னு அம்மாகிட்ட சொல்ல வச்சிட்டிங்க.. மாமாகிட்ட பேசலன்னாலும் அப்பா இந்தளவுக்கு இறங்கினதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. நிலா எங்கப்பாவும் இங்க வந்துருக்கார்ன்னு.. இன்னைக்கெல்லாம் கவி பார்த்தி முகத்தையும் சுவாதிக்கா முகத்தையும் பார்க்கனுமே..” என பெருமையோடு சொல்லி..
‘உங்க காதலால உங்க மாமனார் குடும்பமும்.. என் காதலால என் மாமனார் குடும்பமும் முன்னைக்கு இப்போ ரொம்ப சந்தோசமா இணைஞ்சிருக்காங்க.. எல்லாம் நீங்க என்மேல வச்ச காதலால..” என்றாள் காதலாக.
‘ம்கூம்.. இந்த நெசவாளி பொண்ணு காதலால..”
‘சரி.. நம்ம காதலால..” என்றாள் கண்ணிமைத்து.
நெற்றி முத்தமிட்டவன்.. ‘சரி..சரி.. இங்கயிருந்தா வேலைக்காகாது.. அங்க கதிரை போய் கொஞ்ச நேரம் ஓட்டிட்டு வரேன்..” என்க.. ‘நானும் வரேன்.. எங்கண்ணிகிட்ட இன்னும் பேசவேயில்ல..” என கணவனோடு ஜோடி சேர்ந்தாள் நிலவழகி.