மகள் புகுந்த வீடு செல்லப்போகிறாள்.. பிரிந்திருப்பது எத்தனை கடினம் என உணர்ந்தபோதும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இன்முகத்தோடு அனுப்பி வைக்க வேண்டும் என தானும் கருத்தில்கொண்டு மனைவிக்கும் அறிவுறுத்தியிருந்தார் நாகராஜன்.
எந்த பலனும் எதிர்பாராமல் அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணமே கலையரசனை மதிப்பாக பார்க்க வைத்திருக்க.. கீதாவால் பிரச்சனை வந்தபோதும்.. மீண்டும் கூட வரும் என்ற கருத்திருந்தபோதும்.. எல்லாம் கலையரசன் பார்த்துக்கொள்வான் என மருமகன் மீது நாகராஜனிற்கும் அம்பிகாவிற்கும் அத்தனை நம்பிக்கை.
நேற்று மறுவீடு வந்த கலையரசன்.. முக்கியமான கேஸ்.. இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.. குற்றவாளி கொஞ்சம் பின்புலம் உள்ளவன்.. அவனால் ஒரு சிறு பெண் பாதித்திருக்கிறாள்.. மிகுந்த சிரமத்திற்கிடையே அரஸ்ட் செய்தோம்.. என நாகராஜன் அம்பிகாவிடம் தன் நிலையை சொல்லி வீட்டிற்கு வந்த அடுத்த இரண்டு மணிநேரத்திலேயே கிளம்பியிருந்தான்..
நேற்றிரவு வரமுடியாமல் போகவே நாளை வருகிறேன் என நிலாவிற்கு அழைத்து சொல்லியிருந்தான். இதோ இன்னும் சற்று நேரத்தில் வந்திடுவேன்.. மாலை கிளம்பலாம் என கலை சொல்லியிருக்க தாய் தந்தையை பிரியும் வேதனையில் நிலாவிற்கு கண்ணீர் நிற்கவில்லை.
நிலாவிற்கு மேல் கதிரவனும் சுவாதியும் முகம் வாடியிருந்தனர். ‘நிலா..” என அம்பிகா குரல் கொடுக்க.. சுவாதிதான் வெளியே வந்தாள். ‘அவளை முகம் கழுவி தலைபின்ன சொல்லு.. மருமகன் வந்திட்டிருக்காப்பிலயாம்..” என அரக்க பரக்க கிச்சன் சென்றார் அம்பிகா.
நான்கைந்து நாட்களாக தறி பக்கம் போகாததால் காலையிலேயே கிளம்பியிருந்த நாகராஜ்.. இன்னும் சற்று நேரத்தில் கலையரசன் வந்திடுவார் என கதிரவன் அழைக்கவும் வீடு வந்தார். ‘ம்.. வாசம் தூக்குது.. என்ன செய்திட்டிருக்க அம்பிகா..?” என கேட்டபடி கிச்சன் சென்றார்.
‘அதிரசம்தான்ங்க.. மாப்பிள்ளைக்கு நெய் போடாத ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்னு சம்பந்தி சொன்னாரில்ல.? அதான் இதை செய்திட்டிருக்கேன்.. அவ்ளோதான் ஆச்சு..” என தன் வேலையில் கவனமானார்.
‘ஒன்றை எடுத்து ருசி பார்த்தவர்..’ம்.. நல்லாயிருக்கு..” என மனைவியை புகழ்ந்து.. ‘நிலாம்மா சாப்பிட்டாளா.? எங்க குட்டிங்க சத்தத்தை காணோம்..? என்னை வர சொல்லிட்டு கதிர் எங்க போய்ட்டான்..?” என கேட்க..
‘அம்பிகாவின் முகம் தடுமாற.. நாகராஜ் அர்த்தமாய் பார்க்க.. ‘நான் சுவாதியைத்தான் எடுத்து போக சொன்னேன்.. கதிர்தான் நான் கொடுத்துட்டு வரேன்னு சொன்னான்.. அதான்..” என இழுத்தார்.
சரியென்பதாய் தலையசைத்தவர்.. ‘குட்டிகளும் கதிரோட போயிருக்காங்களா.?” என்றார்.
கதிர் இப்படி செய்வது இதுதான் முதல்முறை.. கணவன் என்ன சொல்வாரோ என பயந்திருந்த அம்பிகாவிற்கு தற்போது எதுவும் சொல்லாமல் இருக்கவும்.. ‘உங்களுக்கு கோபம்..” என ஆரம்பித்து.. நாமாக எதற்கு ஆரம்பிக்கனும் என சட்டென தோன்ற.. ‘ஏங்க.. மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாராம்.. உங்க பொண்ணு இன்னும் தலைகூட பின்னாம இருக்கா.. மாப்பிள்ளை வந்தா என்ன நினைப்பார்.? போய் என்னன்னு பாருங்க..” என்றார்.
‘போலீஸ்டேசன்ல.. உன் பொண்ணு என்னைவிட்டு வரமாட்டா.. உன்னால என்ன செய்ய முடியும்ன்றமாதிரி ஒரு பார்வை பார்த்தான் பாரு.. இன்னும் என்னால மறக்க முடியல அம்பிகா..” என வேதனையோடு பெருமூச்செடுத்து..
‘ம்… எது எப்படியோ.? தப்பான கல்யாணம்னாலும் நம்பி வந்தவளை கண்கலங்காம பார்த்துக்கிறாப்பில.. நம்ம வசதின்னு தெரிஞ்சதுக்கப்புறமும் நம்ம பணத்தை எதிர்பார்க்காம தன்மானத்தோட வாழறாப்பில.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நல்லது கெட்டது சொல்லி வளர்த்த பெத்தவங்க இல்ல.. இப்படி கல்யாணம் தப்புதான்னு மன்னிப்பு கேட்டதும் உன் மாப்பிள்ளைமேல இருந்த கோபம் குறைஞ்சிடுச்சிதான்.. ஆனாலும் அப்படி கல்யாணத்தைதான் என்னால ஏத்துக்கவே முடியல..
அதேநேரம் என் கோபத்தையும் பகையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போகவும் விருப்பமில்ல.. அப்படி எடுத்துட்டு போற அளவுக்கு உன் பெரிய மாப்பிள்ளை கெட்டவரும் இல்ல.. நம்ம நிலாம்மா அவ மாமாகிட்ட பேசாததுதான் எனக்கு தெரியாது..
குமார் காணாம போனப்ப கதிர் பேசியிருந்தாலும் அதிகம் வச்சிக்காமத்தான் இருந்தான்.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நிலாக்காக கண்கலங்கினதுலயிருந்து கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சிருக்கான்.. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. இப்போ முதல் முறையா இனிப்பு எடுத்துட்டு போயிருக்கான்.. ம்.. சந்தோசமாத்தான் இருக்கு..” என கரைந்த குரலில் சொல்லி..
‘கல்யாணத்துக்கு அழைச்சது தவிர மத்தபடி அவர்கிட்ட நீ பேசினதில்லன்னு எனக்கு தெரியும்.. எனக்காக உன் மாப்பிள்ளைகிட்ட பேசாம இருக்காத.. உனக்கு விருப்பம்னா பேசிக்கோ..” என்றார் முழு மனதோடு.
அம்பிகாவிற்கு மனமெங்கும் சந்தோசம் பூத்தது.. ’பேசிக்கனும்னு ரொம்ப ஆசை வந்ததில்ல.. ஆனா உறவுன்னு சொல்லிக்க நம்மைத் தவிர யாருமில்லாதவர்.. நம்ம பொண்ணை கண்ணுக்குள்ள வச்சி தாங்குறார்.. நம்ம நிலாமேல ரொம்ப பாசமா இருக்கார்.. பிரசவம்ங்கிறது பொண்ணுக்கு எத்தனை பெரிய விசயம்..? ரெண்டு குழந்தை பிறந்தப்பவும் பிறந்தவீட்டு உதவியுமில்லாம அம்மா உதவியுமில்லாம தானே தாய்க்கு தாயா இருந்து நம்ம பொண்ணை கவனிச்சிருக்கார்.. இப்படி காரணங்களுக்காகவே அம்மா போல நான் இருக்கேன்னு அடிக்கடி சொல்ல தோணும்.. ஆனா சொன்னதில்ல..” என கண்கலங்கி..
‘கல்யாணத்துக்கு அழைச்சப்ப கூட உங்களுக்கு கஷ்டமில்லன்னா நான் வரேன்னு சொன்னதும் மனசுக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சி.. அப்பா சொல்லித்தான் உங்களை அழைக்க வந்தோம்னு கதிர் சொன்னதுக்கப்புறம் ரொம்ப சந்தோசப்பட்டார்.. என் நிலாம்மா கல்யாணத்துல நான் இல்லாமலான்னு பாசமா சொன்னார்..
கண்டிக்கவோ தண்டிக்கவோ யாருமில்லாம வளர்ந்திருந்தாலும் எந்த கெட்டபழக்கமும் இல்ல.. சென்னையில ஒரு கும்பல் பணமோசடி செய்தப்ப பணத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம்.. அப்போ கூட இங்க வந்து இரண்டொரு மாசத்துல நம்ம கதிர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து.. நான் செய்த துரோகத்தை நினைக்காம தக்க நேரத்துல என் பொண்டாட்டி குழந்தைங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றின்னு அழுதாராம்.. அந்த ரங்கனால பிரச்சனை வந்தப்பவும் யார் தயவும் இல்லாம ஒத்த ஆளா நின்னு எல்லாம் சமாளிச்சிருக்கார்.. நமக்கு வாய்ச்ச ரெண்டு மருமகனுங்களுமே ரொம்ப தங்கமானவங்க..” என்றார் பெருமையோடு.
மனைவியின் பேச்சை அவரின் தலைகோதி ஆமோதித்து..‘நிலாம்மா புருசனோட போகும்போது அழக்கூடாது..” என்க.. ‘அதான் நைட்டே சொன்னிங்களே.. நான் அழமாட்டேன்.. உங்க பையனும் சுவாதியும்தான் ரொம்ப வாடியிருக்காங்க..” என வரவழைத்த சிரிப்போடு சொன்னாலும் குரல் கமறத்தான் செய்தது.
சமையலறையில் பார்வையை சுழற்ற.. சமையல் முடிந்திருந்தது.. ஆனால் நிறைய பாத்திரம் அழுக்காய் இருக்க..’இதெல்லாம் அப்புறம் செய்துக்கலாம்.. போய் முகம் கழுவி வா.. நிலாம்மாவை காபி வைக்க சொல்றேன்..” என அன்போடு பணித்து.. வெளியே வந்தவர்.. ‘நிலாம்மா.” என குரல் கொடுக்க குனிந்த தலையோடு மெல்ல வெளியே வந்தாள் நிலவழகி.
மகளின் முகம் நிமிர்த்த.. ‘என்னம்மா இது..? முகமெல்லாம் இப்படி சிவந்திருக்கு..?” என பதறினார் நாகராஜன். ‘அப்பா..” என நிலா கண்ணீர் விட.. மகளின் முகத்தில் பிரிவின் துயரம் வெகுவாய் தெரிய.. நாகராஜன் சிரித்தார்.
சுவாதி வீட்டில் இருக்கும்போது இறுக்கமாகத்தான் இருப்பார். அப்பா எப்பவும் இப்படித்தானா என ஒருமுறை நிலாவிடம் விசாரிக்க.. நீ வீட்டை விட்டு போனதற்கு பிறகு யாரோடும் இயல்பாய் பேசுவதில்லை..
பார்த்தி கவி வந்ததுக்கப்புறம்தான் கொஞ்சம் இயல்பாய் இருக்கிறார்.. என நிலவழகி தந்தையைப் பற்றி சொல்லியிருக்க.. இன்று தந்தையின் சிரிப்பில் சுவாதிக்கு பெருத்த ஆச்சர்யம்தான்.. அதோடு நீண்ட வருடங்களுக்கு பிறகு நாகராஜன் உள்ளார்ந்து சிரித்து பார்ப்பதால் ரசித்து பார்த்திருந்தாள்.
நாகராஜன்.. ‘அம்பிகா..” என சிரிப்போடு அழைக்க.. கணவனின் உற்சாக குரலில் முகம் துடைத்தபடி அம்பிகா வெளியே வர.. கலையோடு வந்த கதிரவன் தந்தையின் சிரிப்பில் ஆச்சர்யப்பட்டவன்.. நிலாவின் கண்ணீரில் எதோ வம்பு நடப்பது புரிந்து இருவரும் வாசலிலேயே நின்றனர்.
‘பத்திரிக்கையில அட்டைப் படத்தை பார்த்ததும் உள்ள என்னயிருக்குன்னு தெரிஞ்சிக்க கூட பொறுமையில்லாம.. பெத்தவங்க கூடப்பிறந்தவன்னு எல்லாரையும் மறந்துட்டு தூக்க மாத்திரை சாப்பிட்ட பொண்ணு.. இப்ப புருசனோட போறதுக்கு அழறாளாம்.. நாம இதை நம்பனுமாம்..” என கிண்டலோடு சிரிக்க..
‘போங்க.. என்னை கிண்டல் பண்றிங்க..” என நிலா பிணக்கோடு தனதறை செல்ல முயல.. மகளைப் பிடித்து நிறுத்திய அம்பிகா.. ‘அப்பா கிண்டல் பண்ணல.. உண்மையைத்தான் சொல்றார்..” என தானும் கிண்டலக்க..
‘ம் இப்படிவேற நினைப்பிருக்காடா..? இந்த ரெண்டு வருசமாத்தான் நீ வீட்டு வேலை செய்யிற..? அதுக்கு முன்ன என் பொண்டாட்டிதான என்னை பார்த்துக்கிட்டா.. எதோ பொண்ணு ஆசையா செய்யிறாளேன்னுதான் அம்பிகா என்னை கண்டுக்கிறதில்ல.. நீ போனதும் என் பொண்டாட்டி என்னை பழையபடி அருமையா பார்த்துப்பா.. ஆமாதான அம்பிகா..?” என மனைவியை பெருமைப்படுத்த..
‘ஆமாம்.. என் புருசனை நான் பார்த்துக்காம..” என அம்பிகா சிரிக்க.. ஆ.. வென விழிவிரித்தாள் நிலவழகி. ம்.. கதிரவனும் கூட தாய் தந்தையர் இப்படி பேசி பார்த்ததில்லையே.. பெற்றோரை வெகுவாய் ரசித்தவன் பெருங்குரலெடுத்து சிரித்தபடி உள்ளே வந்தான்.
‘என்ன இளிப்பு..? எல்லாம் உன்னால வந்தது.. உன்னை நம்பி ரகசியம் சொன்னேன் பாரு.. என்னை சொல்லனும்..”என்றாள் கோபத்தோடு.
‘கவிபாப்பாதான எல்லார்கிட்டயும் போட்டு கொடுத்தா..? என்னை ஏன் திட்டற.?” என சிறு புன்னகையோடு கேட்டவன்.. ’ஆனாலும் நிலா.. கலையை எப்படி அப்படி யோசிச்ச..?” என்றான் கோபத்தோடு.
‘அது.. ஆபத்திற்கு உதவிய நித்தியா பொண்ணோடன்னு இருந்ததா..? அவங்க கை ஒருமுறை உடைஞ்சிடுச்சில்ல.? அது நித்தியான்ற பொண்ணை காப்பத்தும் போதுதான்னு நியூஸ்ல போட்டிருந்தாங்க.. அதான்..” என்றாள் பாவமாக.
‘அந்த பொண்ணு பேரு நித்தியான்னு எனக்கு கூட மறந்துடுச்சி..” என்ற குரல் முன்னே வர.. கலை பின்னே வந்தான் சிரிப்போடு.
இரண்டு பேரும் ஒன்னாதான் வந்திங்களா என்ற கோபப்பார்வை பார்த்து உள்ளே செல்ல.. ‘நிலா இன்னைக்கும் நானா எதுவும் சொல்லல..” என தங்கையை சமாதனம் செய்ய பின்னோடு போனான்.
‘வாங்க வாங்க தம்பி..” என நாகராஜ் வரவேற்க.. ‘வாங்க மாப்பிள்ளை..” என அம்பிகா அழைக்க.. ‘சாரி ஆன்ட்டி.. நைட் வரமுடியாம ஆகிடுச்சி..” என்றான் வருத்தத்தோடு.
‘கொஞ்சம் ஏமாற்றமாத்தான் ஆகிடுச்சி.. பார்த்தியும் கவியும் நீங்க வருவிங்கன்னு பதினொரு மணிவரை முழிச்சிட்டிருந்தாங்க..” என்று தண்ணீர் கொடுத்தாள் சுவாதி.
‘ம்.. கவிம்மா சொன்னா.. குட்டிங்ககிட்ட சாரி கேட்டுட்டு குமாரண்ணாவோட பேசிட்டுதான் வரேன்.. ஸ்டேசன் கோர்ட்டுன்னு நிறைய இடத்துக்கு போய் வந்திருக்கேன்.. குளிச்சிட்டு வந்திடறேன்..” என்க..
அம்பிகா..‘நிலா.. மாப்பிள்ளை குளிக்கனுமாம்..” என மகளுக்கு குரல்கொடுத்து.. ‘அங்க மாதிரி இங்கயும் துணி துவைக்காதிங்க.. நிலா பார்த்துப்பா..” என்றார் அக்கறையாக.
புன்னகை புரிந்து மனைவி அறைநோக்கி போக.. கதிர் வெளியே வர.. ‘ம்.. அதுக்குள்ள தங்கையை சமாதனம் செய்தாச்சா கதிர்.. முகத்தை பார்த்தா சமாதனம் ஆன மாதிரி தெரியலையே..” என மனைவியை உற்று நோக்கி..
‘ஆனாலும் கதிர்.. அப்பா மகளுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. நாம வெளிலயிருந்து ஒட்டு கேட்டது தப்புதான்..” என பாவம்போல் தன் பங்கிற்கு கிண்டலடித்து.. ‘அதுக்கும் சேர்த்து சாரி கேட்டுட்டிருங்க.. நான் குளிச்சிட்டு வந்திடறேன்..” என சிரிப்போடு குளியலறை சென்றான்.
‘அப்பவே வந்துட்டுடிங்களா..?” என நிலா கதிரை முறைக்க..
‘ஆமாம் நிலா.. உடனே உள்ள வரலாம்னுதான் இருந்தோம்.. கலைதான் கண்ட இடமெல்லாம் சுத்திட்டு வந்திருக்கேன்.. கொரோனா ரொம்ப அதிகமா பரவிட்டிருக்கு.. இங்க வெளிலயே குளிச்சிட்டு வரமாதிரி பாத்ரூம் இல்லையான்னு மாஸ்க்க கூட கழட்டாம கேட்டுட்டிருந்தார்.. வெளி பாத்ரூம்ல சவர் இல்ல.. எதையும் தொடாம உள்ள வந்தே குளிச்சிக்கோங்கன்னு சொல்லிட்டிருந்தேன்.. அவர் நான் பேசறதையும் கேட்டுட்டு உன்னையும் கவனிச்சிருப்பார்ன்னு எனக்கென்ன தெரியும்..?” என நடவாத விசயத்தை நீளமாய் பேசி..
‘சும்மா என்கிட்ட தொணதொணத்திட்டிருக்காத.. கலை பசியோட வந்திருப்பார்.. குளிச்சி வரதுக்குள்ள அவர்க்கு மாத்திக்க டிரெஸ் எடுத்து வை.. “ என கோபம் போல் சொல்லி கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து வெளியேறினான்.
நேற்று எடுத்து வந்திருந்த பேகிலிருந்து அவனின் உடைகளை எடுத்து கட்டில் மேல் வைக்க.. கதவைத் திறந்த கலையரசன்.. ‘நிலா டவல் மட்டும் எடுத்து கதவுல போடு..” என்க.. பெரிதாய் விழிவிரித்தாள்.
‘ஹேய்.. குளிச்சிட்டு எதை கட்டிட்டு வர.? கொண்டு வா..” என்றான் இயல்பாக.
‘டிரெஸ் கழட்டும் முன்ன சொல்ல மாட்டிங்களா..?” என முகம் சிவந்தவாறு டவலை நீட்ட.. ‘சர்ட் கழட்டுனதுக்கப்புறம்தான் நியாபகம் வந்தது.. பேன்ட் போட்டுட்டுதான இருக்கேன்..?” என்றான் சிரிப்போடு.
நிலா டவலை நீட்டிக்கொண்டே இருக்க.. ‘குளிக்காம எதையும் தொடமாட்டேன்.. பயந்துக்காம வந்து கதவுமேல போடு..” என்றான் கண்ணடித்து.
கலையை வெற்றுடம்போடு பார்த்தபின்னே நிலாவினுள் அப்படியொரு படபடப்பு.. நேற்று அங்கே அத்தனை பேர் இருக்க தாழிட்டான்.. அப்பா அம்மா அண்ணா அக்கா என அனைவர் முன்னும் என யோசிக்க.. மெல்ல நடந்து டவலை கதவின்மேல் போட்டவள் கதவை சாற்றி வெளியேறிவிட்டாள்.