ஓடங்கள் – 11
பரபரப்பான சென்னை வாழ்க்கை ஓரளவுக்கு பழகியிருந்தது சாருவிற்கு. முதல் வருடம் மட்டும் ஹாஸ்டலில் இருக்க, அடுத்தடுத்த வருடங்களில் அவளைத் தனியே விட பயந்தும், அவள் இல்லாமல் இருக்க முடியாமலும் விஸ்வம் சென்னை போகிறேன் என்று சொல்லிவிட்டார். செல்வத்திற்கும் அதுவே சரியெனப்பட சென்னையில் தனியாக ஒரு வீடு பார்த்து இருவரையும் விட்டுவிட்டு கிளம்பினார்.
அவருக்கும் சாருவைத் தனியே விட பயம். தன் குடும்பத்தின் ஒற்றை வாரிசு, அவளை கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பயமும் அவருக்கு இருந்தது. ஊரில் முக்கியமான பரம்பரைச் சொத்துக்களைத் தவிர்த்து மற்றதெல்லாம் விற்று பணமாகவும் நகையாகவும் அவள் பெயரில் சேர்க்க ஆரம்பித்தார். மருத்துவப் படிப்புதான் என்பதில் சாரு உறுதியாக நின்று விட்டதால் தான் இந்த ஏற்பாடு. இப்படியாக அவர்களின் வாழ்க்கை நகர கல்லூரியில் இருந்து இன்டர்காலேஜ் காம்பெட்டிஷனுக்காக சாருவை வைத்து ஒரு குழு தயார் செய்து பெங்களூர் அனுப்பி வைத்தனர். அந்தக் காலேஜ் ஆடிட்டோரியமே மாணவர்களால் அதிர்ந்துக் கொண்டிருந்தது.
சாருவிற்கு நன்றாக பாட வரும். அவளது கல்லூரியில் அந்தக் குரலுக்கென்ற ஒரு தனி ரசிகப் பட்டாளமே உண்டு. முதலில் முடியவே முடியாது என்று மறுத்தவளை நண்பர்களும், பேராசிரியர்களும் சேர்ந்து தான் இங்கு அனுப்பியிருந்தனர். விஸ்வத்திற்கு இதில் விருப்பம் இல்லைதான். ஆனால் செல்வம் அவரிடம் பேசி ஒரேடியாக முடக்க வேண்டும் எனச் சாருவை அனுப்பி வைத்தார்.
ஒவ்வொரு கல்லூரியாகத் தங்களின் திறமைகளை காட்டிக் கொண்டிருக்க, சாருவின் முறையும் வந்தது. அவள் மேடயேறியதும், அவளது உடை பாவனையிலேயே ஏதோ அருதப் பழசாக ஒரு பழைய பாடலை பாடப் போகிறாள் என்றுப் புரிந்து, எல்லோரும் கத்த ஆரம்பித்தனர். ஆம் வெண்பட்டில் பாவடை தாவணி அணிந்து கூந்தலைத் தளர பிண்ணி பூ வைத்து பார்க்கவே மங்களகரமாக இருந்தாள். இந்த மாதிரியானக் கூட்டத்தில் ஏன் இப்படி உடைத் தெரிவு செய்திருக்கிறாள் என எல்லோரும் யோசித்து மீண்டும் கத்த ஆரம்பித்தனர்.
ஆனால் அவளுடன் வந்தவர்களுக்குத் தெரியுமே. அவள் படிக்கும் கல்லூரியில் எந்த விழாவாக இருந்தாலும் சாருவின் பாடல் இல்லாமல் இருக்காது என்று. கூட்டத்தைப் பார்த்து பயமெல்லாம் இல்லை அவளுக்கு. இரு ஆண்கள் வளர்த்ததால் கூட இருக்கலாம். சாரு பாட ஆர்மபித்தால் விஸ்வத்திற்கு தன் மனைவியின் நினைவுகள் வந்துவிடும். அதனாலே அவளை பாட்டுக் கற்றுக் கொள்ள சொன்னார். அவளும் விருப்பமாகவே கற்றுக் கொண்டாள்.
அப்பெருங்க் கூட்டத்தின் கத்தலில் சற்றும் பயமில்லாமல் அவள் நிற்க, மாணவர்களின் கூட்டத்தின் சத்தம் குறைய ஆரம்பிக்க, “ஹாய் ப்ரண்ட்ஸ்.. நான் இப்போ பாடட்டுமா..? ஷ்ரேயா கோஷல் மாதிரி பாடலைன்னாலும், ஓரளவுக்குப் பாடுவேன். இதுக்காக நிறைய நாள் க்ளாஸ் கட்டடிச்சிட்டு, ப்ராக்டிஸ் பண்ணிருக்கேன். நீங்க ஓகே சொன்னா பாடுறேன்.. இல்லைன்னா இறங்கிடுறேன்..” என கீழே இருந்த மாணவர்களைப் பார்த்துத் தைரியமாகச் சொல்ல, அவளின் தைரியத்தைக் கண்டு வியந்தவர்கள் “ஏஸ்.. எஸ்.. பாடுங்க.. பாடுங்க..” எனக் கூச்சலிட,
“தேங்க் யூ ப்ரண்ட்ஸ்.. தேங்க் யூ.. இது ஒரு மெட்லி மாதிரி தான் நானே யோசிச்சு கிரியேட் செய்தேன். சோ பர்ஸ்ட் சாங் பார்த்து டொமோட்டோ போல வெப்பன்ஸ இப்போவே கையில எடுத்துடாதீங்க. முழுசா கேட்டுட்டு தக்காளியா முட்டையான்னு முடிவு பண்ணுங்க..” என்று விட்டு சுரம் பிடிக்க ஆரம்பித்தாள்.
“யாருடா இது.. இவ்ளோ பேசுது.. ரொம்ப தில்லான பொண்ணு தான் போல, இத்தனை காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் இருக்கோம். அவங்க முன்னாடி கொஞ்சமும் பயமில்லாம பேசுறா பாரு… பொண்ணுன்னா இப்படி இருக்கனும் டா..” என்றான் அப்போது தான் தன் வேலைளை எல்லாம் முடித்து வந்த அந்தக் கல்லூரியின் தலைவனும், அந்த நிகழ்ச்சியை மேற்பார்வை பார்ப்பவனுமான புகழ் என்கிற திருப்புகழ்.
“என்ன மச்சான் உன் சூப்பர்வைசிங் வேலையெல்லாம் முடிஞ்சதா.. ஃபிகர் எப்படி.. நீ சொல்றதைப் பார்த்தா லவ் இஸ் ஃபர்ஸ்ட் சைட்டா.. பார்த்ததும் பத்திக்கிச்சா.. ஃபிகரும் பார்க்க டக்கரா தான் இருக்கா.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாடா.. அப்போ தான் நானும் ஒரு முடிவுக்கு வர முடியும்.. நானும் ட்ரை செய்றேன்..” என்ற தன் நண்பனின் வயிற்றில் ஒரு குத்து விட்டவன்,
“ஒரு வார்த்தை பேசக் கூடாது ரைட்.. தைரியமான பொண்ணுங்க யாரைப் பார்த்தாலும் நான் இப்படித்தான் சொல்லுவேன், சொல்லியிருக்கேன்.. இது என்ன புதுசா பேசுறமாதிரி சொல்ற.. ப்ளடிஃபூல்..” என நன்பனை அதட்டியவன், “திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்..” என்ற சாருவின் குரலில் வேகமாக மேடையை நோக்கினான்.
பழைய பாடல்தான் பாடுவாள் என்றுத் தெரியும், ஆனால் பழையதுக்கும் பழைய பாடல் பாடுவாள் என்றுத் தெரியாது. அதுவும் இந்தப் பாட்டு, தன் தந்தைக்குப் பிடித்தமானப் பாட்டு. அவர் தீவிர முருக பக்தர். முருகன் மேல் கொண்டத் தீவிர பக்தியினால் தான் அவனுக்கு அந்தப் பெயர் கூட, திருப்புகழ் அதுதான் அவன் பெயர். ஒரு நாளில் ஒரு முறையாவது இந்தப் பாடலை அவன் கேட்டு விடுவான் உபயம் அவன் தந்தை.
மேடையையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அரங்கத்தையே அமைதியாகக் கட்டிப் போட்டிருந்தாள். சாரு தன் குரலில் அப்போது தான் மற்றொன்றையும் கவனித்தான். அவள் பாடுவதற்கு ஏற்ப ஒரு பெண் பரதத்தில் ஆடிக் கொண்டிருந்தாள். பார்க்க வட இந்தியப் பெண் போல இருந்தாள். அவளின் குரலில் தேன் கலந்திருந்தது என்றால், ஆடிய பெண்ணின் நடனத்தில் நளினம் மிளிர்ந்தது.
அந்தப் பாடலைத் தொடர்ந்தே ‘அழகென்ற சொல்லுக்கு முருகா..’, ‘அந்தச் சிவகாமி மகனிடம் சேதி கேளடி.’ எனத் தொடர்ந்து சுஷீலாம்மாவின் பாடல்களில் முருகக் கடவுளின் பக்திப் பாடல்களாக தேர்வு செய்துப் பாடியிருந்தாள். அதற்கு ஏற்ப நடனத்தில் அசத்தியிருந்தாள் அந்த வட இந்தியப் பெண் ஷோன்லி. பாடி முடித்ததும் அரங்கமே அதிரும் அளவிற்கு கைத்தட்டல்கள் வானைப் பிளந்தது.
புகழின் மனதில் என்னவென்றுத் தெரியாத ஒரு உணர்வு. அவளது குரலின் வசியத்தில் சொக்கிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்தக் குரலைக் கேட்க வேண்டும் போலொரு வேகம் அவனுக்குள். அந்தக் கல்லூரியின் தலைவன் என்ற முறையில் அவன் சட்டென்று ஒரு முடிவு செய்து அவள் மேடையை விட்டு இறங்கும் முன்பே இவன் மேடை ஏறியிருந்தான்.
“எக்ஷ்கியூஸ் மீ மிஸ்..” என அவளை நிறுத்தி “ப்ளீஸ் ஸ்டே இன் த ஸ்டேஜ்” என்றுவிட்டு கீழே இருந்த மாணவர்களை நோக்கி, “ப்ரண்ட்ஸ் இவங்க பாடின பாடல்கள் எல்லாம் எத்தனை பேர் கேட்டிருப்பீங்க தெரியாது. பட் நான் தினமும் கேட்டுருக்கேன். என்னோட அப்பா ஒரு முருக பக்தர். அதனால தான் எனக்குத் ‘திருப்புகழ்’ன்னு பேர் வச்சிருக்கார்..” என்று சட்டென்று அவளைத் திரும்பிக் கண் சிமிட்டினான்.
அவன் பேசப்பேச அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு. அவன் கண் சிமிட்டவும், விழிகள் ஆழ்கிணறு போல விரிய, அந்த ஆழ்கிணற்றில் எழ முடியாது போல விழுந்து விட வேண்டும் போல் ஒரு வேகம் அவனுக்கு, தற்போது அதைப் புறம் தள்ளியவன், மாணவர்களைப் பார்த்து, “ப்ரண்ட்ஸ் பக்தி பாடலோட இவங்களை அனுப்ப எனக்கு மனசு வரல, சோ நமக்காக அவங்க ஒரு சில சினி சாங்க்ஸ் பாடினா நாம எல்லாரும் ஹேப்பியா இருப்போம். சோ உங்க சார்பா நான் மிஸ்..” என்று இழுத்து அவளைப் பார்க்க,
பேரைத்தான் கேட்கிறான் என அவளுக்கும் புரிய மேடையில் வைத்து இதென்ன என்று எரிச்சல் வந்தாலும் பக்கத்தில் இருந்தவனை முறைத்தப்படியே “சாரு.. சாருகேஷி..” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுக்க,
“தேங்க் யூ..” என அவளிடம் வாயை மட்டும் அசைத்தவன். “மிஸ் சாருகேஷிக்கிட்ட அந்தக் கோரிக்கையை வைக்கிறேன். ப்ளீஸ் மிஸ் நீங்க ஸ்ரேயா கோஷல் மாதிரி பாடலைன்னாலும், உங்க குரல் அப்படித்தான் இருந்தது. எங்களூக்காகப் பாடுங்க..” என அவள் மறுக்க முடியாத அளவிற்குப் பேச, அவளும் இத்தனைப் பேர் முன்னே மறுத்தால் சரியாக இருக்காது என்று வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டாள்.
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
காதலின் திருவிழா என்று அவள் ஆரம்பிக்கவுமே அவனுக்கு எந்தப்பாடல் என புரிந்து விட்டது. அடுத்தடுத்த அவளின் வரிகளில் தன்னைக் கண்டு கொண்டவன், அவள் முடிக்கும் வரை அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இசைஞானியின் இசையில் ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல், அவனுக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. அவன் மனதைப் படம் பிடித்துக் காட்டிய பாடல். பாடி முடித்தும் அவன் அப்படியே நிற்க, அவனைப் பார்த்து தோளைக் குலுக்கியவள் அங்கிருந்து நகர, அப்போது தான் சுயம் வந்தவன், அவளைப் பார்த்து வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க, சாருவிற்கு கேட்கவில்லை. ஆனால் அவன் ஏதோ சொன்னான் என்று மட்டும் தெரிந்தது. நின்று அது என்ன என்று கேட்க அவளுக்கு இஷ்டம் இல்லை. அதனால் இறங்கி அவளது காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இருக்கும் இடத்தில் போய் நின்று கொண்டாள்.
சாருவின் பின்னே சென்று அவளைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், தற்போதைய சூழல் புகழுக்கு இடம் கொடுக்காமல் போனது. அடுத்து அடுத்து அவனுக்கும் வேலை வரிசைக் கட்டி இருந்தது. வந்தவர்களைப் பார்த்து பார்த்து உபசரிக்க வேண்டிய வேலை. யாரும் எதுவும் குறையாக சொல்லிடக் கூடாது என்பது வேறு. அவன் தான் இந்த ப்ரோக்ராமை எடுத்து நடத்திக் கொண்டிருந்தான். இந்த வருடத்தோடு அவனது படிப்பும் முடிய இருந்தது.
அதனால் எந்தக் கெட்டப் பெயரும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான். அவள் சென்னை கல்லூரி என்பதிலேயே அவன் ஆசுவாசம் ஆகியிருந்தான். எப்படியும் அவளைப் பற்றி தெரிந்து கண்டுபிடித்து விடலாம் என்று நம்பிக்கை இருக்க, தன் வேலையைப் பார்க்க போய்விட்டான்.
அன்றைய நாள் விழா முடிந்து, அடுத்த நாள் பெங்களூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைத் திரும்பியது அவர்களது கல்லூரிப் பட்டாளம். சாரு சென்னை வர, அவள் வருவதற்காகவே காத்திருந்தது போல விஸ்வம் அவளை அழைத்துக் கொண்டு நாங்குனேரி கிளம்பியிருந்தார்.
என்ன என்றுக் கேட்டாலும் பதில் சொல்லாமல், முக்கியமான வேலை என்று மட்டும் சொல்லி அவளை அழைத்துச் சென்றார். பயணம் நெடுக அவர் முகத்தில் தெரிந்த சிந்தனையில் சாரு எதுவும் கேட்கவில்லை. சில முறை செல்வத்திற்கும் அழைத்துப் பார்த்தாள் அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றே வர, வேறு வழி இல்லாமல் அவளும் அமைதியாகவே வந்தாள்.
சில நிமிடங்களில் அவளது போன் ‘திருப்புகழைப் பாட பாட..’ என அலறியது. அது அவளே பாடி ரிங்க் டோனாக செய்தது. அது விஸ்வத்திற்கும் மிகவும் பாடித்த பாடல். ரிங்க் டோன் ஒலிக்கவுமே அந்த நெடியவனின் முகம் மனதில் தோன்றியது.
ஆம் அவன் நெடியவன் தான். ஆறடிக்கும் அதிகமாகவே இருப்பான். அந்தளவிற்கான உயரம். தமிழில் பேசினான் அவளிடம். அப்போ அவன் தமிழாகத் தான் இருக்கும். தமிழனுக்கு அடையாளமாக மீசையும் பார்க்க கவர்ச்சியாய். சிரிக்கும் போது அந்த மீசைக்கு அடியில் அவனது வெண்பற்கள் தெரிவது, அவன் முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பது போல இருக்க, அவன் அந்த மேடையில் நின்றிருந்த விதம், மைக்கைப் பிடித்த விதம், அவளிடம் உரிமையாக பேசிய விதம் என அவனைப் பற்றியே யோசித்து, அவனைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.
அதற்குள் போன் அடித்து ஓய்ந்து, மீண்டும் அலற ஆரம்பித்திருந்தது. பேத்தியைப் பார்த்த விஸ்வம், அந்த முகத்தில் என்னக் கண்டாரோ , அவளை உலுக்கி, “என்னடா.. போன் ரெண்டு தடவ அடிச்சி ஓஞ்சிடுச்சி. யாருன்னு கேளு.. எதுவும் முக்கியமான செய்தியா இருக்கப் போகுது..” எனவும்,
யாருன்னேத் தெரியாதவனைப் பத்தி இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு இருந்திருக்கோமே என மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், “இல்ல தாத்தா.. புது நம்பரா இருக்கேன்னு யோசிச்சேன்.. வேற ஒன்னும் இல்ல..” என அவரை சமாளித்து, அழைத்த நம்பரை தேடி மீண்டும் அதற்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ… சொல்லுங்க.. யார் வேணும்..” என்று இவள் கேட்க, அந்தப் பக்கமோ “நீங்க தாங்க வேணும்..” எனக் கூலாக பதில் சொல்ல,
“ஹேய் வாட் டூ யூ மீன்..” எனக் கோபமாக பேச, “ஹேய்.. கூல் டவுன் சாரு மேடம்.. நான் புகழ்… திருபுகழ் பேசுறேன். நீங்க சாரு.. சாருகேஷி தானே பேசுறீங்க..” எனவும்,
“ஓ…” என்று விட்டு அமைதியாகி விட்டாள், ஆனால் கோபம் மூக்கு நுனியை சிவக்க வைத்தது. அன்று தான் பெயர் சொன்னதைக் கிண்டல் செய்கிறான் என்று புரிந்தாலும், பெரியவர் முன் எதுவும் பேச வேண்டாம் என்பதால் மட்டுமே இந்த அமைதி. ‘மவனே கையில சிக்கின கைமா தாண்டா.. சாமி பாட்டு பாடினா சாந்த சொரூபியா இருப்பேன்னு நினைப்பு போல உனக்கு. நான் ருத்ர தாண்டவம் ஆடி பார்த்தது இல்லையே இனி பார்ப்ப..’ என மனதுக்குள் அவனை வறுத்து, பொடித்துக் கொண்டிருந்தாள்.
இங்கு போனிலோ ‘ஹலோ.. ஹலோ’ என பலமுறைக் கத்தி விட்டான். ஸ்பீட் ப்ரேக்கரில் கார் ஏரி இறங்க அதில் சுயம் வந்தவள், போனில் அவன் இருப்பது புரிய “ஹாய்… சாரி சொல்லுங்க.. என்ன வேணும்..” என பல்லைக் கடித்து சொல்ல,
“பல்லைக் கடிச்சி பேசி, பல் எல்லாம் டேமேஜ் ஆனாலும் ப்ராப்ளம் இல்லை. என் ப்ரண்ட் டென்டிஸ்ட் தான். பார்த்துக்கலாம். இப்போ எனக்கு என்ன வேணும்னா உங்க வீட்டு அட்ரஸ் தான். உங்க காலேஜ்லயே கேட்டு வாங்கிருப்பேன். அது நல்லா இருக்காது பாருங்க சாரு.. சாருகேஷி.. சோ உங்க வீட்டு அட்ரஸ் மெசேஜ் பண்ணுங்க..” எனவும் அரண்டு விட்டாள் பெண்.
“அட்ரசா… ஏன் எதுக்கு..? என்னோட ஆட்ரஸ் எதுக்கு.? என் நம்பர் எப்படி கிடைச்சது..” எனப் பதட்டத்தில் வரிசையாக கேள்விகளைக் கேட்க,
“போன் நம்பர் உன் ப்ரண்ட்கிட்ட வாங்கினேன். அட்ரஸ் நான் கேட்கல, அவக் கொடுக்கல. அன்ட் இப்போ அட்ரஸ் கேட்டது உன்னைப் பொண்ணுக் கேட்டு வர்ரதுக்கு.. நீ அட்ரஸ் அனுப்பு. மீதியை நேர்ல பேசுவோம்..” என்று வைத்துவிட முற்றிலும் குழம்பி போனாள் சாரு.
சாருவையேப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வம் அவளின் குழப்பமான முகத்தை யோசனையாகப் பார்த்தார்.