பகுதி – 2
விண்ணோடு தான் மிதக்கிறேன்
என் நட்சத்திரங்களும் நீதானடி
உன் வானவில் நானடா
என் வானமோ நீயடா
உரையாடும் நேரமே
தடுமாறி போகிறேன்
அதை அறிந்தும் நானுமே
உனை திட்டி தீர்க்கிறேன்
உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல் அடிக்குதே
முன்னால் பின்னால் ஹையோ இன்று
என் கால்கள் நடக்குதே
அன்பே அன்பே ஒரு பேரலை
எனை தாக்கி போகுதே
அன்பே அன்பே இந்த காதலை
நான் என்ன செய்வதோ
பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.
“எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!” எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.
“தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)” பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.
ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.
நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு.
“என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ரித்விக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு….” ஹேன்ட் பேகில் இருந்த மொபலைத் துலாவி அவனை அழைத்தாள். “ஹலோ ரித்து… நான் கெளம்புறேன்டா. ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்.” என்றாள் பெண்.
“இருக்கட்டும் ரமி. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?” என்ன இருந்தது அவன் குரலில், கணிக்க முடியவில்லை அவளுக்கு.
“ஆட்டோதான… கெடைச்சது.. கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?” அவனிடம் கேட்டாள்.
“நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்.” இதுதானா..? அவன் குரலில் இருந்தது கிண்டல்..
ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ரித்விக்கேதான். பளீர் புன்னகையோடு.
“நீ எங்கடா இங்க?” கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ரித்விக்கோடு சேர்ந்து கொண்டாள்.
நங்கென்று அவன் தலையில் கொட்டினாள். “எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவே இல்லையேடா? நீ எங்க இங்க?” என அவனின் பதிலை எதிர்பாராமல் அடுத்தடுத்துக் கேள்விக் கனைகள் அவளிடமிருந்து.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. மெதுவா மெதுவா… என்னோட தலையிலயும் உன்னோட கன்னத்துல இருக்குற மாதிரி குழி விழுந்திருந்திடப் போகுது.” என்றதும் அனல் பார்வை பெண்ணுக்கு.. அதைப் பார்த்ததும் “சரி.. சரி.. முறைக்காத. நீ டெல்லிக்குப் போற….. கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால…” என அவன் ஆரம்பிக்க, மீண்டும் அவன் தலையில் கொட்டி “ஒழுங்கா உண்மையை சொல்லுடா பக்கி..” என அவள் கத்த,
“சரி.. சரி.. மறுபடியும் முறைக்காத… உண்மையச் சொல்லிடுறேன். நீ டெல்லிக்குப் போற. சுஜித்தையும் சித்ராவையும் பார்க்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி….நீ கிளம்புற அதே பிளைட்டில்… அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு…. ஊர் சுத்தி, இன்டர்வியு கோஸ்ட் பண்ணி எப்படி என் ஐடியா?” எனப் பெருமையாகக் கேட்டான்.
“ஓ! சப்யாவையும் சித்ராவையும் பார்க்கத்தான் டெல்லி வர்ரியா? நான் கூட ஏதோ நான் தனியாப் போறேன். பாதுகாப்பு இல்லை. அதனால துணைக்கு நீ வர்ரதா தப்பா நினைக்க இருந்தேன்.” எனப் பொய்க் கோபத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள் ரம்யா.
உண்மையைச் சொன்னால்…. டெல்லிக்குப் போவதை ரித்விக்கிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துத்தான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவள் நினைத்தது போலவே நடக்கவும் செய்தது. அவன் வந்தது ரம்யாவிற்கும் மகிழ்ச்சியே. ஆனால் சுஜித்தையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.
இவள் இப்படியென்றால் ரித்விக்கிற்கோ வேறுமாதிரி. ரமி வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ரித்விக்கிவிற்கு டெல்லி பயணம் உறுதியானது. எளிதானது.
அட… என்ன… எல்லாரும் ரித்விக்கும் டெல்லிப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? ஹா ஹா சூப்பரப்பு.
ரம்யா… ரித்விக்… டெல்லி…. குளிர்… காதல்.. இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.
சோற்றுக் கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள் கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.
“ஏண்டா…நீ வரப்போறன்னு சொல்லிருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து… சிக்னல்ல சிக்கி…. சின்னாபின்னமாகிப் பெரிய கூத்தாப் போச்சு…” எனத் தன் ஆட்டோ கதையைச் சொன்னாள்.
“ஹா ஹா ஹா…. தொப்பி தொப்பி… ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சுஜித்துக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லிட்டேன்.”
“சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்… இந்த ரெண்டு குரங்கையும்…. எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் ஜித்து. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்.” என பேசிக்கொண்டே சாப்பிட
“அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. எனக்கும் ஜித் குடுத்தான்.” பேசிக்கொண்டேய இருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான். (அட தீனிக்குப் பிறந்தவனே)
ரம்யாவுக்கு ஆத்திரம். அட…. செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ரித்விக்கின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட… எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ரித்விக், சுஜித், ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது.
மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி) ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்… இப்படித்தான்.. .யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். ஜித்தும் சித்ராவும் போன பிறகு இவர்கள் இருவர் மட்டுமே…
“வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!” கட்டபொம்மியானாள் ரம்யா.
“ஸ்டாப் ஸ்டாப்.. எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா.” இவன் ஒருத்தன் உடனே தாய்மொழிக்குப் போயிடுவான். கடுப்பானவள்
“என்னடா நிதானா…. நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்.” என,
“மரமா? என்ன மரம்?” ஏதோ கிண்டல் செய்கிறாள் என்பது வரைதான் புரிகிறது. அவளோடு வார்த்தையாடும் விளையாட்டுப் பிடிக்க, அவனும் வார்த்தையாட,
“ஆகா… டேய் துரோகி, என் தமிழக் கேவலப் படுத்துறியா… உன்னை என்ன செய்றேன் பாரு…….. அது மரம் இல்ல. மறம்… மறம்.. ‘ற’ அழுத்திச் சொல்லு பாப்போம்.”
“மர்ரம். என்ன மர்ரமோ. எனக்கு வரல விட்டுடு..” தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட, ‘ஹா ஹா என வெற்றிச் சிரிப்பு சிரித்து பெருந்தன்மையாக மன்னித்தும் விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.
அவர் தங்களைப் பார்த்து சிரிப்பதை உணர்ந்தவன், அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு, அருகிலிருந்தவளிடம் “அம்மா தாயீ….உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.”
“பின்னே…நாங்க யாரு… மர்ர்ர்ர்ர்ர்ர்ர… சரி… விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்… ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா.” எரிகின்ற தீபத்தின் திரியை தூண்டி விட்டாள்.
தொடரும்…