5
என் ஆசை உனக்குள்ளே இருக்காத
விட்டு விட்டு இருதயம் துடிக்காத
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காதை என் மூச்சு தேடாதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காத
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
உன் பேரே காதல் தானா ?
தில்லானா போல வந்த மானா
ரம்யா அமைதியாக ரித்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அமைதி அவன் அமைதியைக் குலைத்தது. ஏற்கனவே ஒருமுறை சொல்லி விட்ட துணிவில் மறுபடியும் சொன்னான்.
“ரம்யா, I love you” மென்மையாக மிக மிக மென்மையாக..
“love ன்னா என்னடா” அந்த டாவில் கொஞ்சமே கொஞ்சம் கொஞ்சல் இருந்தது.
“உனக்குத் தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love.” உடைத்து உண்மையை பேசினான்.
“ம்ம்ம்ம்ம்.” யோசித்தாள் ரம்யா. என்ன சொல்வதென்று தெரியாமல். ஒத்துக்கொள்ளவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அப்படிச் சொல்வது அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் “ஏதோ ஒன்று” தடுத்தது. அத்தோடு ரித்விக்கின் குடும்பச் செல்வாக்கும் அவளுக்கு ஒரு தடுப்பாகத் தெரிந்தது. யோசித்து யோசித்துச் சொன்னாள்.
“ரித்து… உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் கூட இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதிதான். ஜித்து யாரோ! சித்ரா யாரோ! இருந்தாலும் அவங்கள்ளாம் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதியாயிட்டாங்க. அவங்க இல்லாம என்னால என்னோட வாழ்க்கைய நினைக்க முடியாது. அது மாதிரி நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு மறுக்க முடியாத பகுதி. ஆனா வாழ்க்கையே நீதான்னு சொல்றதுக்கு……. தெரியலைடா…. நீ வேணும். எனக்கு வேணும். ஆனா எந்த அளவுக்கு வேணும்னு எனக்குப் புரியலை. ஆனா ஒன்னு….எனக்கு உங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ…. அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன். அது நட்பானாலும் சரி… காதலானாலும் சரி… வேற எதுன்னாலும் சரி…. நானே கேட்டு எடுத்துக்குவேன். அதோட எனக்கு வேற யார் மேலையும் காதல் கிடையாது. You are obviously special for me.” அவன் மறுக்க முடியாத படி தன் மனதில் உள்ளதை சொன்னாள்.
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “வாடா….. அந்தப் பக்கம் போகலாம்.” என அவன் மனதை மாற்ற யோசித்தாள். இதை இப்படியும் சொல்லலாம். தன் மனதை மாற்றும் பொருட்டுக் கூட இப்படி சொல்லியிருக்கலாம்.
இதையெல்லாம் கேட்ட ரித்விக் என்னதான் செய்வான். ஒருவேளை அவள் காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான். ஆனால் ரம்யா கதவை மூடவில்லையே. அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதென்ன “Obviously Special”? உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது “I love you”தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ? கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே.
இதையெல்லாம் யோசித்துதான் ரித்விக் ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து… அவளையே காதலையும் சொல்ல வைக்க முடிவு செய்தான். இனிமேல் அழப்போவதில்லை அவன். பாவம் ரம்யா. அவள்தான் அழப்போகிறாள்.
“OK. சரி ரமி. உன்னோட இஷ்டம்.” அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நடந்தான். இத்மத் உத் தௌலா அவர்கள் காதல் ஸ்விட்ச்சை இயக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
“ஏய்…என்னடி…ரொம்ப நேரமா குசுகுசுன்னு…. நாங்க மூனு பேரும் இங்க இருக்கோம்.” சித்ராதான் இருவரையும் தங்களை நோக்கி அழைத்தாள்.
“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா…. அதெல்லாம் உனக்கெதுக்கு? என்ன ரித்து… சரிதானே?” கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்.. முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.
அவன் விடுவானா. “என்ன அடிக்கிற… எவ்ளோ தைர்யா…” அவளது வலது கையில் கிள்ளி விட்டான்.
“ஓவென்று கத்திக் கொண்டே…. “என்னக் கிள்ளீட்ட… என்னக் கிள்ளீட்ட” என்று அவனது நெஞ்சில் படக்கென்று குத்தினாள். அவன் மட்டும் மிதமா? அவளை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு… கிறுகிறுவெனச் சுற்றினான்.
அவள் கத்திய கத்தில்… அங்கிருந்த அதிகாரி ஓடிவந்து விட்டார். “க்யா ஹோரா ஹே”. வந்தவர் சித்ராவின் கையிலிருந்த ஃபெராவைப் பார்த்து விட்டு ஏதோ குடும்பத்தினர் விளையாட்டு என்று பேசாமல் திரும்பி விட்டார்.
“சரி. விளையாண்டது போதும். வாங்க. அடுத்து எல்லாரும் ஆக்ரா கோட்டைக்குப் போகலாம். நேரமாச்சு.” சுஜித் அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களை நியாபகப் படுத்தினான்.
காரில் ஏறுகையில் ரம்யாவிற்கு முந்தி ரித்விக் ஏறி பின் சீட்டின் நடுவில் உட்கார்ந்தான். “ஏய்… அது என்னோட இடம்…. நகரு… நகரு” என்று வம்படித்தாள் பெண்.
“ஹே…. இது நின் காரா? வாடகே கார். எங்கயும் உக்காருவேன்.” அடம் பிடித்தான் ஆண். ரம்யா விடுவாளா? அவள் படக்கென்று காருக்குள் ஏறி ரித்விக்கின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். அவன் ரம்யாவைத் தள்ள…. அவளோ அவனை இறுகப் பிடித்துக் கொண்டு ஒட்டிக்கொள்ள…. ஒரே தள்ளுமுள்ளு தான்.
“ஆப்கோ ஷாதி ஹோகய்.. ஹி ஹி” கே.ஆர்.எஸ்ஸின் மூக்கு இப்போது நுழைந்தது.
“சாதியுமில்ல… பேதியுமில்ல….” கோபத்தில் முணுமுணுத்தாள் ரம்யா. இவன் எவன் குறுக்கே வருவதென்று கோபம் அவளுக்கு.
“நீங்க மொதல்ல ஆக்ரா ஃபோர்ட் போங்க” டிரைவரை விரட்டினான் சுஜித். அவர்கள் குதூகலத்தில் கே.ஆர்.எஸ் மூக்கை நுழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. “சரி. முதல்ல உட்காருங்க. நம்ம சண்டையை போற எடத்துல வெச்சுக்கலாம்.” திடீர் பொறுப்பாளனாக மாறினான்.
அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு விரட்டினான் கே.ஆர்.எஸ்.
தொடரும்….