அத்தியாயம் – 8
கண்ணீருக்கு கர்ணன்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதி மரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதினை கண்டுபிடிக்க
மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுரையா
கரையே இல்லாத கடற்கரையா
ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.
காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் முழுவதும் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.
அவனுடைய கெட்ட நேரம்… சட்டென்று ஒரு மொபட் குறுக்கே…. அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் வந்த வேகத்தில் கீரீச்சென்று கருப்புக் கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத் தூக்கத்தில் இருந்த சுஜித், சித்ரா, ரித்விக் மூவரும் எழுந்து விட்டார்கள்.
ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.
கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகர விட வில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியே இல்லாமல் கார் சாலையில் ஒதுங்கியது.
போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.
ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ரித்விக் படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக் கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.
அதற்குள் சுஜித்தும் சித்ராவும் மகனைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறக்கினார்கள்.
ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச் சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.
ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ரித்விக்கின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.
“உங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?” இந்தியில் கேட்டார் ஒருவர். ரித்விக் தான் இந்தியில் பேசினான். “அது வாடகைக் காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?”
“ஆஸ்பித்திரிக்கு. உங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல.” என்றபடியே நகர
அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்… பெட்ரோல் வழுக்கி விழுந்தார். “அடடா… இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்… எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா” என்று வேறு ஒருவர் குரல் குடுக்க.. வேடிக்கைப் பார்த்த அனைவரும் அந்த எண்ணெயில் மண்ணை அள்ளிப் போட்டனர்.
இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ரித்விக், மற்ற இருவரையும் அழைத்துக், கூட வரச்சொன்னான். இடையைக் கட்டிக் கொண்டவளை விளக்காமல் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.
எந்த ஊரென்றும் தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். குழந்தை வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.
அங்கிருந்த ஒருவரிடம் ரித்விக் டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, “இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்.” என போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக,
அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்… டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம்.
ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ரித்விக்கை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.
வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் பரவத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?
பின்குறிப்பு
ரித்விக்கின் டைரியில் இருந்து திருடப்பட்டு மொழி பெயர்க்கப்பட்ட காதல் கவிதை இது… அதாவது ப்ரேம கவிதே… எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை
தொடரும்…