அத்தியாயம் – 9
கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணி விட வேண்டாம். ஒருப் பட்டிக்காட்டிலிருந்து மற்றொருப் பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. குழந்தையை வைத்துக் கொண்டும், பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.
அப்பொழுதுதான் ரித்விக்கிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் ஒருவாறு பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. சில நூறு ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.
விதி… அல்லது கடவுள்… எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ரித்விக்கின் பக்கத்தில் அமர விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் அவனை ஒட்டிக்கொண்டு… சாய்ந்து கொண்டு… கட்டிக்கொண்டு…. அட… அட. அதே ரம்யாதான். அப்பொழுது வெந்து, நொந்து பாடிக்கொண்டிருந்த ரித்விக்கின் உள்ளம் இப்பொழுது
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
பாடிக் கொண்டிருந்தது.
ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் கொஞ்சமும் குறையாமல் அவன் அணைப்பிலேயே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள் தான். ஆனால்… இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். அவனும் உணர்ந்தான். சரி இருவரும் எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பெயர் காதல்தானா! உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆட்டோ ஜக்கடி ஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.
“ரம்யா இங்கே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். ஜித் பாத்துக்கோ” அவர்களிடம் சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. பாதுகாப்பான இடமாகவும் தெரியவில்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ரித்விக். அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.
என்ன நடக்கிறது.. என்று எதைப் பற்றியும் அறியாமல் வண்டியில் ஏறியதும் ரித்விக்கின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் அவளைக் கவனித்த சித்ரா கேட்டாள்.
“ஏய் ரமி…. எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே.” என்று படபடப்பாகக் கேட்க,
“ம்ச்ச் அத அந்த ஆட்டோலயே விட்டுட்டேண்டி.” என்றாள் ரம்யா சலிப்பாக.
“ஆட்டோலயா?” என அதிர்ச்சியானாள் சித்து. ஒருவேளை மறதியில் விட்டுவிட்டாளோ என்ற அதிர்ச்சியில் தான் கேட்டாள்.
“ம்ம் ஆமா. அதை வாங்குனதுனால தான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை…. அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்.” பைத்தியக்காரி போலொரு விளக்கம் கொடுத்தாள் அதற்கு..
அவ்வளவு தான் என்பது போல், சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் பெண். படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் இரவு பனிரெண்டு மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. ஜித் ஹீட்டர்களை போட்டு விட ஆரம்பித்தான்.
ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். “என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?” சித்ரா அவள் முதுகை நீவ,
“வாந்தி வர்ர மாதிரி இருக்கு.” என லேசாக உமட்டியபடியே, “நீ தம்பியை பாரு. அவனுக்குத்தான் இன்னைக்கு அலைச்சல். அழ விடாதே, இது சேராம நாளைக்கு ஃபீவரும் வந்துடும். முதல்ல அவனுக்கு ஏதாச்சும், சாப்பிடக் கொடுத்து தூங்க வை… எனக்கு ஒன்னும் இல்ல. ஹாட் வாட்டர் குடிச்சா சரியாகும். நான் வச்சிக்குறேன்” என்றபடியே ரம்யா கிச்சனுக்குள் நகர்ந்தாள்.
அவள் சொல்வதும் சரிதான் என்பது போல அந்நேரம் குழந்தையும் அழத் தொடங்கியிருந்தான். தூக்கத்திற்குத் தான். ரித்விக்கிடம் திரும்பிய சித்ரா, “ரித்து… பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கிட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி.” அவனிடம் சொல்ல, வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே நடந்தான் அவன்.
குழந்தையின் அழுகை கூடியது. சித்ராவை ரம்யா அழைத்தாள். “ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன். சூடாகியிருந்த நீரை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுக்க, சித்ராவும் சுஜித்தும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்கள்.
நேற்றைய அழுப்பு போகாமலே தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அவசர அவசரமாகக் கணவனை எழுப்பினாள். “ஜித்… டேய் ஜித்து.. ரித்விக்கைக் காணோம்.” எனப் பதறியடித்து எழுப்பினாள்.
—————————————————–
பின்குறிப்பு
சித்ரா எப்பொழுதோ என் மனதில் எழுதி மறந்து போன கவிதை
விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்
தொடரும்