அத்தியாயம் – 25
பட்டுச்சேலையின் மேல் வழுக்கிக் கொண்டு செல்லும் கைகளை போல, கார்த்திக்கின் கைகளில் அவன் தந்தையின் கார் அந்த தார் ரோட்டில் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு சென்றது. சாலையில் தூரத்தில் கண்களுக்கு புலப்படும் கானல் நீர், அதன் அருகில் சென்றவுடன் மறைந்து போவது என்ன சித்தமோ??
கார்த்திக்கின் மனதில் இந்த கானல் நீர் எல்லாம் பதியவே இல்லை. அவன் படப்படக்கும் இதயம் அருகில் இருக்கும் மனைவிக்கு செவிக்கு எட்டாமல் இருக்கவே பெரும் பாடுப்பட்டான். அவன் அருகில் அமர்ந்திருந்த மாயாவோ தூக்கத்தின் பிடியில் இருந்தாள். விடியற் காலையிலேயே எழுந்து குளித்திருந்தால், தூக்கம் கண்களை சுழட்றியது அவன் கண்மணிக்கு.
காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியம், அபிராமி, ரித்தியா எல்லோரும் ஒருவித படப்படப்பில் தான் இருந்தனர். அவினாசி சாலையை தாண்டி கார் ஈரொடு நோக்கி பயணித்தது. விநாயகத்தின் சொந்த ஊருக்கு ஈரோட்டை அடுத்து இருந்தது. அங்கே அவனின் குலதெய்வ கோவிலுக்கு தான் அனைவரும் செல்கின்றனர். விநாயகத்தின் கார் இவர்களுக்கு முன்னால் சென்றுக் கொன்டிருந்தது.
மருத்துவரின் யோசனைக்காக தான் திடீர் வழிபாடு! “ஒரு தடவை நீங்க மாயாவ ஈரோடு பஸ் ஸ்டான்ட் கூட்டிட்டு போங்க. அங்க மறுபடியும் போயும் நமக்கு ஒண்ணும் ஆகலைன்னு அவளுக்கு நம்பிக்கை முழுசா வந்துடுச்சுனா அப்புறம் நம்ம பயப்பட வேண்டியதே இல்ல.”
டாக்டர் கூறிய மறுவாரமே திட்டம் போட்டு இதோ வழிபடவும் செல்கின்றனர். மாயாவுக்கு ஈரோடு தாண்டி ஒரு ஊருக்கு வழிப்பட செல்கிறோம், என மட்டும் கூறினர். ஒன்றரை மணி நேரம் கழித்து, கார்த்திக்கின் மகிழுந்து ஈரோடின் பேருந்து நிலையத்தின் அருகில் நின்றது. கார்த்திக்கிற்கு பழைய நினைவுகள் அலைகடலென மனதில் பொங்கினாலும், அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டது மாயாவின் மேல் அவன் கொண்ட அக்கரை.
கார் நின்றதால் அதுவரை வந்த காற்று வீச்சும் சேர்ந்து நிற்க, மாயா எழுந்தாள். கண்களை கசக்கி பின்னால் பார்த்தவள், தன் அன்னையை தேட காரில் யாரும் இல்லாமல், எல்லோரும் வெளியே நின்றுருப்பதை பார்த்து அவளும் இறங்கினாள்.
[the_ad id=”6605″]
“என்னமா எல்லாரும் கீழ இறங்கி நின்னுட்டு இருக்கீங்க?”
“எல்லாருக்கும் கூல் டிரிங்க்ஸ் மாதிரி ஏதாவது வாங்கிட்டு வர கார்த்திக் போயிருக்காருமா.”
அப்போது தான் தாங்கள் நின்றிருக்கும் இடத்தை நோக்கினாள். பார்த்தவளுக்கு மலையின் ஊச்சியில் இருந்து விழுவது போல உணர்ச்சி அவளின் கட்டுபாடை மீறி கொந்தளித்தது. கார்த்திக் இவளை தான் தூரத்தில் இருந்து கவனித்தான்.
என்ன செய்கிறோம் என தெரியாமலே அவள் பாட்டுக்கு பேருந்து நிலையத்தினுள் சென்றாள். அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னே காட்சியாக ஓட, அதன் பாரமும் தாக்கமும் தாங்காமல், மடிந்து உட்கார போனவளை கார்த்திக் வந்து தாங்கினான்.
“ஒண்ணுமில்லடா…. ஜூஸ் வாங்கியாச்சு. வா போலாம்!”
அவளை தாங்கியவனின் தோள்களில் அழுகையுடன் துவண்டவளை, தேற்றவென குடும்பம் மொத்தமும் வந்தனர். எல்லாரும் எவ்வளவோ கூறியும், மாயாவின் அழுகை சுத்தமாக நிற்கவில்லை. ஒருநிலை மேல் கார்த்திக்கின் இதய துடிப்பு தாறுமாறாக ஓட்டமெடுக்க, “மாயு இப்போ அழுகையை நிப்பாட்ட போறியா இல்லையா?? அழாதடா” என்று அதட்டலும் கெஞ்சலுமாக கூற, மாயாவின் அழுகையும் ஓரளவிற்கு நின்றது.
“இப்போ ஏன்மா இப்படி அழற?? எல்லாமே முடிஞ்சு போன விஷயம்.”
சுப்பிரமணியம் கேட்டதற்கு பதிலாய், கண்களை துடைத்துக் கொண்டு, “தெரியலை மாமா. கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு. உங்கள எல்லாம் பார்த்ததும் அழுகை அதிகமாயிடுச்சு.” என்று சிறு குரலில் கூறினாள்.
அதன் மேற்கொண்டு யாரும் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. சிறிது நேரத்திலேயே அந்த குப்பை நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு, கார்த்திக்கின் பக்கம் திரும்பி, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அங்க போக??” என்று மாயா கேட்க, அவளின் தெளிவான குரலை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம் தான்.
மனதுக்குள் மருத்துவர் கீதாஞ்சலிக்கு நன்றியுரைத்து விட்டு, தன் மனைவியின் பக்கம் திரும்பி, “அரை மணி நேரம் ஆகும்.” என்று பதிலுரைத்தான். கோவில் சென்று முகமேல்லாம் ஓளி வீச, வீற்றிருந்த அம்மனை தரிசித்ததும் தன் மனதில் எழுந்த காயம் எல்லாம் வற்றிப் போனது போல ஓர் உணர்வு மாயாவுக்கு. தான் இத்தனை நாட்களில் எப்படி மாறினோம்?? என்ன செய்து இந்த கடின சூழநிலையை கடந்து வந்தோம் என யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் விளங்கியது.
தேவையில்லாத பழைய காயங்களை மறைக்க முக்கியமாக கற்றுக் கொண்டிருந்தாள். தன்னையும் மீறி நினைவுற்ற போதும், அதை வெற்றிகரமாக கடந்து வர கற்றதே மிகப் பெரிய கலையாக தெரிந்தது அவள் கண்களுக்கு!
சந்தோஷம் மட்டும் இன்றி வெகு நாட்கள் கழித்து நிம்மதியுடன் கோயம்பத்தூர் திரும்பினர் அனைவரும். இனிமேல் அவளுக்கு சிகிச்சை கூட தேவைப்படாது என எண்ணியபடி சென்னைக்கு தன் மனையாளுடன் திரும்பினான் கார்த்திக்.
சென்னை வந்ததும் மாயாவின் மனதில் பல கேள்விகள் எழுந்தது. என்னவோ எல்லாம் சரியானது போல தோன்றினாலும், தன் வாழ்க்கை முழுதாக நேர் கோட்டில் இல்லையென உணர்ந்தாள். கார்த்திக்குடன் மனம் திறந்து பேசினாலும், தோள்களில் சாய்ந்தாலும், சிறு சிறு தொடுகைகள் என இருந்தாலும், அதை தாண்டி அடுத்த அடி எடுத்து வைக்க தன்னால் முடியாததை குறித்து நிறைய சிந்தித்தாள்.
தனக்கும் அவனுக்கும் நடுவே ஒரு மெல்லிய சுவர் இருப்பவதாகவே பட்டது! அந்த சுவர் கார்த்திக்கின் கண்களுக்கும் தெரிந்ததோ?? அவனும் அடுத்த அடி வைக்க தயங்குவதாகவே பட்டது.
[the_ad id=”6605″]
இந்த சிந்தனையில் சுழன்ற மாயாவின் மனதை, முற்றிலுமாக மாற்றவென அவளின் கல்லூரியில் குறும்படத்திற்கான போட்டி நடைப்பெற்றது. அந்த போட்டி கல்லூரி அளவில் வருடா வருடம் நடப்பது. கல்லூரியின் பெயரில் வழங்கப்படும் விருதை, கைப்பற்றுவதற்கு அனைத்து மாணவ மாணவிகளும் கலந்துக் கொள்ள முயற்சிப்பர்.
முடிவில் சிறந்த குறும்படத்திற்கான விருது வழங்கப்படும் நடுவர்கள் கொண்டு.
வெற்றி பெரும் குறும்படத்தில் பணியாற்றிய இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் இவர்களுக்கு தங்க பதக்கமும், ஐய்யாயிரம் பணமும், நினைவுச் சின்னமும் வழங்கப்படும். மிகவும் பெருமைக்குரிய இந்த விருதை பெறுவது, நாசியின் வாயிலாக தண்ணீர் அருந்துவதற்கு சமம்!
இந்த போட்டி பற்றி கார்த்திக்கிடம் விம் போடு விளக்கிக் கொண்டிருந்தாள் மாயா. “போன தடவை நாங்க பண்ண ஷார்ட் பிலிம், பைனல்ஸ் வரைக்கும் போச்சு. ஆனா, அங்க வந்த ஜட்ஜஸ் சில குறை சொன்னாங்க. அதையெல்லாம் மனசுல வைச்சு தான் இந்த வாட்டி நல்ல ஸ்கிரிப்ட் பண்ணிருக்காங்க கிரன் அண்ணா. போன வருஷத்துலந்து இதைப் பத்தி அடிக்கடி பேசிப்போம். இந்த வாட்டி எப்படியாவது வின் பண்ணனும்….”
“ஹ்ம்ம்ம்ம் இதுல இவ்வளோ இருக்கா??”
“ஆமா அதனால அடுத்த இரண்டு மூணு வாரத்துக்கு படத்துக்கு எல்லாம் போக முடியாது. சனி, ஞாயிறு இந்த வேலையிலேயே போயிடும்.”
“ஹே ரெண்டு நாளும் போவியா?? அப்போ நானும் உன் கூட வரேன். எனக்கு வீட்டுல போர் அடிக்கும்.”
“எங்க ஷூட்டிங் உனக்கு பிக்னிக் ஸ்பாட் ஆகிடுச்சு! சரி வா, ரெண்டு பேரும் போலாம்….”
[the_ad id=”6605″]
மாயா சொன்னது போலவே அடுத்த இரண்டு மூன்று வார விடுமுறைகள் ஊருக்கு கூட செல்லாமல், இதில் கழித்தனர் இருவரும். இவர்கள் ஷூட்டிங் செய்த இடமெல்லாம் மனித நடமாட்டம் நிறைய இல்லாத புறநகர் பகுதிகளில். அதனால், இரவு தனியாக மாயாவை விடாமல் கார்த்திக்கும் உடன் இருந்தான். இதில் படத்தொகுப்பு செய்வதற்கு எல்லாம் படக் குழுவினர் இவர்களின் வீட்டில் தான் கூடினர்.
அப்படி இப்படி என நான்கு வாரங்களின் முடிவில், அந்த பெருவிழாவும் வந்தது. விழாவிற்கு வரும் திரைப்பிரபலங்கள் யாரென பார்த்த மாயாவுக்கு ஆனந்த பேரதிர்ச்சி!
திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர்களின் பெயர் பட்டியலை வாசித்தால் இவரின் பெயரை சொல்லாமல் செல்லவே முடியாது. ரவீந்திரன் அந்த பெயருக்கு சொந்தக்காரர்!
மாயாவிற்கும் அவளின் வகுப்பு மாணவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அவரை நேரில் காணப் போவதால். “உனக்கு பிடிச்ச மூணு சினிமாட்டோகிராபர் பேர் சொல்லுன்னு யாராவது கேட்டா, கண்டிப்பா அவரோட பெயரை மிஸ் பண்ணாம சொல்லுவேன்! அந்த அளவுக்கு பிடிக்கும். இதுல ஸ்பெஷல் என்ன தெரியுமா?? அவரும் எங்க காலேஜ்ல படிச்சவர் தான்!!” மாயா வாயேல்லாம் பல்லாக சமையல் மேடை மேல் அமர்ந்துக் கொண்டு, சமைத்துக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் கூறினாள்.
“அவர் தான் பிரைஸ் யாருக்குன்னு முடிவு பண்ணுவாரா??”
“இல்ல இல்ல… அவர் சீப் கெஸ்ட் மாதிரி தான் வருவார். பட், வின் பண்ற ஷார்ட் பிலிம் சீப் கெஸ்ட் எல்லாருக்கும் ஸ்கிரீன் பண்ணுவாங்க. செம கெத்தா இருக்கும். நாங்க வின் பண்ணுவோம்ல??”
“உங்காள முடிஞ்ச அளவுக்கு உங்க உழைப்பை சின்சியரா போட்டுருக்கீங்க. இதுக்கு மேல எதுவும் யோசிக்காத. ஜெயிச்சா சந்தோஷம்… ஹேப்பி! ஜெயிக்கலனா அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.”
கார்த்திக்கின் கூற்றை கேட்டு, மாயாவும் மனதை தேற்றிக் கொண்டாள். ஒருவழியாக அந்த முடிவுகளும் வந்தன. மாயாவின் குழுவினரே வெற்றி வாகை சூடினர்!! மாயாவிற்கு சந்தோஷத்தில் கால்கள் தரையில் நிற்காமல் தாவியது…. முடிவு வந்த அன்றே, அவளுக்கும் அவளின் குழுவினருக்கும் கார்த்திக் டிரீட் கொடுத்தான்.
“நீங்க உண்மையிலேயே கிரேட் கார்த்தினா. கல்யாணத்துக்கு அப்புறமும் மாயாவுக்கு பிடிச்சதை ஃபாளோ பண்ண விடுறீங்க.”
அதை கேட்ட ஜோடி குயில்களின் கண்கள் தங்களை அறியாமல் சந்தித்து மீண்டன.
கார்த்திக், “அப்படி எல்லாம் சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் கிடையாது. அவளுக்கு இருக்குற திறமை என்னன்னு எனக்கு தெரியும். அதை மத்தவங்களுக்கு தெரியப்படுத்தனும் எனக்கு. அவ்வளவு தான்!!” என்று முடித்தான்.
இவர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த பெருநாளும் வந்தது. கூட்டத்தில் முதலில் இருந்து மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த மாயாவின் நெஞ்சம் நிலைக் கொள்ளாமல் துள்ளியது, அவளின் மனதிற்கினிய மானசீக குருவை பார்த்து!! ரவீந்திரனோடு இன்னொரு இயக்குனரும் வந்திருந்தார். அவர்கள் உரையாற்ற மேடை ஏறும் போது, அவள் தட்டிய கைத்தட்டலில், கைகளே எரிந்தது அவளுக்கு.
[the_ad id=”6605″]
ஆனாலும், விடாமல் தட்டினாள். இறுதியில் இவளின் குழுவை அறிமுகம் செய்து இவர்கள் எடுத்த குறும்படத்தையும் போட்டுக் காட்டினர். இப்போது துள்ளளும், குதுகளிப்பும் இருந்த இடத்தில் பயமும், ஆவலும் வந்து அழையாமல் அமர்ந்துக் கொண்டன. இறுதியில் படம் முடிந்ததும், கைத்தட்டலோடு விருந்தினர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டனர்.
அத்துடன் இவர்களை மேடை ஏற்றி தங்க பதக்கங்கள், நினைவுச் சின்னம், விருதிற்கான பணப் பரிசு வழங்கப்பட்டன. அருகில் ரவீந்திரனை பார்த்ததும், மாயாவுக்கு கை கால்காள் நடுக்கம் கொண்டது! “கங்கிராட்ஸ்” என அவர் கை குலுக்கி, தங்க பதக்கத்தை கைகளில் ஒப்படைக்க, அவருக்கு நன்றியுரைத்து விட்டு, கனவில் நடப்பது போன்று நடந்தாள் மாயசித்ரா.
அதற்குள் இவளும் இவளின் குழுவினரும் விழா ஏற்பாடு செய்யும் நபரிடம் சென்று, சீப் கெஸ்டை பார்க்க அனுமதி கேட்டனர். கேட்டவுடன் பாராபட்சமின்றி மறுக்கப்பட்டது. மாயா நேராக கல்லூரியின் தாளாளரிடம் சென்று வேண்டுக் கொள் விடுத்தாள்.
சிறிது நேரம் யோசனைக்குப் பின், “சரி அவங்ககிட்ட கேட்டு பார்க்குறேன். பட், முடியாதுனு சொன்னா, முடியாது தான்…. புரியுதா??” என்று கட்டையான குரலில் எச்சரித்தார்.
அவரிடம் மண்டையை நன்றாக உருட்டிவிட்டு, மாயா தன் குழுவினரோடு நின்று மனதினுள் பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்தாள். இறுதியில், இவர்களை அழைத்தனர்!
‘யேயே, எஸ்’ என கத்தியபடி உள்ளே விரைவாக விரைந்தனர் அனைவரும். கார்த்திக்கை மட்டுமே அக்கணத்தில் மிகவும் தேடியது மாயாவின் மனது. உள்ளே ஓர் அறையில் கல்லூரியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் ரவீந்திரனும், இயக்குனரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்களை பார்த்ததும் புன்னகைத்து வரவேற்றனர். தங்களை தாங்களே அறிமுகம் செய்துக் கொண்டனர் மாயாவின் குழுவினர். அறிமுக பேச்சுக்கள் முடிந்தது, மாயா ரவீந்திரனின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்தபடி இருந்தாள். அதை கவனித்தோ இல்லை சாதாரணமாகவோ, இல்லை மாயாவுக்கு இதயம் வெளியே வந்து துடிக்க வைக்கவோ ரவீந்திரன் அவளை பாராட்டிப் பேசினார்.
“உன்னோட ஷாட்ஸ் எல்லாம் நல்லா இருந்துச்சு. அதுவும், அந்த ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் ரோட்டுல பேசிட்டு இருப்பாங்க. கேமராவ சீன் ஸ்டார்டிங்ல லெப்ட் சைட் வைச்சிட்டு,மெதுவா மூவ் பண்ணிட்டு வந்து, சீன் முடிக்கும் போது ரைட் சைட்ல கொண்டு வந்திட்ட. அது ரொம்ப நல்லா இருந்துச்சு… சீன்ல இன்வால்வ் ஆகி, பார்க்குறவுங்க இதை கண்டு பிடிக்க மாட்டாங்க. குட் வொர்க்.”
“ரொம்ப தாங்க்ஸ் சார்….. இவ்வளவு பாராட்டுவீங்கன்னு நினைவேக்க இல்லை சார்.”
“எந்த இயர்மா நீ??”
“நான் செகன்ட் இயர் சார்….”
“ஹ்ம்ம்ம் சீக்கிரமாவே அஸிஸ்டென்ட்டா சேர்ந்துக்கோ. அப்போ தான் நிறைய கத்துக்க முடியும். ஆல் தி பெஸ்ட்.”
அவ்வளவு தான் அவர்களின் உரையாடல்!! இது போதாதா மாயாவுக்கு???
கல்லூரி விட்டு வெளியே வந்தால், கார்த்திக் காருடன் காத்திருந்தான். அவனிடம் வந்ததும் சந்தோஷத்துடன் தங்க பதக்கத்தை அவன் கழுத்தில் அணிவித்து, மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.
கார்த்திக் அதை கழட்டி மீண்டும் அவளின் கழுத்தில் அணிவிக்க, மாயாவின் குறும்பட இயக்குனர் கிரன், “போதும்பா… போதும். மாலை மாத்துற மாதிரி இதை மாத்திட்டே இருக்கீங்க. வீட்டுக்கு கிளம்புங்க.” என்று கலாய்த்தான்.
[the_ad id=”6605″]
அத்துடன் காரில் ஏறி அமர்ந்த மாயா நடந்த அனைத்தையும் கண்கள் விரிய, கணவனிடம் கூறினாள். வீடு வரும் வரை அது தொடர, வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், ஒருவகையான குரலில், “நீ தான் அங்க இல்ல… உன்னை தான் ரொம்ப மிஸ் பண்ணேன். அவர் பேசப் பேச எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரே ஃப்ளையிங் தான். எனக்கு பதிலுக்கு தாங்க்ஸ் தவிர வேற எதுவும் வரலை.” என்று உருகலுடனும் மகிழ்ச்சியுடனும் கூறினாள் மாயா.
கார்த்திக்கிற்கும் மிகவும் சந்தோஷம் தான்… அவளின் தலையை கோதிக் கொடுத்து, “அவரு பாராட்டுனது எல்லாம் சரி, அடுத்து என்ன செய்யப் போற?” என்று கேட்கவும் மாயாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“என்ன செய்யனும்?? புரியலை!”
“ரவீந்திரன் சார்க்கிட்டயே அஸிஸ்டென்ட்டா போய் சேரனும்….”
கார்த்திக் கூறியதை கேட்டு மாயா முதலில் திகைத்து, பின் பலமாக சிரிக்கத் தொடங்கினாள். “என்ன விளையாடுறியா??”
“நீயே யோசி, அவரே அஸிஸ்டென்டா ஆகுன்னு சொன்ன அப்புறமும் நீ ஏன் தயங்கனும்??”
“அவரு எவ்வளவு பெரிய கேமராமேன் தெரியும்ல?? தமிழ்லையும், ஹிந்திலையும் பிஸியான சினிமாட்டோகிராபர். வேற யார்கிட்டயாவது பார்க்கலாம். இவர்கிட்ட எல்லாம் நம்ம கிட்ட போகக் கூட முடியாது.”
“முடியாததுன்னு ஒண்ணுமே இல்ல. இதோ இன்னிக்கு இவர நீ பார்த்து பேசல?? ட்ரை பண்ணி பார்க்குறதுல தப்பு இல்லை…. உன்னோட டேலன்ட் அவருக்கு தெரிஞ்சுடுச்சு. சோ, ஈசியா அவரை கன்வின்ஸ் பண்ணிடலாம்.”
“ஈசியா??? அவர?? இருந்தாலும் உனக்கு ரொம்ப தான் தில்லு.”
“தாங்க் யூ!”
புன்னகையுடன் சொன்ன கார்த்திக் அத்துடன் நிற்காமல், வலைதளங்களில் ரவீந்திரனின் மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்து அவருக்கு மாயாவின் பெயரில் மின்னஞ்சலும் அனுப்பினான், மாயாவே அறியாமல்….