பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. இவர்கள் இருந்த அறையில், இவர்களுடன் சேர்த்து இரண்டு பேரே இருந்தனர். மாயாவின் இதய துடிப்பை ஏற்றவே இவர்களை வழி நடத்தியவர் வந்து, “சார் கூப்பிடறார், வாங்க.” என்று அழைத்து முன் நடந்தார். கடைசி முறையாக கார்த்திக்கை நோக்கிவிட்டு, மாயா மட்டும் உள்ளறையினுள் சென்றாள்.
இவளை கண்டதும் புன்னகைத்து, தன் எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொன்னார் ரவீந்திரன். “தாங்க்ஸ் சார்.” மாயா இருக்கையில் அமர்ந்து கஷ்டப்பட்டு தரையில் வீசிய பந்தாய் எகிறும் இதயத் துடிப்பை அடக்கி, புன்னகைக்க முயன்றாள். இவளின் நிலையில்லா தன்மையை அறிந்தோ என்னவோ ரவீந்திரன் இவளின் படிப்பு, கல்லூரி பற்றி மேலோட்டமாக விசாரித்தார்.
அவர் நன்றாக பேசத் துவங்கவும் மாயாவும் தன் தயக்கங்களை உடைத்தெறிந்தாள். “அப்புறம் விடாம மெயில் பண்ணி, தைரியமா இங்க வரைக்கும் வந்தாச்சு…. அப்படி என்ன என்கிட்ட அஸிஸ்டென்டா சேரனும்னு??”
“நீங்க தான சார் சீக்கிரமா அஸிஸ்டென்டா சேர்ந்துக்கோன்னு சொன்னீங்க. எனக்கு உங்க கிட்டயே கத்துக்கனும்னு தோணுச்சு. அதான்…”
சிறிது சிரித்துவிட்டு, எப்போத்திலிருந்து அவளுக்கு இதன் மீது ஈடுபாடு என்பதை கேட்டறிந்தார். நம் நாயகியும் சிறுவயது முதல் அவளுக்கு நிழற்படக்கருவியின் மேல் நிலைகொண்ட தீராத காதலை எடுத்துரைத்தாள். கேட்டு சிறிது நேர அமைதிக்கு பின், “சரி, என்கிட்ட ஆல்ரெடி கொஞ்ச பேர் அஸிஸ்டென்டா இருக்காங்க. அதான் யோசிக்கறேன்.” என்று நம்பிக்கை கொடுக்காமல் பேசவும், மாயாவுக்கு எங்கிருந்து தான் கார்த்திக் பேசிய அந்த வசனம் எல்லாம் ஞாபகம் வந்ததோ??
“சார் நான் இந்த சினிமாட்டோகிராபி பத்தி காலேஜ்ல கத்துகிட்டது ரொம்ப ரொம்ப கம்மி. எனக்கு நல்லாவே தெரியும்…. இப்போ நான் ஒரு ஓபன் புக் மாதிரி தான் இருக்கேன். எழுதாத ஓபன் புக்! உங்க கிட்ட நிறைய திட்டு வாங்கியாச்சும் அதுல நிறைய எழுதிக்கனும்னு ஆசை எனக்கு.”
[the_ad id=”6605″]
இதை கேட்டு ரவீந்திரனும் சரி, அறையினுள் இருந்த அந்த நடுத்தர வயதினரும் சரி பலமாக சிரித்தனர்…. வெளியே இருந்து பார்க்க மட்டும் முடிந்த கார்த்திக்கிற்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘அவளோட ஆம்பிஷன் பத்தி பேசி அவரை இம்பிரஸ் பண்ணுவான்னு பார்த்தா, என்னவோ காமெடி பண்ணி அவங்கள சிரிக்க வைச்சுட்டு இருக்கா?! கடவுளே!!’ சிரித்து ஓய்ந்துவிட்டு, மீண்டும் பேசத் துவங்கினார் மாயாவின் ஆஸ்தான குரு.
“நல்லா இருக்கு டையலாக். யார் சொல்லிக் கொடுத்தா??”
“என்னோட ஹஸ்பென்ட் சார்….”
“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா??” அதிர்ச்சியில் குளித்திருந்தது குரலும் முகமும்.
“ஆமா ஆயிடுச்சு சார். வெளியே இருக்கார்ல அவர் தான் என்னோட புருஷன்.”
“கணேஷ் அவர உள்ள கூப்பிடுங்க… பை தி வே, இவர் தான் என்னோட மேனேஜர் கணேஷ். என் கிட்ட பதினைஞ்சு வருஷமா இருக்காரு.”
அந்த நடுத்தர வயதுக்காரரை அறிமுகம் செய்து வைத்து, அவர் கூப்பிட்டதால் உள்ளே வரும் கார்த்திக்கை நோக்கினார் ரவீந்திரன்.
“ஹலோ சார்… நான் கார்த்திக்.”
கை குலுக்கிவிட்டு அவனையும் மாயாவின் அருகில் அமர வைத்துவிட்டு, அவர்களுக்கு திருமணமாகி எத்தனை வருஷம் ஆகிற்று என்று வினவினார் அந்த மூத்த ஒளிப்பதிவாளர். மாயா கார்த்திக்கை பார்க்க, கார்த்திக் அசாதரணமாக உண்மையை பொய்யுடன் கலந்து ஒரு கதையை படைத்தான் அவர் முன்.
“கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆச்சு சார். முதல் ஒரு வருஷம் நான் பெங்களூர்ல இருந்தேன், வேலை விஷயமா. அப்புறம் சென்னைக்கு வந்திட்டேன்.”
“லவ் மேரேஜா??”
“ஆமா சார். கோயம்பத்தூர் தான் எங்க ஊர். அங்க ஒரே காலேஜ். இவ அங்க பி.எஸ்.சி. மேக்ஸ் படிக்க வந்தா. நான் எம்.பி.ஏ. அப்படி தான் பழக்கமாச்சு….”
“ஹ்ம்ம்ம் குட். குழந்தை இருக்கா??”
“இல்லை சார்….”
இதுவரை கார்த்திக்குடன் சரளமாக பேசியவர் மீண்டும் பேசத் தொடங்கும் முன் ஒரு சில நிமிடங்கள் இடைவெளி விட்டார். “நிறைய பேர் சினிமால சாதிக்கனும்னு வருஷா வருஷம் வராங்க. இங்க எந்த வேலையுமே ஈசி இல்ல. இப்போ சினிமாட்டோகிராபி எக்சாம்பிளா எடுத்துப்போம். நடிக்கறவுங்க அவங்க சீன்ஸ் வரப்போ மட்டும் நடிச்சிட்டு போய்டுவாங்க.
பட் இந்த துறை அப்படி இல்ல. ஒரு படம் ஸ்டார்ட் பண்ணா ஒவ்வொரு நாள் ஷூட் பண்ணும் போதும் இருக்கனும். அதுவும் எல்லா டைம்மும் ட்ராலி, கிரேன் வைக்க முடியாது. கையில கேமராவ தூக்கிட்டு ஷுட் பண்ணனும் சில சீன்ஸ். மலை பிரதேசத்துல எடுக்கும் போது நான் ஒரு தடவை முப்பத்தஞ்சு கிலோ கேமராவ தூக்கிட்டு நடந்துருக்கேன் ஆக்டர்ஸ் பின்னாடி. ரொம்ப கஷ்டமான வேலை தான் இது. பேஷன் இல்லனா நிக்க முடியாது பீல்டுல.
இப்போ இருக்குற பேஷனும், வெறியும் அஞ்சு வருஷம் கழிச்சு இல்லாம போகலாம், இல்லனா ஜாஸ்தி ஆகலாம். என்னவேணும்னா நடக்கலாம். எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும்.
அட் தி சேம் டைம், கேமராமேனுக்கு தேவையானது ரெண்டு விஷயம். ஒன்னு கிரியேட்டிவிட்டி… இன்னொன்னு டெக்னிக்ஸ்! இது ரெண்டும் ரொம்ப முக்கியம்…. இதுல ஏதாவது ஒரு விஷயம் சரியில்லாம போச்சுனா கூட, நல்ல பேரு வாங்க முடியாது. நான் பேசுறது உங்கள டிஸ்கரேஜ் பண்ற மாதிரி கூட இருக்கலாம். பட், இது தான் உண்மை. அத சொல்லாம விட்டா என்னோட தப்பாகிடும். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சின்ன வயசுல இருக்கீங்க.
இப்போ எல்லாம் முடியலாம், செய்யலாம்னு தோணும். பட், நாளைக்கே ஒரு குழந்தை வந்துட்டா எல்லாமே மாறவும் சான்ஸ் இருக்கு. சோ, யோசிச்சு டிசைட் பண்ணுங்க.”
பெரிய உரையை ஆற்றி விட்டு ரவீந்திரன் அமைதி காக்க, மாயா சட்டென்று கேட்டுவிட்டாள். “ஏன் சார் உங்களோட அஸிஸ்டென்டுக்கு மெர்டர்னிட்டி லீவ் குடுக்க மாட்டீங்களா??” என்று வினவ, இப்போது ரவீந்திரனும் கார்த்திக்கும் சேர்ந்தே திகைத்து போயினர். எதற்கு இவள் திடீரென்று குழந்தை பேறு காலத்தின் போது வரும் விடுமுறை பற்றி பேசுகிறாள்??
[the_ad id=”6605″]
“ஹா ஹா குடுக்கலாம். கண்டிப்பா குடுப்பென். பட், இதுவரைக்கும் என்கிட்ட எந்த பொண்ணும் அஸிஸ்டென்டா வேலை பார்க்கல… அதுவும் தான் யோசனையா இருக்கு. பசங்கனா எப்படி வேணும்னா தங்கிக்க சொல்லலாம்…. பட், நீ என் கூட எல்லா இடத்துக்கும் வரும்போது, உன்னோட சேஃப்டியும் நான் பார்க்கனும்ல?”
“ஹ்ம்ம்ம் ஆமா சார். கரக்ட் தான்…”
கார்த்திக் இது மாயா கையாள வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து வாய் பேசாமல் இருந்தான். சிறிது சிந்தனைக்கு பின், ரவீந்திரன் “சரி நான் கொஞ்சம் யோசிச்சிட்டு கொஞ்ச நாள்ல என்னோட டெசிஷனை சொல்றேன். இப்போ நான் வெளியே போகனும். கனேஷோட நம்பரை வாங்கிக்கோங்க. கணேஷ் நீங்களும், இவங்களோட நம்பரை வாங்கி வைச்சுக்கோங்க.” என்று முடித்தார் உரையாடலை.
அவரிடம் அரை மனதாக விடைப்பெற்று, அவரின் மேனேஜர் கணேஷின் அலைபேசியின் எண் வாங்கிக் கொண்டு ஹோட்டல் வந்தடைந்தனர் இருவரும். “கண்டிப்பா சீக்கிரமா ஃபோன் பண்ணுவாரு பாரு, மாயு.”
“ஹ்ம்ம்ம் பண்ணா சந்தோஷம் தான். அவர பார்க்க முடிஞ்சதே பெரிய விஷயம்!”
தங்களின் மகிழ்ச்சியை பங்குப் போட்டுக் கொள்வது போல, குழப்பத்தையும் மனதின் ஆற்றாமையும் பங்குப் போட்டனர். இரவு இதை யோசித்தே தூக்கத்தை தள்ளி போட்டதால், மறுநாள் கார்த்திக் எழும்போதே மணி ஒன்பதை தொட இருந்தது. அவன் மனைவி அப்போதும் துயில் கலையவில்லை என்பது உபரித் தகவல்!
அவனும் தானாக எழவில்லை…. செல்போன் மணி ஓசையின் வாயிலாக, கண்களை திறந்தவன் தூக்கக் கலத்துடன் தன் தந்தையிடம் உரையாடினான். யாரிடமும் பாம்பே வருவதற்கான உண்மையான காரணத்தை கூறவில்லை கார்த்திக். ஒரு நண்பனின் திருமணத்திற்கு வந்திருப்பதாக சமாளித்தான். ரவீந்திரன் உடனான சந்திப்பு நல்லதாக அமைந்தால், வந்து சொல்லிக் கொள்ளலாம் என இருந்தான்.
சுப்பிரமணியம் பேசி முடித்ததும், அலைபேசியை பார்த்தவனுக்கு அது பதிலாக ஒரு தவற விட்ட அழைப்பை சுட்டிக் காட்ட, யாரென பார்த்தால் கணேஷிடமிருந்து! அவசர அவசரமாக கட்டிலில் எழுந்து அமர்ந்து அவரை அழைத்தான் படப்படக்கும் நெஞ்சுடன்.
இவன் குதித்து அமர்ந்ததால், மாயா சினுங்கிக் கொண்டே மறுப்புறம் திரும்பி படுத்தாள். அவளை ரசித்துக் கொண்டே கைப்பேசியில் கவனத்தை வைத்தவனுக்கு, காதில் குலாப் ஜாமுன் அடைப்பது போன்று, நற்செய்தியை கொடுத்தார் கணேஷ். “சார் ஓகே சொல்லிட்டாரு கார்த்திக். நீங்க நேத்து மாதிரி நாலு மணிக்கு வர முடியுமா??”
[the_ad id=”6605″]
“கண்டிப்பா வந்திடறோம் சார். ரொம்ப தாங்க்ஸ்.”
பேசியை வைத்தப்படி மனைவியை சந்தோஷத்திலும், குதூகளிப்பிலும் உலுக்கி எழுப்பினான். “ஹே தூக்கம் வருது… அப்புறமா சொல்லு.” மாயாவின் சினுங்கலை பொருட்படுத்தாமல், கார்த்திக் “அடியே ரவீந்திரன் சார் சொல்லி கணேஷ் சார் கூப்பிட்டுருக்காரு. நீ அஸிஸ்டென்டா ஜாயின் பண்ண போற!” என்று உரக்க கூவவும், மாயா கண்கள் விரிய எழுந்து அமர்ந்தாள்.
எதுவும் பேசாமல் அவன் கைகளை கிள்ளிவிட்டு, “கனவு இல்லடா. நிஜம் தான்!!” என சொல்லியபடி கார்த்திக்கை கட்டிக் கொண்டாள் மாயா. ஒரு நிமிடம் அதிர்ந்து உடல் தூக்கிப் போட்டாலும், கார்த்திக்கும் அவளை அணைத்து தன் களிப்பை காட்டினான்.
இப்படி தான் மாயசித்ரா தன் திரைபயணத்தை தொடங்கினாள்.