அத்தியாயம் – 26
மாயா தான் போட்டியில் வெற்றிப் பெற்றதை தன் குடும்பத்தினருக்கு பகிர்ந்தாள். எல்லோருக்கும் மகிழ்ச்சியே! விநாயகமும் ரித்தியாவும் ஒரே குரலில், “எனக்கு தெரியாது அடுத்த வாட்டி கோயம்பத்தூர் வரப்போ எனக்கு ட்ரீட் வேணும்!” என்று கூறினர்.
கார்த்திக் அதன் பிறகு மாயாவிடம், ரவீந்திரனிடம் உதவியாளராக சேருவது பற்றிப் பேச்சே எடுக்கவில்லை. ஆனால், வேலையும் நிற்கவில்லை! மாயாவின் பெயரில் புதிதாக, ஒரு மின்னஞ்சலை தொடங்கிவிட்டு, அதிலிருந்து ரவீந்திரனுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தான்.
பதில் மின்னஞ்சல் தான் வந்தப்பாடாக காணோம்! ஒரு வாரத்திற்கு இரண்டு மின்னஞ்சல் என்ற கணக்கில் அவன் அனுப்பிக் கொண்டே இருக்க, மாதம் ஒன்றே கடந்துவிட்டது! அப்போது தான் அந்த செய்தியை தாங்கள் வாங்கும் தினசரியில் கண்டான் கார்த்திக்.
காலை ஏழு மணியாக மூன்று நிமிடங்கள் இருந்த சமயத்தில், “மாயு இங்க வாயேன் சீக்கிரம்.” என கத்தினான் மாயாவின் கணவன் ஹாலில் இருந்து. சமையல் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டு வேலை செய்த மாயா, ஏன் இப்படி கூப்பாடு போடுகிறான் என யோசனையுடன் அவனிடம் விரைந்தாள்.
தினசரை அவள் கைகளில் திணித்துவிட்டு, “இதை படி முதல்ல” என ஒரு செய்தியை சுட்டிக் காட்டினான். அது ரவீந்திரனை பற்றியதாக இருந்ததை அதன் தலைப்பிலேயே கண்டுக் கொண்டவள், “சரி இதுல என்ன இருக்கு??” என்று அசுவாரஸ்யமாக கேட்டாள்.
[the_ad id=”6605″]
“ரவீந்திரன் சார் இப்போ பாம்பே போயிருக்காரு. இப்போ முடிச்சு குடுத்த ஹிந்தி படத்தோட பிரமோஷனுக்காக. நம்ம அவரை போய் பார்க்கலாமா??”
மாயாவிற்கு ஒரு கணம் கார்த்திக் பேசியதே புரியவில்லை. என்ன இவன் எதோ பக்கத்து வீட்டுக்காரனை சந்திப்பது போல பேசுகிறான் என நினைத்தவள், அதையே வார்த்தை பிசகாமல் அவனிடம் வழிமொழிந்தாள்.
கார்த்திக் இவளிடம் எல்லாவற்றையும் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என எண்ணியபடி, தன் மடிக்கணினியை உயிர்பெற வைத்து, மின்னஞ்சல்களை காட்டினான்.
அதையெல்லாம் பார்வையிட்ட மாயா, உண்மையில் வாயடைத்து போனாள். பின் ஆச்சரியமும் அதிர்ச்சியும் மாறாமல், அவனிடம் திரும்பி, “நீ மெயில் பண்ணது கூட பிரச்சனையில்லடா. ஆனா, எந்த தைரியத்துல இப்போ நீ பாம்பே போலாம்னு சொல்ற?? ஒரு மெயிலுக்கு கூட ரிப்ளை வரலை…. இதுல இருந்தே தெரியலயா, இது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு??” என்று வினவினாள்.
“ஆமா மெயிலுக்கு ரிப்ளை வரலை தான். பட், ஒரு தடவை நம்ம ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒண்ணும் ஆகிடாது. அங்க போயிட்டு, ‘சார், உங்கள மீட் பண்றதுக்காகவே பாம்பே வந்திட்டேன்’னு ஒரு மெயில் பண்ணுவோம். அதுக்கப்புறம், கடவுள் விட்ட வழி.”
“அவர்கிட்ட அஸிஸ்டென்ட் ஆகிட்டோம்னா ரொம்ப லக்கி தான். பட், அவரு வேற லெவல்ல இருக்காரு. போய் அசிங்கப்பட்டு வரனுமா?? இங்க இருக்குற வேற கேமராமேன் கிட்ட ட்ரை பண்ணலாம்ல??”
“மேடம் குட்டு வாங்குனாலும் மோதிரக் கையால குட்டு வாங்கனும், புரியுதா?? நீ இப்போ ஒரு எழுதாத புக் மாதிரி இருக்க. நீ வேலை கத்துக்கறது இவர மாதிரி பெரிய ஆள் கிட்ட இருந்தா, உனக்கு எவ்வளவு யூஸ் ஆகும்னு யோசி!”
“சரி ஓகே அவர்கிட்டயே போலாம். பட், உடனே வந்து சேர சொன்னா என்ன பண்றது?”
“சிம்பிள், காலேஜ்ல டிஸ்கன்டினியூ பண்ணிடலாம்!”
“அடப்பாவி!!!” மாயாவிற்கு மேற்கொண்டு பேச்சே வரலவில்லை. எவ்வளவு எளிதாக முடிவெடுக்கிறான்?! திகைத்து நிற்கயிலே அவளின் கைகளை இழுத்து சோபாவில் அமர வைத்து, “இங்க பாரு மாயு, ஒன் டோர் ஓபன்…. ஒன் டோர் கிளோஸ் பாளிஸி தான் இது! நீ தியரியா இங்க படிக்கறத விட, அங்க நேர்ல போய் வேலை கத்துக்கறது எவ்வளவு நல்லது?? அப்புறம் அவர் ஓகே சொன்னா தான் டிஸ்கன்டினியூ பண்ணலாம்னு சொல்றேன். இல்லனா, இங்கயே வேற இடத்துல ட்ரை பண்ணலாம். என்ன சொல்ற??” என்று கண்களில் ஊடுறுவினான் கார்த்திக்.
“ஹ்ம்ம்ம் சரி ஓகே. நம்ம அவர போய் பார்ப்போம். பட், எனக்கு தெரியாம எவ்வளவு வேலை பார்த்திருக்க நீ??” அவன் காதுகளை முறுக்கிக் கொண்டு மாயா நகைக்க, கார்த்திக் அன்றே கிளம்புவதற்கு டிக்கெட் இருக்கிறதா என அறிய முற்பட்டான்.
“ஹே இன்னிக்கே கிளம்பனுமா??”
“பின்ன அவங்க வேற ஊர் போனதுக்கு அப்புறம் கிளம்பலாமா??”
“ஹுஹும்!! சரி இன்னிக்கு போயிட்டு எப்போ திரும்புவோம்?”
“மூணு நாலு நாள் கழிச்சு. பிளைட் டிக்கெட் எப்போ கிடைக்குதோ…. அம்மா தாயே உடனே ஏன் ட்ரெயின்ல போலாம்னு கேக்காத! தட்கல் டிக்கெட் எல்லாம் ரொம்ப ரிஸ்க். என்னால முடியாது…”
இப்படியாக ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அடித்துக் கொண்டு, அன்று இரவு பதினொரு மணியளவில் பாம்பே எனப்படும் பம்பாய்க்கு பயணத்தை தொடங்கினர். போகும் வழியாவும் கார்த்திக் மாயாவிடம் விதவிதமாக அறிவுரை வழங்கினான்.
“அவரு எப்படி கேள்வி கேட்டாலும் மனசுல இருக்குறத ஒழுங்கா தெளிவா சொல்லிடு. முக்கியமா பயப்படாம பேசனும்.”
ஒரு நிலை மேல் பொறுக்காமல், “தாத்தா கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி கேக்கறேன் தாத்தா. ப்ளீஸ், இப்படி டிசைன் டிசைன்னா அட்வைஸ் பண்ணி கொல்லாதீங்க தாத்தா!” என்று நக்கலடித்தாள் மாயா. முதல் விமானப்பயணத்தின் பயத்தையும் தாண்டி, நக்கல் தெறித்தது.
[the_ad id=”6605″]
“சரிங்க ஆயா….” இதை சொன்னதற்காக மனைவியிடம் நாலு மொத்துகளை பரிசாக பெற்றவனிடம் மனைவி வேறு ஒரு கேள்வியை கேட்டாள். “ஹே நீ என் கூடவே இருப்பல??”
“எப்போவும் உன் கூடவே தான் இருப்பேன். ஆனா, சார்கிட்ட நீ தான் பேசனும். நானா எனக்கு கேமரா மேல ஒரே லவ்னு சொல்ல முடியும்?? சில வேலை எல்லாம், உனக்கு பின்னாடி இருந்து தான் நான் சப்போர்ட் பண்ண முடியும் மாயு. ஷூட்டிங் எல்லாம் நீ போறப்போ நான் கூடவே வர முடியுமா சொல்லு?? அது எல்லாம் உன் டிப்பார்ட்மென்ட்! ஓகே??”
ஒன்றும் சொல்லாமல் அவன் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டு அவன் தோள்களில் சாய்ந்தாள் மாயா. கார்த்திக் கூறுவதிலும் இருந்த உண்மை அவளை சுட்டதோ என்னவோ? ஒரு வழியாக அவள் மனதை அவளே தயார்ப்படுத்திக் கொள்ளவும், விமானம் பாம்பே விமான நிலையத்தில் தரையிறங்கவும் சரியாக இருந்தது.
இவ்வளவு சீக்கிரமாக மாயா தோளிலிருந்து எழுந்துக் கொள்ள வேண்டியதை நினைத்து வருந்திக் கொண்டே கார்த்திக், அவன் ஏற்கனவே அறை முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு டாக்ஸி எடுத்தான் மனைவியுடன்.
டாக்ஸியில் போகும் போதே ரவீந்திரன் சாருக்கு மின்னஞ்சலும் அனுப்பி விட்டாயிற்று. அறைக்கு சென்றவுடன் மாயாவுக்கு ஏனோ பெருந்துரையில் அன்று நடந்த நிகழ்வுகள் ஒரு நொடி அவளையும் மீறி கண் முன் தோன்றியது. அவளின் பின்னேயே வந்து, அவளின் தோள்களை தள்ளி விளையாடிக் கொண்டே, “மேடம் சீக்கிரமா போய் டிரேஸ் மாத்திட்டு வந்து படுங்க. காலையில உங்களுக்கு பிடிச்சவரை பார்க்க, சித்திக் விநாயகர் கோவிலுக்கு போகனும்.” என்று விரட்டியவனை கண்டதும், அந்த சிறு சஞ்சலமும் மனதை விட்டு அகன்றது! எதுவாகினும் நம் கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை பிறக்க, நிம்மதியாக தூங்கச் சென்றாள் மாயா.
கார்த்திக் கீழே படுக்க போர்வை எடுக்க மாயா அதை தடுத்து, கட்டிலில் மறுபக்கம் படுக்கச் சொன்னாள். அங்கே சென்னையில், இவளுக்கு சரியானதும் கார்த்திக்கை கீழே படுக்க விடாமல், மாயாவே அவனை மற்றொரு அறையில் உறங்கக் கூறினாள்.
இங்கே வேறு சோபா சிறிதாக இரண்டாக இருக்க, அதனாலயே மாயா அப்படிச் சொன்னது. கார்த்திக்கும் பிகு செய்யாமல், சமர்த்தாக மறுப்புறம் படுத்து கண்களை மூட, அவனை சில நிமிடங்கள் புன்னகை தவழ கண்டுவிட்டு, மாயா கண் மூடினாள்.
சில நிமிடங்கள் இடைவெளியிலேயே கார்த்திக் கண் முழித்து, மனைவியின் முகத்தை ஆசைப் பொங்க பார்க்க, எதோ ஒரு உள்ளுணர்வில் மாயாவும் இமைகளை திறந்து அவனை கண்டுக் கொண்டாள். “ரொம்ப சைட் அடிக்காத…. படுத்து தூங்கற வழிய பாரு.”
மாயாவின் கேலியில், “எல்லாம் என் நேரம்டி…” என சலித்துக் கொண்டு உறக்கத்தை தழுவினான் கார்த்திக். மறுநாள் எழுந்து குளித்துவிட்டு சித்திக் விநாயகர் கோவிலுக்கு சென்றனர். தங்கள் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் பிள்ளையாரின் மேல் போட்டுவிட்டு, லேசான மனதுடன் வெளி வந்தனர் இருவரும். “கார்த்திக் கண்டிப்பா சார் கூப்பிடுவார் பாரு. எனக்கு இப்போ என்னவோ ரொம்ப நம்பிக்கையா இருக்கு.”
மாயா கூறியதை கேட்டு சிரித்தபடி, கார்த்திக்கும் தலையசைத்தான். அவளின் எண்ணமும் பொய் போகாமல், மாலை நான்கு மணி அளவில் பதில் மின்னஞ்சல் வந்தது. “நீங்கள் இப்போது எங்கே இருக்குறீர்கள்?? ஆறு மணியளவில் சாரை பார்க்கலாம்.” என வந்த மின்னஞ்சலுக்கு, நன்றி தெரிவித்து முகவரியை அனுப்பும்மாறு பதில் சென்றது கார்த்திக்கிடமிருந்து.
[the_ad id=”6605″]
மாயாவுக்கு தரையில் கால் தங்கவில்லை. குதித்துக் கொண்டே, “நான் சொன்னேன்ல?? பிள்ளையார் அப்பா கைவிடலை பாரு!” என துள்ளியவளை கார்த்திக் ஆசைப் பொங்க பார்த்தான். முகவரி வந்ததும், அவசர அவசரமாக அங்கே விரைந்தனர். மும்பை வாகன நெரிசலில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வது, வேற்று கிரத்திற்கு செல்வது போல தோன்றியது.
ஆனால், சீக்கிரமே கிளம்பியதில் ஐந்தரை மணிக்கே சென்றுவிட்டனர் கார்த்திக்கும் மாயாவும். “பயப்படாத. ஃபீரியா இரு.” மனைவிக்கு சொல்லியவாரு, தானும் ஆறுதல் படுத்திக் கொண்டு அந்த கட்டிடத்தில் ரவீந்திரனின் அலுவலகமாக செயல்படும் இரண்டாம் தளத்திற்கு விரைந்தனர். மேலே சென்றதும் நடுத்தர வயதில் இருந்த ஒருவர் இவர்களை விசாரிக்க, அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர் பின் வரும்மாறு சொல்லிச் செல்ல, அவரை பின் தொடர்ந்தனர் தம்பதியினர்.
இறுதியில் தேடி வந்தவரை பார்த்தே விட்டனர்! கண்ணாடி தடுப்பின் வழியே ரவீந்திரன் உள் அறையில் அமர்ந்திருக்க, காத்திருக்கும் அறையில் இவர்களை அமரச் சொன்னார் அந்த நடுத்தர வயதில் இருந்தவர். மாயாவுக்கு பெரிய பெரிய மூச்சுக்கள் தொடர்வண்டியாக வர, கார்த்திக்கின் கைகளை பிடித்துக் கொண்டு கண்களால் தன் துணையின் துணையை நாடினாள். அவளை தட்டிக் கொடுத்து அமைதி படுத்திக் கொண்டு, உள் அறையில் ரவீந்திரனை நோட்டமிட்டான் கார்த்திக்.