அத்தியாயம் – 30
மாயாவிற்கு வெகு நாட்கள் கழித்து வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பது கடினமாக இருந்தாலும், அவளாலும் வெளியே செல்ல முடியவில்லை…. மசக்கையின் அறிகுறிகள் தலை தூக்க, அவளால் முன் போல் கார்த்திக்குடன் வாரத்திற்கு ஒரு படம் கூட செல்ல இயலாமல் போனது. ஆனால், வீட்டில் இருந்த நேரத்தில் மாமனாருடன் செலவழித்து கார்த்திக்கின் சிறு வயது ஞாபகங்களை நினைவுக் கூற வைப்பாள்.
அவரும் அசராமல் மருமகளுடன் பேசவும், கார்த்திக் தான் இவர்களின் நடுவில் வருத்தெடுக்கப்பட்டான். முழுதாக இரண்டு மாதம் விடுப்பாக இருக்க, நாட்களை வீண்ணடிக்காமல் வலைதளங்களில் புதிதாக ஒளிப்பதிவு சமந்தமாக என்ன இருக்கிறது என தேடி கற்றாள். நடுவில் இவளை ஒரு முறை ரவீந்திரன் ஆபிஸிற்கு அழைக்க, கார்த்திக்குடன் சென்றாள்.
இவர்களை பார்த்ததும், அழைப்பிதழை கொடுத்துவிட்டு, “கண்டிப்பா உங்க பெமிலியோட வந்திடனும். முகூர்த்தத்துக்கும் ரிசப்ஷனுக்கும் கண்டிப்பா வரனும்….” என்று தன் பெண்ணின் திருமணத்திற்கு அழைத்தார்.
கார்த்திக் தலையசைத்து, “சுயர் சார். கண்டிப்பா வரோம். நாங்க கூட ஒரு சந்தோஷமான நியூஸ் வைச்சிருக்கோம்.” என்று எடுத்துக் கொடுத்து மாயாவை குறும்பாக பார்க்க, ரவீந்திரனே புரிந்துக் கொண்டார்.
“ஹே குழந்தையா? கங்கிராட்ஸ்… ரொம்ப சந்தோஷம்!”
“தாங்க்ஸ் சார்… நீங்க கல்யாணம் முடிஞ்சு படம் கமிட் ஆகறப்போ கூப்பிடுங்க சார். என்னால முடிஞ்ச அளவுக்கு வரேன்.”
மாயா கூறியதை கேட்டு சிரித்த ரவீந்திரன், “ஆமா நீ தான் முதல்லயே கேட்டுட்டியே மெர்டர்னிட்டி லீவ், குடுத்துடறேன்மா.” என்று மகிழ்ச்சியுடன் கூறவும், மாயாவும் கார்த்திக்கும் அவரிடம் இருந்து விடைப் பெற்றனர்.
மூன்றாம் மாதம் முடிந்தவுடன் ஸ்கேன் செய்து மருத்துவரை பார்க்கச் சென்ற வேளையில், பூரிக்கும் படியான செய்தியை கூறினார் மகப்பேறு மருத்துவர். “உங்களுக்கு ஒன்னில்ல, இரண்டு பேபி, டிவின்ஸ் பொறக்கப் போறாங்க.”
இருவரும் ஒருவரை ஒருவர் ஆவலாக பார்த்து, கைகளை கோர்த்துக் கொண்டனர், களிப்பில். மருத்துவரிடம் விடைப்பெற்று வந்ததும், காரில் ஏறியவுடன் மாயா கார்த்திக்கை கட்டிக் கொண்டாள். “நமக்கு ரெண்டு பாப்பா… சூப்பர்ல!” கார்த்திக் அவளின் வயிற்றை ஆசையுடன் தடவிக் கொண்டே ஆமோதித்தான், “ஹ்ம்ம்ம் ஆமாடா…” சற்று நேரம் அணைப்பில் இருத்திவிட்டு, பின் கிண்டலாக கேட்டான். “ஆமா நீ என்ன ஒன்னு கேட்டா ஒன்னு ஃபீரின்ற மாதிரி ரெண்டு பாப்பா தர?!”
“ஏன்டா சொல்ல மாட்ட?? நீ என் பின்னாடி சுத்துனதுக்கு ரெண்டு இல்ல, மூணு பாப்பா வந்தாலும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல…”
அவனின் தோள்களில் செல்லமாக குத்தி கூறியவளை, மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டான் கார்த்திக். வீட்டிற்கு வந்ததும் தம்பட்டம் அடிக்காத குறை தான். கார்த்திக் அபிராமி, விநாயகம், மைதிலி போன்றவர்களுக்கு விஷயத்தை பகிர, வீடே கலகலத்தது.
[the_ad id=”6605″]
“ஹே சூப்பரப்பு!! ஒரே கல்லில் இரண்டு மாங்கா…. மாமாவா டபுள் பிரோமஷன் எனக்கு! மகிழ்ச்சி….” இது சொல்லவே தேவையில்லை, விநாயகமே தான்.
“ஹே டிவின்ஸா?? அப்போ ஒரு குழுந்தைய இங்க விட்டுடு. நான் வளர்த்துக்கறேன்.” சித்தியாக போகும் குஷியில் ரித்தியா அளித்த வாக்கு!
“இனிமேலும் விளையாட்டா அங்க இங்க சுத்தாம, ஒழுங்கா கவனமா இருடி. ரெண்டு புள்ள உள்ள இருக்குன்னு நினைப்பு இருக்கட்டும்….” சாட்சாத் அபிராமியே தான்.
சுப்பிரமணியம் ஏனோ இவ்விஷயத்தை கேட்டு பேசவே இல்லை. எதிரில் நின்ற மகனையும் மருமகளையும் தலையில் கை வைத்து ஆத்மாத்திரமாக ஆசிர்வதிக்க மட்டுமே முடிந்தது அவரால். கோயம்பத்தூரில் இருந்து வந்திருந்த மீனம்மாவோ, இன்னும் பொறுப்புடனும் கவனத்துடனும் மாயாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள தொடங்கினார். பிள்ளைகள் என யாரும் இல்லாத அவருக்கு கார்த்திக் தான் பெறாத பிள்ளையாகவே தோன்றினான்.
அதனால், ஒவ்வொரு முறை இவர்கள் மருத்துவரை பார்த்து வந்ததும், என்னென்ன மாத்திரைகள் கொடுக்க வேண்டும், சாப்பிட என்ன கொடுக்கலாம் என கார்த்திக்குடன் தீவிர ஆலோசனை நடத்துவார். மாயா இதையேல்லாம் கண்டுக் கொள்ளவே இல்லை. அவள் பாட்டுக்கு கொடுப்பதை உண்பது, சொல்வதை செய்வது என இருப்பாள். நான்காம் மாதத்தின் முடிவில் கோயம்பத்தூருக்கு பத்து நாட்கள் அன்னையுடனும் தங்கையுடன் செலவழிக்க சென்றாள்.
விநாயகம் தான் இவளை சீண்டிக் கொண்டே இருந்தான். “மாயு நீ ஏன் ஒரு பையன் ஒரு பொண்ணு பெத்துக்கக் கூடாது? ரெண்டு பேருமே இருந்தா செமையா இருக்கும்.”
“எனக்கும் கார்த்திக்கும் எந்த பாப்பாவா இருந்தாலும் ஓகே தான்….”
“அப்படி இல்லமா… நீயே யோசிச்சு பாரு…. கார்த்திக் மாதிரி ஒரு பையன், உன்னை மாதிரி ஒரு குட்டி மாயா. அது தான நல்லா இருக்கும். புரிஞ்சிக்க மாட்றியே நீ??”
இப்படியே பேசிப் பேசி மாயாவின் மனதை கரைத்து, திரும்ப அவளை அழைத்துச் செல்ல வந்திருந்த கணவனிடம் தன் வேண்டுதலை முன் வைக்கும் அளவுக்கு மொத்தமாக மாற்றினான். கார்த்திக் விநாயகத்தின் மேல் கொலை வெறியானான் இச்செய்கையை கண்டு. “ஹே சும்மா இருந்தவள இப்படி மாத்திட்டியேடா, பாவி!! இரண்டுமே பொண்ணு இல்லனா பையன் பொறந்தா அவ கஷ்டப்பட மாட்டாளா??”
“அதெல்லாம் நோ வொரிஸ்…. கண்டிப்பா உனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு தான். பேரு கூட நீ பார்த்துக்கோ…. நானும் என்னோட தங்கச்சியும் கும்பிடுற பிள்ளையார் அப்பனை நம்பி சொல்றேன் இதை. வேணும்னா பாரு….. விநாயகத்தை நம்பினோர் கை விடப்படார்!”
“நடந்தா எனக்கும் சந்தோஷம் தான். இல்லனா உனக்கு தான் பிரச்சனை…. பார்த்துக்க.”
கார்த்திக் கூறிவிட்டு நகர, அவனின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யாராக இருக்கும் என யோசனையுடன் கார்த்திக்கும் விநாயகமும் பார்க்க, வந்தவனை கண்டு கார்த்திக் திகைத்து போனான். வந்தவன் கார்த்திக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் தோழன் வெங்கடேஷ். கூடவே ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தான்.
சில நொடிகள் திகைப்பில் மிதந்தவன், பின் வந்தவர்களை வரவேற்று உள் அழைத்துச் சென்றான். “உட்காருங்க இதோ வந்திடுறேன்.” சொல்லிவிட்டு, தன் அறையில் இருந்த மனைவியை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான். மாயாவும் கார்த்திக்கின் நண்பன் என்ற நிலையில் புன்னகைத்து வரவேற்க, அவளின் மேடிட்ட வயிற்றை பார்த்து, வெங்கடேஷ் நண்பனை வாழ்த்தினான். “ஹே சொல்லவே இல்ல? கங்கிராட்ஸ்டா”
கூட வந்த பெண்ணும் அவளின் வாழ்த்துக்களை கூற, அப்போது தான் அவளை அறிமுகம் செய்தான் வெங்கடேஷ். “டேய் இவ சங்கீதா. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.”
“அடப்பாவி இவ்வளோ சாதாரணமா சொல்ற??” கார்த்திக் சலித்துக் கொண்டு வாழ்த்துக்களை கூற, விநாயகமும் மாயாவும் அவனுடன் சேர்ந்தனர் வாழ்த்துவதில்.
“உன்னால தான்டா இவ எனக்கு கிடைச்சா… புரியலையா?? நீ உனக்கு தெரிஞ்ச பொண்ண யாரோ கெடுத்துட்டாங்கன்னு சொன்னல? நான் கூட அவங்கள கேஸ் போட்டு உள்ள தள்ளுனேன்ல மூனு பேர? அதுல ஒருத்தனோட தங்கச்சி தான் இவ…”
[the_ad id=”6605″]
மாயா இதை கேட்டு அவளையும் அறியாமல், கார்த்திக்கின் கைகளை சட்டென பற்றினாள் இறுக. விஷயம் அறியாத மூவரும் அதிர்ந்து வெங்கடேஷை நோக்க, அவனோ தெளிந்த குரலில் பேசினான். “அவங்க மூணு பேரையும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி, ஜாமீன்ல எடுத்தா இவ. என்னால உன்கிட்டயும் இதை சொல்ல முடியலை… ஆனா, என்ன பண்றதுனே தெரியலை….”
வெங்கடேஷ் நிறுத்திய இடத்திலிருந்து சங்கீதா தொடர்ந்தாள். “எனக்கு என் அண்ணனா பொறந்த பாவி அப்படி பண்ணான்னு தெரியாது. இவரு தான் அவங்க வெளிய வந்தப்போ இந்த மாதிரி பண்ணான்னுங்க, அதனால தான் உள்ள வைச்சேன்னு சொன்னாரு. அன்னிக்கு ராத்திரியே மூனு பேரும் சாராயத்தை போட்டுட்டு வந்து, அவங்க பண்ண மத்த கதையெல்லாம் பேசவும், என்னால தாங்க முடியலை!! இன்னும் இவனுங்க இருந்தா எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் செய்வாங்களோன்னு பயமா போச்சு….
சாராயத்தோட சாராயமா பூச்சி மருந்தை கலந்துட்டேன் அடுத்த நாளு. ஆனா, அவங்க செத்து போலீஸ் விசாரிக்க வந்தப்போ, மறுபடியும் இவரு வந்தாரு. மறைக்காம உண்மையை சொல்லிட்டேன் இவருகிட்ட. என் மேல பழி வராம கேஸ் இல்லாம, மூனு பேரையும் அடக்கம் பண்ண இவரு தான் ஏற்பாடு செஞ்சாரு. அப்படி தான் இவரோட பழக்கமாச்சு….”
“ஆமாடா, துணிச்சலா இவ செஞ்ச காரியம், என்னை உலுக்கிடுச்சு. அப்பா, அம்மா இல்ல இவளுக்கு. அண்ணனும் இல்லனாலும் பரவாயில்லைன்னு இவளே அப்படி செஞ்சுட்டா! இந்த நிலைமை அவங்களுக்கு வரும்னு நானும் எதிர்பார்க்கலை…. அதே நேரம், இவளை விடவும் முடியலை. அம்மா, அப்பா கிட்ட பேசி சம்மதிக்க வைச்சு, இப்போ தான் கல்யாணத்துக்கு நாள் பார்க்க இருக்காங்க….”
புது ஜோடிகளாக சேர இருப்பவர்கள் தங்களின் கடந்த காலத்தை கூறியவுடன், அதை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் திகைப்பில் மூழ்கினர். விநாயகத்துக்கும் கார்த்திக்கும் ஒரு பக்கம் நியாயம் கடைத்த திருப்தி இருந்தாலும், அதிர்ச்சி இருந்தது என்னவோ உண்மை.
மாயாவுக்கு தான் எவ்வாரு உணர்கிறோம் என்றே சரியாக புலப்படவில்லை. ஒன்றிற்கு இரண்டாக உயிரை சுமந்துக் கொண்டிருப்பவள் தன் வாழ்க்கையின் மிகப்பெரிய அடியை கொடுத்த கயவர்களின் உயிர் பறிப்போனது என கேள்விப்பட்டவுடன், கைகள் தானாக தன் வாரிசுகளை தடவத் தொடங்கின.
மனதை எதுவோ நெருடியது…. சந்தோஷமா துக்கமா அவளே அறியாள். வெங்கடேஷும் சங்கீதாவும் கிளம்பிய பின்னர், கார்த்திக் அவளை அணைத்து, “எதை பத்தியும் யோசிக்காத கண்ணம்மா. புரியுதா?” என்று அறிவுறுத்தவும், நிமிர்ந்து அவன் கண்களை கண்டவள் மனதில் நெருடியதை வார்த்தையாக வடித்தாள்.
“இது தப்பில்லையா? நமக்கு இது பாவம் தான கார்த்தி??”
“நீ சொன்னல கடவுள் பார்த்துப்பாருனு? கடவுளா பார்த்து அந்த சங்கீதா பொண்ண இதை செய்ய வைச்சுருக்காரு. அவ்வளவு தான்….”
அதன் மேல், மாயாவின் சகோதரனும் கணவனும் அவளை சிந்திக்க விடவில்லை…. வேறு பலவற்றை பேசி அவளின் சிந்தயை மாற்றினர். மாயாவும் அன்று முழுக்க மனம் துவண்டாலும், மறுநாள் கடவுளிடம் பிராத்தனை செய்ததும் அத்தனையும் வடிந்தது அவள் மனதிலிருந்து!
எதுவாகினும் கடவுளும் கார்த்திக்கும் பார்த்துக் கொள்வர் என விட்டு விட்டாள். மறுபடியும் உற்சாகமாக சிங்கார சென்னைக்கு திரும்பியவள், புதிய உத்வேகத்துடன் ரவீந்திரனின் மகள் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றாள். அடுத்து அவர் எடுக்கப் போகும் படம் விரைவில் ஆரம்பிப்பதாக இருக்க, மாயாவும் தான் சேர்ந்துக் கொள்வதாக வாக்குகளை அள்ளி வீச, கார்த்திக் தான் நொந்து போனான்.
“ஹே பிள்ளையார் மாதிரி வயித்த வைச்சுட்டு எப்படி வேலைக்கு போவ?”
“அதேல்லாம் நான் பார்த்துக்கறேன். என்னை கூட்டிட்டு போயிட்டு வர வேலை மட்டும் நீ பார்த்துக்கோ!”
“அது எப்போவும் நான் பண்றது தான… அங்க உன்னால ரொம்ப நேரம் நிக்கவோ உட்காரவோ முடியுமா?? அதான் எனக்கு யோசனையா இருக்கு….”
“இப்போவே அஞ்சு மாசம் ஆயிடுச்சு. மிஞ்சி போனா மூனு மாசம் போவேன். அதுக்கப்புறம் டெலிவரிக்கு ஊருக்கு போகனும், எப்படி இருந்தாலும்….”
“என்னது டெலிவரிக்கு ஊருக்கு போகனுமா?? இங்க தான டாக்டர் பார்க்கறோம்?? நான் இங்கயே வைச்சுக்கலாம்நு நினைச்சேன் டெலிவரிய…”
“அம்மாவுக்கும் ஆசை இருக்காதா? ப்ளீஸ் கார்த்தி யோசிச்சு பாரு!”
[the_ad id=”6605″]
அன்று முழுக்க உம்மென்று இருந்தாலும், தாய் வீட்டிற்கு செல்வது தான் முறை என்று உணர்ந்தவன், மேலும் எதையும் வம்பு பண்ணாமல், ஒத்துக் கொண்டான். அடுத்த பத்து நாட்களில் மீண்டும் வேலைக்கு செல்ல துவங்கினாள் மாயா…. அவளின் குருவே கேட்டுவிட்டார். “அப்படி என்னமா நீ வேலைக்கு வரனும்னு? டிவின்ஸ் வேற. குழந்தை பொறந்ததும் வந்து ஜாயின் பண்ணிக்கோ….”
“இல்ல சார், என்னால முடியலைனா நானே வர மாட்டேன். பட், முடியுது. வீட்டுலயே இருக்க முடியலை சார், அதான் வரேன்.”
படப்பிடிப்பில் ஏக போக மரியாதை அவளுக்கு. சில நாட்கள் கூச்சமாக இருந்தாலும், பிறகு அவளுக்கும் பழகி விட்டது. முன்பு போல், காதாநாயகி, அவர்களின் அன்னையை தாண்டி படப்பிடிப்பில் வேறு யாரும் பெண்களே இல்லை என சொல்ல முடியாது தற்போது. வெவ்வேறு பிரிவுகளில் தங்களை நிரூபிக்க, சில பல பெண்களும் படப்பிடிப்பில் காணப் பட்டனர். அவர்கள் கூட இவளை பார்த்து ஆச்சரியம் கொள்வர். மதிய உணவு, நடுநடுவில் குடிக்க பழச்சாறு என பெரிய கூடையே எடுத்துக் கொண்டு, கணவனுடன் செல்வாள் மாயா.
எவ்வளவு வேலை இருந்தாலும், மாலையிலும் அவளை அழைத்து வரும் பொறுப்பை தனதாக்கிக் கொண்டான் கார்த்திக். அப்படி அவனால் முடியாத பொழுதுகளில், சுப்பிரமணியம் அவ்வேலையை செய்வார். வீட்டிற்கு வந்ததும், வெந்நீரில் கால்களை இருபது நிமிடங்கள் வைத்தால் தான் கால்களில் தேங்கி இருந்த தண்ணீர் வற்றும்.
இவள் வேலையிலேயே நிறைய நடப்பதால், தனியாக வாக்கிங் எல்லாம் செல்ல தேவையிருக்கவில்லை. கார்த்திக் எழாம் மாதம் தொடங்கியதுமே சீமந்தத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினான்.
ஏழாம் மாதத்தின் இறுதியில் கோயம்பத்தூரில், விமர்சயாக விழாவை வைத்து தங்களின் வாரிசுகளின் வரவை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். பச்சை வண்ண பட்டுடுத்தி, சந்தனம் பூசி, தாய்மைக்கே உரிய பூரிப்புடனும் ஜொலிப்புடனும் திகழ்ந்தவளை கார்த்திக் கண்ணெடுக்காமல் பார்வையிட்டான். அவளின் சீமந்தத்திற்கு, தானே புகைப்படம் எடுப்பேன் என விடாப்பிடியாக நின்றுக் கொண்டு, கேமராவுடன் விளையாடினான் சில நேரம்.
மாயாவும் மலரும் நினைவுகளில் மூழ்க, விநாயகம் தான் அவனிடமிருந்து அந்த வேலையை பிடுங்கினான். “டேய் காலேஜ்லந்து இந்த விளையாட்டை விடலையா நீங்க ரெண்டு பேரும்? கிளம்பு நீ முதல்ல. அப்பா அங்க உன்னை தேடிட்டு இருந்தாங்க. போடா….”
“இருடா எனக்கும் ஒரு காலம் வரும். அப்போ இதேல்லாத்துக்கும் ரிவேர்ட் அடிக்கறேன்.”
ஒருவழியாக சீமந்தம் முடிந்து, மாயாவை சாப்பிட வைத்து, வீட்டிற்கு அழைத்தும் சென்றனர். கார்த்திக்கும் அவளை அபிராமியின் வீட்டில் விட்டு, பெரிய அறிவுரை பட்டியலை வாசித்தும் கிளம்பும் மனமற்று தன் மனைவியின் தோள்களில் தவந்தான் அவளின் முதல் குழந்தையாக மாறி. “எனக்கு இஷ்டமே இல்லடி போக… எப்போ நீ அங்க வருவ நம்ம வீட்டுக்கு??”
“கொஞ்ச மாசம் வெயிட் பண்ணா, நானே வந்திருவேன். நாள் போறதே தெரியாது பாரு. எனக்கு தான் இங்க வீட்டுல போர் அடிக்கும். நீ வேலைக்கு போயிட்டு வருவல, அப்படியே ஓடிடும்! ஓவர் ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது. கிளம்புடா…”
வேறு பல சமாதானங்களை கூறிவிட்டு, கார்த்திக்கை ஊருக்கு அனுப்புவதற்குள் மாயாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இவள் வந்ததிற்காக, அபிராமியும் வேலையில் விடுப்பெடுத்திருந்தார். தனக்கு குழந்தை வருப்போகும் நேரமானாலும், தன்னையும் குழந்தையாக பாவித்துக் கொண்டு அவளின் அன்னையிடம் சீராடவும், ரித்தியாவிடம் வம்பு பண்ணவும் மாயா தயங்கவில்ல. நாட்களும் இப்படியே செல்ல, கார்த்திக்கும் மாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்பத்தூருக்கு தன் தந்தையுடன் வந்திருந்தான்.
நடுயிரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லோரும் அபிராமியின் வீட்டில் கேக் வெட்டி மாயாவின் பிறந்தநாளை வரவேற்றனர். அன்றே அவர்களின் செல்வங்கள் இவ்வுலகிற்கு வந்தனர். காலையில் பூஜை செய்து விட்டு, உணவு உண்ண அனைவரும் வட்ட மாநாடு போட்டு அமர, மாயா மட்டும் கீழே அமர முடியாமல், தன் பெரிய வயிற்றுடன் மேலே சோபாவில் அமர்ந்தாள்.
அப்போழுது தான் அவளுக்கு முதல் அசௌகரியம் ஏற்பட்டது! வழக்கம் போல், தன் பிள்ளைகள் இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர் என்ற நினைப்புடன், “உள்ளையே இவ்வளவு அமர்க்களம்… வெளிய வந்தா என்னை என்ன பாடு படுத்தப் போறாங்களோ??!!” என்று சலித்த குரலில் மாயா கூற, அனைவரும் சிரித்தனர்.
“நம்மளோட குட்டிஸ்டா அவங்க. எப்படி இருப்பாங்க, இப்படி தான் இருப்பாங்க!”
கார்த்திக் கூறியதை கேட்டு அவன் தலையில் கொட்டி, தன் தட்டை எடுக்க சென்றவளுக்கு, வயிற்றிலும் இடுப்பிலும் சுலீரென ஓர் வலி எடுத்தது! “அம்மா” என கூவியபடி வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்தவளை அனைவரும் சூழ்ந்துக் கொள்ள, பதறிய நெஞ்சங்களுக்கு பதில் சொல்லும் நிலையில் கூட அவள் இல்லை….
கார்த்திக் அவசர அவசரமாக விநாயகத்தை அழைத்து தகவலை பகிர, ஐந்தே நிமிடத்தில் பறந்து வந்தான் அந்த பாசக்காரன். ஒவ்வொரு மனிதுளியும் கடக்கும் போதும் மாயாவின் வலி அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. மருத்துவர் குறித்துக் கொடுத்த நாளுக்கு, ஒரு வாரம் முன்னரே வலி வந்ததால், உடனே மருத்துவமனை சென்றனர்.
அங்கே சென்றதும், மாயாவை அனுமதிக்கும் போதே பனிக்குடம் உடைந்து விட, வேறு வழியில்லாமல் இரட்டையர்கள் என்பதால், ஆபிரேஷன் செய்து அவளின் மகவுகளை இந்த புவிக்கு அழைத்து வந்தனர்!
அவளின் அறுவை சிகிச்சையின் போதும் கார்த்திக் உடன் இருக்க, அதன் முடிவில் தன் பிள்ளைகளை முதன் முதலாக பார்த்த அந்த நிமிடத்தை அவனால் எப்போதும் மறக்க இயலாது. விசேஷம் என்னவென்றால், விநாயகம் கூறியபடியே ஒரு பெண், ஒரு ஆண் பிறந்ததிருந்தனர் கார்த்திக்கும் மாயாவுக்கும்…. வெளியே இருந்தவர்களிடம் குழந்தையை எடுத்துச் செல்ல, விநாயகம் குதித்தான். “நான் தான் அப்போவே சொன்னேல?” என்று கூறியபடி.
“நீ ஒரு தீர்க்க தரிசிடா…. பேசாம சாமியாரா போய்டு.” கார்த்திக் தன் மகளை கொஞ்சியபடி நண்பனை நக்கலெடுக்க, “அடப்பாவி! நீ மட்டும் கல்யாணம் பண்ணி, டிவின்ஸ் பெத்துப்ப, நான் மட்டும் சாமியாரா போகனுமா??” என்று கத்த, சுப்பிரமணியம் இருவரையும் அடக்கினார்.
“டேய் ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா கொஞ்ச நேரம்? கார்த்திக் மாயா எப்படி இருக்கா??”
“அவ மயக்கத்துல இருக்காபா…” பிறகு, குழந்தைகளின் நலனை குறித்து பேசிக் கொண்டே இருந்தவர்களை, செவிலியர் பெண் வந்து மாயா கண் முழித்துவிட்டதாக கூறி கூட்டிச் சென்றார்.
உள்ளே கார்த்திக்கை பார்த்த மாயாவின் விழிகள் பனித்தது என்றால், தன் குழந்தைகளை கண்டதும் விண் அளவிற்கு விரிந்தது. “நேத்துலந்து பெர்த்டேக்கு டிரீட் எங்க, டிரீட் குடுன்னு கேட்டுட்டே இருந்தல? எப்படி என்னோட டிரீட்??”
கண்களை சிமிட்டியபடி மாயா கேட்க, கார்த்திக் எதுவும் பேசாமல் எல்லோரும் இருக்கிறார்கள் எனவும் பார்க்காமல், அவளின் முந்நெற்றியில் முத்தம் பதித்து நிமிர, அவன் மகன் நானும் இருக்கிறேன் என காட்ட அழத் துவங்க, எல்லோரும் சந்தோஷத்துடன் சிரிக்கத் துவங்கினர்! சந்தோஷம் அங்கே பாய் விரித்து படுத்துக் கொண்டது நிம்மதியாக….