அத்தியாயம் – 31
குழந்தைகள் பிறந்த பதினொராம் நாள் தொட்டிலிட்டு, பெண்ணிற்கு ‘அகிரா’ என்றும் பையனிற்கு, ‘அகிலன்’ என்றும் பெயர் சூட்டினர். பத்து நாட்கள் அவர்களுடன் நேரம் செல்வழித்துவிட்டு, கார்த்திக் சென்னை திரும்பினான், எல்லா வாரவிடுமுறையும் அங்கே வருவதாக கூறி.
சுப்பிரமணியம் பேரப்பிள்ளைகள் இல்லாமல், அங்கே தனக்கு வேலை இல்லை என கூறி, கோயம்பத்தூரிலேயே தங்கிவிட, கார்த்திக் மட்டுமே ஊருக்கு சென்றான். மீனம்மாவும் அபிராமியின் வீட்டிலேயே குழந்தைகளை கவனித்துக் கொண்டு தங்கினார்.
இதன் இடையில் ரித்தியா அவளுடைய இளங்கலை பட்டம் முடித்து, அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க ஆரம்பித்தாள். “ரைட்டு, இன்னொரு எம்.பி.ஏ. நம்ம குடும்பத்துல…. நீ நடத்துமா.” விநாயகம் கூற ரித்தியாவோ நமிட்டு சிரிப்பை உதிர்த்து, “உங்கள பத்தி டிபார்மென்ட்ல விசாரிச்சுட்டேன் பிரோபஸர் கிட்ட எல்லாம்…” என்று கூறினாள். இதை கேட்டு மாயா சிரிக்க, விநாயகம் சலித்துக் கொண்டான். “சே விசாரிச்சுட்டியா?? உன் மாமாவ புகழ்ந்திருப்பாங்களே?? அவனுக்கும் சேர்த்து நான் தான கிளாஸ் விட்டு வெளிய போவேன்?”
வார நாட்கள் இது போல் கேலி பேச்சிலும், கார்த்திக்கிற்கு தங்கள் வாரிசுகளின் புகைப்படத்தை பகிர்வதிலும் ஒரு பக்கம் ஓட, நேரில் கார்த்திக் வரும் வார இறுதிகளோ அதை விட முனைப்புடன் ஓடியது. ஒருவழியாக, குழந்தைகள் பிறந்து மாதம் மூன்றை கடக்க, தன் மனைவி, மக்களை கூட்டிக் கொண்டு கார்த்திக் சென்னை சென்றான்.
அங்கு போனதும் உண்டாகி இருந்த போது ஏறிய உடல் பருமனை, உடற்பயிற்சி எல்லாம் செய்து மாயா இளைக்க உதவினான் அவள் கண்ணாளன். இதற்காக பிரத்தேயகமாக இயங்கும் இடங்களுக்கு அவளை இட்டுச் செல்வது, அவளின் சாப்பாட்டில் கவனம் கொள்வது என பொறுப்பான கணவனாக அனைத்தும் செய்தான்.
“உடம்புல தேவையில்லாத கொழுப்பு தான், பின்னாடி பல நோய்க்கு காரணமா இருக்குமாம். நெட்டுல படிச்சேன். நீ இப்போவே உடம்ப குறைக்கலனா கஷ்டமா இருக்கும், கொஞ்ச நாள் கழிச்சு….”
“நான் என்ன முடியாதுனா சொல்றேன். குட்டிக்கும், பாப்பாக்கும் பால் குடுத்துட்டே டையட் இருக்குறது கஷ்டம் கார்த்தி. பால் நிப்பாட்டினதும் பண்ணலாம்….”
“உனக்கு குடுக்குற டையட், பசங்களுக்கு பால் குடுக்க சரியா இருக்கும். நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டேன். இந்த சாக்கு போக்கு சொல்லாம ஒழுங்கா டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணு.”
‘அதுக்குள்ள டாக்டர் கிட்ட கேட்டுட்டானா?? எப்படி போனாலும், கேட்டு போடறானே!!’
மனதுக்குள் கார்த்திக்கிற்கு கவுன்டர்களை கொடுத்துவிட்டு, அவன் சொன்னதை செய்தாள். முதலில் அவளுக்கு பிடிக்காமல் இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கே உடம்பு முன்பு போல் மாறுவதை கண்டு, அதில் விருப்பம் உண்டாகிற்று. குழந்தைகள் ஆறாம் மாதத்தின் போது ஒரு போட்டோஷுட் போல் குடும்பத்தோடு செய்தவர்கள், அதில் மாயாவை பழைய மாதிரி கண்டு ஆனந்தமாக திகைத்தனர்.
நேரில் அவளின் மாற்றம் தெரிவதை விடவும், புகைப்படத்தில் பெரிதும் வித்தியாசம் தெரிந்தது! நாட்கள் நீரோட்டமாக செல்ல, மேலும் மூன்று மாதங்கள் இனிதே முடிவடைந்தது….
[the_ad id=”6605″]
அப்போது தான் ரவீந்திரன் சாரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. கணேஷ் தான் பேசினார். “மாயா சார் உன்னை பார்க்கனும்னு சொல்றாரு. நாளைக்கு ஆபீஸ் வரியாமா?”
என்னவாக இருக்கும் என சிந்தித்தபடி, “வரேன் சார். என்ன விஷயம்?” என்று வினவ, அதற்கு பதிலாக, “எனக்கு தெரியாதுமா. ஆனா, வரும்போது உன்னோட ஹஸ்பென்ட் கார்த்திக்கையும் கூட்டிட்டு வரச் சொன்னார். வந்துருங்க. நாளைக்கு பார்க்கலாம்.” என்று கூறி அழைப்பை துண்டிக்க, மாயாவுக்கு எதுவோ பெரிய விஷயம் என மட்டும் புரிந்தது.
கார்த்திக்கிடம் தகவலை பரிமாற, அவனும் போகலாம் என முடித்துக் கொண்டான். என்னவோ ஏதோ என சிந்தனையுடன் சென்றவர்களுக்கு ஒரு இனிய திருப்புமுனை அங்கே காத்திருந்தது. ஆம், எல்லோருக்கும் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையை விதி வைத்து விளையாடும் அப்படித் தான் மாயாவுக்கும் அது வைத்தது!
ரவீந்திரனோடு பிரித்வியும் அங்கே இருப்பதை கண்டு ஆச்சரியம் கொண்டனர் கார்த்திக் தம்பதியர். நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன், ரவீந்திரன் நேராக விஷயத்திற்கு தாவினார். “பிரித்வியை உனக்கு தெரியும்ல, மாயா? அவன் இப்போ படம் பண்ண போறான். உன்னை தான் கேமராமேனா, இல்ல இல்ல கேமராவுமனா கூப்பிடறான். என்ன சொல்ற??”
கேட்ட மாயா வாயடைத்து போக, கார்த்திக்கோ வானத்தில் பறந்தான்! பிரித்வியும் சும்மாயிராமல், “உன்னோட வொர்க் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் மாயா. அதனால, ஸ்கிரிப்ட் எழுதும் போதே நீ கேமரா வொர்க் பார்த்தா நல்லா இருக்கும்னு எனக்கு ரொம்பவே தோணுச்சு. இது தான் ஸ்கிரிப்ட் புக். படிச்சிட்டு சொல்லு…” என்று அவளின் கையில் கட்டையான பெரிய பையின்ட் செய்த புத்தகத்தை வைத்தான்.
மாயா அப்போதும் பேசாமல் இருக்க, ரவீந்திரன் கார்த்திக் பக்கம் திரும்பினார். “அவ இன்னும் ஷாக்ல இருக்கா. நீங்க என்ன சொல்றீங்க கார்த்திக்? உங்களுக்கு ஓகே வா??”
“சார் எனக்கு டபுள், டிரிபிள் ஓகே சார். பட், முடிவு மாயா தான் எடுக்கனும்.”
“ஹ்ம்ம்ம் இன்னும் என்னமா யோசனை? என்ன நினைக்கிறேன்னு சொல்லு…”
மாயாவின் கைகளை கார்த்திக் அழுத்தம் கொடுக்க, தன் பவள இதழ்களை பிரித்து, முத்துக்களை உதிர்த்தாள் அவள். “சார் இது சுத்தமா நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம். நான் திரும்பவும் உங்ககிட்ட சேரலாம்னு ஐடியால தான் இருந்தேன். பட், என்னை நம்பி ஒரு படம் முழுசா குடுக்கறாங்கனா கொஞ்சமில்ல ரொம்பவே பயமா இருக்கு சார்….”
“பயமா தான் இருக்கும். எல்லாருக்கும் முதல் படம்னா வரற்து தான். அதுக்காக நல்ல சான்ஸ் விட்டுட முடியுமா? உனக்கும் பிரித்வியை ஆல்ரெடி தெரியும். டைரக்டர்க்கும், சினிமாட்டோகிராபருக்கும் ஒரு அன்டர்ஸ்டான்டிங் இருந்தா தான் படம் நல்லா வரும். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். மேல நீ யோசிச்சு சொல்லுமா…”
பிரித்வி இடை புகுந்து, “நீ ஸ்கிரிப்ட் முதல்ல படி மாயா. பிடிச்சிருந்தா பண்ணலாம்…” என்று சொல்லவும், திரைக்கதை முழுவதும் படித்து மீண்டும் பேசுவதாக கூறி விடைப் பெற்றார்கள் கார்த்திக்கும் மாயாவும்.
வீட்டிற்கு காரில் செல்லும் போது இருவரும் யோசனையாக இருக்க, வீடு சேர்ந்தும் குழந்தைகளை கொஞ்சி விட்டு, தங்களின் படுக்கையறைக்கு சென்று, மாயாவை அழைத்தான் கார்த்திக். அவள் உள்ளே நுழைந்ததும், தன் மடியில் அவளை இருத்திக் கொண்டு, “என்னடி ரொம்ப மண்டையை குழப்பிக்கிட்டு யோசிக்கற?” என்று கேட்டான்.
பதிலுக்கு ஒரு எதிர்கேள்வியே வந்தது அவளிடமிருந்து. “உனக்கு என்னை தோணுதுடா? நான் இந்த படம் பண்ணட்டுமா?”
“கண்டிப்பா பண்ணனும்னு தோணுது. லக்கி ஏஞ்சல் நம்மகிட்ட வந்து, கதவை தட்டுது. டோர் ஓபன் பண்ணு கண்ணம்மா… இல்லனா அப்புறம் நீ அது பின்னாடி ஓடிப் போக வேண்டி வரும்! ஏன் ரொம்ப யோசிக்கற??”
“இல்ல எனக்கு படம் தனியா பண்ண முடியுமா? அப்படியே பண்றேன்னு வைச்சிப்போம். குட்டீஸ் ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு எப்படி இருப்பாங்க? நான் ஒரு வயசு ஆனதும் போகலாம்னு இருந்தேன்.”
“இப்போ மட்டும் என்ன அவங்களுக்கு? அதை விட மூணே மூணு மாசம் தான் கம்மி. அவ்வளவு தான். இதுக்கேல்லாம் யோசிக்காதடி. எத்தனை பேர் குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதுமே வேலைக்கு போறாங்க தெரியுமா? அப்படியே ஏதாவதுனா நான் பார்த்துப்பேன். மீனம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க!”
[the_ad id=”6605″]
“அப்போ பண்ணலாம்னு சொல்றியா??”
“ஆமாம், மங்குனி ராணியாரே!”
“சரி நான் முதல்ல ஸ்கிரிப் படிக்கிறேன் அப்போ….”
“ஸ்கிரிப் எல்லாம் படிக்கலாம். இப்போ முதல்ல கண்ணம்மா என்னை கவனிக்கனும்!”
சிறிது சிறிதாக மாயாவை அவனின் ஆளுமைக்குள் கொண்டு வந்து, அவளின் சிந்ததை மயங்க வைத்தான் அவளின் காதலன். மறுநாளே ஒரே மூச்சில், திரைக்கதையை படித்துவிட்டு, அதை மறுப்பது தான் செய்யும் பெரும் தவறு என்று உணர்ந்து பிரித்வியிடம் சம்மதம் தெரிவித்தாள் மாயா.
ரவீந்திரனும் மிகவும் சந்தோஷப்பட்டார். கார்த்திக்கிடம் அதை வெளிப்படுத்தவும் செய்தார். “எத்தனையோ பேரை அஸிஸ்டென்டா வைச்சுருக்கேன். சில பேர பார்க்கும் போது தான் இவங்க நல்லா வருவாங்கனு எனக்கே தோணும். அப்படி தான் மாயாவும். மார்க் மை வொர்ட்ஸ், பெரிய ஆளா வருவா பாரு!!” கார்த்திக்கிற்கு இதை கேட்டு மோட்சமே அடைந்தது போலாகிற்று.
அடுத்த வாரமே ஒரு வளர்ந்து வரும் கதாநாயகன் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொள்ள, சில நாட்களிலேயே பூஜை போட்டனர் படத்திற்கு! முதல் நாள் ஷூட்டிங்கிற்கு மாயாவின் குடும்பம் மொத்தமும் ஆஜர்!! அதன் பின் வந்த நாட்களில், மாயா வெளியே இருக்க நேர்ந்தாலும், கார்த்திக் வீட்டிலிருந்தே வேலை பார்த்து குழந்தைகளை மீனம்மாவுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டான்.
மாயாவிற்கு முதல் படம் நன்றாக வர வேண்டும் என்ற உத்வேகம் வழிநடத்த, கடின உழைப்பை போட்டாள். பிரித்வியும் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததால், மாயாவும் தெளிவாக சிந்திக்க முடிந்தது…. விநாயகமும் கார்த்திக்கும் தான் அவளுக்கு குளுகோஸ், பூஸ்ட் உட்பட அனைத்து உற்சாக பானத்தையும் வழங்கினர்.
“மாயு, கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கனும், புரியுதா??”
“நீ ரொம்ப யோசிக்காத, பிரித்வி கேக்கறத சரியா எடுத்துக் கொடுத்தா போதும்!”
இருவரும் மாறி மாறி கூற, மாயா காதை அடைத்துக் கொண்டு ஓடுவாள். அப்படி இப்படியென மாதங்கள் ஓடியே போக, அகிரா – அகிலனின் முதல் வருட பிறந்தநாள் வந்தது. அகிரா தன் மழலை பேச்சால் சிறு சிறு சொற்கள் கூற ஆரம்பிதிருக்க, அகிலன் சுவரை பிடித்துக் கொண்டு சில அடி தூரம் நடக்கத் துவங்கி இருந்தான்.
[the_ad id=”6605″]
பிறந்தநாளை கோயம்பத்தூரில் கொண்டாடிவிட்டு, வீடு திரும்பியவர்களுக்கு சில நாட்களிலேயே நற்செய்தியாக படம் இன்னும் ஒரு மாதத்தில் வர இருப்பதாக தகவல் வந்தது, பிரித்வியிடமிருந்து! கூடவே, தயாரிப்பாளரும் இவளை அழைத்து மறுநாள் வந்து அவளின் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக் கொள்ளச் சொன்னார். சந்தோஷமாக மறுநாள் சென்றவளை வாழ்த்தி, “படம் நல்லா வந்திருக்குமா. உன்னோட வேலை ரொம்பவே பிடிச்சு இருந்துச்சு எனக்கு! புதுசா வர சினிமாட்டோகிராபருக்கு குடுக்குற அதே சம்பளம் தான் உனக்கும் குடுக்குறேன்.” என்று கூறி காசோலையை நீட்டினார்.
திறந்து பார்த்தால், அதில் ஐந்து லட்சம் மட்டுமே என எழுதியிருந்தது! தாமரையாக மலர்ந்த முகத்துடன் அவருக்கு நன்றி சொல்லி விடைப் பெற்றவள், காரில் தனக்காக காத்திருந்த கார்த்திக்கை கண்டதும் மகிழ்ச்சியின் மிகுதியில் கட்டிக் கொண்டாள்.