‘இத்தனை வயசுக்கப்புறம் அவளை நான் கல்யாணம் செய்துகிட்டது நிறைய பேருக்கு தப்பா தெரியலாம்.. அவளை கல்யாணம் செய்யவும்தான் நந்தினி என்னை அப்பான்னு ஏத்துக்கிட்டா.. யாருக்கும் தெரியாத பிறந்த பிள்ளைங்கிறதால யாருக்கும் தெரியாமையே போகட்டும்னு என் பொண்ணை அப்படியே விட்டுட முடியுமா..?” என்று குரல் கமறி..
‘ஒருகாலத்தில நான்தான் உலகம்னு நினைச்சிட்டிருந்தவ அமுதா.. எங்க கல்யாணத்துக்கப்புறம் எத்தனை கஷ்டப்பட்டாலும் என்னை மட்டும் பார்க்கவே கூடாதுன்னு ரொம்ப வீராப்பா இருந்துட்டா.. கடைசி காலத்திலயாவது என்னோட பாதுகாப்புல அவளை பார்த்துக்கனும்னு நினைச்சேன்.. இத்தனை நாளா நீதான் பாதுகாத்தியா..? தேவையான நேரத்தில கிடைக்காத பாதுகாப்பு.. எல்லாம் முடிஞ்சி இத்தனை வருசத்துக்கப்பபுறம் நீ யாருடா எனக்கு பாதுகாப்பளிக்கன்னு கேக்காம கேட்டுட்டா..” என்றார் பெருமையோடு.
‘உங்களைப்பத்தி தெரிஞ்சிருந்தும்.. அந்த நேரம் பாப்பா பாசம் எங்க கண்ணை மறச்சிருச்சி..” என்று சேகர் சமாதானத்திற்கு வரவும்.. நிம்மதியடைந்த ராஜன்..
தன் அத்தையிடம்.. ‘என்மேல நம்பிக்கைவச்சி உங்க கவலையை விடுங்கத்தை..” என்று உறுதியாய் சொல்ல..
‘உங்க மாப்பிள்ளை மேல நம்பிக்கை இல்லன்னாலும் அந்த அமுதாப் பொண்ணு மேல நம்பிக்கை வைங்கம்மா.. ’’ என்று சேகர் கிண்டல் கலந்த சிரிப்போடு சொல்ல.. சேகர் இயல்பானதில் மனமகிழ்ந்த ராஜனும் தேவியும் சிரிக்க.. மேலும் சற்று நேரம் உரையாடி உணவுண்டு.. வரும்போதிருந்த மனபாரம் சற்றே குறைந்தவர்களாய் லாவி மனோவை அழைத்துச்சென்றனர்.
அனைவரும் கிளம்பியிருக்க.. ‘அச்சோ.. மாமா முன்னாடியே புதுசு புதுசா என்ன இப்படி கையைப் பிடிச்சி இழுத்திட்டு வரிங்க..? சரசுவேற கிச்சன்லதான் இருந்தா..” என தேவி பதட்டப்பட..
இத்தனை வேதனையிலும் தன் குறைகளை களைந்து.. பிறந்த வீட்டினரிடம் தன்னை விட்டுக்கொடுக்காத மனைவியின் அன்பில் கரைந்த ராஜன்.. ‘அமுதா விசயத்தில எத்தனை காரணம் சொன்னாலும்.. உனக்கு நான் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்தான்.. அவபட்ட வேதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாத வேதனையை உனக்கும் கொடுத்திட்டேன்.. எல்லாம் சரியான மாதிரி இருந்தாலும்.. உங்க ரெண்டுபேரையும் நினைச்சா மனசு ரொம்ப வலிக்குது..’’ என்று மனைவியை அணைத்து..
‘என் மனசை உலுக்கிட்டிருந்த நீங்காத்துயரம் அமுதா.. உன்னை பணையம் வச்சி எனக்கு நிம்மதியை கொடுத்துருக்க..” என்று ராஜன் கண்கலங்க..
‘விடுங்க விடுங்க.. அதுதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல..? இனியாவது நிம்மதியா இருங்க..” என்று தன் கணவனை தேற்ற.. தன்னை தேற்ற முயற்ச்சிக்கும் மனைவியை ராஜன் பெருமையோடு பார்க்க..
கணவன் பார்வை புரிந்த தேவி.. ‘என்னோட சந்தோசத்துக்காகவும்.. அவங்களோட நிம்மதிக்காகவுமாவது முன்னமாதிரியே கம்பீரமா நீங்க இருக்கனும்.. சரிங்களா..?” என்று தன் கணவனின் மீசையை தன் விரல்கொண்டு மேலேத்திவிட..
‘என்மேல உனக்கு கோபமே வரலயா தேவி..?” இறங்கிய குரலில் கேட்க..
‘கோபம்தான..? இனி ஏது அமுதாக்காவை தொல்லை பண்ணிபாருங்க.. அப்போ தெரியும் என் கோபம்..” என்ற தேவியின் வார்த்தையில் உண்மையும் இருக்க..
‘அமுதாவைப் பார்த்துக்க என் மாப்பிள்ளை இருக்கான்.. இனிமே அவளைப்பத்தின கவலை எனக்கு வராது..” என்று நிம்மதியோடு சொன்னவர்..
‘எத்தனை ஜென்மமெடுத்தாலும் மாறன்கிட்ட பட்ட கடனை என்னால தீர்க்கவே முடியாது..” என்றார் பெருமையாக.
———————————————————-
‘இந்த வாசத்தை என்னால சகிச்சிக்க முடியல.. ஒரே குமட்டலா வருது.. கிப்ட் தரன்னு சொல்லிட்டு எதுக்கு இப்படி தொல்லை பண்ற..? “ என்று ஹாலில் இருந்தபடி கோபத்தோடே அடுத்தடுத்து என்னென்ன போட வேண்டும் என்று சமையலறையில் பிரியாணி செய்துகொண்டிருந்த மாறனை வசை பாடிக்கொண்டிருந்தாள் நந்தினி.
மகனுக்கு உதவி செய்துகொண்டிருந்த இராமனும்.. ‘ஏன் மாறா உங்கம்மாக்கு வேணும்னா கடையில கூட வாங்கியிருக்கலாமே.. எதுக்கு மருமகளை படுத்துற..?” என்று கடிய..
‘அவ்ளோதான் முடிஞ்சது..” என்று குக்கரை மூடிவைத்து வெளியே வந்து அரைமணிநேரம் வரை பேசிக்கொண்டிருந்தவன்.. அத்தை ஏன் இன்னும் வரல..? ஒரு போனடிச்சி பார்க்கலாம் என நினைக்க..
‘மாறா சாப்பிடலாமா..?” என்று சுமதி கேட்க..
‘உங்களோட சேர்ந்து சாப்பிட ஒருத்தர் வரப்போறாங்கம்மா.. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..” என்று தன் போனை எடுக்கவும்..
அமுதா உள்ளே வரவும்.. ‘அம்மும்மா.. என்ன அதிசயம்..? காலைலயே வந்திருக்கிங்க..? என்று அதிசயப்பட்டவள்.. பிறகுதான் பார்த்தாள் தன் அன்னை போட்டிருந்த புதிய கம்மலை.
‘வாவ்.. சூப்பர் அம்மும்மா.. இன்னைக்கென்ன அடுத்தடுத்து அதிசயம் நடக்குது..?” என்று மிகவும் சந்தோசித்தாள். அமுதா போட்டிருந்த கம்மலைப் பார்த்த மாறனும் சந்தோசப்பட்டு.. ‘ம்ம் போற போக்கைப்பார்த்தா என் அத்தை.. சீக்கிரமாவே சென்ட் பர்சன்ட் வின்னராகிடுவாங்களாட்டங்குது.. “ என்றவன்..
‘அம்மா பசிக்குதுன்னிங்கள்ல..? எல்லாம் எடுத்து வைங்க.. சாப்பிடலாம்..” என்றான் மாறன்.
‘மாறா.. சம்மந்தியை வச்சிக்கிட்டு எப்படி சாப்பிடறது..?” என்று சுமதி தடுமாற..
அமுதா சிரிக்க.. ‘அத்தையும்தான் சாப்பிடப்போறாங்க..” என்று மாறனும் சிரித்தபடியே சொல்லி.. ‘கை கழுவிட்டு வந்து உக்காருங்கத்தை..” என்று சொல்லி நந்தினியைப் பார்க்க..
‘நிஜம்மாவா அம்மும்மா..?” என்று ஆர்ப்பரித்தவள்.. ‘வாங்க.. வாங்க..” என்றாள் ஆர்வமாக.
அன்று ராஜன் பிரியாணி கொடுத்தபோது பழைய நினைவுகள் வலம் வந்ததைப்போல்.. இன்று எதுவும் அமுதாவிற்கு நியாபகத்திற்கு வரவில்லை.. மாறாக மாறனின் பாசமும் மகளின் ஆர்பரிப்பும்தான் கண்ணுக்கு தெரிந்தது. முகம் மலர மகளிடம் தன் புருவத்தை கெத்தாக உயர்த்தி காட்டியபடி ருசித்து சாப்பிட்ட அமுதாவிற்கு எத்தனை முயன்றும் ஓரளவிற்கு மேல் சாப்பிடமுடியாமல் போக.. தட்டில் போட்டதில் பாதிக்குமேல் மீதமிருக்க..
தன் அத்தையை புரிந்த மாறன்.. ‘சாப்பிட முடியலங்களா..?” என்று பாவமாய் கேட்க.. அமுதாவும் பாவமாய் தலையசைக்க.. ‘சரி எழுந்துக்கோங்க..” என்றான் சிரிப்போடு.
சந்தோசத்தோடு கட்டியணைத்தபடி தன் அன்னைக்கு கன்னத்து முத்தம் வைத்தவள்.. மாறனைப் பார்க்க.. ‘எப்படி என் கிப்ட்..?” என்று தன்னிரு கண்ணிமைத்து மைய்யலாய் கேட்டான் மனைவியிடம்.
‘ம்ம் செம்மையா இருக்கு..” என்று சந்தோசித்தவளுக்கு லேசாய் கண்கலங்கவும்..
‘அப்பா நீங்களும் அம்மாவும் சாப்பிடுங்க.. ராஜிக்கு இந்த வாசம் பிடிக்கலபோல.. முகம் சுழிக்கிறா.. நான் இதோ வந்திடறேன்..“ என்று அமுதாவிடமிருந்து தன்னவளை பிரித்து தன்னறைக்கு அழைத்துப்போக.. மாறனுக்கு முன்பாக கதவைத்தாழிட்ட நந்தினி இறுக அணைத்துக்கொண்டாள் கணவனை.
‘எப்புடீ…?” என்று மாறன் தனது மீசையை முறுக்க.. சந்தோசத்தில் கண்கலங்கியவள் உணர்ச்சிப்பெருக்கோடு எம்பி மாறனுக்கு லேசான இதழ்முத்தம் கொடுத்தாள்.
மனைவியின் கண்ணீரை துடைத்தவன்.. ‘இனிமே அத்தை நீ விரும்புறமாதிரி இருப்பாங்க..” என்றான் கனிவாக.
இவர்களின் சந்தோசத்தை நீட்டிக்க விடாமல்.. ‘மாறா..” என்ற சுமதியின் சத்தம் வெளியிலிருந்து பதட்டத்தோடு ஒலிக்க.. வேகமாய் வெளியேறி தன் அன்னையிடம் ஓட..
‘சோபிக்கு இடுப்பு வலிக்குதாம்.. பிரசவவலியாத்தான் இருக்கும் காரெடு…” என்று சுமதி அவசரப்படுத்த..
‘ராஜி நீ இரு.. நான் திரும்ப வந்து உன்னை கூட்டிட்டு போறேன்..” என்று தன் தந்தை தாயோடு சோபனாவை மருத்துவமணைக்கு அழைத்துச்சென்றான். அவர்களை தனது ஆக்டிவாவில் பின்தொடர்ந்தார் அமுதா.
மூன்று மணிநேர போராட்டத்திற்க்கு பிறகு சோபனா அழகான ஆண்குழந்தையை ஈன்றெடுக்க.. முதலில் முரளிக்கு தகவல் சொல்லி.. பிறகு ராஜனுக்கு அழைத்து சொன்னான் மாறன். தங்கையின் நலமறிந்தபின் தனது மருமகனை ரசித்து கண்ணில் நிரப்பியவன்..
‘சோபி.. நான்போய் ராஜியை கூட்டிட்டு வரேன்..” என்று கிளம்பினான்.
குழந்தை பெற்ற சோர்வில் சோபனா உறங்கிகொண்டிருக்க.. அரைமணி நேரத்தில் ராஜனும் தேவியும் மருத்துவமணைக்கு வந்திருந்தனர்.
‘எத்தனை வருசமாச்சி..? இப்படி குட்டி குழந்தையை தூக்கி..” என ஆர்ப்பரித்திருந்த அமுதாவைப் பார்த்த ராஜனும் தேவியும் அசந்துபோனார்கள். குழந்தையை கொஞ்சும்போது.. தானும் குழந்தையாய் மாறியிருந்த அமுதாவைப் பார்த்து பெரும் நிம்மதியானார் ராஜன்.
பிறகு ராஜனும் தேவியும் உள்ளே செல்ல.. குழந்தையை சோபனாவிடம் படுக்கவைத்தவர்.. அங்கு தனியே போடப்பட்டிருந்த சேரில் கால்மேல் கால்போட்டு சட்டமாய் அமர்ந்து அங்கிருந்த பத்திரிக்கையை எடுத்து புரட்ட..
அங்கே ஒரு பென்ச்சோடு இரண்டு சேர்கள் மட்டும் இருக்க.. அதில் ஒரு சேரில் அமுதா அமர்ந்திருக்க.. ராஜன் தேவி அமர்வதற்க்காக பென்ச்சில் அமர்ந்திருந்த ராமனும் சுமதியும் எழுந்து நிற்க்கவும்..
‘அண்ணா எதுக்கு இப்படி எழுந்து நிக்கிறிங்க..?” என ராமனிடம் கேட்டு.. ராஜனை முறைக்கப் பிடிக்காமல் தேவியை முறைத்துப்பார்க்க..
‘நீங்க உக்காருங்க அண்ணா..” என்று தேவி சிரிப்போடு சொல்ல..
‘இல்ல.. கொஞ்ச நேரம் வெளில இருக்கோம்..” என இருவரும் கிளம்ப..
அமுதாவிடம்.. ‘நல்லாயிருக்கிங்களாக்கா..?” என்றார் தேவி.
‘ம்ம்..” என்றார் நிமிர்ந்து பாராமல். தேவி அமுதாவிடமே நின்றிருக்க..
அமுதா.. ‘வந்த வேலையைப் பாரு தேவி..” என்றார் நிமிராமல் தன்மையாகவே.
‘வந்த வேலையைத்தான் பார்த்திட்டிருக்கேன்..” என்று தேவி சன்ன சிரிப்போடு முனுமுனுக்க..
‘குழந்தையைத்தான பார்க்க வந்த..? அப்புறம் எதுக்கு என்னையே பார்த்திட்டிருக்க..?” என அமுதா கடிய..
‘ம்ம்.. குழந்தைக்கும் உங்களுக்கும் ஒரு வித்யாசமும் தெரியல.. அதான் பார்த்திருக்கேன்..” என தேவி சொல்ல.. அமுதா முறைக்க..
‘மாறன் வாங்கிகொடுத்த கம்மல் உங்களுக்கு ரொம்ப அழகாயிருக்கு.. நான் உங்களை பார்க்கல.. என்மருமகன் வாங்கிகொடுத்த கம்மலைத்தான் பார்த்திட்டிருந்தேன்..” என்று சிலிர்த்தவராய் சோபனாவின் குழந்தையை கையிலேந்தினார்.
தேவியும் அமுதாவும் பேசுவதை வெளியிலிருந்து பார்த்திருந்த நந்தினி.. ஆரம்பத்திலிருந்து தன் அன்னை எத்தனை புறக்கணித்தாலும்… தன் அம்மா மீதான தேவியின் பாசத்தில் கண்கலங்கி நின்றாள்.