ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம்— 29
சோபனாவின் குழந்தைக்கு ஐந்துமாதம் முடிந்திருக்க.. ‘மாமா அடுத்த வாரத்தில சோபனாவை அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன்..” என்று போனில் முரளி சொல்ல..
‘நந்தினிக்கு அடுத்தவாரம் வளைகாப்பு பண்றாங்க தம்பி.. அது முடிந்ததும் கிளம்பிக்கலாம்.. வளைகாப்புக்கு சொல்ல வீட்டுக்கு மாறன் வருவான்.. அப்பாம்மா தங்கச்சி எல்லாரும் வந்திடுங்க..” என்றார் இராமு.
——————————————————————
லாவண்யா மதுரை மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருக்க.. ஒரு வாரம் விடுமுறை என்பதால் ஊருக்கு வந்திருந்தாள்.
அமுதா இன்ஸ்டியூட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்க.. யாரோ வருவதுபோல் தோன்றி திரும்பி பார்க்கவும்.. மாறனை கண்டதும்..
‘வாங்க தம்பி ..” என்றார் ஆனந்தமாய்..
மாறனின் பின்னோடு வந்த லாவண்யா.. தினமும் அமுதாவிடம் போனில் பேசினாலும்… உள்ளே கூப்பிடுவார்களா என்ற தயக்கத்தோடு வெளியிலேயே நின்றிருக்க..
லாவண்யாவை எதிர்பார்க்கவில்லை என்றாலும்.. சின்ன பெண்ணிடம் கோபத்தை காட்டப் பிடிக்காதவராய் வேறுவழியின்றி இயல்பான குரலில்.. ‘வா லாண்வயா..” என்றார்.
ஆசுவாசமானவளாய்… ‘நல்லா இருக்கிங்களா அமுதாம்மா..?” என சிரிப்போடு கேட்கவும்..
தானும் இயல்பாகி.. ‘ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.. ” என்று சிரிப்போடு சொல்ல.. உள்ளே வந்த லாவண்யா வீட்டின் புதிய தோற்றத்தில் லயித்திருந்தாள்.
அமுதாவின் வீட்டில்.. காலைவெயில் உள்ளே வராதபடி.. வீட்டிற்கு முன் ஒரு டாப் போன்று இறக்கி.. அட்டாச் பாத்ரூமோடு ஒரு பெரிய பெட்ரூமை கட்டியிருந்தான் மாறன்..
ரூமிற்குள் லாவண்யா நுழைந்ததும்.. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய மரக்கட்டில்.. ரூமின் இருபுறமும் இரண்டு பேர் அமரும் வகையில் இரண்டு சோபாக்கள்.. எல்.இ.டி தொலைக்காட்சி.. எ.சி. என அனைத்து நவீன வசதிகளோடும் பொலிவாய் காட்சியளித்தது அந்த அறை. லாவண்யா சந்தோசத்தோடு பார்த்திருக்க..
‘என்னதம்பி..? இரண்டுபேரும் அதிசயமா இந்தபக்கம் வந்திருக்கிங்க..?” என்றார்.
‘அத்தை உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்..” என்றான் தயக்கமாக.
‘என்னாச்சி தம்பி..? ஏன் டல்லா இருக்கிங்க..?..” என்று அமுதா பதட்டப்பட..
மீண்டும் மாறன் தயங்க.. ‘ப்ச் என்னன்னு சொல்லுங்க தம்பி..” என்று அமுதா பதற..
. ‘உங்க பொண்ணுக்கு வளைகாப்பாவது நான் பண்ணவான்னு ராஜய்யா கேக்குறார்…” என்றான் தயக்கத்தோடு.
‘இவ்ளோதானா..? நான் பயந்தே போய்ட்டேன்..” என்று ஆசுவாசமாகி.. ஐந்து நிமிட மௌனத்திற்க்குப் பிறகு.. ‘என்னை மட்டும் தொல்லை பண்ணாம இருந்தா போதும்… மத்தபடி நந்தினி விசயத்தில என்கிட்ட கேக்க ஒன்னுமில்ல.. நான் என்ன சொல்வனோன்னு இனி எப்பவும் யோசிக்க வேணாம்னு ராஜன்கிட்ட சொல்லிடுங்க..” என்றவர்..
‘எனக்கும் உங்ககிட்ட ஒன்னு வேணும்..” என்று சொல்ல.. மாறன் ஆர்வமாக அமுதாவைக் காண..
‘அங்க சென்னையில என்னை பாதுகாத்தாங்கள்ல..? இங்க ஒரு நளினி இருக்க மாதிரி அவ பேரும் நளினிதான்.. அவங்க குடும்பத்தையும் ஹவுஸ் ஓனரம்மா குடும்பத்தையும் நந்தினி வளைகாப்புக்கு இங்க வரவைக்கனும்.. நளினிக்கு இங்க வந்திட்டு போனா ரொம்ப செலவாகும்னு யோசிப்பா.. நான் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கமாட்டா.. இவ வரலன்னா நாம எப்படி தனியா வரதுன்னு ஓனரம்மாவும் வரமாட்டாங்க..
நளினிக்கு பணம் மட்டும் பிரச்சனையில்ல.. அவ பொண்ணுக்கு கல்யாணமாகி இப்போ ஒரு வருசமா வாழாம இருக்கா.. பொண்ணு மேல எந்த தப்புமில்ல.. அந்த பையன் திருநங்கைபோல.. அதை மறைச்சி கல்யாணம் செய்ததில்லாம அவன்குறை வெளில தெரியாம இருக்க ராகவியை ரொம்ப கொடுமை செய்தானாம்.. பாவம் சின்ன பொண்ணு இப்போதான பதினெட்டு வயசாகுது.. படிக்கட்டும்னு நான் எவ்ளவோ சொன்னேன்.. வசதியாவும் இருக்கான் ஆளும் நல்லாயிருக்கான்னு நம்பி ஏமாந்திட்டாங்க.. நளினி பொண்ணு எனக்கும் பொண்ணுமாதிரி..
யாருமில்லாம நான் தனியா தவிச்சப்ப.. நளினி எனக்கு ஆதரவளிச்சா.. இப்போ அவளுக்கும் அவ பொண்ணுக்கும் எதாவது செய்யனும்னு தோணுது தம்பி..” என்றார்.
‘இவ்ளோதான..? பார்த்துக்கலாம் விடுங்கத்தை.. இன்னைக்கே நம்ம குமாரை அனுப்பி எல்லாரையும் கார்லயே கூட்டிட்டு வரசொல்றேன்.. இங்க கொஞ்சநாள் அவங்க இருக்கட்டும்.. அவங்க பொண்ணுக்கு நாமே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம்..” என சந்தோசமாக சொல்ல..
‘இங்க ராஜனுக்கும் எனக்கும் நடந்த பிரச்சனை எதுவும் அவங்களுக்கு தெரிய வேணாம் தம்பி..” என்று தவிப்போடு சொல்ல..
மாறன் சம்மதமாய் தலையசைக்க .. அமுதாவின் முகமும் நிம்மதியைக் காட்டியது.
‘லாவி.. டைம் ஆகுது.. கிளம்பலாமா..?” என்ற மாறன் குரலுக்கு வெளியே வந்தவள்..
‘எதையும் ரசிக்க விட்றாதிங்க..” என்று கடுகடுத்து அமுதாவிடம் போய் அமர.. ‘இருங்க தம்பி டிபன் செய்றேன்.. இரண்டுபேரும் சாப்பிட்டுப் போவிங்க..” என்று அமுதா சொல்ல..
லாவண்யாவிடம் இயல்பாக நடந்துகொண்ட.. தன் அத்தையை பெருமையோடு பார்த்தவன்.. ‘ பரவாயில்லங்கத்தை.. கொஞ்சம் வேலை இருக்கு கிளம்பனும்…” என்று எழவும்..
அமுதாவிடம்.. ‘அமுதாம்மா.. இந்த கம்மல் உங்களுக்கு செம்மையா இருக்கு..” என சந்தோசித்து.. தன் படிப்பில் ஆரம்பித்து.. அரைமணி நேரம் வரை இன்னும் நிறைய சந்தோசமாய் பகிர்ந்து.. பிறகுதா ன் கிளம்பினாள் தன் மாமனோடு.
ராஜன் வீட்டிற்க்கு வந்த மாறன்.. வளைகாப்பிற்க்கு தன் அத்தை சம்மதித்ததை ராஜனிடம் சந்தோசத்தோடு சொல்லி கிளம்பினான்.
மாறன் கிளம்பிதும் லாவண்யா தன் அம்மாவிடம் அமுதாவின் புதிய வீட்டை ரசித்து சொல்லிக்கொண்டிருந்தாள்.. இதைக் கேட்டிருந்த ராஜன் மனதுக்குள் ஆயிரம் நன்றிகளை தெரிவித்தார் மாறனுக்கு.
———————————————-
வெகு விமர்சையாக அனைவரின் ஆசிர்வாதத்தோடும் ராஜநந்தினிக்கு வளைகாப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து நளினியின் குடும்பமும்.. அமுதா வசித்திருந்த வீட்டின் ஓனரும் வந்திருக்க.. மற்றவர்களைக் காட்டிலும் இவர்களை சிறப்பாக கவனித்தனர் ராஜனும் இளமாறனும்.
முன்பே அமுதாவை ரசிப்பவள்.. இன்று மல்லிகைப் பூவோடும் புதிய கம்மலோடும் தாலிக்கொடியோடு ஒரு டாலர்செயினும்.. அமுதாவிற்க்கு மிகவும் பிடித்த சிவப்பு கண்ணாடி வளவிகளோடும்.. முக்கியமாக சிரித்த முகத்தோடு இருக்கும் அமுதா.. லாவண்யாவிற்க்கு புதிதாய் தெரிய..
‘அமுதாம்மா நீங்க ரொம்ப அழகாயிருக்கிங்க..” என்று இதுவரை பத்துமுறைக்கு மேல் சொல்லியிருப்பாள்.
‘லாவி.. நீ இப்டியே சொல்லிட்டிரு.. நல்லா அடி வாங்கப்போற..” என இயல்பாக சிரிக்க.. பார்த்திருந்த மாறனும் ராஜனும்.. அமுதா மீதான மனபாரம் முற்றிலும் குறைந்தவராய் நிம்மதியானார்கள்.
மாறன் தன் மனைவியை ரசித்துக்கொண்டிருக்க.. லாவண்யா ஒரு நிகழ்வு பாக்கியில்லாமல் அனைத்தையும் படம் பிடித்துக் கொண்டிருந்தாள் தனது மொபைலில்..
‘லாவி..” என நந்தினி அழைக்க.. தன்னிடம் வந்த லாவண்யாவிடம்.. ‘நானெல்லாம் அழகாயில்லையா..? அம்மும்மாவை மட்டும் ரசிச்சிட்டேயிருக்க..?” என சந்தோசத்தோடு கேட்க..
‘நீங்க அழகாயில்லாமலா மாமா உங்களை மட்டுமே பார்த்திட்டிருக்கார்..?” என்று மாறனை வம்பிளுக்க..
‘ஓய்.. உங்கக்கா அழகாயிருக்கான்னு நான் அவளை பார்க்கல.. மாசமா இருக்காளேன்னு கொஞ்சம் கவனத்தோட இருக்கேன் அவ்ளோதான்..” என்று மாறன் சமாளிக்க..
‘சரி.. சரி.. நான் ஒத்துக்கிறேன்.. கவனத்தோட மட்டும்தான் நீங்க அக்காவை பார்க்கிறிங்க..“ என லாவண்யா சிரிக்க.. முறைக்க முயன்ற மாறனும் சிரிக்க..
‘அதுசரி மாமா.. நீங்க அக்காமேல கவனமா இருக்கிங்கனா அதுல ஒரு நியாம் இருக்கு.. இந்த குமார் ஏன் அந்த பொண்ணு மேல ரொம்ப நேரமா.. ரொம்ப ரொம்ப கவனமா இருக்காரு…?” என நளினி பொண்ணை பார்த்துக்கொண்டிருந்த குமாரை சுட்டிக்காட்டி பெரும் சத்தமெடுத்து லாவண்யா சிரிக்க..
குமாரை கவனித்த மாறனும் ஆச்சர்யப்பட்டவனாய்.. ‘டாக்டரம்மா.. உங்க பார்வையில எதுவும் தப்பாதுபோல..“ என்றவன்..
குமாரிடம் விபரம் கேட்க.. ‘ராகவியை எனக்கு பிடிச்சிருக்கு மாறண்ணா… அவளைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்துக்கப்போறதில்ல.. ” என்று உறுதியோடு குமார் சொல்ல..
குமார் சொன்னதை மாறன் அமுதாவிடம் சொல்ல.. ‘ராகவியைப் பத்தின உண்மை தெரிஞ்சாலும் குமார் கல்யாணம் செய்துக்குவானான்னு முதல்ல தெரிஞ்சிக்கலாம்..” என அமுதா சொல்ல..
ராஜய்யா என சொல்ல வந்தவன்.. ‘நான் சொன்னா குமார் கேட்பான்..” என்று மாறன் சொல்ல..
மாறனை முறைத்த அமுதா.. ‘யார் யார்கிட்ட சொல்லி என்னென்ன செய்விங்கன்னு எனக்கும் தெரியும்.. இந்த கல்யாணம் அப்படி நடக்கக்கூடாது.. ராகவியோட முதல் கல்யாண விசயம் தெரிஞ்சி.. குமார் முழுமனசோட அவளை ஏத்துக்கிறானான்னு எனக்கு தெரியனும்..” என்று அமுதா சொல்ல..
‘அவ்ளோதானங்கத்தை.. பங்சன் முடியட்டும்.. குமாரை கூப்ட்டு உங்க முன்னாடியே விசாரிச்சிடறேன்..” என்று மாறன் சொல்ல.. சம்மதமாய் தலையசைத்தார் அமுதா.
அங்கே நளினியும்.. அமுதாவின் சென்னை வீட்டு ஓனரும் தேவியிடம் மனதாற நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
‘இந்த ஒருவாரமா அமுதா உங்களைப்பத்திதான் அதிகம் பேசினா.. மேன்மக்கள் மேன்மக்கள்தாங்கிறதை நீங்க நிரூபிச்சிட்டிங்க.. உங்க இடத்தில வேறயாராவது இருந்திருந்தா என்னவாகியிருக்குமோ..?” என்று நளினி தேவியைப் பாராட்ட..
பரவால்லையே என்னைப் பத்தில்லாம் கூட நினைக்கிறாங்களா.. ? அதுவும் நல்ல விதமாவா.. என ஆச்சர்யப்பட்டு.. ‘ஒன்னும் ஆகியிருக்காதுங்க.. போடா சரிதான்னு போய்ட்டேயிருந்திருப்பாங்க..” என்றார் பெருமையாகவே.
‘அமுதாவை இப்படி மங்களகரமா பார்ப்போம்னு நாங்க நெனச்சே பார்க்கல கண்ணு.. ஒரு சின்ன ரோசாப்பூ கூட வைக்கமாட்டா.. அவளுக்கு புடிக்காதது எதாவது சொல்லிட்டா போதும் உர்ர்ருன்னு மூஞ்சிய தூக்கி வச்சிக்குவா.. இவ்ளோ ஏன்..? அப்பாம்மா இல்லாத சின்னபுள்ளைய இப்படி தவிக்கவிட்டுட்டானே.. விவாகரத்து வாங்கின புருசன்தானன்னு எதாவது சொல்லிட்டா போதும்.. ஒருமாசமே ஆனாலும் எங்க மூஞ்சிலயே முழிக்கமாட்டா.. மானங்கெட்டுபோய் நாங்களாத்தான் போய் பேசுவோம்..” என்றார் அமுதாவின் பழைய வீட்டு ஓனர்.
இவர்கள் பேசுவதற்கு திட்டத்தான் அமுதா தங்களை நோக்கி வருகிறாள் என்றுணர்ந்த ராஜன்.. மாறனிடம் சென்று நின்றுகொண்டார்.. ஆம் அமுதாவின் நிம்மதி கருதி இப்பொழுதெல்லாம் அமுதாவை எந்த விதத்திலும் ராஜன் தொல்லை செய்வதில்லை
இவர்களிம் வந்த அமுதா.. ‘உங்களை பழசு பேசக்கூடாதுன்னு சொன்னேன்தான..?” என முறைக்க..
‘நாங்க எந்த பழசை பேசிட்டிருக்கோம்..? இப்படி அழகா இருக்கிற புது அமுதாவைப்பத்திதான் பேசிட்டிருந்தோம்.. ஆமாதான கண்ணு..?” என்று தேவியிடம் ஓனர் பெண்மணி கேட்க.. ஆமாம் என்பதாய் தேவியும் தலையசைத்தார்.
சோபனா.. நிவேதா.. கிசோர்.. முரளி.. என இவர்களின் அரட்டை ஒருபுறம் போய்கொண்டிருக்க.. மாறனின் மயிலம்மாவோடும்.. சோபனாவின் ஐந்துமாதக் குழந்தையோடும் மனோஜ் விளையாடிக்கொண்டிருக்க..
தான் பெரிதாய் மதிக்கும் சின்னைய்யா.. அவரின் குடும்பத்தோடு தம்வீட்டில் நெருங்கிய சொந்தமாய் கலந்திருக்க.. அது தந்த பெருமையில் இராமனும் சுமதியும் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.
————————–
ராகவி குமார் திருமணம் உறுதி செய்யப்பட.. ராகவி தனக்கு மகள் போலவென்றும் குமாரிடம் அதிகாரம் செய்வதுபோல் ராகவியிடம் எதுவும் கூடாதென்றும் மாறனிடம் அமுதா ஸ்ட்ரிடிக்டாக சொல்லியிருந்தார்.
அமுதா சொன்னதை மாறன் ராஜனிடம் சொல்ல.. ‘ரொம்ப வருசத்துக்கப்புறம் என் அமுதா என்கிட்ட ஒன்னை எதிர்பார்க்கிறா.. அதை கூட நிறைவேத்தலனா எப்படி..?” என்று ராஜன் பெருமையோடு சொல்ல..
‘அவங்க உங்க அமுதா இல்ல.. என் அத்தை..” என்று மாறன் உண்மைக் கோபத்தோடும் உரிமையோடும் குரலுயர்த்த.. மாறனின் கோபத்தில் பெருமையடைந்த ராஜன்..
‘உன் கோபம் நியாமானதுதான் மாறா..” என விட்டுக்கொடுத்தவர்.. ‘அமுதா விசய த்தில நீ கோபப்படுற அளவுக்கு இனி நடந்துக்கமாட்டேன்..” என்று உறுதியளித்து..
‘ராகவியோட அம்மா.. அமுதாவை நான் கைவிட்ட நேரத்தில அவளுக்கு கைகொடுத்திருக்காங்க.. அந்த நளினிப்பொண்ணு எனக்கு தெய்வம் மாதிரி..” என்று கண்கலங்கி..
‘ராகவியைப் பத்தி கவலைப்பட வேணாம்னு உன் அத்தைக்கிட்ட சொல்லிடு..” என்றார்.
அடுத்து வந்த மாதத்தில்.. குமார் ராகவி திருமணமும் இனிதே நடந்து முடிந்திட..
‘நான் ரொம்ப ரொம்ப சந்தோசத்தில இருக்கேன் தம்பி.. எல்லாம் உங்களாலதான்..” என்று தன்னை மறந்து உணர்ச்சிப்பெருக்கோடு அமுதா சொல்ல..
மாறன் ஆச்சர்யத்தோடு அமுதாவைப் பார்க்க.. ‘காலமறிஞ்சி நளனி எனக்கு செய்த உதவிக்கு நான் ரொம்ப கடன்பட்டிருந்தேன்.. இப்போ குமாருக்கு வீடும் கட்டிகொடுத்து.. ராகவிக்கும் நீங்களே நகைபோட்டு.. அதுவும் நளினி தப்பா நினைச்சிக்குவான்னு நகையும் குமாரே போட்டமாதிரி நகையை அவன்கையில கொடுத்து கல்யாணமும் செய்துவச்சி.. என் கடனை நீங்க போக்கிட்டிங்க..” என்றார் சந்தோசத்தோடு.
‘அத்தை நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக்கூடாது.. நகைமட்டும்தான் நான் கொடுத்தேன்.. அதுக்கும் பணம் நான் தரல.. ராஜியோட சம்பளப் பணத்திலயிருந்து அப்பா கொடுத்தார்… கல்யாண செலவும் ராஜய்யாதான் செய்தார்.. வீடும் ராஜய்யாதான் கட்டி கொடுத்தார்..” என்று சொல்ல.. அமுதா முறைக்க..
‘ராகவின்னு இல்லங்கத்தை.. குமார் வேற யாரைக் கல்யாணம் செய்துகிட்டாலும் ராஜய்யா இதை செய்திருப்பார்.. நீங்க எப்படி ராகவியை நினைக்கிறிங்களோ.. அதுபோலத்தான் குமாரை ராஜய்யா நினைக்கிறார்.. குழந்தையில இருந்து குமார் அவங்க வீட்லதான் வளர்ந்தான்.. உங்களுக்காக அவர் செய்யில.. குமாருக்காகத்தான் செய்தார்..” என்று மாறன் விளக்க.. தானும் சமாதானம் ஆனார்.
தன் அத்தையை ஆழ்ந்து பார்த்தவன்… ‘உண்மையா நீங்க சந்தோசமா இருக்கிங்களாத்தை..? என்றான் ஆவலாக.
‘ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்கேன் தம்பி.. எங்கையோ அநாதை பொணமா செத்திருக்க வேண்டியவ.. இனி அப்படியில்ல இல்ல.?” என்றார் உணர்ச்சிப்பெருக..
‘ப்ச் என்ன பேச்சத்தை இது..?” என்று மாறன் கடிய..
‘எனக்கொரு தம்பி இருந்தாக்கூட இப்படியெல்லாம் என்னை பார்த்திருப்பானோ என்னவோ…? எனக்கு பிடிச்சதை சாப்பிட வச்சி.. எனக்குன்னு எல்லாமும் பார்த்து பார்த்து செய்து.. உங்க உடன்பிறப்பாட்டம் என்னை பாதுகாக்கிறிங்க..” என்று தன்னை மறந்து பேசினார் நிறைந்த அன்போடு.
பாலைவனத்தில் நடந்த நாட்களெல்லாம் முடிந்திருக்க.. பழைய வேதனைகளை அனைத்தும் துறந்து.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமுதாவின் நாட்கள் இனிதான ஒரு துவக்கத்தோடு அழகாய் நகர..
தன் கணவனை அறவே புறக்கணித்த அமுதாவாலும்.. அமுதாவிடமிருந்து முழுதாய் விலகியிருந்த தன் கணவனாலும் தேவியின் நாட்களும் முன்புபோல் மீண்டும் மலர..
தமது வாழ்வில் நீங்காத்துயரமாய் மனதை அழுத்தியிருந்த அமுதாவின் நினைவு தற்போது நிம்மதியாய் மாறியிருக்க..
மனைவிக்கு எத்தனை பெரிய துரோகம் இழைத்தும்.. தன் குறைகளை களைந்து.. தன் நிம்மதிக்காகவும் சந்தோசத்திற்க்காகவும் எதையும் செய்யத்துணியும் தேவியின் துணை ராஜனை நிமிர்ந்தெழச்செய்ய..
எல்லாம் மாறனால்தான் என்றுணர்ந்தவராய்.. மாறனின் நட்பு கடவுள் தமக்களித்த வரமென்று நினைத்த ராஜனின் நாட்களும் நிம்மதியோடு நகர ஆரம்பித்தது.
—————————————————————————-
புதன் மதியத்திலிருந்து வியாழன் அதிகாலைவரை பிரசவவலியை அனுபவித்து.. ஒருவழியாக தேவதையை ஈன்றெடுத்த ராஜநந்தினி மயக்கத்தில் இருக்க.. தாய்சேய் நலமாக உள்ளனர் என்ற செய்தி அறிந்த பிறகே நிம்மதிப் பெருமூச்சோடு அங்கிருந்த சேரில் அமர்ந்தான் இளமாறன்.
முதல் வேலையாக ராஜனுக்கு அழைத்து தான் அப்பாவான சந்தோச செய்தியை மாறன் சொன்னதும்.. அடித்து பிடித்து கிளம்பினார் ராஜன்.
இரவுமுழுதும் தூக்கமின்மை காரணமாக ராமனும் சுமதியும் வெளியில் இருந்த சேரில் அமர்ந்தபடியே உறங்கியிருந்தனர்.. குழந்தையை பார்த்தபின்.. மாறனின் தவிப்பறிந்து அமுதா வெளியேற..
துவண்டுபோனவளாய் தூங்கிக்கொண்டிருந்த மனைவிக்கு ஆனந்த கண்ணீரோடு அத்தனை நெற்றிமுத்தம் வைத்தான் இளமாறன். நந்தினியின் தலையை கோதியபடியே.. பிறகுதான் தன் குழந்தையை ஆசையாய் பார்த்திருந்தான்.
தேவியாடு மருத்துவமணை வந்த ராஜன்.. ஆனந்த பெருக்கோடு உள்ளே செல்ல…
‘ராஜய்யா.. பார்த்திங்களா என் வைரத்தை..” என சந்தோசித்தான் பெருமையாக. அத்தனை அழகையும் மொத்தமாய் சேர்த்து விக்ரகமாய் ஜொலித்தது இளமாறனின் இளவரசி..
மகளின் நலம் விசாரித்து.. பேத்தியை பார்த்திருந்த ராஜனின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக.. ‘மாறா அப்டியே அமுதாவைப்போலவே இருக்காள்ல..?” என்றார் பூரிப்போடு.
‘ஆமாம் ராஜய்யா.. நல்லவேளை உங்க பொண்ணுபோல இல்ல.. என் அத்தையைப் போல இருக்கிறதாலதான் என் இளவரசி செம்ம அழகாயிருக்கா..” என சொல்ல..
மாறனை செல்லமாய் முறைத்த ராஜன்.. ‘நீயாவது நைட் சொல்லியிருக்கலாம்ல மாறா..?” என கோபிக்க..
‘ராஜய்யா.. ராஜி பட்ட வேதனையை என்னாலயே கண்ல பார்க்க முடியல.. நீங்க வந்து நைட்டெல்லாம் முழிச்சிருந்திங்கனா உங்களுக்குதான் ரொம்ப சிரமம் ஆகியிருக்கும்.. ஆனாலும் நடு ராத்திரியா இருந்தாலும் குழந்தை பிறந்த அடுத்த செகன்டே உங்களுக்கு கால் பண்ணலாம்னுதான் இருந்தேன்.. ஆனா என் மகள் என் பொண்டாட்டியை ரொம்ப படுத்திட்டா.. இப்போ அரை மணிநேரத்துக்கு முன்னதான் பிறந்தா.. உங்களுக்கு போன் செய்திட்டுதான் ராஜியைப் பார்க்க உள்ள வந்தேன்..” என விளக்கமளித்துகொண்டிருக்க..
அமுதா கடந்தகால வேதனையை மறந்திருந்தாலும்.. ராஜனின் மனம் இன்னமும் சிலநேரம் அமுதா கடந்துவந்த துன்பங்களை நினைத்து வேதனையடைவது உண்மையே.. இதோ சற்று முன்கூட தன் மகள் தன்பேத்தியை ஈன்றிருக்க.. மகளை சுற்றி இத்தனைப்பேர் உள்ளோம்.. முக்கியமாக கணவனாக மாறன் அருகிலிருக்கிறான்.. ஆனால் தன் மகளை அமுதா ஈன்றபோது.. என நினைத்து யாருமறியாமல் உள்ளுக்குள் கலங்கித்தான் போனார்.
இப்படி ராஜன் கலங்கும்போதெல்லாம் தேவியின் நினைவே ராஜனைத் தேற்றும்.. தனக்காகத்தானே.. தன் நிம்மதிக்காகத்தானே இத்தனை வேதனையை தேவியும் கடந்து வந்திருக்கிறாள்.. தேவிக்காக இனி பழைய கசப்புகளை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.. என தனக்குத்தானே தேற்றிக்கொள்வார் தன் மனதினை.