ஷ்ரவன் நட்சத்திராவிடம், “ஸ்டார் நீ எப்படி இங்க…? சூர்யாவை வேற மாமான்னு கூப்பிடுற…” என்றான் அதிர்ச்சி விலகாமல்.
சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஷ்ரவன் சூர்யாவிடம், “மச்சான் என்னடா இது..? நீ கூட ஸ்டாரை உனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லலை. அவ உனக்கு ரிலேஷனா…” என்று கேட்டான். மீண்டும் அமைதி இருவருமே எதுவும் பேசவில்லை.
ஷ்ரவனின் பொறுமை காற்றில் பறந்தது. “இப்ப ரெண்டு பேரும் பதில் சொல்லப் போறீங்களா? இல்லையா?” என்றான் கோபமாக.
சூர்யா இதற்கு மேலும் மறைக்க முடியாது என நினைத்தவன் நட்சத்திரா ஹரிஷிடம் கூறிய பொய்யை அச்சு பிசகாமல் அவனிடம் கூறினான். இதைக் கேட்டதும் ஷ்ரவனின் முகம் இருண்டு விட்டது.
நட்சத்திரா ஏதோ சொல்ல வர ஷ்ரவன், “ஸ்டார் நீ ஏதும் சமாதானம் சொல்ல வேண்டாம். என்கிட்ட இத்தன நாளா உண்மையை மறைச்சுட்டல. நீ முதல்லே எல்லாத்தையும் சொல்லி இருந்தால் நான் என் மனசில் ஆசை வளர்த்து இருக்க மாட்டேன்” என்றவனின் கண்கள் கலங்கியது.
நட்சத்திராவிற்கும் சூர்யாவிற்கும் ஷ்ரவன் பேச்சை கேட்டு மனது பாரம் ஆகியது குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
தங்கள் விளையாட்டாய் செய்த தவறு ஒருவனை இவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்று இருவரும் வருந்தினர். இருவருக்கும் ஷ்ரவனை தேற்றும் வழி தெரியவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக கழிய கதவைத் திறந்து கொண்டு ஹரிஷ் உள்ளே நுழைந்தான்.
ஹரிஷ் மூவரையும் பார்த்து விட்டு “என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க என்றவன் சூர்யாவிடம் மச்சி என்ன ஆச்சு?” என்றான்.
சூர்யா நடந்தவற்றை ஹரிஷிடம் கூறினான் . இதைக்கேட்டு ஹரிஷ் அதிர்ச்சி அடைவான் என நினைத்தால் அவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
சூர்யாவும் நட்சத்திராவும் என்னடா இது நாம இவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம் இவன் பைத்தியம் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான் என்ற ரீதியில் அவனை பார்த்தனர்.
சூர்யா ஹரிஷிடம், “டேய் இப்ப எதுக்கு டா லூசு மாதிரி சிரிச்சு இருக்க….”
ஹரிஷ், “யாரு லூசு நானா…? நீங்க ரெண்டு பேரும்தான் லூசு. அவனுக்கு எப்பயோ உண்மை தெரிஞ்சிடுச்சு. அவன் உங்களை கலாய்ச்சுட்டு இருக்கான்” என்றான். இதைக் கேட்டதும் நட்சத்திராவும் சூர்யாவும் ஷ்ரவனை பார்க்க அவன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
சூர்யாவும் நட்சத்திராவும் அவனை முறைக்க அவன், “எப்படி என்னோட ஆக்டிங், நல்லா ஏமாந்துட்டிங்களா?” என்றான்.
சூர்யாவும் நட்சத்திராவும்
கொலைவெறியோடு அவனைத் துரத்த ஷ்ரவன் “காப்பாத்துங்க கொலை கொலை” என கத்திக் கொண்டு அந்த வீட்டிற்குள்ளேயே ஓடினான். ஹரிஷ் இதைப்பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். நட்சத்திராவும் சூர்யாவும் அவனை கோபம் தீரும் மட்டும் அடித்து ஓய்ந்த நேரம் ஷ்ரவன் “அடிச்சு முடிச்சிட்டீங்களா… எனக்கு பசிக்குது ஏதாவது சாப்பிட கொண்டு வாங்க” என்றான் எதுவும் நடக்காதது போல.
அவன் கேட்ட விதத்தில் இருவரும் சிரித்து விட்டனர். நட்சத்திரா காபி போட்டு கொண்டு வந்தாள். சூர்யா, “மச்சான் எப்ப டா அவன் கிட்ட உண்மைய சொன்ன..”
ஹரிஷ், “அது ஷ்ரவன் முதல் தடவை நட்சத்திராவைப் பார்த்தேன் என்று சொன்னானே அப்பவே எனக்கு தோணுச்சு உண்மையை சொல்ல வேண்டும் என்று. இதனால நம்ம பிரெண்ட்ஷிப் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோன்னு நான் அவன் கிட்ட சொல்றதுக்கு ஒரு நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்து இருந்தேன். அன்னைக்கு ஒரு நாள் நீயும் தங்கச்சியும் சேர்ந்து போறதை பார்த்துட்டு என் கிட்ட கேட்டான். நான் உண்மையை சொல்லிட்டேன். அப்ப கொஞ்சம் வருத்தப்பட்டான்” என்றான்.
ஷ்ரவன் மீதிய நான் சொல்றேன், “அப்புறம் என் மனசை மாத்திக்கிட்டு நான் நட்சத்திராவை நல்ல ஃப்ரண்டா ஏத்துக்கிட்டேன். நீங்க உண்மைய சொல்ற வரைக்கும் நான் ஏதும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது என்று எப்பவும் போலயே நடிச்சுட்டு இருந்தேன்.
நீங்க உண்மையா சொல்ற மாதிரி தெரியலை. எனக்கு உன்கிட்ட நடிச்சு நடிச்சு போரடிச்சு போச்சு . அதான் உங்களை கொஞ்சம் கதற விடலாம் என்று வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டேன்” என்றான்..
இதைக் கேட்டதும் சூர்யா அவனிடம் “மச்சான் நாங்க ரெண்டு பேரும் உன் மனதை காயப்படுத்தி இருந்தா சாரிடா” என்றான். ஷ்ரவன், “சே சே அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் தான் உன் கிட்ட சாரி கேட்கனும். உன் மனைவிய லவ் பண்றேன்னு உன்கிட்டயே சொன்னேன். என்ன மன்னிச்சுடுடா” என்றான்.
சூர்யா, “இல்லடா நான் தான் முதலிலேயே உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்கணும்” என்றான்.
ஹரிஷ் “டேய் போதும்டா நீங்க ஃபீல் பண்ணுறது. என்னால பார்க்க முடியலடா” என்றான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே நட்சத்திரா சமைத்துக் கொண்டிருந்தாள். நட்சத்திரா சமைத்து முடித்ததும் அனைவரும் சாப்பிட்டனர். பின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச பொழுது இனிமையாக கழிந்தது.
விடுமுறை நாட்களை ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற இடங்களான விக்டோரியா நூலகம், விக்டோரியா மார்க்கெட், ராயல் பொட்டானிக்கல் கார்டன் சென்று சுற்றிப்பார்த்து இன்பமாகக் கழித்தனர்.