மூன்று நாட்கள் கழித்து அன்றுதான் ஜாமினில் வெளியே வந்திருந்தார் பழையம்பெருமாள். சரவணப்பெருமாள் கூடவே இருந்து தந்தையை வீட்டிற்கு அழைத்து வர, வீட்டின் வாசலில் நின்றிருந்தார் அன்னலட்சுமி. கணவரைக் கண்டவர் வேகமாக அவரை நெருங்க, அன்னத்தை கொஞ்சமும் மதிக்காமல் விறுவிறுவென உள்ளே நடந்தார் பழையம்பெருமாள்.
உள்ளே நுழைந்து நேரே தன்னறைக்குச் சென்றவர் குளித்து முடித்தபிறகே வெளியே வர, அதுவரையிலும் அவருக்காக அறையில் காத்திருந்தார் அவர் மனைவி.
பழையம் குளித்து வெளியே வர, “சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமாங்க..” என்று அன்னலட்சுமி கேட்க
“என்ன அன்னம்.. ஜெயில்ல களி தின்னுட்டு வந்திருக்கேன்னு சொல்லாம சொல்றியா..” என்று குதர்க்கமாக கேட்டார் அந்த பெரிய மனிதர்.
“ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க. நீங்க இல்லாம நான் மட்டும் நிம்மதியாவா இருந்தேன்??”
“ஏன் உன் நிம்மதிக்கு என்ன குறை. உன் மகன் காதலுக்கு இருந்த ஒரே எதிரி நாந்தான். நான் உள்ளேப் போனதும் உன் புள்ளையோட காதல் நிறைவேறிடும்ன்னு கனவு கண்டு இருப்பியே.. என்கிட்டேயே அவனை வாழ விடுங்களேன்னு அவனுக்கு வக்காலத்து வாங்கினவ தானே நீ..”
“அவன் மேல இருக்க பாசத்துல உங்ககிட்ட பேசுனதெல்லாம் சரிதான். அதுக்காக நீங்க உள்ளே இருக்கணும்னு நினைப்பேனாங்க..” என்று அன்னலட்சுமி எடுத்துச் சொல்லியும் வாய் அடங்கவில்லை பழையம்பெருமாளுக்கு.
“நீ நினைப்படி.. உனக்கு கட்டிக்கிட்ட புருஷனை விட, விட்டுட்டுப் போன புள்ள மேல தான் பாசம் அதிகம்ன்னு எனக்கு தெரியும். ஆனா, இனி நீ இந்த வீட்ல இருக்கனும்ன்னு நினைச்சா, உன் மகனை தலை முழுகிடு.. உனக்கு ரெண்டாவதா ஒருத்தன் பிறக்கவே இல்லன்னு நினைச்சுக்கோ..” என்று அவர் கத்தி முடிக்க
“இப்போ மட்டும் என்ன என் மகனோட ஒட்டி உறவாடிட்டா இருக்கேன். உங்களுக்கும், உங்க சாதித்திமிருக்கும் ஏத்துக்கிட்டு அந்த பொண்ணுகிட்ட பேசப்போய் தான், என்னை மொத்தமா ஒதுக்கி வச்சிருக்கானே. நான் அவனைத் தலை முழுக வேண்டாம். அவன் என்னைக்கோ நம்மை தலை முழுகிட்டான்.”
“உங்களுக்கு உங்க பிள்ளையை விடவும் உங்க சாதிதான் முக்கியம். உங்களோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேனே எனக்கு அது தெரியாமப் போகுமா. அப்படியிருக்க போய்தானே என் பிள்ளை வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரில கிடந்ததைக் கூட என்கிட்டே சொல்லாம மறைச்சுட்டிங்க..”
“யாருக்குத் தெரியும். நீங்களே அவனை வெட்டச் சொல்லி ஆள் அனுப்பி வச்சீங்களோ என்னவோ…”என்று கண்களைத் துடைத்துக் கொண்டவர் “ஆனா, ஒரு விஷயம் எப்பவும் நினைப்புல வச்சுக்கோங்க. என் புள்ளைக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு. என்னை உயிரோடப் பார்க்க முடியாது நீங்க…”
“உங்களுக்கு வேணும்ன்னா உங்க பேச்சைக் கேட்டு ஆடுற மூத்தவன் பெருசா இருக்கலாம். எனக்கு என் மகன் தான் பெருசு. உங்க சாதிவெறிக்கு அவனைக் கழுவேத்த நினைச்சீங்க, நான் மனுஷியா இருக்கமாட்டேன்..” என்று பழையம்பெருமாளுக்கு கொஞ்சமும் குறையாமல் சத்தமிட்டார் அன்னலட்சுமி.
இதற்குள் “ம்மா.. அவரே இன்னிக்குதான் வீட்டுக்கு வந்திருக்காரு. வந்த உடனே அவர்கிட்ட கத்திட்டு கிடப்பியா. உனக்கு உன் பிள்ளையைத் தவிர வேற யாரைப் பத்தியும் அக்கறையே இருக்காதாம்மா..” என்று கேட்டுக்கொண்டே சரவணன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
“அக்கறையைப் பத்தி நீயெல்லாம் பேசறியா. கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டி, நீ பெத்த உன் மக இப்படி எல்லார் மேலேயும் நீ ரொம்ப அக்கறையா இருக்கே இல்ல. அதுதான் நீ என்னை குறை சொல்ல வந்துட்ட போல.” என்று சரிக்கு சரியாக நின்றார் அன்னலட்சுமி.
பழையம்பெருமாள் என்றும் இல்லாமல் இன்று இத்தனைப் பேசும் தன் மனைவியை அதிர்ச்சியாகப் பார்த்தார் என்றால், சரவணப்பெருமாள் தாயைக் குரோதத்துடன் முறைத்து நின்றான்.
“என் பொண்டாட்டி, புள்ள மேல அக்கறையில்லாம என்ன பண்ணிட்டேன்.. உங்க அண்ணன் பொண்ணுக்கு தான் புருஷனோட சேர்ந்து வாழ அக்கறையில்ல. அதுதான் புருஷன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்னன்னு அப்பன் வீட்ல போய் உட்கார்ந்திருக்கா..” என்று சரவணன் அழுத்தமாக மனைவியைப் பற்றி தாயிடம் குறை கூற, பொங்கி எழுந்தார் அன்னலட்சுமி.
“ஆமாண்டா.. நீ தெருவுக்கு ஒருத்தியோட கூத்தடிச்சுட்டு, ராவெல்லாம் தெருப் பொறுக்கிட்டு கிடப்ப… அவ உனக்காக காத்துகிட்டு இருக்கணுமா.. அவளைக் குறை சொல்ல உனக்கு என்னடா யோக்கியதை இருக்கு..” என்று அன்னலட்சுமி கேட்க, மகன் பதில் கூறும் முன்பே, தன் மனைவியை கைநீட்டி அடித்து விட்டிருந்தார் பழையம்பெருமாள்.
அன்னலட்சுமி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் தன் கணவரைப் பார்க்க, “என்னடி மூணுநாள் நான் வீட்ல இல்லாமப் போகவும், உனக்கு மீசை முளைக்குதா.. பெத்த புள்ளைகிட்ட என்ன பேசணும்னு விவஸ்தை இல்லாம பேசுவியா..” என அவர் தன் மனைவியை மீண்டும் அதட்ட, அவரை வெறுமையுடன் பார்த்து நின்றார் அன்னலட்சுமி.
பழையம்பெருமாள் அத்துடன் அடங்காமல், “ஆம்பளைப்பிள்ளையை தானே பெத்திருக்க. அவன் எத்தனைப் பேரோட போனா உனக்கென்னடி. உன் அண்ணன் மக சாவிக் கொடுத்து அனுப்பினாளா.. இப்படியெல்லாம் பேசுன்னு.. கொன்னுப் புதைச்சுட்டு போய்டுவேன்.. ஆக்கிப் போடறதோட நிறுத்திக்கோ, இந்த அதிகாரமெல்லாம் வேணாம்.. போடி வெளியே..” என்று ஒரேடியாக விரட்டினார் தன் மனைவியை.
அந்த நிமிடம் அவருக்கு பேய்தான் பிடித்திருந்தது போல. இல்லையென்றால் கட்டிய மனைவியை மகனே ஆனாலும், அவன் முன்பே அடித்ததோடு மட்டும் நிற்காமல், இத்தனைப் பேச்சும் பேசுவாரா… இத்தனை ஆண்டுகள் உடன் வாழ்ந்திருந்தாலும் உன் இடம் இதுதான் என்று கணவர் அழுத்தமாக சுட்டிக் காட்டிவிட, அதில் தன் மொத்த பலத்தையும் இழந்தவராக மற்றொரு அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார் அன்னலட்சுமி.
என்ன முயன்றும் கண்ணீர் நிற்கவே இல்லை அவருக்கு. தன் கணவருக்கு தன்மீது பாசம் உண்டு என்ற ஒரே நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, இத்தனை ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவர் அன்னலட்சுமி. அந்த காரணத்திற்காகத்தான் அவரது அத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக் கொண்டதும் கூட.
ஆனால், இன்று மகனுக்காக, கணவர் தன்னை விட்டுக் கொடுத்ததாகவே நினைத்தார் அன்னலட்சுமி. அதுவே அவருக்கு இடியாக இருக்க, கணவர், குடும்பம் என்றே வாழ்ந்து விட்டவருக்கு அதற்க்குமேல் யோசிக்கத் தெரியவில்லை.
அவரது வாழ்க்கை முறை சுயமாக சிந்திக்க அவருக்கு இதுவரை கற்றுக் கொடுத்திருக்கவும் இல்லை. இதுவரை கணவரின் கட்டளையை ஏற்றுச் செயல்படும் அம்பாக மட்டுமே இருந்திருக்க, இன்று கணவர் பொய்த்துப் போனதில், தன்னிலை இழந்துப் போயிருந்தார் அவர்.
ஆனால், அவரைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அவரது கணவரும், மகனும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருந்தனர்.
தான் சிறையில் இருந்த நேரம், தன்னை கொஞ்சமும் மதிக்காமல் ஊர்த்திருவிழாவிற்கு காப்புக் கட்டியிருந்த ஊர்மக்களின் மீதும், இதற்கெல்லாம் காரணமான தமிழ்ப்பிறையின் மீது அளவில்லாத கோபம் கொண்டிருந்தார் பழையம்பெருமாள்.
தன்னை மதிக்காத இவர்களை நிச்சயம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவரின் மனம் துடித்துக் கொண்டிருக்க, சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கத் தொடங்கினார் அவர்.
அதே நேரம் ஊரில் திருவிழா ஏற்பாடுகள் களை கட்டியிருக்க, பத்துநாளும் விதவிதமான மலர் அலங்காரத்திற்கும், பத்து வகையான சப்பரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்து நாளும் மாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வரும் அம்மன் ஊரைச் சுற்றி வந்து மீண்டும் கோவிலில் சென்று அமர, அதிகாலை வேளையாகிவிடும்.
இந்த மலர் அலங்காரத்திற்கும், சப்பரங்களுக்கும் மொத்தமாக கதிரோன் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான். அவன் பாட்டி உமையாள் ஆணை அது. அவன் தாத்தா உயிருடன் இருந்த வரை அவர் செய்து வந்த கைங்கர்யம் அது.
அவர் இறந்தபின் பணம் கொடுக்க உமையாள் தயாராக இருந்தாலும், பழையம்பெருமாள் தனது கௌரவத்திற்காக தானே பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் விலகி நிற்க, தன் பேரனை கணவரின் இடத்தில் நிறுத்தி வைத்து அழகுப் பார்க்க துடித்தது அந்த மூதாட்டியின் மனம்.
ஊரைச் சுற்றி வரும் கோவில் தேர் அவரது வீட்டு வாயிலில் வந்து நிற்க, அம்பாள் சூடியிருந்த மாலையை அணிந்து கொண்டு, பூசாரிமார் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொண்டு நிற்கும் தன் கணவரைப் பார்க்க அத்தனைப் பெருமிதமாக இருக்கும் உமையாளுக்கு.
பத்துநாட்களும் வீட்டிலும், கோவிலுக்கு குறையாமல் வீட்டிலும் வகைவகையாக மலர்களை கொண்டு அர்ச்சித்து அம்மனை அழகுற அலங்கரித்து மகிழ்வார் அவர். கணவர் இறந்த கையேடு அத்தனையும் நின்று போயிருக்க, இப்போது தன் பேரன் வாழ்வுக்காக வேண்டிக் கொண்டு மீண்டும் தன் கணவர் செய்யும் கைங்கர்யங்களை கையில் எடுத்துக் கொண்டிருந்தார் உமையாள். பேரனும் பாட்டியின் விருப்பத்திற்கு உடன்பட்டு, அழகாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.
முதல் இரண்டு நாட்கள் திருவிழா அமைதியான முறையில் நடைபெற, மூன்றாம் நாள் மாலை கோவிலிலிருந்து புறப்பட்ட சப்பரம் ஊரின் முதல் தெருவைத் தாண்டும் போதே, அச்சு முறிந்து விபத்துக்குள்ளானது.
சப்பரத்தில் அமர்ந்திருந்த கோவில் பூசாரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட, சப்பரத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த சிலருக்கும் மிதமான காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இதில் சப்பரத்தின் தலைப்பகுதி முதல்வரிசையில் வந்து கொண்டிருந்த கதிரோன் மற்றும் அவனின் ஒன்றுவிட்ட சித்தப்பா, இன்னும் சில ஊர்பெரியவர்கள் மீது மொத்தமாக விழுந்ததில், கதிரோனுக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது.
குமரன் சுதாரித்து கடைசி நிமிடத்தில் அவனை தன்புறம் இழுத்துக் கொண்டதில் அதிக காயங்கள் எதுவும் ஏற்படாமல் தப்பித்து இருந்தான் கதிரோன். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பூசாரியின் தலை கல்லில் மோதியதில் அவர்நிலை மட்டும் கவலைக்கிடமாக இருந்தது.
விபத்து என்று காவல்துறை சார்பில் வழக்குப் பதியப்பட, திருவிழா ஏற்பாட்டாளர்கள், கோவில் பொறுப்பாளர்கள் என்று அத்தனைப் பேரின் மீதும் வழக்கு பதியப்பட்டது. அரசாங்கத்திடம் முறையாக அனுமதி பெறாமல் திருவிழாவிற்கும், சப்பர ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்ததாகக் கூறி அவர்களை காவல் நிலையத்தில் அமர்த்தியிருந்தனர்.
ஆண்டாண்டு காலமாக அவர்கள் நடத்தி வந்த வைபவம், இதுவரை அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதே கவனத்திற்கு வந்திருக்கவில்லை அந்த பாமர மக்களுக்கு.
கோவில் கொடையில் காவலர்களும் வந்து கலந்து கொள்வதும், ஊர்பெரியவரான பழையம்பெருமாள் அவர்களுக்கு உரிய மரியாதை செய்வதையும் பார்த்தே பழகியிருந்தவர்கள். இந்த முறை அவர் இல்லாமல் போகவும் ஊர்பெரியவர்கள் ஒன்று சேர்ந்து திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருக்க, அதுவே அவர்களுக்கு வினையாகி இருந்தது.
பூசாரி உயிர் தப்பினால் மட்டுமே அங்கிருந்த அத்தனைப் பேரும் வெளியில் வர முடியும் என்ற நிலைதான். பழையம்பெருமாளிடம் குழைந்துப் பேசி கும்பிடு போடும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் ஏக கெடுபிடி காட்ட, ஊர்ப் பெரியவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.
கதிரோன் தலையில் கட்டுடன் மருத்துவமனையில் இருந்து நேரே காவல் நிலையத்திற்கு வந்திருக்க, அவன் பேச்சையும் காதில் வாங்குவதாக இல்லை காவல்துறை. அத்தனைப் பேரும் சொல்லி வைத்தாற் போல் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூற, அவனுக்கும் அலுத்துப் போனது.
போராடித் தோற்றவனாக அவன் வெளியே வந்து நிற்கையில் தான் தந்தையின் நினைவு மின்னலாக வெட்டிச் சென்றது மூளைக்குள். வழக்கமாக அவருக்கு நடக்கும் மரியாதைகள்இந்த முறை தவறிப் போனது, காவல்துறையினரின் இந்த திமிரானப் பேச்சு, இத்தனை பரபரப்பிற்கும் எட்டிக் கூட பார்க்காமல் இருக்கும் அவரது மெத்தனம் என அனைத்தும் அவனுக்கு அடுத்தடுத்த புள்ளியில் வந்து அமர, சட்டென தன் தலையில் தட்டிக் கொண்டான் அவன்.
“என்ன மனுஷன் இந்தாளு..” என்று அவன் மனம் கூச்சலிட, முதலில் உள்ளே இருப்பவர்களை வெளியேக் கொண்டு வருவதே அவனது நோக்கமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடமும் அவன் பேச, பழையம்பெருமாளையும், அவரது மகன் சரவணப்பெருமாளையும் மீறி ஒருவர் கூட அவனுக்கு உதவுவதாக இல்லை.
இரவு எட்டுமணி அளவில் அவர்கள் காவல்நிலையத்திற்கு வந்திருக்க, நேரம் நள்ளிரவு ஒருமணியைத் தொட்டுக் கொண்டிருந்தது இப்போது. உள்ளே இருக்கும் வயதானவர்களின் நினைவு கதிரோனை நிமமதியாக விடவில்லை.
அத்தனைப் பேரும் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு உறவானவர்கள், அவனது நலத்தை நாடுபவர்கள்.. அவர்களை அப்படியே விட்டுச் செல்ல முடியாது அவனால்.
வெகுநேரம் யோசித்துக் கொண்டே நின்றவன் தன்னை திடப்படுத்திக் கொண்டு தன் அலைபேசியில் இருந்த, இதுவரை ஒருமுறைக் கூட அவன் அழைத்திருக்காத, ஆனால் தன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த அந்த எண்ணுக்கு அழைத்தான்.
எதிர்முனை தூக்கக் கலக்கத்துடன் “ஹலோ…” என்று விட, ஒரு நொடி மௌனித்தவன் “தமிழ்.” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, எதிர்முனைக்கு தூக்கம் தொலைந்து போனது.
ஆனாலும், அவனிடம் பேச விரும்பாமல் அவள் அழைப்பைத் துண்டிக்க விரலை நகர்த்த, “ப்ளீஸ் தமிழ்.. கட் பண்ணிடாத..”என்று இறுகிய குரலில் கதிரோன் உரைக்க, அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளைத் தடுத்து நிறுத்தியது.
“என்னை நிம்மதியா விடவே மாட்டிங்களா நீங்க..” என்று அந்த அரைத் தூக்கத்திலும் அவள் சண்டைக்கு நிற்க, அவள் பேச்சில் தன்னிலை மறந்து சிரித்துவிட்டான் அவன்.
“கலெக்டர் அம்மா.. தூங்கினதுப் போதும். முழிச்சுக்கோங்க..” என புன்னகையை மென்று கொண்டு அவன் கூற, ஆத்திரத்திலும், அவனை ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையிலும் முகம் சிவந்தது ஆட்சியருக்கு.
“எதுக்கு கால் பண்ணீங்க.. மணி என்னாகுது தெரியுமா..”
“நேரத்துக்கு என்ன 1.20 ஆகுது. நான் முழிச்சுட்டு இருக்கேன் கூப்பிட்டேன். என்ன இப்போ.” என்று அவன் மேலும் அவளை சீண்ட,
“உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் இல்ல. என்னை சொல்லணும்..” என்று மீண்டும் அவள் அழைப்பைத் துண்டிக்க முற்பட, “தமிழ் ப்ளீஸ்..” என்று நிறுத்தினான் கதிரோன்.
“என்ன விஷயம்ன்னு சொல்ல முடியுமா… இல்லையா.” என குரலில் கடினத்துடன் அவள் கேட்க,
“சொல்லத்தானே கூப்பிட்டேன். அதுவும் இப்போ நாங்க இருக்க நிலைமைக்கு நீ மட்டும்தான் உதவ முடியும்…” என்றவன் நடந்தது மொத்தத்தையும் கூறி முடிக்க, தமிழுக்கு இதில் தான் செய்ய வேண்டியது என்ன என்றுப் புரியவில்லை.
“இதுல நான் என்ன செய்யணும். அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்காம தேர் இழுத்தது தப்பில்லையா..” என்று சற்றுமுன் பேசியக் குரலுக்கு சம்பந்தம் இல்லாத குரலில் கேட்டாள் தமிழ்.
“கலெக்டர் அம்மா.. படிக்காத ஜனங்க. விவரம் இல்லாம ஏதோ செஞ்சு மாட்டிட்டு இருக்காங்க. படிச்ச நீங்க கருணை காட்டினா அவங்களைக் காப்பாத்த முடியும். “
“சட்டத்தை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. அவங்கதான் படிக்கல.. நீங்க எல்லாம் படிச்சவங்க தானே.. நீங்க எடுத்துச் சொல்லியிருக்கணும் இல்ல.” என்று அவனையும் அவள் விசாரணைக்கு உட்படுத்த, எதிர்முனையில் இருந்தவன் அமைதியாக புன்னகைத்துக் கொண்டான்.
“தப்புதான் மேடம். தெரியாமப் பண்ணிட்டோம்.. ஆனா, இது நிச்சயமா விபத்து இல்ல மேடம். எங்களை சிக்க வைக்க சதி பண்ணி, அநியாயமா வயசான அவங்களைத் தூக்கி உள்ளே வச்சிருக்காங்க. உங்க காவல்துறை ரொம்ப விசுவாசமா நடந்துக்கறாங்க மேடம்.”
“நாங்க ஏழைங்க.. பணத்தை வாரி இறைக்க முடியாது. அதனாலதான் இந்த நேரத்துல உங்களுக்கு அழைச்சிருக்கேன். நீங்க உடனே கிளம்பி வந்தா அவங்களை காப்பாத்தலாம். இல்ல, அவங்க உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம் மேடம். புரிஞ்சிக்கோங்க..” என்று நிதானமாக அவன் எடுத்துக் கூறிய போதும்,
“இல்ல.. நான் வரமாட்டேன்.. ” என்று அழுத்தமாக உரைத்துவிட்டாள் தமிழ்ப்பிறை.
“அது உங்க விருப்பம் மேடம். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்..” என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டான் கதிரோன்.
அருகில் நின்றிருந்த குமரன் “மகனே.. இந்த நேரத்துலகூட அசராம ஒரு படம் ஒட்டுறடா நீ. ஒழுங்கா கூப்பிட்டாலே அந்த பொண்ணு வராது. இதுல நீ செஞ்சிருக்க வேலைக்கு, உள்ளே போனை போட்டு உரிக்க சொன்னாலும் சொல்லும். எதுக்கும் நீ நாலடி தள்ளியே நில்லு.”
“உன்னைத் தூக்குறதுக்கு பதிலா, இருட்ல அடையாளம் தெரியாம என்னைத் தூக்கிடப் போறானுங்க..” என்று கதிரோனை நக்கலடித்துக் கொண்டிருக்க, அவனுக்கு பதில் கொடுக்கும் எண்ணம் இல்லாதவனாக புன்னகையுடன் நிலவை வெறித்துக் கொண்டு நின்றான் கதிரோன்.
அவனுக்கு என்னவோ அவன் நிலவு வரும் என தோன்றியது. ஆழ்மனதில் ஒரு குரல் “வருவாள்..” என அழுத்தம் திருத்தமாக கேட்க, அதற்கு செவி சாய்த்து அமைதி காத்துக் கொண்டான் அவன்.
அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த அரைமணி நேரத்தில் வந்து நின்றது நிலவு. வீதிக்கு வந்த நிலவு அவன் வீட்டிற்கு எப்போது வருமோ… என்று அவனை ஏங்க வைக்கவே வந்து நின்றதோ அவனது சொந்த நிலா.