கதிரோனிடம் “வரமாட்டேன்..” என்று அழுத்தமாக கூறி விட்டாலும், என்னவோ மனது கேட்கவில்லை தமிழ்பிறைக்கு. அதுவும் அவன் கூறிய உயிருக்கே ஆபத்தாக முடியலாம்..” என்ற வார்த்தைகள் அவளை அலைக்கழிக்க, எழுந்து இலகுவாக ஒரு சுடிதாரை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள் அவள்.
அடுத்த அரைமணி நேரத்திற்குள் காரை எடுத்துக் கொண்டு அவள் காவல்நிலையத்திற்கு வந்துவிட, அவள் முகம் பார்த்த கதிரோனுக்கு முக்தி நிலை தான். பின்னே அவன் கேட்டுக் கொண்டதற்காக அவன் நிலவு வந்து நின்றிருக்கிறதே. அதுவும் இந்த அர்த்த ராத்திரியில் பாதி உறக்கத்தில் வந்து நிற்கிறாளே என்று அவளை நினைத்து இன்னும் பூரித்துக் கொண்டிருந்தான் கதிரோன்.
ஆனால், அவன் ஒருவன் அங்கிருப்பதையே கவனிக்காதவளாய் வழக்கம்போல் அவனைத் தாண்டி நடந்துவிட்டாள் தமிழ். கதிரோன் “ராங்கி.” என்று செல்லமாக முணுமுணுத்து அவள் பின்னால் நடக்க, காவல் நிலையத்திற்குள் நுழைந்த தமிழ்ப்பிறையைக் கண்ட காவலர்கள் பதட்டத்துடன் எழுந்து நின்றனர்.
அந்த இடம் சட்டென பரபரப்பாக “வணக்கம் மேடம்..வணக்கம் மேடம்..” என்று ஆளாளுக்கு எழுந்து நின்று வணக்கம் வைத்தனர். தமிழ்ப்பிறை தனக்கே உரித்தான ஆளுமையுடன் அங்கிருந்தவர்களை பார்வையால் அளந்து கொண்டிருக்க, ஒரு காவலர் அவளுக்கான இருக்கையை எடுத்து வந்து வைக்கவும், அதில் அமர்ந்து கொண்டாள்.
அவளின் அந்த பார்வையும், கால் மேல் காலிட்டு அவள் அமர்ந்திருந்த தோரணையும் அள்ளிக் கொண்டது கதிரோனை. அவன் அடுத்து என்ன என்றுப் பார்த்திருக்க, “எங்கே உங்க இன்ஸ்பெக்டர்.” என்றாள் தமிழ்ப்பிறை.
“மேடம்..” என்று இழுத்தவர்கள் அவளது பார்வை மாற்றத்தில் “சார் வீட்டுக்கு போயிருக்கார் மேடம்..” என்று பதில் கொடுக்க, “உங்க டியூட்டி ரெஜிஸ்டரைக் கொண்டு வாங்க..” என்றாள் அடுத்ததாக.
அந்த வருகைப் பதிவேட்டில் இரவுநேர பணிக்கு அந்த ஆய்வாளர் கையெழுத்திட்டிருக்க, “இன்னும் பத்து நிமிஷம் டைம். உங்க இன்ஸ்பெக்டர் இங்கே இருக்கணும்.” என்று அதிகாரமாக கூறியவள், தன் அலைபேசியை எடுத்து சங்கருக்கு அழைத்துவிட்டாள்.
அந்த நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த எஸ்பி சங்கர், ஆட்சியரின் அழைப்பில் பதறியவனாக, உடனே எடுத்துவிட்டான்.
“சொல்லுங்க மேடம்..” என்ற அவனிடம், “அழகியமணவாளபுரம் உங்க டிவிஷன் தானே சங்கர்.” என்று இயல்பாகவே தமிழ் விசாரிக்க, அவன் “எஸ் மேம்..” என்றான்.
“நீங்க உடனே இங்கே வர முடியுமா.” என்று தமிழ் இலகுவான குரலில் பேசிவைக்க, எதிர்முனையில் இருந்தவனுக்கு வியர்த்து வழியத் தொடங்கியது. “மேம்.. நீங்க..” என்று அவன் கேள்வியாக நிறுத்த, “நான் இங்கே ஸ்டேஷன்ல இருக்கேன். கிளம்பி வாங்க.” என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள் அவள்.
அந்த ஆய்வாளர் வருவதற்கு முன்பே சங்கர் வந்துவிட்டிருந்தான். தமிழ்பிறைக்கு வணக்கம் வைத்து “சொல்லுங்க மேடம்..” என்று பவ்யமாக அவன் நிற்க, அவன் முன்னே அந்த வருகைப்பதிவேட்டை மேசையில் தூக்கிப் போட்டாள் தமிழ்ப்பிறை.
“இந்த லிஸ்ட்ல இருக்க இன்ஸ்பெக்டர் இப்போ ஸ்டேஷன்ல இல்ல மிஸ்டர். சங்கர். எனக்கு அவரைப் இப்போவே பார்த்தாகணும். அவர் எங்கே இருக்கார்?? ஏன் ஸ்டேஷன்ல இல்ல..?? எப்போ வருவார்?? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் வேணும் எனக்கு.” என்றுவிட்டு அவள் தன் அலைபேசியைக் கையில் எடுத்துக் கொள்ள, சங்கர் அங்கிருந்த காவலர்களிடம் திரும்பினான்.
அவன் அவர்களை வறுத்தெடுக்க நினைத்த நேரம், ஆய்வாளர் முத்துவேல் அந்த காவல் நிலையத்திற்குள் நுழைய, சங்கரைப் பார்க்கவும் மொத்தமாக ஆடிப் போனான் அவன். வேகமாக அவனை நெருங்கியவன் அவனுக்கு சல்யூட் அடிக்க, “இடியட்..” என்று கோபத்துடன் முனகினான் சங்கர்.
“எங்கேய்யா போயிருந்த..” என்று கடித்த பற்களுடன் அவன் வினவிய விதமே அந்த ஆய்வாளரை மிரட்டியது.
“சார்.. ரவுண்ட்ஸ்க்கு போயிருந்தேன் சார்..” என்று அவர் திக்கி திணற, “அப்படியா மிஸ்டர். முத்துவேல்..”என்று ஆச்சரியம் காட்டியது தமிழ்ப்பிறை.
முத்துவேல் வேகமாக அவளுக்கும் சல்யூட் அடிக்க, “எந்த ஏரியா எல்லாம் கவர் பண்ணீங்க.. என்னென்ன கேஸ் பிடிச்சிருக்கீங்க,, டீட்டெய்ல்ஸ் ஏதும் இருக்கா..” என்று அடுத்தடுத்து கேள்விகளை அவர் முன் அடுக்கினாள் தமிழ்ப்பிறை.
“மேடம்..” என்று அவர் திணற, “ஒரு பொய்யை மறைக்க ஏன் மேன் ஒன்பது பொய் சொல்ற. ரெஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்புவியா நீ… ” என்று முறைத்தவள் “ஓகே.. அதை உங்க எஸ்பி பார்க்கட்டும். இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு.”
“ஏன் இந்த வயசானவங்களை எல்லாம் பிடிச்சு ஸ்டேஷன்ல வச்சிருக்க.. என்ன கேஸ்.. FIR போட்டாச்சா.. என்ன ஸ்டேட்டஸ்.” என்று அவள் அழுத்தமாக கேட்க, அந்த ஆய்வாளருக்கு எந்த சுவற்றில் முட்டிக் கொள்வது என்றே தெரியாத நிலை.
அவர் இன்னும் விசாரணையைத் தொடங்கி இருக்கவே இல்லையே. விசாரணை என்று ஏதாவது நடந்திருந்தால் தானே, அதைப்பற்றி அவரால் விளக்கம் கொடுக்க முடியும்.
அவர் விழிப்பதைக் கண்ட சங்கர் “பதில் சொல்லுங்க முத்துவேல்.” என்று அவனை நெருக்க,
“சார். ஊர்த்திருவிழா தேர் கவிழ்ந்து ஆக்சிடென்ட் சார். கோவில்பூசாரி ஆஸ்பிடல்ல இருக்காரு. விசாரணைக்காக இவங்களை அழைச்சுட்டு வந்திருக்கேன். ” என்று மழுப்பலாக பதில் கூறி வைத்தார்.
“விசாரணைக்கு இவங்களை ஏன் அழைச்சுட்டு வரணும். அதுவும் பர்டிகுலரா இந்த எட்டுப் பெரியவர்களை மட்டும் ஏன் அழைச்சுட்டு வரணும். இவர்களுக்கும் விபத்துக்கும் என்ன சம்பந்தம்.” என்று தமிழ் கோபம் கொள்ள, சங்கர் சந்தேகத்துடன் பார்த்தான் இப்போது.
அவர் “இல்ல மேடம். இவங்கதான் கோவில் கமிட்டி… முறையா அனுமதி இல்லாம, திருவிழா ஏற்பாடு பண்ணியிருக்காங்க.” என்று மீண்டும் கூறி வைக்க,
அந்தப் பெரியவர்களிடம் “கமிட்டித் தலைவர் யாரு.” என்றாள் தமிழ்ப்பிறை.
அவர்கள் “எங்களுக்கு தலைமை எல்லாம் பழையம்பெருமாள் ஐயாதான் அம்மா. அவர் ஜெயில்ல இருக்கவும் நாங்க ஏற்பாடு செஞ்சோம்.” என்றனர் மொத்தமாக.
“இப்போ அவர் எங்கே.??” என்று தமிழ்ப்பிறை அந்தப் பெரியவர்களிடம் கேட்க, “அவர் திருவிழாவுக்கே வரல மேடம்.” என்று பதில் கொடுத்தது அந்த ஆய்வாளர்.
“நீங்க ஏன் அவரை அரெஸ்ட் பண்ணல.” என்று தமிழ் அவரிடம் கேட்க,
“வந்தா என்ன?? வரலைன்னா என்ன?? அவர்தானே கோவில் கமிட்டி தலைவர். நீங்க முதல்ல அவர்மேல தானே நடவடிக்கை எடுத்து இருக்கணும்.”
“இல்ல மேடம். அவர் ஜெயில்ல இருந்தே ரெண்டுநாள் முன்னாடிதான் வெளியே வந்து இருக்காரு. இந்த திருவிழாக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.” என்று முத்துவேல் சாதிக்க
“நீங்க அவருக்கு லாயரா..” என்று கோபத்துடன் அவரிடம் கேட்டவள் மேலும், “கவர்ன்மென்ட் சம்பளம் கொடுக்குது மேன் உனக்கு. மக்களுக்கு உண்மையா இரு. பணத்தை தூக்கி வீசுற நாய்களுக்கு விசுவாசமா இருக்காத.” என்று கண்டிப்புடன் அதட்டினாள்.
அத்துடன் நிற்காமல் அங்கு நின்றிருந்த அந்த பெரியவர்களிடமும் “அரசாங்க அனுமதி இல்லாம திருவிழா நடத்தக்கூடாது தெரியாதா உங்களுக்கு..” என்றாள் கடினமாக.
“இப்போ தேர் கவிழ்ந்து போச்சே. யார் பொறுப்பெடுத்துக்கறது. யாரைக் கேட்டு தேர் இழுத்திங்க..” என்று தமிழ்ப்பிறை கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கையில், கதிரோன் தான் நின்ற இடத்தில் இருந்து ஓரடி முன்னே வந்தான்.
“மேடம். கோவில் திருவிழா ஊர்கூடி பஞ்சாயத்துல முடிவு பண்ற விஷயம். இந்த முறையும் அப்படித்தான் நடந்தது. இந்த விபத்து நாங்க எதிர்பார்க்கல.” என்று வருத்தத்துடன் அவன் தெரிவிக்க,
“அந்தப் பூசாரி உயிருக்கு யார் பொறுப்பு. உங்களோட வருத்தம் அவரை மீட்டுக் கொண்டு வருமா. சாமி வந்து சொல்லுச்சா உங்ககிட்ட. தேர் இழுத்தால்தான் உங்களை காப்பாத்துவேன்னு சாமி சொல்லுச்சா..” என்று அவள் மிரட்ட, அங்கு நின்றிருந்தவர்கள் அமைதியாக தலையைக் குனிந்தனர்.
“கோவில் தேருக்கு யார் பொறுப்பு.. யார் ஏற்பாடு பண்ணீங்க. தேர் நிலைக்கு வர்றதுக்கு முன்னாடி, பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் சரி பார்த்தது யார்..” என்று அவள் மீண்டும் கேள்வி கேட்க
“இந்த வருஷ சப்பரத்துக்கு நாந்தான் பொறுப்பு மேடம். இவங்க யாருக்கும் எதுவும் தெரியாது. நானும் வழக்கமா தேர் அலங்காரம் பண்ற ஆட்கள்கிட்ட தான் பொறுப்பை ஒப்படைச்சிருந்தேன்..” என்று கதிரோன் பதில் கொடுக்க, தமிழ் இப்போது சங்கரை அர்த்தமாகப் பார்த்தாள்.
அவன் தலையசைத்து “போன வருஷம் உங்க ஊர்த் திருவிழா தேருக்கு நீங்கதான் பொறுப்பாளரா..” என்று கதிரோனிடம் கேட்க, “இல்ல தம்பி. எங்க கதிர் தம்பி எங்களுக்காக எங்களோட வந்து நின்னாரு. அவர் இந்த திருவிழா பொறுப்பெல்லாம் ஏத்துக்கறது இல்ல. போன வருஷம் வரைக்கும் எல்லாமே பழையம்பெருமாள் ஐயாதான்.” என்றார் ஒரு பெரியவர்.
சங்கர் தனக்கு அருகில் நின்றிருந்த முத்துவேலை பார்வையால் பதறவைத்து, “அரெஸ்ட் பண்றதா இருந்தா, இவரையோ இல்ல இவரோட அப்பா பழையம்பெருமாளையோ தானே அரெஸ்ட் பண்ணி இருக்கணும். நீ எப்படிய்யா இவங்களை தூக்கி உள்ளே வைப்ப.” என்று கோபத்துடன் ஓர் அடி முன்னே எடுத்து வைக்க, முத்துவேலுக்கு மேனி நடுங்கியது.
தமிழ் “சங்கர்.” என்று குரல் கொடுக்க, “சாரி மேடம்..” என்று தன்னை நிதானித்துக் கொண்டான் அவன்.
தமிழ் மீண்டும் “உங்களுக்கே இப்போ எல்லாம் புரியுது இல்லையா. இவங்களை ரிலீஸ் பண்ணுங்க. உண்மையான குற்றவாளியை நீங்க கண்டுபிடிக்கிற வரை பொறுப்பாளரை மட்டும் வேணா, கஸ்டடில வைங்க. இந்த வயசானவங்களை அனுப்பி விடுங்க.” என்று அழுத்தமாக உரைத்தாள் தமிழ்.
சங்கர் “மேடம் சொல்றது தான் நடக்கும் கதிர். நான் உங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கும்..” என்று கதிரோனிடம் கூற
“நான் இருக்கேன் சார். இவங்களை அனுப்பி விடுங்க. ஊர்ல எல்லாரும் பயந்துட்டு இருப்பாங்க. திருவிழா வேற நடந்துட்டு இருக்கு. ப்ளீஸ்..” என்று கதிரோன் தமிழ்பிறையை பார்த்துக் கொண்டே கூறினான்.
சங்கர் அங்கிருந்த காவலர்களிடம் “இவங்களை எல்லாம் அனுப்பி விடுங்க..” என்றுவிட்டான்.
அந்தப் பெரியவர்கள் தமிழ்ப்பிறையிடம் “அம்மா. எங்க தம்பி எந்த தப்பும் செய்யாதும்மா. நீங்க எங்களை அனுப்பி வைக்காம போனாலும் ஒன்னும் இல்ல. எங்க புள்ளையை விட்ருங்கம்மா..” என்று கதிருக்காகப் பேசி நிற்க, அவர்களின் பாசத்தில் கதிர் சற்று நெகிழ்ந்து நின்றான்.
“பெரியவரே.. அனுமதி இல்லாம திருவிழா நடத்தினதே தப்பு. நீங்க படிக்காதவங்க சரி. ஆனா, படிச்சா உங்க தம்பி எடுத்து சொல்லியிருக்கணும் இல்லையா. சொல்லாம விட்டதுக்கான தண்டனையா நினைச்சுக்கோங்க. இன்னைக்கு ஒருநாள் இங்கே இருக்கட்டும். நாளைக்கு நீங்க ஒரு வக்கீலை கூட்டி வந்து ஜாமின்ல கூட்டிட்டுப் போங்க.” என்று பொறுமையாக பேசி அவர்களுக்கு புரியவைத்த தமிழ்ப்பிறையை அத்தனை ஆதூரமாகப் பார்த்திருந்தான் கதிரோன்.
மேலும் “திருவிழா எந்தக் காரணத்தைக் கொண்டும் தடையாகக் கூடாது மேடம். அதுக்கும் ஏதாவது வழி சொல்லுங்க. நீங்க என்ன செய்யணும்ன்னு சொல்லிட்டா, அதுக்கேத்தபடி நாங்க நடப்போம்..” என்று அர்த்தத்துடன் அவன் தமிழ்ப்பிறையிடம் கூற, அவன் கூறிய பொருளை உணர்ந்ததற்கு அடையாளமாக அவனை அடிக்கண்ணால் வெட்டுவது ஒருநொடி பார்த்தாள் ஆட்சியர்.
பின் அங்கு நின்றிருந்த சங்கரிடம் “என்ன பண்ணலாம் சங்கர்..” என்று தமிழ் கேட்க,. அப்போதே அங்கிருந்த ஒரு காவலரை வைத்து அனுமதி கடிதம் எழுதி அதில் ஊர்பெரியவர்கள், கதிரோனை கையெழுத்திட சொன்ன சங்கர், பின் தானும் அதில் கையெழுத்திட்டு, தன் பக்கமிருந்தும் ஒரு தட்டச்சு செய்யப்பட்ட ஆணையில் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
“இது நீங்க திருவிழா நடத்துறதுக்கான ஆர்டர் பார்ம். இதுக்குப்பிறகு எல்லாம் சரியா இருக்கான்னு, ஒருமுறைக்கு ரெண்டுமுறை பார்த்து எதையும் செய்ங்க. அவசரப்பட வேண்டாம்.இன்னும் கவனமா இருக்கணும்.” என்றவள் “உங்க சைட்ல இருந்து நீங்களும் சிலரை திருவிழா முடியுறவரைக்கும் பாதுகாப்புக்கு அனுப்பி வைங்க சங்கர். கொஞ்சம் கவனமா இருக்க சொல்லுங்க.” என்று தமிழ் கேட்டுக் கொள்ள, அவளது அதிகாரமற்ற குரலில் “கண்டிப்பா மேடம். நான் கவனிச்சுக்கறேன்..” என்று தலையசைத்தான் சங்கர்.
அவனுக்கு தமிழ்ப்பிறையின் மீது ஏக மரியாதை இருந்தது. ஒரு பெண்ணாக எங்கும் வளைந்து கொடுக்காமல், எதையும் துணிந்து எதிர்கொள்ளும் அவளின் அந்த பாங்குக்கு அவன் அடிமை. ஒரு உயரதிகாரியாக அவனது ரோல் மாடல் என்றுகூட சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒருவர் இந்த இரவில் இப்படி ஒரு கிராமத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு தானே நேரில் கிளம்பி வந்திருக்க, விஷயம் எத்தனை முக்கியமானது என்று புரிந்தது அவனுக்கு. கூடவே, கதிரின் பார்வையும், அதைக் கண்டும் காணாமல் ஆட்சியர் அமர்ந்திருந்த விதமும் இன்னும் எதையோ எடுத்துரைக்க, எஸ்பி அதற்காகவும் மகிழ்ந்து கொண்டான்.
அவனுக்கு கதிரோனை அந்த ஊர்மக்களின் பிரதிநிதியாக தெரியும். அவன் நல்லவன் என்ற நம்பிக்கை இருந்தது. அதனைக் கொண்டே அவன் தமிழ்ப்பிறைக்காக மகிழ்ச்சி கொண்டது. ஆனால், அதை தமிழிடம் நேரடியாகவெல்லாம் கூறிவிட முடியாதே, அந்த அளவுக்கு தமிழ் யாரையும் அவள் வட்டத்திற்குள் அனுமதிக்கமாட்டாள் என்பதும் தெரிந்ததால் அமைதியானான் அவன்.
தமிழ் தன் வேலை முடிந்ததும், இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள். “அந்தப் பெரியவர்களிடமும், சங்கரிடமும் விடைபெற்றுக் கொண்டவள் கதிரோனை புறக்கணித்து நடக்க, கதிரோன் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அவளைப் பார்த்திருந்தான். கார் அருகே சென்றவள் சங்கரிடம் ஏதோ பேசிக் கொண்டே லேசாகத் தலையைத் திருப்ப, அவளையேப் பார்த்திருந்தவன் நொடியில் கண்டுகொண்டான்.
அவன் லேசாக தலையசைத்து கண்ணை சிமிட்ட, மற்றவர் அறியாமல் ஒரு முறைப்பை அவனுக்கு பரிசளித்து கிளம்பிவிட்டாள் தமிழ். கதிரோனுக்கு ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் ஒரு நிறைவு அவளின் இந்த வருகையில்.
அவள் தன்னை உள்ளே வைத்தது எல்லாம் அவனுக்குப் பெரிதாக தோன்றவே இல்லை. அவனுக்காக அவன் தமிழ் வந்துவிட்டாள் என்பது மட்டுமே மனதில் நின்றது.
அவள் மனதில் தனக்கான இடம் என்ன என்று இதுவரை இருந்து ஒரு நூலிழை கேள்வியும் அங்கே அறுந்து விழ, அவள் உன்னுடையவள் என்று கூப்பாடு போட்டது உள்ளம்.
“சீக்கிரமே நீ என்கிட்டே வந்திடுவ தமிழ். வர வைப்பேன் நான்…” என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான் கதிரோன்.