உணர்வுகளை வெளிப்படுத்தாத, அமைதியான முகத்துடன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தாள் தமிழ்ப்பிறை. கையில் கதிரோன் கொடுத்திருந்த மாலை கனத்துக் கொண்டிருந்தது. அம்மன் சன்னதியை நீங்கிய நிமிடமே பழனி கையை நீட்டியிருக்க, அவரது நீட்டிய கையை கவனிக்காதவள் போல் மாலையுடன் அவரைத் தாண்டி நடந்திருந்தாள்.
நிதானமான நடையுடன் அவள் கோவிலைச் சுற்றி வர, இரண்டாம் சுற்றில் கதிரோன் அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான். அவன் அருகில் வருவதை உணர்ந்தாலும், அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் அவள் அமைதியாக நடக்க, மற்றவர்கள் பார்வையிலிருந்து விலகும் வரை பொறுத்தவன் கோவிலின் பக்கவாட்டு பகுதியை அடைந்ததும் “என்னோட வா தமிழ்..” என்றான் அதிகாரமாக
அவன் குரல் வேறுபாட்டில் தமிழ் அவனது முகம் நோக்க, இதற்குள் கோவிலின் பின்பகுதியை அடைந்திருந்தனர் இருவரும். ஆட்கள் அனைவரும் முன்பகுதியில் இருக்க, பெரிதாக கூட்டமில்லை அங்கே. இந்த சிலரும் இவர்களை கவனிக்கவில்லை.
தமிழ் நின்ற இடத்தில் நின்றுவிட, அவள் முகம் பார்த்தபடி நின்றான் கதிரோன். தமிழ் “என்ன நினைக்கறீங்க நீங்க.” என்று கண்டிப்பு நிறைந்த குரலில் இளாவை அதட்ட, சிறியதாய் மிகச்சிறியதாய் ஒரு புன்னகை அவனிடம்.
அவன் சிரிப்பில் தமிழ் தடுமாறி நிற்க, “ஏன் என்னோட வரமாட்டியா.” என்றான் மீண்டும்.
“நிச்சயமா நான் வரமாட்டேன் இளா. நீ யார் எனக்கு?? நான் ஏன் உன்னோட வரணும்.?” என்று தெளிவாக அவள் பேசி வைக்க,
“நான் யாருன்னு சொல்லத்தான் கூப்பிடறேன்.. வா.” என்றவன் இந்த முறை சற்றுத் தைரியமாக அவள் கரம் பற்றினான். தமிழ் பட்டென அவன் கைகளை உதறிவிட, அவளை செல்லமாக முறைத்து மீண்டும் அழுத்தமாக அவள் கரம் பற்றினான் இளா.
“இளா நீ என்னப் பண்ற.. என் வேலையைக்கூட நினைக்க மாட்டியா..” என்று அவள் கத்தி வைக்க, “நான் எதையும் நினைக்கிறதா இல்ல தமிழ். என் வாழ்க்கையே அல்லாடிட்டு இருக்கு. நான் ஏன் உன்னை, உன் வேலையைப் பத்தியெல்லாம் யோசிக்கணும்..” என்று அலட்சியமான குரலில் கூறியவன், கோயிலின் பின்பக்கமாகவே அவளை வெளியே அழைத்து வந்திருந்தான்.
“இளா.. கைய விடு..” என்று அவள் அதட்ட, அவளை கொஞ்சமும் மதிக்காமல், அங்கு நின்றிருந்த தனது ஜீப்பின் அருகே வந்து நின்றான்.
“ஏறு.” என்று அவளிடம் கூறி, அவன் மறுபுறம் ஏறி அமர்ந்து கொள்ள, தமிழ் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“போ போ.. கோவிலுக்குள்ளே வந்து தூக்கிட்டு வரேன். யாரும் கேட்டா என் பொண்டாட்டின்னு சொல்றேன்..” என்று சத்தமாக அவன் கூறி வைக்க, தமிழின் நடை தடைபட்டது.
அவள் நிதானமாக கதிரோனை திரும்பி முறைக்க, “பத்து நிமிஷம் என்னோட வா.. ” என்று தன் பிடியில் நின்றான் அவன்.
தமிழ் எதுவும் பேசாமல் மௌனமாக வந்து வண்டியில் ஏறி அமர, கதிரோன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் வண்டியை எடுத்தான். அந்த வாகனம் அடுத்த பத்து நிமிடங்களில் அவனின் குலதெய்வமான அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் வந்து நின்றது.
அந்தக் கோவிலைக் கண்டதுமே தமிழுக்கு பழைய நினைவுகள் அலையாக படையெடுக்க, வண்டியில் இருந்து இறங்க மறந்து அமர்ந்திருந்தாள் அவள். கதிரோன் அவள் அருகில் வந்து அவள் கைபிடித்து அவளை கீழே இறக்கிவிட, நிற்க முடியாமல் ஒரு தள்ளாட்டம் அவளிடம்.
இளா அவள் நிலை உணர்ந்து அவளை பிடிக்க முற்பட, சட்டென அவனிடம் இருந்தும் தள்ளி நின்று கொண்டாள். முகத்திலும் ஒரு நிதானமான ஒரு பாவனை வந்து அமர்ந்து கொண்டது. தன்னை திடமாக்கி கொண்டவள் “அடுத்து என்ன…” என்பதாக கதிரோனைப் பார்த்து வைக்க, அவள் கையைப் பிடித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றான் இளா.
கோவிலுக்குள் யாருமில்லாமல் போக, கதிரோனை கேள்வியாகப் பார்த்தாள் தமிழ். கதிரோன் அவன் சட்டைப்பையில் இருந்து தாலியை வெளியே எடுத்து அவள் முகத்திற்கு நேராக நீட்ட, மூச்சு விடவும் மறந்து போனாள் அவள்.
அவள் அதிர்ச்சியில் கதிரோன் அவளை நெருங்க, “ஏய்..” என்று சட்டெனப் பின்னடைந்தாள் தமிழ். தன்னைப் பிடிக்க முற்பட்டவனின் கையை தட்டி விட்டவள் “கொன்னுடுவேன் இளா உன்னை.. என்னை என்ன நினைச்ச நீ.” என்று அவன் சட்டையைப் பிடித்திருந்தாள்.
கதிரோன் அவள் செயலில் பதறாமல் “நீ என்ன செஞ்சாலும் சரி. இந்த கோவில்ல இருந்து நாம வெளியேப் போகும்போது கணவன் மனைவியா தான் போவோம் தமிழ்.” என்று அழுத்தம் திருத்தமாக அவன் உரைக்க, அவனை ஓங்கி அறைந்தே விட்டாள் தமிழ்.
“உன்கிட்ட கேட்டேனா நான். நீ சொல்றதுக்கெல்லாம் ஆடிட்டு இருக்கேனே. அந்த தைரியத்துல தாலியோட வந்தாயா??” என்று அவள் கோபம் கொள்ள, பதிலே இல்லை கதிரோனிடம்.
அவன் மௌனத்தில் ஆத்திரம் கொண்டவள் மீண்டும் ஒருமுறை அவனை அறைந்துவிட, அப்போதும் மௌனமே. அவனின் அழுத்தத்தில் “என்ன செய்கிறோம்..” என்று புரியாமல் கைகள் ஓயும் அளவுக்கு அவனை அடித்து தீர்த்தவள் அப்படியே மடங்கி அமர்ந்து கொண்டாள்.
கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு அவள் அழ, விம்மலும் விக்கலுமாக வெடித்துவிட்டாள். அந்த கோவிலின் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, ஒருநிலைக்கு மேல் தன் பின்தலையை அந்த கோவில் தூணில் அவள் மோதிக் கொள்ள, பட்டென அவள் முன் அமர்ந்து அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டான் கதிரோன்.
“ஏன்டா இப்படி பண்ற..” என்று அவள் உச்சியில் இதழ்பதித்து அவன் வினவ,
“உன்னாலதான்… உன்னால மட்டும்தான் இப்படி ஆகிட்டேன் நான்.. என்னை விடுடா.. ” என்று அவனைப் பிடித்து தூர தள்ளியிருந்தாள் அவள்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு. அன்னைக்கு எத்தனை எதிர்பார்த்தேன் உன்னை.. அன்னைக்கு எங்கேடா போயிருந்த.. உன் அண்ணனும், அப்பனும் என்னை மொத்தமா கொன்னு போட்டாங்களே.. அப்போ எங்கே போயிருந்த நீ..”
“உன்னாலதான் நான் இப்படி இருக்கேன்… நீ மட்டும் தான் காரணம் இளா.. உன்னோட காதல் மட்டும்தான் காரணம். ஆனா, உன்னை மட்டும் சொல்லி என்ன செய்ய?? நானும்தானே காதலிச்சேன்.. ஆனா, அதற்காக மொத்தமா என்கிட்டே இருந்த எல்லாத்தையும் இழந்துட்டேன் இளா.”
“ஒன்னுமே இல்ல என்கிட்டே.. என் அப்பா, என் சந்தோஷம், என் சிரிப்பு, கடைசியா நான் நேசிச்ச என்னோட காதல் எல்லாத்தையும் இழந்துட்டேன்.. என் உயிரைத் தவிர வேறெதுவும் இல்ல.. நீ இப்போ எதற்காக வந்திருக்க.. “
“எனக்கு நீயும் வேண்டாம்.. உன் காதலும் வேண்டாம்.. உன் அண்ணனைக் கொல்லத்தான் நான் இந்த ஊர்ல இருக்கேன். என்னால உன்னோட உறவாட முடியாது. மரியாதையா என்னைப் போக விடு.” என்று தமிழ் எழுந்து கொள்ள, அதுவரை அவள் பேசிய அனைத்தையும் நிதானமாக கேட்டிருந்தவன் அவள் கடைசி வார்த்தையில் சுயம் உணர்ந்தான்.
அவளை விட வேகமாக எழுந்து அவள் வழியை மறைத்து நின்றான் கதிரோன். தமிழ் வழக்கம்போல் அவனைத் தாண்டி நடக்க முற்பட, முதல்முறை அவள் கையைப் பிடித்திழுத்து அவளைத் தனக்கு முன்னால் நிறுத்தியிருந்தான் இளா.
தமிழ் ஆத்திரத்துடன் பேச முற்படுகையில், அவளை அங்கிருந்த தூணில் சாய்த்து நிறுத்தியவன் அவள் அடுத்த வார்த்தை பேசாதபடி அவள் வாயைத் தன் கையால் மூடி இருந்தான். தமிழ் கோபத்துடன் அவன் கையை எடுத்துவிட பார்க்க, அவனை அசைக்க கூட முடியவில்லை அவளால்.
தோற்றுப் போனவளாக அவள் கதிரோனை முறைக்க, “நீ என்ன சொன்னாலும் சரி. எனக்கு நான் நினைச்சது நடந்தாகணும். இன்னிக்கு இங்கே நம்ம கல்யாணம் முடிஞ்சாகனும் தமிழ்.” என்றவன் அவளை அழுத்தமாக முறைத்தான்.
தமிழ் தன் வாயின் மீதிருந்த அவன் கையைப் பார்க்க, அவள் வாய் மீதிருந்து தன் கையை எடுத்துவிட்டவன் அவளின் இருபக்கமும் சிறை செய்திருந்தான் இப்போது.
“எனக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல. மீறி என்னை கல்யாணம் பண்ணிதான் ஆகணும்னு நினைச்சா, உயிரோடவே இருக்கமாட்டேன்.. நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்க நான், இப்படியே இருக்கறதும், இல்லாம போறதும் ரெண்டுமே உங்க முடிவுதான்.” என்று தமிழ் கதிரோனை மிரட்ட, அவன் எதற்கும் தயாராக இருந்தான் போலும்.
“சாகறதுன்னு முடிவாகிடுச்சு. என் பொண்டாட்டியா செத்துப் போ. நானும் கூட வர்றேன். சேர்ந்து போகலாம்..” என்றவன் மீண்டும் தன் சட்டைப்பையில் இருந்த தாலியை வெளியே எடுத்தான்.
“இளா.. விடு என்னை..” என்று தமிழ் அவன் அசந்த நேரம் அவன் கையைத் தட்டிவிட்டு விலகிக் கொள்ள, கதிரோன் அவளை நெருங்குவதற்குள் பலிபீடத்தின் அருகில் இருந்த சிறிய கதிரறுவாளை கையில் எடுத்திருந்தாள் அவள்.
தன் கழுத்தருகே அரிவாளை கொண்டு சென்றவள் “நிச்சயமா அறுத்துப்பேன் இளா.. மரியாதையா விலகிப் போய்டு..” என்று மிரட்ட, அவள் பேச்சை காதில் வாங்காமல் அவளை நெருங்கினான் கதிரோன்.
அவன் தன் மிரட்டலை மதிக்காத கோபத்தில் அவள் அரிவாளை கழுத்தில் அழுத்த முற்பட, லேசாக அவள் கழுத்தில் அரிவாள் பதியும் போதே அழுத்தமாக அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்தான் இளா.
தமிழ் அவனிடம் இருந்து கையை விடுவிக்கப் போராட, அவள் கையை அழுத்தமாகப் பற்றியிருந்தவன் அவள் கையிலிருந்த அரிவாளை பிடுங்கி தூரமாக வீசியிருந்தான். இவர்கள் இருந்த இடம் சாமி சன்னதிக்கு எதிரில் இருக்க, தன் குலதெய்வமான அய்யனாரை மனதார ஒருமுழு நிமிடம் வேண்டி நின்றான் அவன்.
தமிழுக்கு அவன் வேண்டுதல் புரிந்து விட, “இளா வேண்டாம்..விடு.” என்று மீண்டும் அவள் போராட, அவளை இலகுவாகச் சமாளித்து அடுத்திருந்த தூணில் சாய்த்து நிறுத்தினான் இளா. தமிழ் மறுப்பாகத் தலையசைக்க, அவள் கண்களில் வழிந்த நீரை அழுத்தமாக துடைத்து அவளை ஆழ்ந்துப் பார்த்தான் இளா.
தமிழ்ப்பிறையின் போராட்டம் நிமிடத்திற்கு நிமிடம் வலுவிழந்து கொண்டிருந்தது. கதிரோனின் அருகாமை அவள் புத்தியை மழுங்கடித்துக் கொண்டிருக்க, “எங்கே அவனிடம் தடுமாறி விடுவோமோ??” என்ற பதட்டத்திலேயே தீவிரமாக அவனை மறுத்து கொண்டிருந்தாள் அவள்.
இளாவும் அவளை உணர்ந்தே இருந்ததால் தானோ என்னவோ, அவளது மறுப்பை பெரிதாக கண்டுகொள்ளவில்லை அவன் .
இறுதியில் அவளைத் தன் கைப்பிடியில் நிறுத்தியவன் அவள் கழுத்தில் தான் ஏற்கனவே பூஜை செய்து வைத்திருந்த தங்கத் தாலியை அணிவித்து அவளைத் தன் மனையாளாக ஏற்றுக் கொள்ள, அவன் கையில் இருந்து திமிறிக் கொண்டிருந்தாள் தமிழ்.
“அடங்குடி..” என்று அவளது இருகைகளையும் ஒன்றாக பற்றிக் கொண்டவன் அங்கே பலிபீடத்திற்கு அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்துவிட, தமிழின் கோபம் எல்லையைக் கடந்தது அந்த நேரம்.
அந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவனை அறைந்தவள் “இந்த தாலியை அறுத்து எறிய எவ்ளோ நேரமாகும் எனக்கு.. என்ன உன்கிட்ட மயங்கி நிற்கிறேன்னு நினைப்பா உனக்கு..” என்றவள் அவன் சட்டையைப் பிடித்திருந்தாள்.
தன் சட்டையின் மீதிருந்த அவள் கைகளின் மீது தன் கையை வைத்து அழுத்தமாக பிடித்துக் கொண்டவன் “எங்க ஊர் பொண்ணுங்க புருஷன் செத்தாதான் தாலி அறுப்பாங்க. நீ இந்த தாலியை அறுத்தெரிஞ்சாலும் அதேதான் நடக்கும். உனக்கு அதுதான் விருப்பம்ன்னா செய்.” என்றான் கதிரோன்.
அவனது பேச்சில் அவளின் ஆங்காரம் தலைக்கேற, “உன்னை நானே கொன்னுடறேன்டா..” என்றவள் அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கிவிட, நிஜத்தில் சற்று அழுத்தமான பிடிதான் அவளுடையது. கதிரோன் முதல் சில நிமிடங்கள் அவள் போக்கிற்கு விட்டு நின்றவன், சில நொடிகளில் அவள் கைகளை தட்டி விட்டிருந்தான்.
“கலெக்டர் அம்மா.. நிஜமாவே போய் சேர்ந்திடுவேன் போல.. நான் செத்தா என் பொண்டாட்டிக் கூட அழமாட்டா.. அப்புறம் ஏன்டி நான் சாகனும்…” என்று சிரித்துக் கொண்டே நின்றான் இளா.
தமிழுக்கு உண்மையில் அந்த நிமிடத்தை எப்படி கடப்பதென்பதே புரியவில்லை. தான் கொண்ட லட்சியம், எதிரில் நிற்பவனின் காதல் என்று இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தாள் அவள். அதுவும் தன் மார்பில் கனத்துக் கொண்டிருந்த தாலி வேறு, அழுத்தமாக தன் இருப்பை உணர்த்த அவன் பேச்சைக் கேட்டு அவனிடம் வந்து நின்ற தன்னை நினைத்தே ஆத்திரம் வேறு.
இளா இப்படி ஒரு சூழலில் தன்னை நிறுத்துவான் என்று கனவில்கூட நினைத்ததில்லை அவள். அன்று தேடிய நேரம் வராமல் படுத்தி வைத்தவன், இன்று தேவையற்ற நேரத்தில் அவளை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறானே என்று அதுவும் எரிச்சலையே கொடுத்தது.
சிந்தனையின் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தவள் ஓய்ந்துப் போனவளாக, சற்று தள்ளி தரையில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு “அடுத்து என்ன.” என்பதே கேள்விக்குறியாக இருந்தது. பழையம் பெருமாள், சரவணப்பெருமாள், அன்னலட்சுமி, சங்கரி என்று அடுத்தடுத்து அவன் குடும்பமே கண்முன்னே தோன்றி மறைய, நிச்சயம் இப்போது அச்சமெல்லாம் இல்லை.
ஆனால், அந்த அசிங்கமான மனிதர்களின் முன் மீண்டும் அவர்களுக்கு சரியாக நிற்க வேண்டுமா?? என்றுதான் எண்ணம் சென்றது. அவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட, கதிரோன் அவள் அருகில் அமர்வது தெரிந்தது.
அவன் கையில் இருந்த தண்ணீர்பாட்டிலை அவளிடம் நீட்ட, “இதுல என்ன கலந்திருக்க.. விஷமா இல்ல மயக்க மருந்து ஏதாவதா… கல்யாணம் முடிஞ்சிடுச்சே.. அடுத்து வேற எதுக்காச்சும் பிளான் பண்றியா..?” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் இளாவை அவள் வதைக்க,
“அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. இந்த நிமிஷம் நான் நினைச்சாலும் என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டுப் போவேன். என்னால முடியும்.” என்று அவனும் அழுத்தமாகவே கூறிவைத்தான்.
அவன் பேச்சில் “ஆமா.. திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்டாட்டி தானே.. நீ தூக்கிட்டுப் போனா உன்கூடவே வந்திடுவேன்.” என ஏளனமாக தமிழ் உதட்டைப் பிதுக்கி காட்டினாள்.
“இதற்குப் பிறகும் நான் உன்னோட வருவேன்னு நினைக்கிறியா நீ..” என்று தமிழ் முறைக்க,
“இதற்குமேல உன்னை தனியா விடுவேன்னு தோணுதா உனக்கு..” என்று அவளைப் பார்த்து சிறிது வைத்தான் இளங்கதிரோன்.
மேலும் “வா தமிழ்..” என்று மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு அவன் கிளம்ப, “எங்கே அழைத்து செல்கிறான்??” என்பது தெரியாமல் மீண்டும் அவனுடன் தொடங்கியது அவள் பயணம்.