அழகிய மணவாளபுரத்தில் அமைந்திருந்த அந்த பெரிய வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தாள் தமிழ்ப்பிறை. நேரம் இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. மாலை தேரோட்டம் முடிந்து அம்மன் கோவிலுக்கு வந்து அமரவும், புறப்படத் தயாரானவளை விடவே இல்லை உமையாள்.
தமிழ் “முடியவே முடியாது..” என்று மறுக்க
“எப்படி முடியாமப் போகும்.. என்னை மீறி நீ எப்படி போறேன்னு பார்க்கிறேன். ” என்றவர் அவளின் கையை பிடித்துக் கொண்டே அலைந்தார்.
கட்டாயப்படுத்தியது கதிரோனாக இருந்திருந்தால் கையை உதறிவிட்டு சென்றிருப்பாளோ என்னவோ, ஆனால், உமையாள் கையை உதறும் துணிவு வரவே இல்லை அவளுக்கு.
அன்று மருமகனும், மூத்தப் பேரனும் பேசிய பேச்சுக்களில் இருந்து அவர்களின் எண்ணத்தை முழுதாக அறிந்து கொண்டிருந்த உமையாளுக்கு தன் பேரன் மனைவியை தனியாக அனுப்ப மனமில்லை. அதுவும் ஊருக்கு தள்ளி அமைந்திருக்கும் அவளின் அந்த கலெக்டர் பங்களாவை குறித்தும் சங்கரி அவரிடம் தெரிவித்து இருக்க, விடாப்பிடியாய் நின்று தன் வீட்டின் கடைசி மருமகளையும் தன் வீட்டிற்கு கிட்டத்தட்ட இழுத்து வந்திருந்தார் அவர்.
தமிழ் அவரை மீற முடியாமல் அவருடன் வந்து விட்டாலும், அவளின் முகம் தெளிவில்லாமல் இருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை உமையாள்.”வீட்டிற்கு சென்று பேசிக் கொள்வோம்…” என்பதே அவரது நிலைப்பாடாக இருக்க, “இப்போது விட்டால் இனி அவளை பிடிக்கவே முடியாது..” என்பதும் ஒரு காரணமாக இருந்தது.
வீட்டின் வாசலில் பேரனுக்கும் பேரன் மனைவிக்கும் ஆரத்தி, திருஷ்டி என்று அத்தனைக்கும் ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவரின் உறவுப்பெண்கள் அவருடன் இருந்து அந்த வீட்டின் மருமகளை வரவேற்று, அந்த நிகழ்வை மகிழ்ச்சியானதாக மாற்றி இருந்தனர்.
தமிழ் கதிரோனின் அருகில் அமர்ந்திருந்தாலும், முகத்தில் களையே இல்லை. எப்போதும் அந்த முகத்தில் குடி கொண்டிருக்கும் சிந்தனையோ, தீவிரமோ, கடுமையோ எதுவும் இல்லை அவளிடம். ஏதோ தவறு செய்து விட்ட மனநிலையுடன் தான் அமர்ந்திருந்தாள் தமிழ்.
உமையாள் உறவுக்கூட்டம் கலையும்வரை காத்திருந்து, அதன்பின்னரே தமிழ்ப்பிறையை நெருங்கினார். அவளின் அருகில் இருந்த ஒற்றை இருக்கையில் அவர் அமர, தமிழ்ப்பிறை அவர் அமர்ந்தது கூட தெரியாமல் யோசனையில் மூழ்கியிருந்தாள்.
உமையாள் மெல்ல அவள் கோர்த்திருந்த கரங்களின் மீது தன் கையை வைத்து அழுத்த, அவரின் அந்த தொடுதலில் தான் அவரிடம் திரும்பினாள் அவள்.
உமையாள் அனைத்தும் தெரிந்திருந்தும் “என்ன யோசிக்கிற நீ..” என்று ஏதுமறியாதவராக தமிழிடம் கேட்டு வைக்க, மெல்லிய கோடாக உதிர்ந்த புன்னகையுடன் அவரை ஏறிட்டாள் அவள்.
“எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே தெரியாதது போல கேள்வி கேட்கறீங்க பாட்டி..” என்றவள் தன்னைமீறி விரக்தியான சிரிப்பை வெளிப்படுத்தினாள்.
உமையாள் “பாட்டி உனக்கு தப்பு செய்றேன்னு நினைக்கிறாயா நீ..” என்று மீண்டும் கேட்க
“அப்படியெல்லாம் எதுவுமில்ல பாட்டி. அதுதான் நான் உங்களோட வந்திட்டேனே.. அப்புறம் என்ன?? எதையும் யோசிக்காதிங்க, நிம்மதியா இருங்க…” என்றாள் தமிழ்.
“நீ நிம்மதியா இல்லாம, என் பேரன் நல்லா இருக்கமாட்டான். அவன் நல்லா இல்லாம நான் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்??” என்று உமையாள் பரிவுடன் கேள்வி கேட்க, தமிழ் அவரிடம் சற்றே இறுக்கம் தளர்ந்து பேச தொடங்கினாள்.
“நிம்மதியா.. எனக்கு அது என்னைக்குமே நிலைக்காது போல பாட்டி… நாலு வருஷமா இந்த வேலையில சேர்ந்த நாள்ல இருந்து, நான் எனக்கு நேர்மையா இருந்திருக்கேன். எங்கேயும் வளைஞ்சு கொடுத்தது இல்ல… என் வேலையை நான் சரியாய் செய்திருக்கேன்.. உங்க பேரனை மறக்கணும்ன்னு மட்டும்தான் என் மனசுல இருந்தது.. உங்க பேரனுக்கு பதிலா என் வேலையை நேசிக்கிறதா நினைச்சுப்பேன்..”
“உங்கப் பேரனோட நினைப்பே இல்லன்னு, பைத்தியம் மாதிரி நானே நினைச்சுட்டு இருந்தேன் பாட்டி. ஆனா, இப்போ தோணுது.. அவரைப் பார்க்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன் போல. ஏதேதோ காரணம் சொன்னாலும், என் அடி மனசுக்கு உண்மை தெரியுமே..”
“அதுதான் விடாம என்னைத் துரத்திட்டு இருக்கு பாட்டி. என் காதலுக்கும், என்னோட கடந்தகாலத்துக்கும் இடையில போராடியே என் வாழ்க்கை முடிஞ்சிடும் போல. என்னால பழையம்பெருமாளோட மருமகளா நிச்சயம் வாழ முடியாது பாட்டி..”
“அந்த கேடு கெட்ட மனுஷனோட நிழல்கூட என்மேல படக்கூடாது. அவருக்கும் மேல உங்கப் பேரன் சரவணப் பெருமாள். உங்களுக்கு இதை கேட்டு கோபம் கூட வரலாம்.. ஆனா, அவனை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ஏதோ ஒரு காரணம் சொல்லி முடிச்சு விட்டுடணும்ன்னு தான் திட்டம் போட்டேன் நான். இப்பவும் என்னோட அந்த எண்ணத்துல எந்த மாற்றமும் இல்ல.”
“எனக்கு அவனை கொல்லனும் பாட்டி. அவனைக் கொன்னுப் போடணும். என் நெஞ்சில எட்டி மிதிச்சு, என் துணியை கிழிச்சு, என்னை தொட்ட அவனை என் கையால நான் கொல்லணும்… என் அப்பாவோட வயசுக்கு கூட மரியாதை கொடுக்கல அவன். எனக்காக… எனக்காக மட்டுமே வயசைக்கூட பார்க்காம அவனோட கால்ல விழுந்தார் பாட்டி அந்த மனுஷன்.”
“எனக்காகவே வாழ்ந்து, எனக்காக அசிங்கப்பட்டு, எனக்காகவே இறந்தும் போயிட்டாரு. என் அப்பா அவருக்காக வாழவே இல்ல பாட்டி. அப்படிப்பட்டவருக்கு இப்போ நான் செய்யுறது துரோகம் இல்லையா. அவரை அவமானப்படுத்தினவங்க வீட்ல நான் எப்படி வாழ முடியும்??..”
“இருந்தும் நான் வந்திருக்கேனே. உங்கப் பேரனை மறக்க முடியாம, உங்களோடப் பேச்சை மீற முடியாம வந்துட்டேனே.. இது தப்பில்லையா பாட்டி… என்னோட குற்றவுணர்ச்சியே என்னைக் கொன்னுடும் போல பாட்டி..” என்றவள் தன்னைமீறி அத்தனையையும் அந்த மூதாட்டியிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
தன்னையறியாமல் அவள் கண்கள் இறுதியில் உடைப்பெடுத்திருக்க, உமையாள் “அழாத தாயி.. அம்மாடி அழாதடா.. ” என்று அவள் கையை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொள்ள
“என்னை என்ன செய்ய சொல்றிங்க பாட்டி. இது சரவணனுக்கும் பாட்டி வீடுதானே. நீங்க அவனுக்கும் உறவுதானே. இங்கே எப்படியும் அவங்களை சேர்ந்தவங்க வருவாங்க இல்லையா.. உங்க மகள், பேரன், பேத்தி அத்தனைப் பேரையும் நான் தடுக்க முடியாதே…”
“எல்லாத்துக்கும் மேல உங்க வீட்ல இருந்து, உங்களோட சாப்பாட்டை சாப்பிட்டு, உங்க மனுஷங்களுக்கு எதிரா என்னால எப்படி நிற்க முடியும் பாட்டி. சொல்லுங்க..” என்றவள் கண்ணீருடன் அவர் முகம் பார்க்க
“நீ பாரதம் படிச்சுருக்கியா தமிழு..” என்றார் அவர்.
தமிழ் அவரின் பேச்சுப் புரியாமல் பார்க்க, “எனக்கு பாரதத்துல அர்ஜுனனைத் தான் பிடிக்கும். எதிர்ல நிற்கிறது அத்தனைப் பேரும் அவனோட சொந்தங்கள் தான். எத்தனையோ முறை தன்னைச் சேர்ந்தவர்களை எதிர்க்க முடியாம உடைஞ்சு நின்னுருக்கான்.. உன்னை மாதிரி.. ஆனா, எந்த இடத்திலேயும் அவன் தன்னோட கடமையில் இருந்து விலகினதே இல்ல.”
“கடைசி வரைக்கும் களத்துல நின்னுப் போராடி மாவீரன் அவன். என் பேத்தி நீ, நீ அந்த அர்ஜுனனுக்கு எந்த விதத்துலேயும் குறைஞ்சிடல ஆத்தா. பொட்டச்சியா பொறந்தா வீரம் இருக்கக்கூடாதா என்ன?? யாருக்காகவும் தயங்கி நிற்காத. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிக்கிறான். சரவணன் விஷயத்தை அப்படித்தான் பார்க்கணும்…”
“ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையா, தம்பி பொண்டாட்டியாகப் போறவ மேலேயே கையை வைக்க பார்த்திருக்கான். அவனை எப்படி சும்மா விட முடியும்..??”
“அவனுக்கான தண்டனையை அவன் அனுபவிக்கனும் தமிழு. நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய். ஆனா, நீ இந்த வீட்ல என்னோட பேத்தியா இருந்து தான் எதையும் செய்யணும். இந்த வீடு உன் புருஷனுக்கோ, அவனோட அண்ணனுக்கோ, அப்பனுக்கோ எந்த விதத்திலேயும் பாத்தியப்பட்டது இல்ல.”
“இது என் புருஷனோட சொந்த உழைப்பு.. எங்களோடது விவசாயக்குடும்பம் தான் ஆத்தா.. என் மாமனார் காலம் வரைக்கும் நாங்க தோப்புப்பக்கம் தான் குடியிருந்தோம். என் புருஷன் தான் இந்த வீட்டை எடுத்து கட்டினது. இப்போ வரைக்கும் இந்த வீடு என் பேர்ல தான் இருக்கு..”
“நீ இந்த நிமிஷம் சரி சொல்லு.. நான் இதை உன் பேருக்கு மாத்திக் கொடுக்கறேன். எப்போ என் ஊரை ஒன்னாக்கி என் ஜனங்களை ஒரே பக்கம் ஒத்துமையா நிற்க வச்சியோ, அப்போவே எனக்கு என் வீட்டுக்காரரைப் பார்த்ததுப் போலத்தான் இருந்தது…”
“இது உன் வீடு தாயி. நீ எந்த சங்கடமும் இல்லாம இரு.. என்னை மீறி உன்னை யாரும் நெருங்க முடியாது இங்கே. உனக்குப் பிடிக்காத யாரும் இனி இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்தும் வைக்கமாட்டாங்க அதற்கு நான் பொறுப்பு. நீ நிம்மதியா உன் வேலையைச் செய் ஆத்தா..” என்று நீளமாக உமையாள் பேசி முடிக்கவும், தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கீழே இறங்கியவள் அவருக்கு முன்னால் தரையில் மண்டியிட்டு அவரைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
சொந்தப் பேரன் பேத்திகளையே தொட்டுப் பேசாத அந்த கிராமத்துப் பெண்மணி, தமிழ்ப்பிறையை தடுக்காமல் அவள் தலையைத் தடவிக் கொடுக்க, அத்தனை நேரம் அமைதியாக தன் துணையின் கண்ணீரை கவனித்துக் கொண்டிருந்த கதிர், இப்போது தன் கண்ணில் துளிர்த்த நீரை வேறுபுறம் திரும்பி மறைத்துக் கொண்டான்.
தமிழ் சில நிமிடங்கள் கண்ணீர்விட்டு, தன் நெஞ்சில் அழுத்தியிருந்த பாரங்களை அந்த கண்ணீரிலேயே கரைத்து விட்டவளாக, மெல்ல விலகி அமர்ந்து கொண்டாள். உமையாள் அவளின் கண்களைத் துடைத்து விட்டு “இனி எப்பவும் அழக்கூடாது..” என்று செல்லகண்டிப்புடன் மிரட்டல் விடுக்க, மெல்லிய புன்னகையை அவருக்கு பதிலாக்கினாள் தமிழ்.
“நீ மேல உன் அறைக்கு போ.. சங்கரி உனக்கான உடுப்பெல்லாம் ஏற்கனவே எடுத்து வந்து வச்சிருக்கா.. குளிச்சுட்டு வந்து சாப்பிடலாம் என்ன.. ஓடு.” என்று அவளை விரட்டியிருந்தார் அவர்.
அவர் சொல்லியபடியே கதிரின் அறையில் அவளுக்கான புது உடைகள் தயாராக இருக்க, குளித்து முடித்து அங்கிருந்த காட்டன் நைட்டியை அணிந்து கொண்டவள் ஈரத்தலையுடன் கட்டிலில் அமர்ந்துவிட, அப்போதுதான் அறைக்குள் நுழைந்தான் கதிரோன்.
“இந்த நேரத்துல எதுக்காக தலைக்கு குளிச்ச..” என்று அதட்டிக் கொண்டே வந்தவன் அவள் தலையில் இருந்த துண்டை எடுத்து அவள் தலையை துவட்டி, முடியைப் பிரித்துவிட்டான்.
“கொஞ்ச நேரம் வெளியே நில்லு.. தலை காயட்டும்..” என்று அவளை இழுத்து வந்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்த்தி “இங்கேயே இரு.. நான் குளிச்சுட்டு வந்துடறேன்..” என்று மீண்டும் அவன் அறைக்குள் நுழைந்து விட, இன்னும் அவன் எதுவும் கேட்காதது ஆச்சரியம் தான் அவளுக்கு.
“ஏதாவதுப் பேசுவான்..” என்று எதிர்பார்த்திருந்தாள் அவள். இதோ அவளை விட்டுச் சென்ற அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவன் குளித்து முடித்து வெளியே வர, தமிழ் இன்னமும் அவனைக் கவனிக்காமல் தான் அமர்ந்திருந்தாள்.
கதிரோன் தலையைத் துவட்டிக் கொண்டே வந்து அவள் அருகில் அமர, அப்போதுதான் அவனைப் பார்த்தவள் “இப்போ சளி பிடிக்காதா..” என்றாள் அவனது ஈரத்தலையைப் பார்த்தபடி.
“என் முடிக்கும், உன் கூந்தலுக்கும் வித்யாசம் இல்லையா…” என்று அவன் கேட்ட தொனியில் தமிழ் சிரித்துவிட்டாள்.
“பசிக்கலையா..” என்றவன் எழுந்து கொள்ள, தமிழ் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழவே இல்லை. கதிர் ” என்ன.. ” என்று அவள் முகம் பார்க்க,
“இங்கே உட்காருங்க..” என்றாள் தமிழ்.
“முதல்ல சாப்பிடு..அப்புறம் பேசுவோம் வா..” என்று அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு கதிர் கீழே வர, பாட்டி உண்டு முடித்து உறங்கச் சென்றிருந்தார். கதிரோன் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை உண்ணவைத்து தான் மேலே ஏறியிருந்தான்.
வேலையாட்களும் உணவை எடுத்து வைத்ததோடு கிளம்பியிருக்க, அவனும் அவளும் மட்டுமே அவ்விடத்தில். “பாட்டி எங்கே..” என்று தமிழ் கேட்க, “தூங்க சொல்லிட்டேன்..வா” என்று அவளுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவன் தானும் அருகில் அமர்ந்து தனக்குமட்டும் பரிமாறிக் கொள்ள, தமிழ் அலட்டாமல் பார்த்திருந்தாள்.
“பாட்டி சாப்பிட்டாங்களா..” என்று மீண்டும் அவள் கேட்க, “ம்ம்.. (riverbendgolfcomplex.com) ” என்றதுடன் முடித்துக் கொண்டான் இம்முறை.
“எடுத்து வச்சு சாப்பிடு..” என்று வேறு தமிழுக்கு உத்தரவிட, “முடியாது..” என்று செயலில் காட்டி அமர்ந்திருந்தாள் அவள்.
கதிர் “இப்போ என்ன..” என்று கேட்டுவிட, “அப்புறம் கோபப்படலாம்.. பசிக்குது..” என்றாள் தமிழ்.
“நான் கோபமா இருக்கிறது எல்லாம் தெரியுதா உனக்கு..” என்று கதிர் சண்டையைத் தொடங்க, “எனக்கு ஊட்டி விடுவீங்களா மாட்டிங்களா..” என்று சரிக்கு சரியாக நின்றாள் மனையாள்.
“எந்த நம்பிக்கையில என்கிட்டே கேட்கிற. உனக்குதான் எப்பவுமே என்மேல நம்பிக்கை இருந்ததே இல்லையே..” என்று கதிர் சட்டென கேட்டிருந்தான்.
“உங்களுக்கு ரொம்பத் தெரியும்..” என்று நக்கலடித்தவள் “ஊட்டிவிட முடியாது இல்ல.. ஓகே.. எனக்கு சாப்பாடு வேண்டாம், பசிக்கல..” என்று எழுந்து கொண்டாள்.
“தமிழ்..” என்று கதிர் அதட்டியதைக் காதில் கூட வாங்காமல் அவள் பாட்டிற்கு அவள் மேலே சென்றுவிட, “இவளுக்கு கொழுப்பு கூடிப்போச்சு..” என்று அவளைத் திட்டிக் கொண்டே உணவுத்தட்டை கையில் எடுத்துக் கொண்டு அவள் பின்னே நடந்தான் அவன்.
அவன் அறையின் கட்டிலில் கண்மூடி அவள் படுத்திருக்க, அவள் அருகில் அமர்ந்தவன் சற்று வலுவாகவே அவள் கையைப் பிடித்து இழுத்து, எழுப்பி அமர்த்தினான் அவளை. தமிழ் “வலிக்குது..” என்று சத்தமிட,
“வாயைத் திறந்த கொன்னுடுவேன்.. அதென்னடி சாப்பிட உட்கார்ந்து எழுந்து வர பழக்கம். இத்தனை பிடிவாதம் எங்கேயிருந்து வந்தது உனக்கு..” என்று அதட்ட,
“அந்த பிடிவாதம் தான் என்னை உயிரோட வச்சிருக்கு… இல்லன்னா, எப்பவோ நான் இல்லாம போயிருப்பேன்..” என்று அழுத்தமாக மனைவி உரைக்க, தட்டை கட்டிலில் வைத்து எழுந்துவிட்டான் கதிரோன்.
அவனுக்கு என்ன செய்து அவளை சரி செய்வது என்றுப் புரியவில்லை உண்மையில். ‘அவள் இயல்பு இது இல்லை’ என்பது அவளைக் காதலித்தவனுக்குப் புரியாதா. ‘அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறாள்’ என்று புரிகிறது அவனுக்கு. அது அவளுக்கு நல்லதில்லை என்பதும் தெரிய, அவளை சரிசெய்யும் வழிதான் தெரியவில்லை.
அதே யோசனையில் இருந்தவனுக்கு இன்று பாட்டியைக் கட்டிக்கொண்டு அவள் அழுததும், அவளின் வார்த்தைகளும் இன்னும் தலைவேதனையைக் கொடுத்தது. “இவளுக்கு ஒன்றென்றால் என்னிடம் வரமாட்டாளா… பாட்டி கூப்பிட்டதும் கையை பிடித்துக் கொண்டு பூனைக்குட்டியைப் போல் பின்னால் வந்தது இவள்தானே.. இப்போது ஏன் இப்படி அழுது கரைய வேண்டும். கேட்டபோதே மறுத்திருக்க வேண்டியது தானே..” என்று அவளைத் திட்டிக் கொண்டிருந்தவன் தான்.
ஆனால், அவள் பேச்சைக் கேட்டபிறகு அவனது கோபம் மறைந்து அந்த இடத்தை வருத்தமும், வேதனையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. “எத்தனை யோசனைகள், எத்தனை கவலைகள் அவளுக்குள்… தான் மீண்டும் அவள் கண்ணில் படாமல் இருந்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பாளோ..” என்று கூட சிந்தித்துவிட்டான்.
ஆனால், மறுகணமே சிறுபிள்ளையைப் போல் “என்னால் அவளை விட முடியாது..” என்று மனம் இடித்துரைக்க, எல்லாம் சேர்ந்து தான் அவளிடம் வார்த்தையாக வெளிப்பட்டு இருந்தது.
இதோ அவன் பேசி வைத்ததற்கு அவள் வகையாக பதில் கொடுத்து விட்டிருக்க, மீண்டும் அவள் பேச்சில் தலைவலி தொடங்கிவிட்டது.
எதுவும் பேசாமல் மௌனமாகி விட்டவன் “என்னை என்ன செய்ய சொல்ற தமிழ். சொல்லு…” என்று அவளிடமே கேட்டு வைக்க,
“என்ன யோசிக்கிற நீ..” என்று அவனிலும் அழுத்தமாக கேட்டாள் தமிழ்.