வீடு வந்த சேர்ந்த அத்தனை பேரின் முகமும் உயிர்ப்பற்று போயிருந்தது… முதலிலேயே வீட்டிற்கு வந்திருந்த வசீகரன் தன்னறைக்குள் சென்று கதவடைத்திருக்க அவன்பின்னே வந்த யாருக்கும் அவனை நெருங்கும் தைரியமில்லை..
‘எல்லாம் என்னால தான்கா.. ஸாரிக்கா நான் அப்படி பேசி இருக்ககூடாது என்று இதோடு நூறு முறையாவது தமக்கையிடம் மன்னிப்பு கேட்டிருந்திருப்பார் அபிராமி.
ஆனால் எதற்கும் பதிலளிக்கும் நிலையில் இல்லாத அகிலாண்டநாயகி கண்ணீரோடு பூஜையறையில் நுழைந்தவர் கனத்த மனதோடு கண்மூடி அமர்ந்திருந்தார்.
‘பிரணவ் நீ போய் கரண்கூட இரு அவனை தனியாவிடாதே’ என்றார் பசுபதி.
‘ப்பா அண்ணா ரூம்ல இருக்கார் கதவை சாத்தியிருக்கு அவரா திறந்தா தான் உண்டு…’ என்று நிதர்சனத்தை கூற,
‘பசுபதி தம்புவை டிஸ்டர்ப் பண்ணாத..’
‘இல்லன்னா..’ என்ற பசுபதி தயக்கத்தோடு ஏதோ சொல்லவர..,
‘ப்ச் அவன் ஒன்னும் டீன்ஏஜ் பையன் இல்ல எந்த ஒரு அவசரமுடிவும் எடுக்க.. தேவையில்லாம எதுக்கு நீ இப்படி பயப்படற அவனை கொஞ்சம் ஃப்ரீயா விடு நைட் பேசிக்கலாம்’ என்றவர் அபியிடம்,
‘அம்மூவை பார்த்துக்கோ அபி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா எங்களுக்கு கொஞ்சம் அவசர வேலை சீக்கிரம் வரோம்’ என்று வெளியில் கிளம்பவும் மகன்களிடம் வசீகரன் வெளியில் வந்ததும் அழைக்குமாறு கூறிய பசுபதியும் திருவோடு கிளம்பியிருந்தார்.
அவர் கிளம்பவும் மாடிக்கு சென்ற ஜித்துவும் ப்ரணவும் தங்கள் அறைக்கு செல்லாமல் ஹாலில் அமர்ந்து வசீகரனின் அறையை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.
‘அக்கா ஸாரிக்கா நான்தான் அபசகுனமா பிங்கிக்கு ஏற்கனவே கல்யாணமாகி இருந்தா என்ன பண்றதுன்னு கேட்டேன்.. ஆனா அது நிஜமாகும்னு நான் கனவுலகூட நினைக்கலை ஸாரிக்கா’ என்று அபி மீண்டும் மன்னிப்பை வேண்ட.. பலமணி நேரங்களுக்கு பின் முதல்முறையாக மௌனம் உடைத்த நாயகி,
‘நீ என்ன செய்வ அபி எல்லாம் என்னாலதான்..! என் பையனுக்கு எங்கெங்கயோ பொண்ணு தேடின எனக்கு நம்ம பிங்கி ஞாபகம் வரலையே.. எப்படி மறந்தேன் அவளை.. முதல்லயே பிங்கியை தம்பிக்கு காட்டியிருந்தா இத்தனை வருஷம் வீணாகியிருக்காதே… இப்போ என் பையன் முழுசா உடைஞ்சு போயிருப்பான் அவனை எப்படி நான் மீட்க..??’ என்றார் கலங்கிய விழிகளோடு…
‘அக்கா நீ கவிக்காகிட்ட பேசு அவங்க நிச்சயம் புரிஞ்சுப்பாங்க… நாம கேட்டு பொண்ணு இல்லைன்னு சொல்லிடுவாங்களா…??’
‘நிச்சயம் சொல்லமாட்டா அபி ஆனா நம்மள மாதிரிதானே அவங்களும் பெண்ணோட கல்யாணத்தை பற்றி எவ்வளவோ கனவு வச்சிருப்பாங்க… இப்போ திடீர்ன்னு நம்ம இஷ்டத்தை திணிக்கிறது எப்படி சரியா இருக்கும்… அதோட பிங்கிக்கு விருப்பம் இல்லாமயா இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிருப்பாங்க… ஒரு பெண்ணோட கல்யாண கனவை கலைக்கறது தப்பு அபி.. என் பையனுக்காவே இருந்தாலும் நிச்சயம் என்னால முடியும்னு தோணலை..’
‘அக்கா அதுக்காக தம்புவோட ஆசை… அதை எப்படிவிட முடியும்..?? தம்பு பேசினதை பார்த்தா இழை இல்லன்னா வேற பெண்ணை கல்யாணம் பண்ணிப்பான்னு எனக்கு தோணலைக்கா..’ என்றவரின் குரலிலும் அத்தனை கலக்கம்.
‘எனக்கும் அதுதான் அபி புரியலை… என்ன இருந்தாலும் பிங்கியும் நம்மவீட்டு பொண்ணுதானே..?? அவளோட விருப்பமும் எனக்கு முக்கியம் ஒருவேளை அவளுக்கு அந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருந்தா நாம என்ன செய்ய..?? என்றவரின் குரலில் அத்தனை நடுக்கம்…
இழை கைநழுவி செல்வதை நாயகியால் சுத்தமாக ஏற்கமுடியவில்லை.. அதேநேரம் பிள்ளையின் ஆசையும் மனதில் வலம்வர கண்ணீரோடு தங்கையை பார்த்தவர், ‘என் பிள்ளையோட ஆசையை நிறைவேற்ற முடியாத நானெல்லாம் என்ன அம்மா..?? ஏன் அபி எனக்கு மட்டும் இப்படி நடக்குது?? கடவுள் ஏன் இந்த கல்யாண பேச்சுக்கு முன்ன பிங்கியை நாம் கண்ணுல காட்டாம போனார்’ என்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து அலமலந்து போனார்.
‘அதான் அண்ணாக்கு அண்ணியை பிடிச்சிருக்குல ஸோ அவங்க அண்ணனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ சொல்லேன்டா.. உன் பேச்சை அவங்க மறுக்கவா போறாங்க..’
‘அறிவுகெட்டதனமா பேசாத ப்ரணவ்… நான் சொல்றதுக்காக செய்ய இதென்ன விளையாட்டா இல்ல காம்ப்பிடிஷனா?’
‘வாழ்க்கை! பெண் பார்த்து நிச்சயம் வரைக்கும் வந்திருக்குன்னா பிங்கியோட சம்மதமில்லாம அத்தை கல்யாண ஏற்பாடு செய்திருக்க மாட்டாங்க.., அப்புறம் என்னன்னு சொல்லி அதை நிறுத்த..??’
‘அப்போ பேசாம நாம அந்த மாப்பிள்ளையை கடத்திடலாமா..?? அப்புறம் கல்யாணம் ஆட்டோமேட்டிக்கா நின்னுடும் நாமளும் அத்தைகிட்ட பேசி அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் பண்ணிடலாமே எப்படி என் ஐடியா..??’ என்று அறிவுபூர்வமான யோசனையை அளிக்க..,
‘ப்ச் உளராம கொஞ்சநேரம் அமைதியா இரு ப்ரணவ்’
‘டேய் அண்ணா எது சொன்னாலும் முட்டுக்கட்டை போடுற அப்புறம் அண்ணியை எப்படிடா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுவர..?? அண்ணா யார்கிட்டயும் இதுவரை பேசலை கவனிச்சியா இல்லையா நீ..’
‘ப்ச் புரிஞ்சிக்கோ ப்ரணவ் பிங்கி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம கல்யாணத்தை நிறுத்தி என்ன பண்ண..?? நீ இந்த மாதிரி யோசிக்கிறன்னு தெரிஞ்சா அண்ணாவே உன்னை உதைப்பார்… தேவையா உனக்கு? கொஞ்சம் அமைதியா இரு வேற ஏதாவது யோசிப்போம்..’
‘அடேய் ப்ரோ அதுக்குதான் சொல்றேன் அண்ணிகிட்ட பேசி அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டு அண்ணனை பத்தி பேசு.. ஒரு தீர்வு கிடைக்கும்’
‘இருடா நானும் அதான் யோசிச்சிட்டு இருக்கேன்..’
‘என்ன யோசனை..??’
‘காலையில அத்தை நிச்சயம் பத்தி பேசினப்போ பிங்கி முகத்துல பெருசா சந்தோசம் இல்ல ஏதோ டென்ஷனா இருந்த மாதிரிதான் இருந்தது… அதான் என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்’ என்றவனுமே இழையின் அலைபேசி எண்ணை முறைத்தவாறு நடைபயின்று கொண்டிருந்தான்.
**********************************************
அறையினுள் இருந்த வசீகரன் கையில் இழையின் ஒற்றை கொலுசு வீற்றிருக்க அவனருகே ஆண்டர்ஸனின் புத்தகம்..
‘செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அழுதா சரியா போச்சா? மரியாதையா இங்கிருந்து போயிடு இல்ல உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது’ என்று கண்களில் கனலோடு அவளை பார்த்தவன் நிச்சயம் சொன்னது போல செய்யும் வெறியில் தான் இருந்தான்.
அவன் கோபம் புரிந்தாலும் அவனை விட்டுவிலக முடியாதவள், ‘ப்ளீஸ் நான்தான் ஸாரி சொல்லிட்டேனே.. நிஜமாவே தெரியாமதான் என்றவளுக்குள் பயபந்து உருள.., குறையாத கண்ணீரோடு அவனை பார்த்தவள், ‘இன்னும் ஏன் கோபமா இருக்கீங்க..?? ஸாரி பிங்கி ஸாரி’ என்றாள்.
‘ஸாரியா..?? ஏய் அரைக்காபடி உன் ஸாரி யாருக்கு வேணும்.. உன்னை நம்பினதுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செஞ்சுட்டு பேச்சா பேசுற.. இன்னொரு வார்த்தை பேசின பேச வாயே இருக்காது அடிச்சு உடைச்சிடுவேன் போ இங்கிருந்து’ என்று ஆவேசமாக அவளை நெருங்க…
அவன் ஆவேசத்தில் ‘ஓஓஒ…’ என்று தேம்பி அழ தொடங்கிவிட்டாள் பெண்.
அதை எதிர்பாராத வசீகரனை அவளது கண்ணீர் சுமந்த முகம் ஏதோ செய்ய.., என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தவன் அவள் அழுகையை கட்டுபடுத்த சொன்னபோதும் குறையாமல் போனதை கண்டு ஒரு கட்டத்தில் ‘ஏய் பப்ளிமாஸ் உன்னை வாயை மூடுன்னு சொன்னேன்..’ என்று அதட்டல் போடவும் தான் அவள் அழுகை மட்டுப்பட மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு அவனை ஏறிட்டவள் மெல்லிய குரலில்,
‘ஸாரி தம்பு என்னாலதான் இப்படி ஆச்சு.. நான் தெரியாம தா…’ என்றவளிடம்
‘அடிங்க யாருக்கு யாரு தம்பு..?? உன்னைவிட பெரியவனை பேர் சொல்லி கூப்பிடுவியா ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு’ என்று சீறியவனுக்கு தன் தம்பிகளே அண்ணா என்றழைக்கையில் சிறுபெண் பெயர் சொல்லி அழைத்ததை ஏற்க முடியவில்லை..
‘சொல்றது புரியலை ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு..’ என்றபோதும் அவள் அசையாதிருப்பதை கண்டு..,
‘ஏய் என்ன வயசு உனக்கு..??’ என்றான்.
‘ஐ ஆம் ட்வெல்வ் இயர்ஸ் ஓல்ட்’ என்ற இழைக்கு ஏனென்று புரியாத பயம் இப்போது தொற்றிக்கொள்ள அச்சம் மேவிய விழிகளுடன் அவனை பார்த்திருந்தாள்…
‘பன்னிரண்டு வயசுல என்ன பேச்சு பேசுற நீ..?? இந்த வயசுல பேசக்கூடிய பேச்சா இது..’ என்று பல்லை கடித்தவன் ‘ஆமா இப்போ நீ என்கிட்டே சொன்னது உங்க அம்மாக்கு தெரியுமா..??’ என்று கேட்க அம்மா என்ற வார்த்தையில் இழையில் முகத்தில் அத்தனை பதட்டம்..,
‘இல்ல தெரியாது’ என்று மிகமிக மென்மையாக அவள் கூற..,
‘ஓஒ அப்படியா! அப்போ வா இப்போ நீ சொன்னதை அத்தை முன்னாடி சொல்லு அதுக்கப்புறம் நான் உனக்கு பதில் சொல்றேன்’ என்று அவள் கையை பிடிக்கவும் தூக்கிவாரி போட்டது இழைக்கு.
நிச்சயம் அவள் பேசியது மட்டும் பார்கவிக்கு தெரிந்தால் அடி வெளுத்துவிடுவார்… இங்கே வசீகரனின் வேதனையை காண சகிக்காமல் அவனை தேற்ற வந்தவளை அவன் அன்னையிடம் போட்டுகொடுக்க போகவும் மிரண்டு போன இழை ‘விடுங்க..’ என்று அவன் கையில் இருந்து தன் கையை பிரித்தெடுக்க அவள் கையில் இருந்த ஆண்டர்சனின் fairy tales புத்தகம் நழுவி கீழே விழுந்தது…
அதைகூட உணராமல் அவனிடம் இருந்து தப்பிக்கும் முனைப்பில் இருந்தவள் அவன் கையை பிரிந்த மறுகணமே வசீகரனை திரும்பியும் பாராமல் ஓடியிருந்தாள். அவள் செல்லவும் தான் கீழே விழுந்திருந்த புத்தகத்தை கண்டவன் அதை எடுக்க அதனருகே அவளது ஒற்றை கொலுசு!!!
அவள் கொலுசை கையில் வைத்திருந்தவனின் முகத்தில் அவனையும் அறியாமல் அன்றைய நாளின் நினைவில் புன்னகை அரும்பியது.
‘அன்னைக்கு சொன்ன வார்த்தையை அதுக்குள்ள மறந்துட்டியா இழை..?? என்னை உனக்கு சுத்தமா நியாபகமில்லையா..??’ என்றவன் உடனே தன் கைபேசியை எடுத்து ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா…’ என்ற பாடலை ஒலிக்கவிட்டு கண்களை மூடி அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.
நேற்று அவளை திருமண மண்டபத்தில் பார்த்ததில் அவளுக்கான பலவருட காத்திருப்பு தீர்ந்து அவளோடு கைசேரபோகும் நொடிக்காக ஆவலாக காத்திருந்தவனுக்கு அவளது நிச்சய செய்தி நிச்சயம் பேரிடியே.., இழையையன்றி வேறொருத்தியை அவன் வாழ்க்கை துணையாக ஏற்க நிச்சயம் வசீகரன் தயாராக இல்லை… அப்படி ஏற்பதாக இருந்தால் எப்போதோ திருமணம் முடித்திருப்பானே அவளுக்கான காத்திருப்பு இப்படி அர்த்தமற்றதாகி போனதிலும் அவள் தனக்கில்லை என்ற நிஜத்தையும் ஏற்க முடியாமல் காதல் மனம் தத்தளித்து கொண்டிருந்தது.
ஆனால் முதல்கட்ட அதிர்வில் இருந்து மீள்வதற்கு அவனுக்கு தேவைபட்டதெல்லாம் சிலமணி நேரங்களே..,
கண்மூடி படுத்திருந்த போதும் இந்திரவர்மன் என்ற பெயர் அவன் செவியைவிட்டு நீங்காதிருந்ததில் சட்டென எழுந்து தன் மடிக்கணினியை எடுத்தவன் அவசரவசரமாக எதையோ தேட சிலநிமிட அலைப்புறுதலுக்கு பின் அவன் எண்ணத்திற்கு ஏற்ப அங்கே இந்திரவர்மன் குறித்த தகவல்கள் இருக்கவும் வசீகரனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..
ஆனால் அதை சரிபார்க்க அவனுக்கு இந்திரவர்மனின் புகைப்படமும் அவன் குறித்த அடிப்படை தகவல்களும் வேண்டும்.. எவ்வாறு அதை பெறுவது என்ற யோசனையில் நடைபயின்றவன் சிலநொடிகளுக்கு பின் சற்றும் யோசிக்காமல் சாரதிக்கு அழைத்துவிட்டான்.
சாரதிக்கும் ஆஷ்மிக்கும் அன்றே சாந்திமுகூர்த்தம் ஏற்பாடாகி இருக்க அப்போது தான் அவன் ஆஷ்மிதாவின் அறைக்கு சென்றிருந்தான்..இந்நேரத்தில் அழைப்பை எதிர்பாராத சாரதி அவசியமின்றி வசீகரன் அழைக்கமாட்டான் என்பதால் உடனே ஏற்றவன், ‘சொல்லு வசீ இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்க..?’ என்றான்.
மறுபுறமிருந்தவனோ ‘என்ன பண்ற சகலை..?? என்றான்.
‘சகலையா..??’ என்று புரியாமல் நண்பனின் எண்ணை சரிபார்த்தவன் ‘மச்சி என்ன சொல்ற..?’ என்றிட.,
ஆமா சகலை.. இழைக்கு… என்று ஆரம்பித்து விடயத்தை நண்பனுக்கு தெரிவிக்க..,
‘ஏன்டா அந்த பொண்ணுக்கு ரெண்டு நாளுல நிச்சயம்னு சொல்ற அப்புறம் எப்படிடா நாம சகலை.. எனக்கு ஒன்னும் புரியலை’ என்று சாரதி நிறுத்த..,
‘மச் அதெல்லாம் உனக்கெதுக்கு ஆஷ்மிகிட்ட கேட்டு அந்த மாப்பிள்ளை ஃபோட்டோ அவனோட எஃப்.பி, இன்ஸ்டா ஐடி வாங்கி கொடு மத்ததை நான் பார்த்துக்குறேன்..’
‘டேய் எந்த நேரத்துல என்ன கேட்கிற.. இப்போ நான் எங்க இருக்கேன் தெரியுமா..??’
‘எங்கடா இருக்க..??’
‘ஆஷ்மி ரூம்ல…’
‘இருந்துட்டு போ அதுக்கும் ஐடி வாங்கி கொடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்…??’
‘டேய் இப்போ எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா..’ என்றான் பொறுமை இழந்து..,
‘இருந்துட்டு போகட்டும் அதுக்கென்னடா..??’
‘அதுக்கென்னவா..? என்று திகைத்து போனவன் நண்பனுக்கு புரியவில்லையோ என்றெண்ணி,
‘டேய் எனக்கு ஃபர்ஸ்ட் நைட்ன்னு சொல்றேன் என்னன்னு கேட்கிற.., வசீ இப்போ என் வைஃப்பத்தி நான் தெரிஞ்சிகிறதுல ஒரு நியாயம் இருக்கு அவங்க அக்காவை பத்தி விசாரிச்சா என்னை என்ன நினைப்பா..? நான் வேணும்னா ஒரு ரெண்டு நாள் கழிச்சு டீடெயில்ஸ் வாங்கி கொடுகட்டா..??’
‘இரண்டு நாள் கழிச்சா என்று நெற்றியை நீவியவன், ஏன் இழை கல்யாணம் முடிஞ்ச பிறகு வாங்கி கொடேன்’ என்று சீறினான்.
அவன் கோபம் புரிந்தாலும் இருக்கும் சூழலில் எப்படி இழை பற்றி பேசுவது என்று புரியாது, ‘டேய் கொஞ்சம் யோசிச்சு பாரு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்.. இப்போ ஆஷ்மிகிட்ட இன்னொரு பெண்ணை பற்றி விசாரிக்கிறது நல்லாவா இருக்கும்’
‘அந்த பொண்ணு யாரோ இல்ல ஆஷ்மியோட அக்கா’
‘வசீ..’
‘இதோபார் இப்படியே பேசிட்டு இருந்த கல்யாணமான கையோட டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவேன்.. நான் ஒபினியன் கொடுத்தால தான் நீ இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள இருக்க… உன்னை அங்க அனுப்ப தெரிஞ்ச எனக்கு அங்கிருந்து துரத்தவும் தெரியும் எப்படி வசதி..??’ என்று கேட்க சாரதிக்கு கண்ணில் நீர் வராத குறைதான்..
‘டேய் இழையை பத்தி விசாரிக்கிறதால நாளைக்கு என் குடும்பத்துல எந்த பிரச்னையும் வந்துடாதே..’ என்று சந்தேகத்தோடு கேட்க..,
‘அப்படி வந்தா நான் தீர்த்து வைக்கிறேன் நீ எனக்கு டீடெயில்ஸ் கேட்டு சொல்லு’ என்று அழைப்பை துண்டிக்க அதேநேரம் அறையை திறந்து அஷ்மிதா உள்ளே நுழைந்திருந்தாள்.
‘சரி சரி ஆஷ்மி வந்தாச்சு இரு மெதுவா கேட்டு சொல்றேன்’
அழைப்பை துண்டித்து ஆஷ்மியை பார்த்த சாரதிக்கு முதலிரவில் மனைவியிடம் பேச எண்ணி இருந்த அனைத்தும் மறந்து போயிருந்தது. அவளை கண்டதும் பதட்டத்துடன் சாரதி புன்னகைக்க அவளும் கதவை தாளிட்டுவிட்டு வந்தமர்ந்தாள்.
‘நீங்க நர்வ்ஸ்ஸா இருக்கீங்களா..??’ என்று வியர்த்திருந்த அவன் முகத்தை பார்த்து கேட்க.
‘இல்லையே அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல’ என்றவாறே அவளருகே அமர்ந்தவன் உன்கிட்ட ஒருவிஷயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியே..
‘இல்லையே நீங்க கேளுங்க..’ என்றாள் புன்னகையோடு..
‘இல்ல உங்கப்பா உன் பெரிப்பா குடும்பத்தை ரிசெப்ஷன்ல அறிமுகபடுத்தி இருந்தார். உன் பெரிப்பாக்கு ஒரு பொண்ணு இருக்காங்கல்ல’
‘ஹான் ஆமாம் பிங்கி! ஏன் அவளுக்கென்ன..??’
‘இல்லல்ல அவங்களுக்கு ஒண்ணுமில்ல.. அதுவந்து அக்கா அவங்க இருக்க உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்டாங்களே அதான் அவங்களுக்கு ஏன் கல்யாணம் தள்ளி போச்சுன்னு கேட்டேன்..’
‘உங்களுக்கு பிங்கியை முன்னமே தெரியுமா..??’
‘ச்சஹச்ச இல்லல்ல…’ என்றவனுக்கு எங்கே தன் திருமணவாழ்வு இன்றோடு முடிந்து போகுமோ என்ற பதட்டம் அதிகரிக்க மீண்டும் வசீயிடமிருந்து அழைப்பு..
நேரம்காலம் தெரியாமல் அழைப்பு வரவும் அதை துண்டித்து மனைவியை பார்த்தவன், ‘ஏதோ ராங் கால்.. ஒருவேளை அவங்களுக்கு வரன் பார்க்கிறதா இருந்தா எங்க சொந்தத்துல பையன் இருக்காங்க அதான் கேட்டேன்’ என்றான் சமாளிப்பாக…
‘இல்ல அவளுக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு’ என்று ஆஷ்மி சொல்லிக்கொண்டிருக்க மீண்டும் வசீயிடம் இருந்து அழைப்பு… அதை அவன் துண்டிக்க போகவும்,
‘ஏன் கட் பண்றீங்க ஏதாவது முக்கியமான காலா இருக்க போகுது பேசிட்டு வாங்க’ என்றாள்.
‘ஸுர்’
‘ஆமா பேசிட்டு வாங்க’ என்றிட கைபேசியோடு பால்கனிக்கு செல்ல ‘எவ்ளோ நேரம்டா போன் எடுக்க?’ என்று வசீ சீறி இருந்தான்.
‘மச்சான் ப்ளீஸ்டா நாளைக்கு கேட்டு சொல்லட்டா..’
‘டேய் நான் சொன்னது மட்டும் நீ செய்யல இனி குடிக்கமாட்டேன் சொல்லி நீ தண்ணியடிச்ச வீடியோவை ஆஷ்மிக்கு அனுப்பினா இதுதான் உனக்கு லாஸ்ட் நைட்டா இருக்கும் எப்படி வசதி..?’ என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
‘அடப்பாவி டேய் நீ என் நண்பனா இல்ல எதிரியா..?’
‘நான் என்னவா இருக்கனுங்கிறதை நீ தான் முடிவு பண்ண போற..‘
‘என்னடா சொல்ற..?’
‘இழையை நிச்சயம் பண்ண போறவன் டீடெய்ல்ஸ் எனக்கு அனுப்பினா நண்பனா தொடரலாம் இல்ல..‘ என்று வசீ நிறுத்தவும்
‘அனுப்புறேன் அனுப்புறேன் கண்டிப்பா அனுப்பி தொலைக்கிறேன் ஆனா கொஞ்சம் டைம் கொடு‘ என்றவன் அழைப்பை துண்டித்து மீண்டும் மனைவியிடம் பேச தொடங்கினான்… ஆனால் வார்த்தை கோர்க்க முடியாமல் ஏதேதோ பேசியவனுக்கு நல்ல நேரம் சென்று கொண்டிருப்பதில் இன்னுமே பதற்றம் தொற்றிகொண்டது.
‘என் பிரெண்ட்க்கு ஒரு எமெர்ஜென்சி கால் பேசிட்டு வந்துடுறேன்’ என்று ஆஷ்மியிடம் சொல்லியவன் பால்கனிக்கு சென்று வசீக்கு அழைத்து.. ‘வசீ உனக்கு கோடி கும்பிடு ப்ளீஸ்டா என்னை விட்டுட்டு ஏற்கனவே என் பொண்டாட்டி என்னை ஒருமாதிரி பார்க்கிறா எனக்கு பேசவே முடியலை.., நான் உனக்கு தேவையான டீடெயில்ஸ் நாளைக்கு கண்டிப்பா கேட்டு வாங்கி கொடுக்குறேனே இன்னைக்கு மட்டும் விட்டுடுடா..’ என்று கெஞ்ச..
‘டேய் என் அவசரம் புரியாம பேசாத..’
‘மச்சி ஐயர் குறிச்சு கொடுத்த நல்லநேரம் போயிட்டு இருக்கு’ என்று அவன் தவிக்க..,
‘சரி போய்தொலை ஆனா காலையில பத்து மணிக்கெல்லாம் எனக்கு நான் கேட்ட டீடெயில்ஸ் வேணும்’ என்று வைத்துவிட பெருமூச்செறிந்து உள்ளே வந்த சாரதி அங்கே அஷ்மிதா உறங்கி கொண்டிருப்பதை கண்டு நொந்துபோனவன் அவளருகே அமர,
அவனரவத்தில் ‘லைட் ஆப் பண்ணிடுங்க எனக்கு வெளிச்சத்துல தூக்கம் வராது’ என்று போர்வையை போர்த்திகொண்டாள்.
‘அதான் உங்களுக்கு உங்க ஃபிரென்ட் இருக்காரே அவர்கூட விடிய விடிய பேசுங்க ஆனா ப்ளீஸ் லைட் ஆப் பண்ணிடுங்க எனக்கு தூக்கம் வராது’
‘ஹே ஆஷ்மி கோபமா..? நிஜமாவே தூக்கம் வருதா.. உன்கிட்ட நிறைய பேசனும்னு நினைச்சிருந்தேன் ஆனா ஏதோ ஒரு டென்ஷன் அன்வான்டட் கால்.. ப்ளீஸ் இதோ ஃபோனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் இனி நோ மோர் கால்ஸ்..’ என்று சமாதானகொடி பறக்கவிட்டவன் அவளருகே அமர்ந்து அவள் கரம் பற்றி ‘அப்பவே சொல்லனும்னு இருந்தேன்…’ என்றான்.
‘என்ன..??’
‘உனக்கு முகூர்த்த புடவைவிட இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு’
‘ஹப்பா எவ்ளோ டக்கு நீங்க..’ என்று அவள் இனிதாக அவனை முறைக்க..,
‘ஏன்..??’
‘இல்ல பொண்டாட்டி புடவை அழகா இருக்குன்னு முக்கால் மணிநேரம் கழிச்சு சொல்லி இருக்கீங்களே..’ என்றபோதே விளக்கை அணைக்கப்பட உடன் ஆஷ்மியையும் சேர்த்தே அணைத்திருந்தான்.