அதில் முக்கியமான விஷயத்தை மறைத்துவிட்டார் அவரும். பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பமா இல்லையா என்பதை சொல்லாமலே குடும்பத்தை கொண்டே பேசி முடித்துவிட்டார்.
யமுனாவுமே பெண்ணிற்கு தெரியாமல் போட்டோ வாங்கி வந்தேன் என்று அங்கை சொல்லியதை மறந்துவிட்டிருந்தார் அடுத்தடுத்த பேச்சுக்களில்.
யமுனாவும் தலையை ஆட்டிவிட்டு பூங்காவனத்தை சத்தமாய் அழைத்தார்.அவர் வெளியே வரும் நேரம் தர்ஷன் காபியுடன் வர தந்தைக்கும் ஒரு கப்பை நீட்டினான் அவன்.
கொடுத்ததை வாங்கவும் முடியாமல் வேண்டாம் என்றும் சொல்லமுடியாமல் திணறிய பூங்காவனம்,
“அதான் பார்த்தேனே? திரும்பவும் பார்க்கனுமா?…” என்ற பூங்காவனம் எதற்கும் பார்ப்போம் என்று எடுத்து பார்த்துக்கொண்டே இருக்க அது இன்னுமே எரிச்சல் தந்தது யமுனாவிற்கு.
“அதை குடுங்க முதல்ல…” என போட்டோவை வாங்கிய யமுனா,
“பொண்ணு ஓகே சொல்லிருக்கேன். என்னைக்கு பார்க்க போகலாம்? நீங்க சொல்லுங்க…”
“அதையும் நீயே சொல்லிறேன்ம்மா…” என வேகமாக அவர் சொல்ல,
“சத்தத்தை குறைங்க. வேகமா பேசிட்டீங்க…” என்று கிசுகிசுப்பாய் சொல்லி செல்ல,
“அய்யய்யோ…”என்று யமுனாவை பார்க்க அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அங்கை இல்லை என்றால் பூங்காவனத்தை பிய்த்து தொங்கவிட்டிருந்திருப்பார் யமுனா.
“இல்லை யமுனா, உனக்கு தெரியாததா? நீ தான் நல்லநாள், நட்சத்திரம் எல்லாம் பார்ப்பியே. எனக்கு என்ன தெரியும். அப்படி சொல்ல வந்தேன். அதுதான் அந்த நீயே சொல்லிறேன்ம்மா வேகமா வந்துருச்சு…” என்று குழைவுடன் அவர் சொல்ல,
“மாமா நீங்க மாறவே இல்லை…” என்றுவேறு அங்கை சொல்லி சிரித்ததும் பூங்காவனத்திற்கு கிலி பிடித்தது.
“தர்ஷா, அந்த காலண்டரை எடுடா. நின்னுட்டே இருக்க. அடுத்து அம்மா என்ன கேட்பான்னு தெரியாதா?…” என பேச்சை திசை திருப்பினார்.
தர்ஷனும் நமுட்டு சிரிப்புடன் காலண்டரை கொண்டு வந்து நீட்ட அதை வெடுக்கென்று வாங்கிய யமுனா சிரத்தையுடன் பார்த்தார்.
“புதன் கிழமை நல்ல நாளா இருக்கு அங்கை. அன்னைக்கே வரோம்ன்னு சொல்லிரு…” என்று சொல்லவும் அங்கையும் நிம்மதியுடன் கிளம்ப ஆயத்தமானார்.
“சரிம்மா அங்கை நீ இருந்து பேசிட்டு இரு. கதிர் வர சொன்னான். நான் கிளம்பறேன்…” என அங்கைக்கு முன்னால் கிளம்ப,
“என்னங்க…” என்ற யமுனாவிடமும்,
“ரெண்டுதடவை போன் போட்டுட்டான்ம்மா. அவசரமா போகனும்…” என யமுனாவின் பதிலை எதிர்பாராமல் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஒரே ஓட்டம்.
“ஆமா சித்தி இருந்து லஞ்ச் சாப்பிட்டு தான் போகனும் நீங்க. நானும் ஒரு வேலையா வெளில போய்ட்டு உங்களோட சேர்ந்து சாப்பிட வரேன்…” என தர்ஷனும் கிளம்பிவிட்டான்.
“வரட்டும் வரட்டும், எப்படியும் வீட்டுக்கு தான வரனும்…” என முணுமுணுத்தார் யமுனா.
பின் அங்கை சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இன்னொரு தோழியை பார்க்க இருப்பதாக சொல்லி கிளம்ப வேலைக்கு வரும் சீதாம்மா வந்துவிட்டார்.
“என்னம்மா வீட்டுக்கு விருந்தாடியா? யாராம்?…” என கேட்டபடி கிட்சனுக்குள் நுழைய,
“ஆமாமா, உன் கண்ணுல இருந்து ஒருத்தரும் தப்ப முடியாதே? உடனே தெரிஞ்சுக்கனும்…”
“நீயும் சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்ப்ப…” என சீதாம்மா பேச,
“வேலை செய்யற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா?…” என்ற யமுனாவின் மிரட்டலில் கப்சிப்பென்று பாத்திரங்களை எடுத்து கழுவினார்.
“எல்லாத்துக்கும் சொல்லிட்டே இருக்கனும்…” என தானும் வந்து மற்ற சாமான்களை எடுத்து கழுவ போட்டார்.
“இன்னும் சமைக்கலையாக்கும்?…” என விலக்கிக்கொண்டே சீதாம்மா கேட்க,
“பார்த்தா தெரியலையா? பார்க்க வந்த வேலையை தவிர எல்லாத்தையும் நோட்டம் விடுவ நீ…”
“முதல்ல அடுப்படிய சுத்தம் பண்ணி முடி. நீ வீட்டை கூட்டி துடைக்கிறதுக்குள்ள செஞ்சிடறேன். போறப்ப வாங்கிட்டு போவ…”
“அப்படியே இம்புட்டு கறியும் சேர்த்து…” என்று சீதா சொல்லிவிட்டு யமுனாவின் பக்கம் திரும்பவே இல்லை.
“இதான்டி இடத்தை குடுத்தா மடத்தை பிடிக்கிறது. என்னத்த செய்ய? செஞ்சி வைக்கறேன்…” என அலுத்துக்கொண்டாலும் யமுனா செய்யாமல் இருக்கமாட்டார்.
எப்போதுமே கூட கொஞ்சம் தான் செய்து வைப்பார். சீதாவே கேட்கவில்லை என்றாலும் தானே கொடுத்தனுப்பிவிடுவார்.
பேசியபடியே காய்கறிகளை நறுக்கி சமையலை ஆரம்பித்திருக்க சீதா வீட்டை துடைக்க ஆரம்பித்துவிட்டார்.
—————————————————–
அந்த பில்டிங்கின் முன்னால் நின்றவள் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டிருந்த போனை சைலண்டில் போட்டுவிட்டு கண்ணாடி கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
முற்பகல் வேளையில் வெளியே அடித்த வெயிலின் தாக்கம் உள்ளே கதவை திறந்ததும் முகத்தில் அறைந்த ஏசியின் குளிர்ந்த காற்றில் மட்டுப்பட்டது.
தன்னை போல ஒரு ஆசுவாசம் அவளை சூழ்ந்ததும் ஆழ்ந்த பெருமூச்சுடன் வந்தவள் கண்ணை மூடி திறந்த பாவனையில் அவள் உள்ளே வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் நிற்பதை முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் கவனித்தான்.
“எக்ஸ்க்யூஸ்மீ…” என்றவன் பக்கம் திரும்பியவள்,
“எஸ்…” என்றாள்.
“உங்களுக்கு என்ன வேணும்?…” என்றவனின் கேள்வியில் வழக்கம் போல துடுக்காய் வரவிருந்த வார்த்தையை கட்டுப்படுத்தியவள்,
“இங்க ட்ரிப் பேக்கேஜ் பத்தின டீடெய்ல் கேட்கனும்…”
“ஓகே, சிட்…” என்றான்.
“இங்க ஆபீஸ் பாய் தான் எல்லாம் பேசுவாங்களா?…” என்ற முணங்கல் சன்னமான குரலில் அவளிடத்தில் வெளிப்பட முறைப்பாய் பார்த்தவன்,
“ஹலோ இது என்னோட கம்பெனி. யார் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க…” என்றான் கடுமையுடன் செங்கதிரவன்.
தீபக்கும், பகலின் முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஆபீஸ் பாய் சுரேஷும் வெளியே வேலையாக அனுப்பிவிட்டு அங்கே தான் வந்து அமர்ந்திருந்தான்.
“ஓஹ் ஈஸி….” என்று சாதாரணமாக அவள் சொல்ல சுர்ரென்று வந்த கோபத்தை அடக்கியவன் கஸ்டமரிடம் கோபத்தை காட்ட கூடாதென்ற நினைப்பில் நிதானத்துடன் பேசினான்.
“எத்தனை பேர்? எந்த பேக்கேஜ்?…” என தனது கேட்லாக்கை எடுத்து அவள் முன் அவன் நகர்த்த அதை திறந்து பார்த்தவள்,
“என்னோட பேரன்ட்ஸ்க்கு தான். ரெண்டு பேர்…” என சொல்லிக்கொண்டே அவற்றை பார்வையிட்டாள்.
மீண்டும் மீண்டும் அவளின் போன் அடிக்கவே எடுத்தவள் சலிப்புடன் அதனை அட்டன் செய்யும் முன்,
“எக்ஸ்க்யூஸ்மீ…” என்று அவனிடம் சொல்ல வலதுகையை நீட்டி பேசுமாறு சைகை செய்தவன் தனது போனில் கவனமானான்.
“என்ன நிவி? எதுக்கு இத்தனை போன்? நான் தான் சொன்னேன்ல இன்னைக்கு ட்ரிப் அரேஞ்ச்மென்ட் முடிச்சுட்டு தான் வருவேன்னு. இப்போ அங்க தான் இருக்கேன்…” என்றாள் தாமரை.
“அய்யோ அக்கா, இங்க உனக்கு திரும்ப மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. நம்ம பக்கத்து வீட்டு அங்கை ஆன்ட்டி ஒரு வரனை பத்தி சொல்லிட்டு இருந்தாங்க இல்லையா? அவங்க அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வராத சொன்னாங்களாம்…”
“அவங்களை யாருடி இந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னா? இந்த அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வேற வேலையா? சும்மா சும்மா மாப்பிள்ளை கல்யாணம்ன்னு…”
என்னதான் கோபத்துடன் சத்தத்தை குறைத்து பேசினாலும் கதிரின் காதுகளில் விழத்தான் செய்தது.
“இப்போ நீ ட்ரிப் அரேஞ்ச் பன்றேன்னு சொல்ற? கண்டிப்பா போகமாட்டாங்க. ஒத்துக்கவும் மாட்டாங்க…” மறுபக்கம் நிவேதா சொல்ல எரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது தாமரைக்கு.
“ஆனா செலவு உன்னோடது தானே? யோசி…” என்று தன் வேலை முடிந்தது என்று போனை வைத்துவிட்டாள் நிவேதா.
“நிவி நிவி…” என அழைத்தவள் கடுப்புடன் போனை பார்த்துவிட்டு கதிரிடம் பார்வையை திருப்பினாள்.
அவளின் பேச்சு காதில் விழுந்ததும் இயர்போனை மாட்டிக்கொண்டவன் பாட்டை கேட்டுக்கொண்டே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஹலோ…” என இவள் மேஜையை தட்டவும் திரும்பியவன்,
“எஸ்…” என்று நிமிர்ந்து அமர்ந்து இயர்போனை எடுத்துவிட்டு அவளிடம் பேக்கேஜ் கேட்லாக்கை காண்பிக்க யோசனையுடன் நின்றாள் தாமரை.
“பார்க்கறீங்களா? உட்காருங்க…”
“இட்ஸ் ஓகே…” என்றவளுக்கு குழப்பம்.
ஆனாலும் எடுத்த முடிவை செயல்படுத்த அவன் கட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டு கேட்லாக்கை புரட்ட ஆரம்பித்தாள்.
ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு என்ன என்றும் கேட்டுவைக்க அதற்கு எல்லாம் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள்,
“ஓகே, கொடைக்கானல் ட்ரிப் பிக்ஸ் பண்ணிக்கறேன். என்னோட அப்பா அம்மா தான் ட்ராவல் பன்றாங்க…” என்று அந்த விவரங்கள் அனைத்தையும் கொடுத்தவள் புதனன்று கிளம்பும் பேக்கேஜில் புக் செய்துகொண்டாள். தனது கார்டில் பணத்தை செலுத்திவிடவும்,
“ஓகே, மேம் டைமிங் எல்லாம் நான் சொன்னது தான். ரெண்டு நாள் ட்ரிப். உங்களுக்கு பிக்கப் பாயின்ட் வரதுக்கு முன்னாடி நாங்க கால் பண்ணிடுவோம். ஜிபிஎஸ் எல்லாம் இருக்கு. நீங்களும் ஃபாலோ பண்ணலாம்…”
அதன் முழு விவரங்களையும் சொல்லி எங்கே தாங்கும் இடம், உணவு முறைகள், எங்கெங்கே செல்வது என்று எல்லாவற்றையும் சொல்லி அதற்கான கார்டையும் தந்தான்.
“இது உங்களுக்கு. ட்ரிப் கிளம்பும் போது உங்க பேரன்ட்ஸ்க்கும் இந்த கார்ட் குடுத்திருவோம்…” என்று புன்முறுவலுடன் சொல்லவும்,
“தேங்க் யூ…” என்று சொல்லி கிளம்பிவிட்டாள் தாமரை.
அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் தீபக்கும் வந்துவிட அவனிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே தனது அறைக்கு சென்றான் கதிர்.
இணைத்து வைக்கவென பெற்றோர்கள் காத்திருக்க காலம் எதற்கும் காத்திராமல் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வைத்துவிட்டது.