நிஜம் – 6
வீட்டிற்கு வந்த முத்துவேலுக்கு இன்னும் கோபம் மட்டும் மட்டுப்படவில்லை. அதிலும் அன்புக்கரசியை முறைத்து முறைத்து பார்த்தபடி அத்தனை கோபம் கொண்டார்.
“அப்பா நான் கடைக்கு கிளம்பறேன். நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க…” என்று மருதவேல் கிளம்பிவிட,
“பொன்னி அரிசி குடோனுக்கு வந்துருச்சான்னு கேளு. நேத்தே ஸ்டாக் அனுப்பறேன்னு சொன்னான். இன்னும் வரலைனா புடிச்சு நாலு காட்டு காட்டு அவனுக்கு. காச குடுத்து இன்னும் சரக்க அனுப்பாம நம்மளை ஏய்ச்சுட்டு இருக்கானா அவன்?…” என்று மகனுக்கு சொல்லிவிட,
“சரிங்கப்பா, குடோனுக்கு போனை போட்டுட்டு அவன்கிட்ட பேசறேன்…” என்றவன் மொபைலுடன் கிளம்பிவிட,
“மாமா, இந்தாங்க தண்ணி…” என விமலா வந்து கொடுத்தாள்.
“புள்ளைன்னா என் மூத்த மவன் மாதிரி இருக்கனும். நீயும் பெத்து வச்சிருக்கியே இன்னொன்னு. அடங்காதது அடங்காதது. குணத்து ஏத்த மாதிரி வேலையை புடிச்சுட்டு வந்திருக்கான். என் சொல்லு கேட்டிருந்தா இன்னொரு கடையை ஆரம்பிச்சு அதுல மொதலாளியா உக்காத்திருப்பேன்ல…” என்றவர்,
“அவனுக்கு ஏத்தம், எங்க கடையில உட்கார வச்சா என் பேச்சை கேட்க வேண்டியதாகிடும்னு வேணும்னுட்டே போலீஸ்க்கு எழுதி போட்டுட்டான். அடங்காதவன், அடங்காதவன்…” என்று மனைவியிடம் காய்ந்துகொண்டு இருந்தார்.
மீண்டும் மூத்த மகனுக்கு அழைத்தவர் கடை விஷயத்தை பேசிவிட்டு கடைசியில் அவனையும் காய்ந்தார்.
“நீ பாட்டுக்கு சாயங்காலம் கடைக்கு வான்னு கூப்பிடற? பத்திரிக்கை வைக்க உன் அப்பனா போவான்?…” என எகிற மருதவேல் ஒன்றும் பேச முடியாமல் முழித்தான்.
“அத்தை கோபத்துல ஏன் மாமா உள்ளத பேசறாரு?…” விமலா மாமியாரிடம் சந்தேகம் கேட்க,
“என்னடி சொல்ற?…” என்றார் அன்புக்கரசி.
“பின்ன பத்திரிக்கை என் புருஷனோட அப்பா தான வைக்கனும். சரியா சொல்லிட்டு அதை ஏன் கோபமா சொல்றாரு?…” என்று கேட்க,
“ஐயோ அவருக்கு கேட்டுட போகுது. பேசாம இரு…” என்று மருமகளை அடக்கியவர் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டார்.
மருதவேலிடம் பேசிவிட்டு போனை வைத்தவர் மருமகள் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு,
“பேரு வைக்கும் போதே சொன்னேன் கேட்டாளா இவ? கனவுல கண்ணன் வந்தான், கன்னத்தை தொட்டான்னு பாடிட்டு அவன் பேரையும் வச்சா அவன் கைக்குள்ளையே சிக்கறதில்ல. பேருக்கேத்த வேலையை மட்டும் சிறப்பா செய்யறான்…”
அவர் என்னவோ கோபமாக தான் சொன்னார். ஆனால் கேட்ட அன்புக்கரசிக்கு அது பெருமிதமாக இருந்தது. ஆனால் கட்டிக்கொள்ளாமல் கவனமாக மறைத்தார்.
“இப்ப சீர், சினத்தின்னு ஒன்னையும் கண்ணுல பாக்கலைன்னா நம்ம சனங்க நம்புவாங்களா?….” என்று மனைவியிடம் எரிந்துவிழ,
“பொண்ணு பார்த்து பேசி முடிச்சதுக்கு அவன் எதுவும் சொல்லாம இருந்ததே பெருசு. இப்ப இதுக்கும் அவன்கிட்ட கோபத்தை காட்டினா அவன் எதையாவது தப்பா முடிவு பண்ணிட போறான். அப்பறம் ஐயோ போச்சேன்னு நீங்க என்னை கத்தி பிரயோஜனம் இல்லை…”
அன்புக்கரசி சொல்லியேவிட்டார் ஒரேடியாக. அதன் பின்னும் வாயை திறக்க முத்துவேல் நினைப்பாரா?
“புள்ளையோட சேர்ந்து ஆட்டமா ஆடற? கல்யாணம் பேசி ஊருக்கே பத்திரிக்கை குடுத்தாச்சு. அதனால பேசாம இருக்கேன். இல்லைன்னா இவன் என்ன வேண்டாம்ன்றது. சாமியாரா போன்னு நானே தண்ணி தெளிச்சிருப்பேன். எனக்கு அடங்காத புள்ளை எப்படி இருந்தா எனக்கென்ன?…”
“அவன் ஏன் சாமியாரா போறான்? புடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்வான் உங்க கண்ணு முன்னாடியே…” என முத்துவேலுக்கு கேட்கும் விதமாகவே முணுமுணுத்தவர் அவர் பதில் பேசும் முன்பு,
“விமலா அந்த சுகர் மாத்திரையை எடு. இன்னைக்கு போட மறந்துட்டேன், இப்பவே படபடன்னு வருது…” என்று கண்ணை சொருகிக்கொண்டு கேட்கவும் முத்துவேல் வாயை மூடிக்கொண்டார்.
ஏற்கனவே இப்படி இரண்டு முறை சுகர் மாத்திரை போடாமல் விட்டதால் பெரும் உடல் உபாதையில் சிக்கி சின்னபின்னமாகி வந்தார் அன்புக்கரசி.
அதனாலேயே அவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் முதலில் பயந்து போவது முத்துவேல் தான்.
மாத்திரையை வாங்கி போட்டவர் அங்கே கீழேயே ஒரு பெட்ஷீட்டை விரித்து தலையணையை போட்டு படுத்துக்கொண்டார்.
“இங்க படுக்க இடமே இல்லாத மாதிரி நட்டநடு ஹால்ல படுக்கையை போடற. ஏன் எந்திச்சு போய் ரூம்ல ஏசி போட்டு படுக்க வேண்டியது தானே?…”
“இங்க தான் பேன் காத்தும், ஜன்னல் காத்தும் நல்லா இருக்குது. தரையில குளுக்குளுன்னு தூங்கலாம். எந்திச்சு போனா தூக்கம் போயிரும். திரும்ப தலை சுத்தும். அப்புறம்…” என்று அடுத்து சொல்லும் முன்,
“என்னவோ பண்ணி தொலை. சாயங்காலம் மேற்கு தெருவுக்கு பத்திரிகை வைக்க போகனும். சீக்கிரம் எந்திச்சு ரெடியா இரு. நானும் போய் கொஞ்சம் கண்ணசந்துட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு அவர் சென்றதும் தான் நிம்மதியானது அன்புக்கரசிக்கு.
“விமலா ப்ரிட்ஜ்ல இருக்கற ரோஸ்மில்க் எடுத்துட்டு வா. குடிப்போம்…” என்று சொல்லவும் மாமியாரும், மருமகளும் சேர்ந்து அதை குடிக்க விமலா அந்த தம்ளர்களை அலசி வைத்துவிட்டு தனக்கொரு தலையணையை எடுத்து மாமியாருக்கு அருகே போட்டு அவருடன் படுத்துக்கொண்டாள் கதை பேசியபடி.
முத்துவேல் சென்னையில் பிரதான சாலையில் ஒரு சூப்பர்மார்க்கெட் கடையை வைத்து நடத்தி வருகிறார். முதலில் அவர் திருமணம் முடித்த நேரத்தில் சின்ன மளிகை கடையாக இருந்தது இப்பொழுது வளர்ச்சியில் கடையும் புது பரிமாணம் பெற்றது.
ஒரே கடை தான் என்றாலும் வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். வருமானமும் கைகொள்ளாமல் வர வீட்டு செலவுகள் தாராளமாக இருந்தும் கணிசமான தொகை சேமிப்பில் இருந்துகொண்டே தான் இருக்கும்.
மருதவேலை விவரம் தெரியவுமே தன்னுடன் கடைக்கு அழைத்து செல்ல அவனும் விரும்பியே அவரை போல வியாபாரத்தில் ஈடுபட வாசுதேவகிருஷ்ணனிடம் அவரின் அடக்குமுறை எடுபடாமல் போனது.
அன்பாக சொல்லி, அதிகாரமாக சொல்லி அந்த அதிகாரத்தில் வெகுண்டான் வாசுதேவகிருஷ்ணன்.
முன்பே அடங்காத பிள்ளை என்று அவனை கண்டித்து கண்டித்து வளர்க்க அவரின் கண்டிப்பின் வளையத்தை மீறிக்கொண்டு செல்வதில் தான் வாசுதேவகிருஷ்ணன் முனைப்பு காட்டுவான்.
அதற்காக பிடிக்காத பிள்ளை கிடையாது. ஆனால் இருவருக்குமே முட்டிக்கொள்ளும் எப்பொழுதும்.
தான் சொல்லியதை செய்யவேண்டும் என முத்துவேலும் தனக்கு பிடித்ததை தான் செய்வேன் என்னும் வாசுதேவகிருஷ்ணனும் ஒரே புள்ளியில் வந்து நின்றால் அதில் அன்புக்கரசி தான் அலைக்கழிக்கப்படுவார்.
இருவரும் பேசிக்கொண்டால் அதிகமாக வாக்குவாதங்களே நடைபெறும் என்பதால் பேச்சுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பித்தது. அது அவனின் விளையாட்டு, படிப்பு என்று ஆரம்பித்து இன்று திருமணம் வரை வந்து நிற்கிறது.
அன்புக்கரசி தான் இருவருக்கிடையில் பாலமாய் இருக்கிறார். சில நேரம் அதிகமாய் பாதிக்கப்படுவதும் அவர் தான்.
விமலாவும் அன்புக்கரசியும் பேசிக்கொண்டிருக்க சற்று நேரத்தில் ராணி வந்துவிட்டார்.
“என்ன மாமியாரும் மருமகளும் பாடு பேசறீங்களா?…” என்று கேட்டுக்கொண்டே வந்து அவரும் அமர்ந்துகொள்ள அதன் பின் எங்கே உறங்க?
திருமண துணிகளுக்கு தைக்க குடுப்பதை பற்றி பேச ஆரம்பித்து எப்பொழுது என்னென்ன உடுத்த வேண்டும் என்ற பட்டியல் போட நேரம் சென்றதே தெரியவில்லை.
————————————————
மறுநாள் காலை வழக்கமான வேலைகள் நடந்து கொண்டிருக்க வெளியே அபூர்வா கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள்.
“தேங்காய் சட்னிக்கு யாராச்சும் வெந்தயம் போட்டு தாளிப்பாங்களா? இத்தனை நாள்ல ஒரு சட்னி தாளிக்க கூட உனக்கு தெரியலை. என் புள்ளை என்ன கஷ்டமெல்லாம் உன்கிட்ட படப்போறானோ? வாய்க்கு ருசியா உணக்கையா சாப்பிட்டு வளர்ந்தவன் என் மகன்…” என பூங்கோதை திட்டிக்கொண்டு இருந்தார் மகிழை.
மகிழ் அவரின் திட்டுக்களை வாங்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள்.
“ஏய் இவளே, இத்தனை பேசறேன், தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல வாய் வருதா உனக்கு?…”
“நீங்க தான தாளிச்சதை கொட்ட சொன்னீங்க. வேகமா கேட்கவும் பதட்டத்துல குழம்புக்கு பதில் சட்னில ஊத்திட்டேன்…”
“என்னாலயா? அப்ப அந்த சட்னியை நீயே உன் புருஷனுக்கு வை. அவன் பேச்சை வாங்கிக்கோ…” என்று அவளின் தலையில் கட்ட ஐயோ என்று பதறினாள் மகிழ்.
சாப்பாட்டு விஷயத்தில் வேஸ்ட் ஆவதையோ, இப்படி கவனமில்லாமல் சமைப்பதையோ அவன் விரும்பமாட்டான்.
அதனாலேயே சமைக்கும் பொழுது பார்த்து பார்த்து சமைப்பாள் மகிழ். பூங்கோதை சமைக்கும் நேரம் உடன் இருந்தாலும் கவனமாகவே இருப்பாள்.
ஆனால் இன்று பத்திரிக்கை வைப்பதற்காக செல்லும் பொழுது மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து வைத்துவிட்டு செல்வதற்கு தான் அந்த கலவரம் அங்கே.
“நீங்க கிளம்புங்க, நானும் லட்சுமியும் சமைக்கறோம்…” என்றதற்கு வேறு அத்தனை பாட்டு அவரிடம் வாங்கினாள்.
“கல்யாணம் ஆகி அங்க போயும் எம்பொண்ணு சமைச்சு தான் ஆகனும். இங்க இருக்கற வரைக்கும் என் கையால ருசியா சாப்பிட்டு நல்லா செலாத்தலா இருக்கட்டும்னு பார்த்தா நீ அவளை அடுப்படிக்குள்ள புடிச்சு போடனும்ங்கறையா?…” என்று வேறு ஆடியிருக்க,
“நாங்க கிளம்பறதுக்குள்ள குளிச்சு முடிச்சு உன் நாத்தியும் நீயுமா ஒக்காந்து கல்யாணத்துக்கு என்ன செய்யன்னு பேசுங்க. எதாச்சும் விட்டு போச்சுன்னா கடைசி நேரத்துல ஒன்னும் பண்ண முடியாது. ஒரு குறை வர கூடாது பார்த்துக்க…” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
“இந்த சட்னியை அவனுக்கு ஊத்தாத. இத நானும் மாமாவும் சாப்பிட்டுக்கறோம். அவனுக்கு வேற அரைச்சு வை. தாளிக்கும் போது வெங்காயம் கருகிடாம தாளி. புரியுதா?…” என்று கேட்க அவள் தலையாட்ட,
“என்னத்தை விளங்குச்சோ? மண்டைய ஆட்ட மட்டும் தெரியும்…” என்று சொல்லிவிட்டு அனைத்தையும் ஒழுங்குப்படுதிவிட்டு வெளியே வர அபூர்வா உள்ளே நுழைந்தாள்.
“லட்சுமி, போய் குளிச்சுட்டு வாத்தா. நாங்க கிளம்பின பின்னாடி குளிக்க முடியாது…” என்று சொல்லவும் அவள் தலையசைத்துவிட்டு மாடிக்கு கிளம்பிவிட்டாள்.
“ஹ்ம்ம், ஒண்ணொன்னுத்துக்கும் நாம சொல்லனும். அங்க போய் என்னன்னு பொழைக்க போறாளோ அவர்க்கிட்ட?…” என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே ஹாலில் வைத்திருந்த தொலைபேசி அடித்தது.
“என்ன இது காலங்காத்தால விடிஞ்சும் விடியாம போனு வருது?…” என சொல்லிக்கொண்டே வந்து போனை எடுத்த பூங்கோதை,
“அல்லோ ஆரு பேசறது?…” என்றார் சத்தமாக,
“ஏழு பேசறேன், எட்டு பேசறேன்னு நான் சொன்னா கூட உங்க சத்தத்துக்கு என் குரல் எடுபடுமான்னு தெரியலை அத்தை. கொஞ்சம் மெதுவா பேசுங்க…” என்றவனின் நக்கலிலேயே புரிந்துபோனது பூங்கோதைக்கு.
“மாப்பிள்ளை…”
“அதே தான், அந்த பிள்ளை தான். பரவாயில்லையே, என் குரலை வச்சே கண்டு பிடிச்சுட்டீங்க…” என்று சில்லாகிப்பதை போல கிண்டலாய் பேச,
“சொல்லுங்க மாப்பிள்ளை…” என்று திக்கினார் பூங்கோதை.
“நீங்க தான் சொல்லாம போய்ட்டீங்க. அதான் எப்படி இருக்கீங்க? சாப்ட்டீங்களா? இல்லையான்னு கேட்போமேன்னு கால் பண்ணேன்…”
“என்னது?…” என்று கேட்க,
“நேத்து புடவை எடுத்துட்டு சாப்பிட்டு கிளம்பும் போது சொல்லாம கிளம்பிட்டீங்க. அதான் ஊருக்கு போய் சேர்ந்தாச்சான்னு கேட்க கூப்பிட்டேன்…” என்றவனின் குரலில் இருந்து அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இந்த நேரம் பார்த்து வீட்டில் ஆண்கள் ஒருவரும் இல்லையே என அவஸ்தையுடன் நினைத்தவர்,
“நேத்தே வந்துட்டோம் மாப்பிள்ளை…”
“ஓஹ் அப்படியா?…” என அவன் இழுக்க பூங்கோதைக்கு சந்தேகம். ஒருவேளை மகளிடம் பேசத்தான் அழைத்திருக்கிறானோ என்று.
“வீட்டுல யாரும் இல்லயே மாப்பிள்ளை…”
“நான் அதை கேட்கலை அத்தை…” என்றவன்,
“சரி நான் வைக்கறேன்…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட குழப்பத்துடனே நின்றார் பூங்கோதை.
அவரருகே வந்த மகிழ் அவர் நிற்பதை பார்த்துவிட்டு,
“என்ன இப்படியே நிக்கறாங்க? கேட்டா இதுக்கும் திட்டுவாங்க” என நினைத்து நகர,
“இந்த இவளே இங்க வா…” என்று அழைத்தார் மருமகனை.
“இப்ப மருமகன் போன் பண்ணினாரு…” என்று சொல்லவும் மகிழ் வேகமாய் கடிகாரத்தை பார்த்தாள்.
“இப்பவா? மணி ஆறரை கூட ஆகலையே?…” என்றவள் கனவு எதுவும் கண்டிருப்பாரோ? என சந்தேகமாய் பார்க்க,
“இந்தா எதுக்கு இப்பிடி மேலையும் கீழையும் பார்க்கறவ? நம்புடி…” என்றார் கோபமாய்.
“சரி சொல்லுங்க…” என்றாள் போனால் போகிறதென்பதை போல.
“போனை போட்டுட்டு நீங்க சொல்லிட்டு போகலை, ஊருக்கு போய்ட்டீங்களா? சாப்ட்டீங்களான்னு என்னன்னவோ பேசறாரு. எனக்கு ஒண்ணுமே புரியலை…” என்றவரின் புலம்பலில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவள் முழுதாய் என்ன பேசினார் என்று கேட்க அதை பூங்கோதையும் விவரிக்க,