தேன்மொழிக்கு ஆறு வயது ஆகும் போது பள்ளியில் சேர்த்தார்கள். இவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை லீவுக்கு வருபவன் அவளிடம் சண்டை போட்டு விட்டு தான் செல்வான்.
இவள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிக்கும் போது அவன் ஒன்பதாம் வகுப்பை முடித்திருந்தான்.
அவளை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்தார்கள். தன்னுடைய பள்ளியில் சேர்க்க சொல்லி எவ்வளவோ அப்பாவிடமும் அத்தையிடமும் வாதாடினான் கதிர். ஆனால் அவளை ஹாஸ்டலில் சேர்க்காமல் பக்கத்து ஊரில், சேர்த்து விட்டார்கள்.
அதன் பின்னர் இருவருக்கும் இருந்த இடைவெளி அதிகமாக தான் ஆனது.
வீட்டிலும் ஒருவரும் கதிரை பற்றி அவளிடம் அதிகம் பேசாததால் அவளுடைய வாழ்கையில் அவன் முக்கியமான இடத்தை பிடிக்க வில்லை. ஆனால் கதிரின் வாழ்கையில் முக்கிய அங்கமே அவள் தான் என்று ஆனது. அவளுக்காக தான் வீட்டுக்கு வருவான்.
கதிர் எட்டாவது படிக்கும் போது தான் அவனுக்கு கடைசி தம்பி பிறந்திருந்தான். அவனுக்கு செல்வா என்று பெயரிட்டார்கள்.
காலம் அதன் போக்கில் நகர்ந்தது. தேன்மொழி எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் போது கதிர் பதினோராம் வகுப்பில் இருந்தான். அந்த வருடம் தான் தேன்மொழியின் சித்தப்பா துரைராசு கல்லூரி முடித்தார்.
காலேஜ் முடிந்த அடுத்த நாளே “என் கூட படிச்ச ரேகாவை லவ் பண்ணுறேன். பொண்ணு பாக்க போகணும்”, என்று வந்து நின்றார் துரைராசு..
சகுந்தலாவும் செல்வியும் அவனுக்கு பரிந்து பேசவே தர்மதுரை ராஜதுரை இருவரும் செல்லதுரை மற்றும் சண்முகம்மாளைக் கூட்டிக் கொண்டு பெண் பார்க்க சென்றார்கள்.
[the_ad id=”6605″]ரேகா குடும்பம் அந்தஸ்தில் உயரத்தில் இருந்தது. அவர்களுக்கு துரைராசு வீட்டில் உள்ளவர்களை பிடிக்கவில்லை என்றாலும் மாப்பிள்ளையான அவனை அனைவருக்கும் பிடித்தது.
கல்யாணத்துக்கு அப்புறம் தன்னுடைய மகளை அவனை அவனுடைய வீட்டை விட்டு பிரிக்க சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
கல்யாணமும் முடிந்தது. மெல்ல மெல்ல வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது. ரேகா தன்னுடைய கை வரிசையைக் காட்டினாள். எல்லாரையும் அவமதித்தாள். அனைவரும் பொறுத்து போனார்கள்.
முதலில் தட்டிக் கேட்ட துரைராசுவும் கொஞ்சம் கொஞ்சமாக மனைவி பக்கம் சாய்ந்தது போல இருந்தது. அவர்களுக்கு கீதா பிறந்தாள்.
அப்போது தான் தேன்மொழி பூப்பெய்தினாள். மதியழகனுக்கு சகுந்தலா தகவல் சொன்னதும் குச்சில் கட்ட வந்து விட்டார்.
பதினாறு கழிந்து சடங்கு செய்யலாம் என்று சொல்லி அனைவருக்கும் அழைப்பு கொடுத்தனர்.
கதிரை அழைக்க மதியழகன் பள்ளிக்கு சென்றார். பல மாதமாக கதிர் தேன்மொழியைக் பார்க்க வில்லை. அதனால் அவளை காண எண்ணினான். அதனால் சந்தோசமாக தந்தையுடன் கிளம்பி வந்தான்.
மதியழகன் வீட்டில் சீர்வரிசை தட்டுகள் அனைத்தும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அனைவரும் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
கதிரும் சந்தோசமாகவே கிளம்பினான் அவனுடைய தேன்மொழியைக் காண.
அனைவரும் ஒன்று எதிர் பார்க்க ஆனால் அங்கு நடந்ததோ முற்றிலும் வேறு. தாய்மாமனின் சீர் வரிசை தட்டுக்கள் அங்கே இறக்க பட, தேன்மொழியை அலங்கரித்து சபைக்கு கூட்டி வந்தார்கள்.
பட்டு சேலையில் தேன்மொழியைக் கண்ட கதிர் சித்தம் தொலைந்தது நிஜம். பருவ வயதில் இருக்கும் அவனுக்கு அவளை தவிர வேறு எங்கும் பார்வை செல்ல வில்லை.
அனைவரையும் நிமிர்ந்து பார்த்த தேன்மொழி அவனைக் கண்டதும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
அந்த முறைப்பே அவனுக்கு அவள் மேல் இருக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தியது. சிரியவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
எப்படி தான் பிரச்சனை ஆரம்பித்தது என்று யாரும் அறிய வில்லை. சிறிது நேரத்தில் தேன்மொழியின் சித்தப்பா துரைராசு, கதிரின் அப்பா மதியழகனின் சட்டையை பிடித்து விட்டார்.
மதியழகன் அவசரப் பட வில்லை. துரைராசுவை சமாதான படுத்த முயற்சிக்கும் போது தன்னுடைய மகன் சட்டையை பிடித்திருந்ததைப் பார்த்த மதிவாணன் வயதில் பெரியவராக துரைராசுவை கன்னத்தில் அடித்து விட்டார்.
அதை பொறுக்க முடியாத துரைராசு அந்த வயதானவரை தள்ளி விட அவர் கீழே விழுந்தவர் தான் பின் எழவே இல்லை.
தன்னுடைய அப்பாவை தள்ளி விட்ட துரைராசுவை மதியழகன் அடி பின்னி எடுக்க, தங்கள் தம்பி அடிபடுவதை தாங்க முடியாமல் தர்மதுரையும் ராஜதுரையும் அதை தடுக்க சென்றார்கள்.
[the_ad id=”6605″]மதியழகன் அடிப்பதை நிறுத்த வில்லை என்றதும் ராஜதுரை மதியழகனை அடிக்க கை ஓங்கி விட்டார்.
தன்னுடைய அண்ணனும், கணவனும் சண்டைக்கோழி போல் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்த சகுந்தலா “ஆத்தி”, என்று பயந்து போய் அவர்கள் அருகில் வரும் போதே “பெரியவருக்கு மூச்சு பேச்சு இல்லை”, என்று ஒருவர் குரல் கொடுக்க “அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்”, என்று மற்றொரு குரலும் கேட்டது.
இதில் அனைவரின் கவனமும் மதிவாணன் பக்கம் திரும்ப, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிர் பிரிந்து விட்டது.
தன்னை பாசமாக வளர்த்த அப்பாவைக் கொன்ற துரைராசுவைக் கொல்லும் அளவு வெறி வந்தது மதியழகனுக்கு. ஆனால் நிலைமை அவரை கட்டிப் போட்டு வைத்திருந்தது.
இங்கே இரண்டு குடும்பத்திலும் கலவரமானது போல் இருந்தது. மதிவாணன் உடலை இறுதி மரியாதைக்காக வீட்டில் வைத்திருக்க இங்கே ராஜதுரை தன் தம்பியான துரைராசுவை அடி கொன்று விட்டார். அதை தர்மதுரையும் தடுக்க வில்லை.
குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுக்க தன்னுடைய அண்ணன் அடித்த அடியை எதிர்க்காமல் வாங்கிக் கொண்டிருந்தார் துரைராசு.
ஆனால் அவர் மனைவி ரேகா “என் புருஷனை அடிக்க நீ யார்?”, என்று மரியாதை இல்லாமல் பேசி, அதை தட்டி கேட்க வந்த தர்மதுரையையும் வாய்க்கு வந்த படி பேசி விட்டாள்.
அவள் மரியாதை இல்லாமல் பேசுவதை கூட காதில் வாங்காமல் இருந்தார் துரைராசு. அவரால் ஒரு உயிர் போய் விட்டது என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
அவர் அவருடைய நினைவுகளில் சுழன்று தெளியும் போது அவர் கண்களுக்கு தெரிந்தது செல்லதுரை தன்னுடைய மருமகளான ரேகாவை அடித்தது தான்.
தன்னுடைய பொண்டாட்டியை தன் தந்தை அடிப்பதையும் அனைவரும் அவளை திட்டுவதையும் மட்டும் கண்ட துரைராசு “எதுக்கு என் பொண்டாட்டியை அடிக்கிறீங்க? நாங்க மட்டும் இளக்காரமா? நான் சும்மா தள்ளுனேன். அதுக்கு அந்த கிழவன் செத்தா நான் பொறுப்பா? இனி இந்த வீட்ல இருக்க மாட்டேன். ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடுங்க”, என்று சண்டை போட்டு அன்றே தன்னுடைய மனைவி ரேகா மற்றும் மகள் கீதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டே சென்று விட்டார்.
சகுந்தலா தன்னுடைய தந்தையை நினைத்து கதறி ஆழ அடுத்து மொத்த குடும்பமே மதியழகன் வீட்டுக்கு சென்றது. “என்ன ஏதுன்னு கேக்காம எங்க அப்பாவை கொன்ன உங்க குடும்பம் உள்ளே வரக் கூடாது”, என்று அவர்களை வாசலிலே நிற்க வைத்தார் மதியழகன். அதில் ராஜதுரை கவுரவம் அடி வாங்கியது.
எவ்வளவு கெஞ்சியும் கடைசி வரை அவர்கள் யாரையும் உள்ளே வர விட வில்லை. பின் ஊர் காரர்கள் சொன்னதால் செல்லதுரையையும் சகுந்தலாவையும் மட்டும் மதிவாணனை பார்க்க அனுமதித்தார்.
[the_ad id=”6605″]அவருடைய சடங்கு முடிந்ததும் செல்லதுரையும் சகுந்தலாவும் கிளம்பினார்கள். அப்போது சகுந்தலாவை பார்த்த மதியழகன் “இனி நீ எனக்கு தங்கச்சி இல்லை. உனக்கு பிறந்த வீடும் இல்லை. இதை மீறி இங்க வந்தா மானம் மரியாதை கெட்டுரும்”, என்று சொல்ல அங்கிருந்து தன்னுடைய மருமகளை அழைத்து வந்துவிட்டார் செல்லதுரை.
தன்னுடன் இருந்த தன்னுடைய நண்பனை இழந்தது அவருக்கு பெரும் வலியைக் கொடுத்தது. அவர் மனம் புரிந்து அவரை தாங்கிக் கொண்டாள் சண்முகம்மாள்.
மதியழகன் சகுந்தலாவை பேசியதைக் கேள்வி பட்ட ராஜதுரைக்கும் கோபம் வந்தது.
“உன் அண்ணனால தான எங்க தம்பியும் எங்களை விட்டுட்டு போனான். இனி நீயும் அங்க போக தேவை இல்லை. உனக்கு பிறந்த வீடு வேணும்னா அங்க போயிரு. இந்த வீட்டு பக்கம் வந்துராத. அப்படி இல்லைன்னா இனி இது மட்டும் தான் உன் வீடு”, என்று சகுந்தலாவை சொன்னதும் மனதைக் கல்லாக்கி கொண்டு இங்கேயே இருந்து விட்டாள். பிறந்த வீட்டையே மறந்து விட்டாள்.
அதன் பின்னர் இரண்டு குடும்பத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தையே இல்லை. அதுவும் எப்போதாவது விழாவில் சந்தித்துக் கொள்ளும் போது வம்பு பேசுபவர்கள் எதையாவது இழுத்து விட்டு மேலும் சண்டையை தான் அதிகப் படுத்தினார்கள்.
எதனால் சண்டை வந்தது என்று மதியழகனுக்கு கூட தெரியாது. உண்மையான காரணம் தெரிந்தது துரைராசுக்கு மட்டும் தான். அவர் மட்டும் அன்று மதியழகன் சட்டையைப் பிடிக்காவிட்டால் எதுவுமே நடந்திருக்காது.
அதன் பின்னர் ஊரில் உள்ள பெரியவர்களை வைத்து சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு மொத்தமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டார் துரைராசு.
வீட்டில் இருந்த அனைத்து சோகத்தையும் மறக்கடித்தது தேன்மொழியின் சிரிப்பொலியும் கொலுசொலியும் தான். அதனால் அவள் அனைவருக்கும் செல்லமானாள்.
தர்மதுரை மற்றும் ராஜதுரைக்கு செல்ல மகளாகவும், செல்வி மற்றும் சகுந்தலாவுக்கு தலைவலியை உண்டாக்குபவளாகவும் கண்ணன் செந்திலுக்கு செல்ல தங்கையாகவும், அதே நேரம் சண்முகம்மாளுக்கு எரிச்சலைக் கொடுக்கும் செல்ல பேத்தியாகவும் இருந்தாள்.
மொத்தத்தில் அந்த வீட்டின் உயிர்ப்பே தேன்மொழியால் தான்
ஆனால் அந்த வீட்டின் உயிர்ப்பை மொத்தமாக அழிக்க தவம் இருந்தான் கதிர். அவன் சந்தோஷத்தை அழித்த அவள் குடும்பத்தையே பழி வாங்க எண்ணினான். அதற்கு ஒரே வழி தேன்மொழி தான்.
அவளால் மட்டுமே அவன் நிம்மதி இல்லாமல் தவித்தான். அது போக அவள் குடும்பத்தால் தான் தன்னுடைய தாத்தா செத்து, அவர் நினைவாகவே அன்னம் அடிக்கடி அழுவதும் அவன் மனதில் பதிந்து போனது.
காதல் தீயை, நீர் அணைக்குமா???