“உனக்கெல்லாம் என்னடா மரியாதை, பீ…” வேண்டும் என்றே ராஜா நிறுத்த அவன் சட்டையை கை வலியையும் மீறி கொத்தாக பிடித்தான் மயிலப்பன்.
ராஜா அவன் கையை எளிதாக பிரித்து, “பீகாக் பாதர்-னு சொல்ல வந்தேன் டா மயிலப்பா” என்றான் பற்களை காட்டி.
“என்ன இன்ஸ்பெக்டர் இது?”
அய்யனார் அவர்கள் வாக்குவாதத்தை பார்த்து கேட்க, “உங்க ஆளும் பேசுறான் சார், கை வைக்கவா சொல்லுங்க, ரெண்டு பேர் மேலையும் வைக்கிறேன்” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.
“ஆமா இன்ஸ்பெக்டர் எப்பவும் நியாயமா தானே இருப்பார்” எகத்தாளமாக குணா.
“டேய் என்ன நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் ஓவரா துள்ளிட்டு இருக்க, அடங்குடா” குரலுயர்த்திய இன்ஸ்பெக்டர் சட்டையின் பட்டன் ஒன்றை போட்டு அய்யனாரிடம் திரும்பினார், “என்ன சார் பிரச்சனை?” என கேள்வி எழுப்பினார்.
“என்னையா நினைச்சிட்டு இருக்கீங்க? காரணமே தெரியாம தான் மேல கை வச்சீங்களா? மவனே மொத்த இடத்தையும் கொளுத்திப்புடுவேன் ?” ஆத்திரமாக இன்ஸ்பெக்டர் என்னும் பார்க்காமல் அவரிடம் சண்டைக்கு நின்றான் குணா.
“காரணமே இல்லாம என் கை முகம் எல்லாம் அடிச்சு ஒடச்சு வச்சிருக்கான் இவன்” – மயிலப்பன்
“காரணமே இல்லாமலா? வாயில்லா ஜீவன் மேல அருவாளை வச்சு அத்தனை கீறல் போட்டது நீ இல்லாம உன் அப்பனா?” – ராஜா
“நான் போட்டேன்னு சொல்ல உன்கிட்ட என்னடா ஆதாரம் இருக்கு? என்னமோ ஒரு மாடு மேல எவனோ கை வச்சதுக்கு நடு ரோட்டுல வச்சு என்ன அடிக்கிறான், அந்த மாட்டுக்கு என்ன உயிரா போய்டுச்சு?”
அது வரை அமைதியாய் இருந்த தேவா தனக்கருகில் மேஜையின் மேலிருந்த க்ளோபை எடுத்து இரண்டே எட்டில் சில அடி தூரம் நின்ற மயிலப்பனை அடைந்தவன், இருக்கும் இடம், இன்ஸ்பெக்டர், நீதி என எதுவும் பார்க்கவில்லை.
உடலில் இருந்த தைரியத்தை எல்லாம் திரட்டி மயிலப்பனின் தலையில் போட்டுடைக்க, மரத்தினால் ஆன அந்த உருண்டை மயிலப்பனின் தலையில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தியது.
நிச்சயம் அது உயிரை சேதப்படுத்தாது என்ற நம்பிக்கையில் தான் தேவா பயன்படுத்தியது. ஆனாலும் மயிலப்பனின் தலையில் வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
தேவாவின் இந்த கோவத்தை அங்கிருந்த எவருமே எதிர் பார்க்கவில்லை, அதுவும் இன்ஸ்பெக்டர் முன்னால் கை ஓங்கவே மாட்டான் என்ற நம்பிக்கையில் தான் மயிலப்பன் மீண்டும் மாட்டை பற்றி பேச தேவாவால் அதை தாங்க முடியவில்லை. அர்ஜுனன் கூட அவனின் அடாவடியில் அதிர்ந்து போனார்.
அந்த உருண்டையை பிடித்திருந்த இரும்பு கம்பியை ஆத்திரத்தோடு பற்றியிருந்தவன், “மாடா இருந்தாலும், இந்த தேவாவோட உயிர்டா அவன். ஆம்பளையா இருந்தா கயித்த அவுத்துவுட்டு அது பக்கத்துல நெருங்கிருக்கணும் அப்ப தெரிஞ்சிருக்கும் என்னோட வளர்ப்பு பத்தி. அத விட்டு கட்டியிருக்குற மாட்டுகிட்ட உன்னோட வீரத்தை காட்டுனா பெரிய புடுங்கியாகிடுவியா நீ?”
தன்னுடைய நாற்காலியிலிருந்து ஆத்திரமாக எழுந்த இன்ஸ்பெக்டர் தேவாவிடம் வந்து அவன் மேல் கை ஓங்க, அவர் கையை அந்தரத்தில் பிடித்திருந்தான் தேவா.
“அவன் மிச்சம் போட்ட எழும்ப தின்கிற எச்ச, நீ என் மேல கை வைக்கிறியா?”
பற்களை கடித்து அந்த இன்ஸ்பெக்டரை தேவா பற்றியிருக்க, அவனை இன்ஸ்பெக்டரிடம் பிரித்தெடுக்கவே அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிளால் முடியவில்லை.
“கை எடுடா, இல்லனா வாழ்க்கை மொத்தமும் உள்ள இருக்குற மாதிரி ஆகிடும்”
எவருடைய எச்சரிக்கையும் எடுபடாமல் போக நண்பர்கள் அதட்டி தான் சற்று ஆசுவாசமானான், “தேவையில்லாத பிரச்சனை வேணாம் தேவா, லூசு மாதிரி பண்ணாத”
“என் காளையன் ஜல்லிக்கட்டுல ஜெயிக்கிறது உன் ஒடம்பு மொத்தமும் எரிஞ்சா என் கிட்ட வந்து நேருக்கு நேரா மோது, இல்லையா சொல்லு மாட எப்படி வளக்கணும்னு நான் சொல்லி தர்றேன். அத விட்டு சில்ற மாதிரி…” எங்கு அடித்தால் அய்யனார் தன்மானம் அடிபடுமோ அங்கு அடித்தான் நேர்பார்வையோடு.
“தலைமுறை தலைமுறையா ஜல்லிக்கட்டுல மாடு விடுற எனக்கு மாட எப்படி வளக்குறதுன்னு நீ சொல்றியா டா? உன் சோழிய என்னவோ அத மட்டும் பாரு” அய்யனார் சினத்தோடு எழுந்து நின்றார்.
“அப்றம் ஏன்யா நீ பட்டறையை போட்டு என் மாட தூக்க பிளான் போடணும்?” – தேவா
“உன் மாட்ட தூக்க நான் ஏன்டா பிளான் போடணும்? தூக்குற அளவு நீ பெரிய சீமராஜா இல்ல” அவனை போலவே அதே நக்கலில் அய்யனார் கேள்வி எழுப்பினார்.
“என்ன அய்யனாரே, உன்ன பத்தி எனக்கு தெரியாதா? தானா வந்து என் மாடு மேல கை வக்கிர அளவு இவன் அறிவாளி இல்ல, இவனுக்கு தைரியமும் இல்ல. எங்க சொறிஞ்சா எங்க அரிக்கும்ன்னு உன்ன விட யாருக்கு தெரிஞ்சிட போகுது?”
தேவா பேசுவதான் உள் அர்த்தம் புரியாமல் இன்ஸ்பெக்டர், “சார் என்ன இம்புட்டு நேரம் இந்த காவலாளிகிட்ட பேசுறீங்க. நீங்க சொல்லுங்க எப்.ஐ.ஆர் பைல் பண்ணி தள்ளிடலாம்”
அய்யனாரின் அமைதியை சிரிப்போடு பார்த்த தேவா, “இருங்க இன்ஸ்பெக்டர் சார், உங்க சார் ஏதோ யோசிக்கிறாப்ல. யோசிக்கட்டும்” என்றான் நக்கலாக.
“சூன்டாக்கப்பயே நீ என்ன மெரட்டுறியா? நான் நெனச்சா உன் மாட மட்டுமில்லடா, பைய பைய உன் உசுரையும் எடுக்க முடியும்” சினம் தெறிக்க ஆணவத்தோடு அவன் எதிரில் வந்து நின்றார் அய்யனார்.
சீரியவன் அய்யனார் முகத்தின் முன்பு சொடக்கிட்டு, “எந்த பதவி இருக்குற தைரியத்துல பேசுறியோ, அதே பதவியை விட்டு ஆறே மாசத்துல உன்ன தூக்கி, அந்த இடத்துல என்னோட ஆள ஒக்கார வைக்கல, நான் தேவானந்த் இல்லடா” கண்கள் சிவக்க சபதமிடுபவனை இமை தட்டாமல் பார்த்தார் அய்யனார்.
“உன் தாத்தா பிச்சை போட்ட பதவி தானே மாப்பிள்ளை, எப்படி ஏற வச்சோமோ அதே மாதிரி இறக்கி விட்டுடலாம், இதுக்கு ஏன் ஆறு மாசம் டைம் குடுக்கணும்?” அய்யனாரின் கோவத்திற்கு ராஜா மேலும் தூபம் போட்டான்.
அதுவரை அவர்கள் பேச்சினை கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன், பெரியசாமியின் கை பிடித்து கிளம்பலாம் என்க, பெரியசாமிக்கு பயம். “மாமா கொஞ்சம் பொறுத்து பாத்தா பணம் எடுத்தவன் யாருன்னு கண்டு புடிச்சிடலாம்” என்றார் உள்ளிறங்கிய குரலில்.
பெரியவரோ, “இங்க இதுக்கு மேல என்னால நிக்க முடியல பெரியசாமி. உனக்கான காச நான் வாங்கி தர்றேன்” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாது போக, வாகனம் மீண்டும் விருதுநகரை நோக்கி பயணித்தது நிம்மதியிலாத மனநிலையோடு இரண்டு உள்ளங்களை ஏந்தி.
இங்கு அய்யனார், “பணம் பதவி இருக்குற ஆளுங்க மட்டுமே என்னோட பலம் இல்ல தேவானந்த் தம்பி”
“அடியாளுங்கள வச்சு அடிப்பேன்னு மெரட்டுறியா அய்யனார்?” வாசல் பக்கம் சற்று தழுதழுத்த குரல் ஓங்கி ஒழிக்க கண்களிலிருந்த கோவத்தை உடனே மறைத்த அய்யனார் திரும்பி பார்த்தார்.
வாசலில் வெள்ளை வேஷ்டி சட்டையில் இளங்கோவன் நின்றிருந்தார். இளங்கோவன், அய்யனாரை போலவே அந்த ஊரில் அதிகம் செல்வாக்குடையவர். தேவானந்தின் அன்னையின் தந்தை. தேவானந்த் தாத்தா.
பேரப்பிள்ளைகள் அதிகம் இருந்தாலும் தேவானந்தின் மீது அதிகம் பிரியமுடையவர். காரணம், மற்ற பேரபிள்ளைகள் நகரத்தின் வாழக்கையை விரும்பி இவரோடு ஒன்றாமல் போக, இவன் மட்டும் வாரம் ஒரு முறையாவது தாத்தாவை வந்து பார்த்துவிட்டு தான் செல்வான்.
அவன் வரும் பொழுதெல்லாம் தன்னுடைய நிலங்கள், அறுவடை, தென்னை பற்றிய தனக்கு தெரிந்த மொத்த தகவல்களையும் கூறி அவனையும் அதற்கு பழக்கப்படுத்தியிருந்தார்.
காளை வந்த பின்பு தினம் அரை மணி நேர பயணம் என்றாலும் வந்து தாத்தாவையும், காளைகளையும் பார்த்த பின்னரே செல்வான். இந்த ஒரு பாசம் போதாதா அந்த பெரியவரின் அன்பை பெற? இப்பொழுது கூட அவனை காணாமல் ஆட்களிடம் விசாரித்த பொழுது தான் பேரன் காவல் நிலையத்தில் இருப்பது தெரிய வந்து உடனே வந்துவிட்டார்.
“ம்ம்ம்? ஆளுங்கள கூட்டியாரியா அய்யனாரே?” முதியவர் இன்னும் சற்று குரல் உயர்த்த அடங்கிப்போனார் அய்யனார்.
அவர்களின் சம்பாஷணை அய்யனாரின் தலையீட்டை குறிக்க, “என் பேரன் மேல கை வக்கிர அளவு தகிரியம் எங்கேயிருந்து வந்துச்சு உனக்கு? அருவா எடுத்து வீசுனேனு வை, ஒருபயலும் உசுரோட போக மாட்டீங்க”
ஆத்திரம் அடங்காமல் பெரியவர் பேச, தாத்தாவை நிறுத்தி ஸ்டேஷன் விட்டு வெளியேற, எவரும் அவனை தடுக்கவில்லை.
காரில் வம்படியாக இளங்கோவனை ஏற்றி பின்னால் அமர்ந்தவனை முதலில் அருகிலிருந்த ஒரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பெரியவருக்கு கோவம் தன்னிடம் எதுவும் கூறவில்லையே என்ற ஆற்றாமை வேறு வந்தது,
“கிழவன் தானே இவன், என்ன செஞ்சிட போறான்னு அலட்சியம் வந்துடுச்சு”
இரண்டு வருடங்கள் முன்பு வரை தலையை கம்பீரமாக உயர்த்தி நடந்தவர், இடையில் சற்று உடல் தளர்ந்துவிட முன்பிருந்த கம்பீரம் இப்பொழுது குறைந்து போனது அவருக்கே வருத்தமாக இருந்தது. உடல் எதற்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே.
“யார் சொன்னா? என் தாத்தா வந்தா பிரச்சனை பெருசாகிடுமோன்னு பயம் எனக்கு. அதான் இதோட விட்டேன், இல்லனு வையி இந்நேரம் நசநசன்னு பேசுபவன் வாய் இருந்துருக்காதுல” அவர் மனம் கோணாமல் பேசிவைத்தான் தேவா.
அது தான் உண்மையும் கூட, பருவ வயதில் இவர் செய்யாத சேட்டையே இல்லை, இழுக்காதே வம்பும் இல்லை என்பதை ஆச்சி மூலம் கேள்வி பட்டதுண்டு, இப்பொழுது விட்டால் கூட அரிவாளை எடுத்து வெட்டவா வெட்டவா என வந்து நிற்பார்.
அதற்குள் அங்கு வந்த ஒரு நர்ஸ் அவன் முகத்தை திருப்பி கன்னத்திலிருந்த காயத்திற்கு மருந்திட, அந்த பெண்ணிடம் மொத்த கவனத்தையும் வைத்தான்.
“நீங்க இந்த ஊரா?” அந்த பெண் எதுவும் பேசாமல் அவன் கண்களை பார்த்து பிறகு வேலையை தொடர, “நான் உங்கள முன்ன பின்ன இங்க பாத்ததில்லையே”
“முகத்தை அசைக்காதீங்க சார், மருந்து போட முடியல” அவள் குற்றம் சாட, அதற்கும் சிரித்தான் அவன்.
“இவ்ளோ அழகான முகத்தை பாத்தா அமைதியா யாரால இருக்க முடியும்? நீங்களே சொல்லுங்க பாப்போம்” அந்த பெண்ணுக்கும் சட்டென சிரிப்பு வந்துவிட, இதழ் கடையோரம் புன்னகையை மறைத்துவிட்டாள்.
“ஆரமிச்சிட்டான் இவன்” ராஜா அலுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
“உன் இதழ்கடையோராம் மாண்டு சாகும் அந்த புன்னகையோடு என் இதயமும் மடிந்ததென்னடி…!!?” அந்த பெண்ணை பார்த்து சிறு கவிதை ஒன்றை வாசிக்கவும் அவ்வளவு தான் மறைத்த புன்னகை இப்பொழுது சரளமாக வெளியே வந்தது.
“சார் நான் வேலை பாக்கணும்” அந்த பெண் அலுத்துக்கொண்டது கையால் வாயை மறைத்து சிரிப்பை அடக்கும் எண்ணத்தோடு. மீசையை வெட்கத்தோடு முறுக்கிக்கொண்டான் அவனும்.
“தேவா வேணாம்டா, வேலை இருக்கு. உன் பாட்டி வேற உன்ன கேட்டு அத்தனை போன் பண்ணி அனத்திட்டே இருக்கா” என்றார் தாத்தாவும் கெஞ்சுதலாக.
சரி என்றவன் மருத்துவமனை விட்டு செல்லும் வரையில் அந்த பெண்ணை ஏதாவது ஒரு வகையில் சீண்டிக்கொண்டே இருந்து சென்றுவிட்டான்.
****************
விருதுநகர் செல்லும் முன்பே அர்ஜுனனுக்கு அழைப்பு வந்தது எ.சி.பியிடமிருந்து, அந்த சீட்டு கம்பெனி ஓனர் மும்பையில் அகப்பட்டதாகவும், இரண்டு நாட்களுக்குள் பணத்தின் மொத்த விபரமும் கேட்டு தகவல் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
பெரியசாமிக்கு நிம்மதியாகி போனது. நிறைந்த மனதோடு அர்ஜுனனிடம் நன்றியை தெரிவித்தார், “உங்க குடும்பத்துல இருக்க சங்கடம் எல்லாம் பணியா கரைஞ்சிடும் மாமா உங்க நல்ல மனசுக்காகவே”
அர்ஜுனனுக்கும் பெரிய நிம்மதி வந்து போனது மனதினுள், “ஏன் பெரியசாமி? அந்த பையனுக்கு என்ன ஆச்சுன்னு நாம இருந்து பாத்துட்டு வந்துருக்கணுமோ?” ஏதோ வாக்கியத்திற்கு வேறு ஏதோ பதில் தந்தார் பெரியவர்.
“பாத்தாலே ரவுடி பசங்க மாதிரி தெருஞ்சது மாமா, அவன் கோவத்தை பாத்திங்கல்ல? எனக்கு அவிங்க நடவடிக்கையே சந்தேகமா இருக்கு” ஒவ்வாமையோடு பதில் தந்தார் பெரியசாமி.
நிதானமாக அவரை பார்த்த அர்ஜுனன், “என் ரத்தத்துல உதிச்ச என்னோட வாரிசு என்னைக்கும் தப்பு பண்ணிருக்காது பெரியசாமி” என்றார் அவ்வளவு அழுத்தமாக முழு நம்பிக்கையோடு.
“மாமா?” அதிர்வாய் அவர் பார்க்க, அர்ஜுனன் தலையை அசைத்தார்,
“நீ சொன்னதும் சரி தான் ய்யா, பணியா விலகி போகுமா தெரியாது, ஆனா என் மனசுக்கு ஒரு சந்தோசம் கிடைக்க போகுது” அவர் முகத்தில் அவ்வளவு தெளிவு.