அழகான ஞாயிறு காலை, தோப்பில் தேங்காய் பறிக்க ஆள் வந்திருக்க குடும்பமாக அனைவருமே அங்கே இருந்தனர்.
இமயனும் மதியும் பண்ணைக்குச் சென்றிருந்தனர், மற்றவர்கள் காலை உணவை நிழலில் அமர்ந்து உண்டுகொண்டிருக்க “கொஞ்சம் பேசணும்” என்ற குரலில் அவர்கள் கவனம் அங்கே பதிந்தது.
கோபமாக வந்து நின்றிருந்தார் வெள்ளைச்சாமி மதியின் தாய் வெள்ளையம்மாவின் அண்ணன் “வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம்” என்றார் மாணிக்கம்.
“நான் சாப்பிட வரல என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்” என்றார்.
“அத எதுக்கு இங்க வந்து பேசுறீங்க” என்றார் வர்ணம்.
“அவன் என் பொண்ணுகிட்ட பேசக் கூடாது, நானும் ரெண்டு வருஷமா மாப்பிள பாக்குறேன் மாமாவைத் தான் கட்டிப்பேன்னு பிடிவாதம் பிடிக்குது கழுத” என்றார் ஆத்திரத்தோடு.
“இங்கபாருடி அதிசயத்தை!! , அந்தத் தேவி புள்ள இன்னுமா மாமாவ நெனச்சுட்டு இருக்கு” என்று ஆச்சர்யம் கொண்டாள் நித்யா.
“யாரு தேவி??”— உஷா.
“இந்த மீசையோட பொண்ணு, நீங்க அப்போ ரொம்ப சின்னப் பசங்க, இவ அப்போல்லாம் கொரங்கு கைல கெடச்ச வாழப்பழம் மாதிரி என் மாமா என் மாமான்னு சுத்திட்டு இருப்பா, இவரு பிரச்னை பண்ணிட்டு போனதுக்கப்புறம் அவளை நான் பாத்ததே இல்ல”.
“ஆனா மேடம் விடாம முயற்சி பண்ணி இருக்காங்க போல” என்றாள் நித்யா.
“அண்ணன்தான் பாவம் ஒரு மொறைப்பொண்ணு கூட இல்ல, எல்லாமே தங்கச்சியா போய்டுச்சு” என்று வருந்தினாள் ஜமுனா.
“இருந்துட்டாலும்…. அப்படியே அது பாசமா பேசிக் காதலிச்சுருக்கும், போடி அங்குட்டு, அவளும் நம்மள மாதிரி ஒத்த வார்த்தை பேசப் பத்து குட்டிக்கரணம் அடிக்கணும், அதுக்கு லவ் எல்லாம் செட் ஆகாது”.
“நல்ல பொண்ணா பாத்து கட்டி வெச்சுடனும், வரவங்க அண்ணனை நல்லா பாத்துக்கணும், நம்ம ஊர்ல அப்படி யாரு டி இருக்கா!” என்று அவர்கள் மூவரும் மும்முரமாகப் பட்டிமன்றம் நடத்த.
“ஏன் நான் முறை பொண்ணுதானே” என்றாள் மல்லி.
நித்யாவை தேடி தோப்பிற்கே வந்துவிட்டாள் “இன்று ஞாயிற்று கிழமை அதோடு தேங்காய் பறிக்க ஆள் வருவதால் அனைவரும் தோப்பில் இருப்போம்” என்று கூறியிருந்தாள் நித்யா.
உஷா ஜமுனாவின் முகம் அதிருப்தியை காட்டியது.
“நீ முறை பொண்ணு இல்ல எங்க அண்ணன் முறைக்குற பொண்ணு, இப்படி யோசிச்சுட்டு அது கிட்டகூட போயிடாத செவுல பேத்துடும்” என்றாள் ஜமுனா.
மல்லியின் முகம் இருண்டது நால்வரும் வெள்ளைச்சாமி பேசுவதை கவனித்தனர்.
“பாத்து பேசுங்க எங்க புள்ளைங்க அப்படி கிடையாது அவன் பேசுனத நீங்கப் பாத்தீங்களா?” என்றார் வர்ணம்.
“ரெண்டு வாரம் முன்னாடி பெருமாள் கோவில் கொளத்துல வழி மறிச்சு பேசியிருக்கான், பாத்தவங்க சொன்னாங்க” என்க.
“பஞ்சாயத்துனு ஆனபிறகு சம்பந்தப்பட்டவளை அழைச்சுட்டு வந்திருக்கணும், எங்க உங்க மவ” என்று வந்து நின்றான் இமயன்.
“அவ சின்னப் புள்ள அவளுக்கு என்ன தெரியும், இவன் தான் அவ மனச கெடுக்குறான்” என்க.
“யோவ் மீசை… அவ்ளோதான் மரியாத” என்று வேட்டியை மடித்துக்கட்டி அவரை நோக்கி இமயன் செல்ல இடையில் புகுந்தார் மாணிக்கம்.
“டேய் இருடா நான் பேசுறேன்” என்றவர்.
“இங்க பாரு வெள்ளைச்சாமி எப்போ தங்கச்சி, தங்கச்சி மவன்னு பாக்காம போனியோ அப்போவே உன்கூட உறவு முறிஞ்சு போச்சு, உன்கூட உறவு வெச்சுக்க எங்களுக்கு யாருக்கும் விருப்பம் இல்லை, கெளம்பு” என்றார்.
“ஏய்யா சாமி நான் சொல்றத கேளு, விடு டா…. விடு” என்று அவனைப் பிடித்து மாற்றினார் மாணிக்கம்.
“இங்கப்பாரு எங்கூட்டு புள்ளைங்களுக்கு எப்போ யாரை எப்படி கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும் உன் வேலை ***** பாத்திட்டு போ” என்றான் கண்களில் சிவப்பேறி.
அவன் கோபத்தை பார்த்த மல்லி பயத்தில் நித்யாவின் பின்னே ஒளிந்துகொண்டாள்.
இத்தனை நேரம் அருகில் ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்த மதி சட்டென்று இமயனின் அருகில் வந்து நின்றான்.
“இங்க பாரும் உம்ம பொண்ணுகிட்ட பல தடவை சொல்லியாச்சு இஷ்டம் இல்லனு, இவ்ளோ நாள் அவளுக்குப் பொறுமையா சொன்னேன், ஒண்ணா வளந்தவன்ற காரணத்துக்காக உன் மேல இருக்குற வெறுப்பை அவ மேல காட்ட முடியல”
“பன்னெண்டு வயசுல அவளுக்கு இருந்த மனிதாபிமானத்துல பாதி இருந்திருந்தா கூட என் அம்மாவை அப்படி விட்டுட்டு போயிருக்க மாட்ட” என்றான் மதி வேதனையோடு.
எத்தனை வருடங்கள் ஆனாலும் சில வடுக்கள் மாய்வதில்லை,கணவன் விட்டுச் சென்ற மூன்றாம் மாதம் படுக்கையில் விழுந்தார் வெள்ளையம்மா.
பொறுப்பெடுக்க வேண்டிய தமயன் மனைவியின் பேச்சைக் கேட்டுத் தங்கையையும் அவளின் மகனையும் அப்படியே விட்டுச் சென்றார்.
“என் பொண்டாட்டி உடம்பு சரி இல்லாதவ, படுக்கைல கிடக்குறா இவள கூட்டிட்டு போனா அங்க யார் பார்க்க? இங்கயே இருக்கட்டும் அப்போ அப்போ வந்து போறேன்” என்றவர் ஐந்து வருடத்தில் வந்தது இரண்டு முறை.
உயிரற்ற சடலமாகத் தங்கை கிடக்க சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை கூடக் காத்திருக்காமல் புறப்படத் தயாரானார்.
செந்திலை அழைக்கச் சென்ற ஆண்கள் இருவரும் மண்சரிவில் மாட்டிக்கொள்ள பொறுப்புகளை எடுத்துக்கொள்ளக் கூட ஆள் இல்லை அங்கே, அந்தச் சூழலில் வெள்ளைச்சாமியின் பேச்சு அனைவரயும் முகம் சுழிக்க வைத்தது.
மதியை அழைத்துச் சென்று வளர்த்தினால் பெரியவன் ஆனதும் தன் மகளையே கல்யாணம் செய்துகொள்ள கேக்கலாம், மகளுக்கும் மதி மாமா என்றாள் இஷ்டம்.
ஒருவேளை அப்பனை போலத் தன் மகளைப் பாதியிலே விட்டுச் சென்றால்?? அவருடைய கற்பனைகள் தறிகெட்டு ஓட.
“மதியை யாருக்காவது தத்து குடுத்துடுங்க இல்லனா அவன் அப்பன்கிட்ட அனுப்பிடுங்க” என்றவரின் பேச்சில் அங்கிருந்தவர்கள் அவனைப் பிடித்து நிறுத்தினர்.
“வெளில போயா…. இந்த வாசலை இனிமே நீ மிதிக்கக் கூடாது” என்றான் அவரைத் தள்ளிவிட்டு
“மாமா பாவம் நம்ம கூடக் கூட்டிட்டு போலாம்பா” என்று அழுத மகள் தேவியை அடித்து இழுத்து சென்றார்.
அதன் பிறகு இப்பொழுதுதான் வந்திருக்கிறார், இடையில் தேவி பலமுறை மதியை சந்திக்க முயற்சி செய்தாள், சிலமுறை அவன் மிகப் பொறுமையாக அவளுக்குப் புரியவைதான்.
அன்று கோவிலில் மதியுடன் தேவி பேசியதை பார்த்த யாரோ வெள்ளைச்சாமியிடம் கூற, மகள் மதியை மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் சேர்ந்து மனிதரை மிரட்டிவிட்டது.
“தயவு செஞ்சு கிளம்புங்க, இனிமே இது விஷயமா பேச நீங்க வரக் கூடாது, உங்க மக எங்க குடும்பத்துக்கு வேண்டாம் இது இப்போ எடுத்த முடிவில்ல எப்போவோ எடுத்தது, முக்கியமா இது என்னோட முடிவில்ல அவனோடது” என்றார் மாணிக்கம் மதியழகனை காண்பித்து.
வெள்ளைச்சாமி மதியை பார்த்துக்கொண்டே அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
ஒரு நல்ல நாளே பாழாகிவிடத்து என்ற எரிச்சலில் “நான் வீட்டுக்குப் போறேன்” என்று இமயன் திரும்பிச் செல்ல, மாணிக்கத்திடம் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அவன் பின்னேயே மதியும் சென்றான்.
“என்ன பிரச்சனை விராலி? ஏன் இப்படி இருக்க ? ரொம்ப கஷ்டமா இருக்கு, யாரோடயும் பேசமாட்டற என்னாச்சு உனக்கு” என்று அவள் முகத்தை நிமிர்த்தித் தன்னை பார்க்க வைத்தாள் ஹிமானி.
“ஒன்னும் இல்ல தீதி” என்றவள் விழிமூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு “இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதா” என்றவள் குரலில் என்ன என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
தன் தாயை தேடி அவரின் அறைக்குள் சென்றாள் ஹிமா “மா…” என்று அழைத்தபடி வந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் சல்மா, மகள் இப்படி தேடி வந்து பேசியது எப்பொழுது என்றே அவருக்கு மறந்து விட்டது.
அனைவர் மீதும் ஒரு கோபம் தன் உணர்வுகளுக்கு யாருமே மதிப்பளிக்கவில்லை என்ற வருத்தம், அவளை அனைவரிடம் இருந்தும் ஒதுக்கி வைத்தது.
இன்று மகளே வந்திருக்க “என்னடா” என்று அவளை நெருங்கினார் சல்மா.
“விராலியை பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் கூற, அதிசயமாக ஹிமா சல்மாவின் அறைக்குள் செல்வதை பார்த்த விராலியின் தாய் வம்ஷி கதவின் அருகில் வந்து நின்றாள்.
“என்னம்மா என்ன பேசணும்” என்றவர் மகளைப் பிடித்துத் தன்னருகில் கட்டிலில் அமர்த்தினார்.
“விராலிக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல, மனசுக்கு பிடிக்காம அவ எப்படி சந்தோஷமா வாழ முடியும், அவளுக்கு என்ன பிரச்சனைன்னு யாருமே கேக்க மாட்டறீங்க, சித்திகிட்ட சொல்லிப் பேசச் சொல்லுங்கம்மா” என்றாள் தாயிடம்.
“விரா ஏதும் சொன்னாளா” என்க.
“ஹ்ம்” என்றாள் ஹிமா.
அதற்குள் விராலியின் தாய் வம்ஷியின் குரல் நடுக்கூடத்தில் ஓங்கி ஒலித்தது.
ஒவ்வொருவராக அவர்களுடைய அறையிலிருந்து வெளியில் வந்தனர் “வம்ஷி என்ன பேசுற நீ, ஹிமா அப்படி எதும் சொல்லல, உனக்கு அவளைப்பத்தி தெரியாதா?” என்றார் சல்மா.
“உங்ககிட்ட சொன்னாளா இல்லையா விரா கல்யாணத்தை நிறுத்தணும்னு, என் பொண்ணுக்கு பெரிய எடத்துல கல்யாணம் முடிய போகுது, உங்க பொண்ணுக்கு ஒன்னும் சரிவரல அந்தக் கோவம்தானே”.
“விரா கல்யாணத்தை நிறுத்தி அதால இந்தக் குடும்பத்துல பிரச்னை வந்து குடும்பம் பிரியனும் அப்படித்தானே அக்கா” என்று வம்ஷி அபாண்டமாகப் பழிபோட.
“நிறுத்துங்கம்மா யார்மேல பழி போடுறீங்க” என்ற அன்சல் “என்ன நடக்குது இந்த வீட்ல” என்றான் அனைவரையும் பார்த்து.
“வம்ஷி நீ தேவையில்லாம பேசுற” என்று முன்னே வந்த சல்மாவை ஓங்கி அறைந்தார் கணவர் பிரணத்.
“குடும்பத்தைப் பிரிக்கப் பக்குறியா” என்றவர் மீண்டும் கை ஓங்க இடையில் நுழைந்த ஹிமாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது அவர் கைகள்.
அனைவருமே ஸ்தம்பித்துவிட்டனர், ஆண்கள் யாரும் இதுவரை மனைவியரை அடித்ததில்லை “என்ன பண்ற பிரணத்” என்ற தேவகி பேத்தியின் அருகில் சென்று பார்க்கக் கன்னம் சிவந்து கிடந்தது, உதட்டின் ஓரம் ரத்தம் கசிந்தது, பதறிவிட்டார் தேவகி.
அவரைப் பொறுத்தவரை ஹிமானி லக்ஷ்மி, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இதுவரை அவளைக் கடிந்து கூடப் பேசியதில்லை, அவளுக்குக் காயம் ஏற்படுத்தியதை அவரால் தாங்க முடியவில்லை, ஏதோ அபசகுனமாகப் பட்டது தேவகிக்கு.
அனைவரும் ஹிமானியையும் சல்மாவையும் ஆறுதல் படுத்த விராலி அப்பொழுதுதான் கீழேயே இறங்கி வந்தாள்.
“என்ன ஆச்சு” என்றவளை பார்த்த தேவகி “என்ன ஆச்சா?? இங்க நடக்குற எதுவுமே உனக்குத் தெரியாத அளவுக்கு என்ன யோசனைல இருந்த” என்றவர்.
“இங்க வா” என்றார், அவள் அருகில் வந்ததும் “உண்மையா சொல்லு கல்யாணம் வேண்டாம் பிடிக்கலைனு சொன்னியா ஹிமாகிட்ட “என்றார் அவளைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே.
அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டவள் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது “ஆம்” என்று சொல்லிவிட்டால் தன் மீதான கண்காணிப்பு அதிகரிக்கும், இதுவரை கஷ்டப்பட்டு செய்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகப் போய்விடும்.
வேறு வழி இல்லை என்று முடிவு செய்தவள் “இல்ல நான் அப்படி சொல்லல, கல்யாணம் நாள் நெருங்கிடுச்சு உங்க எல்லாரையும் விட்டுட்டு போகணும், அதோட தீதிக்கு இன்னும் கல்யாணம் முடிவாகலயே அந்தக் கவலைல அப்படி சொன்னேன் வேற ஒன்னும் இல்ல” என்றவளை அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் ஹிமானி.
“பாத்திங்களா நான் சொன்னது உண்மைதானே” என்றார் வம்ஷி.
தேவகி தளர்ந்து அமர, விராலியை பார்த்த ஹிமாவின் விழிகளில் வேதனை நிறைந்து நின்றது, யாரிடமும் ஒன்றும் பேசாமல் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.
ஹிமானியை அப்படி யோசிக்க முடியவில்லை அவர்களால், விரா சொன்னதை அவள் தவறாகப் புரிந்துகொண்டதாக எண்ணினார்கள்.
இரவு வரையிலும் கூட வெளியில் வரவில்லை, ரமீலா உணவு எடுத்துச் சென்றபோதும் “வேண்டாம் பசி இல்லை” என்றுவிட்டாள்.
கன்னம் தீயாக எரிந்தது, தான் இடையில் போகாமல் இருந்திருந்தால் இந்த அடியும் தாய்க்கே விழுந்திருக்கும்.
இத்தனை வருடம் வாழ்ந்தும் என்ன புரிந்து கொண்டார் இந்த மனிதர் மனைவியை என்ற சிந்தனையே மனம் முழுதும், உடலும் உள்ளமும் சோர்ந்து கிடக்க தோள் சாய துணையை தேடியது மனது.