மறுநாள் அம்ருதாவின் குடும்பமும் கிளம்பி வந்து விட, வீட்டுப் பொறுப்புகளை எல்லாம் பெரியவர்கள் எடுத்துக் கொள்ள அம்ருதாவின் அண்ணன் அமுதன் தான் அவள் கூட மருத்துவமனையில் இருந்தான்.
எல்லாவித பரிசோதனைகளையும் செய்து முடிவுகளுக்காக காத்திருந்தனர். அமுதன் ஒரு சித்த மருத்துவன். இதுவரை வந்திருந்த மருத்துவ அறிக்கைகளைப் படித்துப் பார்த்தவன், இருதய நோய் சிகிச்சை நிபுணராக இருக்கும் அவனது நண்பன் ஒருவனுக்கு அனுப்பி வைத்தான்.
சிடுசிடுத்துக் கொண்டே தான் எல்லாம் செய்தான்.
“ஏன் அம்ரு சொல்லலை? ஒரு ஃபோன் போடுறதுக்கு என்ன உனக்கு? நீ தான் மாப்பிள்ளைய கெடுத்து வைச்சிருக்க. கல்யாணத்தப்போ நல்லா தான் இருந்தாரு.
போன வாட்டி வந்தப்பவே சொன்னேனே, அவரை டெய்லி ஜாகிங் போக சொல்லுனு. என்னை விட எவ்ளோ சின்ன வயசு, ஆனா இப்பவே ஹெல்த் இஸ்யூனு படுத்தாச்சு. வீட்ல என்னத்தை கிழிக்கிறன்னு தெரியல. இந்த லட்சணத்தில நீ படிச்சதே நியூட்ரிசன் சம்பந்தமா தானே. வெளில சொல்லிடாத, காறித் துப்புவாங்க” என்று வந்த நிமிடத்திலேயே அவளிடத்தில் பொரிந்து தள்ளியிருந்தான்.
அம்ருதாவுக்கு ஆயாசமாக வந்தது. அஜய்க்கு உடல் நலக்குறைவு அவளுக்கு அழுத்தம் தான். இதில் முதன்மை பாதிப்பும் அவளுக்குத் தானே. ஆனால் அதை ஒருவரும் உணர்ந்தது போல் தெரியவில்லை. அவனிடம் கூற முடியாத ஆலோசனைகளை, கோபத்தை எல்லாம் இவளிடம் இறக்கி வைத்துக் கொண்டனர்.
அவள் பொதுவாகவே எல்லாவற்றையும் சற்று தீவிரமாக எடுத்துக் கொள்பவள். பெரிதாக யாரிடமும் வெளிப்படையாக பேசி விட மாட்டாள். எல்லாம் மனதில் வைத்து மருகுவாள். சில நேரம் அவளையும் மீறி கோபம் வார்த்தைகளாக வெளிப்பட்டாதால் தான் உண்டு.
அதிலும் அவள் அண்ணனிடமும், அப்பாவிடமும் வாயே திறக்க முடியாது. திருமணம் முடித்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்தப் பழக்கம் மட்டும் இன்னும் மாறி விடவில்லை. ஆனாலும் பொறுக்காமல்,
“இதுல என் தப்பு என்ன இருக்கு அண்ணா? எல்லாரும் என்னையே குறை சொன்னா நான் என்ன பண்ண முடியும்?” என்று மெதுவான குரலில் கூறினாள்.
“என்ன பண்றதுன்னா? ஒரு வீட்டை நடத்துற முழுப் பொறுப்பு ஒரு பொண்ணுக்கு தான் இருக்கு. வீட்டு ஆம்பிளை வெளில அலைஞ்சு திரிஞ்சு வருவாங்க. நீ தான் கவனமா வேண்டியது பார்த்து செஞ்சு ஹெல்த்த பார்த்துக்கணும். பிள்ளைகளையும் பார்க்கணும். அது தவிர வேற என்ன வேலை இருக்கு? கொஞ்சம் வெயிட் ஏறினப்பவே டயட், எக்சர்சைஸ்னு ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா?”
இதில் நியாயம் இல்லை என்றாலும் இவனிடம் பேசிப் பயனில்லை என்பதால் அமைதி காத்தாள். எல்லா விரல்களும் அவள் மீதே குற்றம் சாட்ட, தன்னை இந்த நிலையில் நிறுத்திய அஜயின் மீது தான் அவள் கோபம் திரும்பியது.
பரிசோதனை முடிவுகள் வந்த பின், அந்தந்த துறை மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து, வண்டி வண்டியாக ஆலோசனை மூட்டைகளைக் கட்டி வீடு வருவதற்குள் அஜய்க்கு அப்படி ஒரு அயற்சி. சில தினங்கள் மருத்துவ வாசம் சோர்வைக் கொடுத்திருந்தது. அதற்கும் மேல் முதல் முறையாக வாழ்வைக் குறித்த ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கத் துவங்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக மனைவியின் கலங்கிய முகம் தான் அவனை இம்சிக்கிறது. பலமுறை முயன்றும் அவளிடம் பேசுவதற்கு ஏதுவான சந்தர்ப்பம் அமையவில்லை என்பதை விட, அவனின் அம்மு அப்படி அமையவிடவில்லையோ என்று இப்போது தோன்றியது.
இது அவனின் இயல்பே இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று எல்லாவற்றையும் இலகுவாய் ஏற்று கடந்து போகும் ஜாலி பேர்வழி. தற்போதைய உடல் நலக்குறைவு ஒரு அதிர்ச்சி என்றாலும், அதைக் குறித்து அவன் பெரிதாக யோசிக்கவில்லை. மனைவியைக் குறித்த யோசனை தான்.
அதுவும் எல்லாரும் அவளைக் குற்றம் சொல்லி காய்ச்சி எடுத்திருப்பார்கள் என்கின்ற அனுமானமும் ஓரளவு இருந்தது. இயல்பை மீறி இந்த சிந்தனை அவனை ஆக்ரமித்துக் கொண்டிருப்பது கூட சற்று எரிச்சலாக இருந்தது.
சில வாரங்கள் ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தி இருக்க, இதில் இருந்து தப்பித்து அலுவலகம் செல்வதும் நடக்காத காரியம். வீடு சில தினங்களுக்கு ஆரவாரமாகத் தான் இருக்கப் போகிறது, இவளை எப்படி சரிக்கட்டுவது என்ற யோசனையுடன் தான் வீட்டிற்குள் நுழைந்தான்.
மருத்துவமனையில் இருக்கும் போதே கருணாகரனும் அவனிடம் கொஞ்சம் கோடிட்டுக் காட்டி இருந்தார்.
“நீ படிச்ச பையன்லே, நான் சொல்லித்தான் உனக்குத் தெரியனும்னு இல்ல. உன் குணம் எனக்குத் தெரியும். ஆனா உங்கம்மா எல்லா விஷயத்துக்கும் மருமகப் புள்ளைய தான் கரிச்சுக் கொட்டுறா. சம்பந்தி வீட்ல கூட அதே போலத்தான் சொல்றதாட்டம் இருக்கு.
நீ சிரிச்சுப் பேசி எல்லாத்தையும் கவுத்து வச்சிருக்கயாட்டம் இருக்கு. ஆனா உன் நாக்கு எம்புட்டு நீளம்னு எனக்கு நல்லாத் தெரியும்லே. அதுக்கு எல்லார் கிட்டயும் அந்தப் புள்ள பேச்சி வாங்கிட்டு கிடக்கு. மரியாதையா வாயைக் கட்டிப் பழகு. வந்து என்ன ஏதுன்னு பார்த்து பேசி சரி பண்ணப் பாரு. நான் உங்க ஆத்தாவைக் கூட்டிட்டு ஊரு போகிற வழிய பாக்குதேன். இங்க இருந்தான்னா மருமகளைக் கொடைஞ்சுக்கிட்டே இருப்பா” என்றிருந்தார்.
இவனும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி இருந்தான். ஆனால் அது அத்தனை எளிதான விஷயம் இல்லை என்று இவனுக்கு யார் சொல்வது?
ஆலம் சுற்றியே செல்வி மகனை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.முதல் ஆளாக, ஆர்த்தி ஓடி வந்து தந்தையின் காலைக் கட்டிக் கொண்டாள்.
“ஹேய் ஆருக்குட்டி, எப்படி இருக்க?” என்று மகளைத் தூக்கி கொஞ்சியவாறே கேட்க, நன்றாக இருப்பதாக தலையை ஆட்டினாள் சின்னவள்.
“ஆரு, கீழே இருங்கு. அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்து இப்ப தான் வந்திருக்காங்க. மொதல்ல குளிக்கட்டும்” என்று அவன் பின்னால் வந்த அம்ருதா ஒரு அதட்டல் போட, முகம் சுருக்கிக் கொண்டே இறங்க முற்பட்டாள்.
“இருக்கட்டும் அம்மு. ஒரு பத்து நிமிஷம் என் கூட இருக்கட்டும், அப்புறம் போறேன்” என்றவன், மகளை மடியில் இருத்திக் கொண்டு கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்தான்.
தமயந்தி,
“குடிக்க ஏதாச்சும் கொண்டு வரட்டுமா தம்பி?” என்று வர,
அந்த வரவேற்பறையில் இருந்த அனைவரும் அவனை ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தனர். ஆனாலும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, அமுதனுக்கோ பொறுமை பறந்து விட்டது.
“இல்லை மாப்பிள்ளை, அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் லைட் ஃபுட் சாப்பிடுங்க. கஞ்சி, காய்கறி சூப் அந்த மாதிரி” என்று மருத்துவ ஆலோசனை போலவே சொல்லி விட, அதெல்லாம் அஜய் காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை.
“அத்தான், அது தான் டாக்டர் நார்மல் ஃபுட் சாப்பிடலாம்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் எதுக்கு கஞ்சி, சூப்னு இரட்டை வேலை” என்க, அதற்கு மேல் எப்படி அழுத்திச் சொல்வது என்பது போல் தலையை குலுக்கியவன்,
“மா, அப்பா கூப்பிட்டுருந்தாங்க. நான் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்” என வெளியே சென்று விட்டான். அவன் போன வேகத்திலேயே அவனது கோபம் தெரிந்தது. அதை கவலையாகப் பார்த்த அம்ருதா,
“அஜ்ஜு, நார்மல் ஃபுட்னு டாக்டர் என்ன மீன் பண்ணாங்கன்னு உனக்கே தெரியும். டயட்டீசியன் கூட பார்த்துட்டு தானே வந்தோம். ஒரு ஒன் வீக் நான் வெஜ் எல்லாம் வேண்டாம். சீக்கிரம் ஜீரணம் ஆகுற மாதிரி சூப், சாலட், கஞ்சி சாப்பிடு. அப்புறம் பார்க்கலாம்” என்றாள்.
“ஹேய் அம்மு. அவங்க என்ன சொன்னாங்கன்னு எனக்கும் தெரியும். ஓவர் நைட்ல எல்லாம் சேஞ்ச் பண்ண முடியாது. கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்த முடியும்” என்க, அதற்குள், ஒத்து ஊத செல்வி வந்து விட்டார்.
“அவன் தான் சொல்றான்ல, அதையே செஞ்சு கொடு. பாவம் பிள்ள, ஆஸ்பத்திரில என்னத்த சாப்பிட்டுருக்கப் போறான். கூடவே கொஞ்சம் நெஞ்செலும்பு எடுத்து சூப் வைச்சிக் கொடு. அப்ப தான் தெம்பு வரும்” என்று வேறு சொல்ல, தமயந்தி பாவமாக மகளைப் பார்த்தார்.
இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கருணாகரன், தலையில் அடித்துக் கொண்டவராய்,
“அம்ருதா, என்ன வேணும்னு சொல்லுமா. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றார், மனைவியை முறைத்துக் கொண்டே.
மகனோ இன்னும் முடியவில்லை என்பது போல்,
“பா, அப்படியே இறால் நல்லதா கிடைச்சா வாங்கிட்டு வாங்க. மம்மீ பண்ற தொக்கு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு” என்று வேறு கூற, இப்போது மகனை முறைத்தார் கருணாகரன்.
‘உன்னையெல்லாம் திருத்த முடியாது’ என்பது போல் கணவனைப் பார்த்த அம்ருதா,
“ஆரு, எழுந்திரு. அப்பா குளிக்கட்டும்” என்றுவிட்டு, விருட்டென அவர்கள் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
“நீ அம்மாச்சி கூட இரு ஆரு. அப்பா வந்துடுறேன்” என்றவன் மனைவியைத் தொடர்ந்தான்.
அம்ருதா மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்தவைகளை துவைப்பதற்காக தனியே பிரித்து வைத்துக் கொண்டிருக்க, கதவை தாளிட்டவன் மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான்.
கணவனின் அணைப்பு அந்த நேரம் மிகத் தேவையான ஒன்றாக இருந்தாலும், அதற்கு எந்த எதிர் வினையும் இல்லை மனைவியினிடத்தில்!
அவள் கையில் இருந்தவற்றைப் பிடுங்கி கீழே போட்டவன், அவள் கைகளைப் பார்க்க, அப்போதும் அவள் அவனைத் திருப்பி அணைக்கவில்லை.
அதனாலென்ன என்பது போல், அவனே அவள் கைகளை எடுத்து அவன் இடுப்பைச் சுற்றி விட்டவன், அவள் கண்களை நேராகப் பார்த்து,
“என்னாச்சு என் அம்முக்குட்டிக்கு?” என்க,
அவனை நேர் பார்வை கொண்டு எதிர் கொண்டவள்,
“எனக்கென்னாச்சு? ஒன்னும் ஆகல” என்று அமைதியாக பதில் அளித்தாள்.
“அப்புறம் ஏன் ஒரே சோக கீதம் வாசிச்சிட்டு இருக்க?”
“சோக கீதமா….ச்சே ச்சே… ரொம்ப ஹாப்பியா இருக்கேன். எம் புருஷனுக்கு இதயம் அடைச்சுப் போய் இருக்கு. எப்ப வேணும்னாலும் ஹார்ட் அட்டாக், ஸ்டோரோக் வர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்குன்னு சொல்லிருக்காங்கன்னு பார்ட்டி பண்ற மூட்ல இருக்கேன்” என போலியாக புன்னகைப்பது போல் உதடுகளை இழுத்துப் பிடித்தாள்.
“போச்சுடா, நான் எதிர்பார்த்ததை விட மேடம் ரொம்ப சூடா இருக்காங்களே. எனக்கு இன்னிக்கு லஞ்ச் கட்டா அப்போ?” என்க, கணவனை முறைத்தாள் அம்ருதா.
“உனக்கு கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லையா அஜ்ஜூ? என் நிலைமைய யோசிச்சி பார்த்தீயா? என்னை விடு, ஆருவுக்கு நீ வேணாமா? எப்படி இப்படி எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கிற” என தாள முடியாமல் புலம்பினாள்.
“ஓய், நான் சீரியஸா இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா?”
அதற்கு பதில் இல்லை மனைவியிடம்.
“ம்ப்ச் கால் வலிக்குது, இங்க வா” என்றவன், அவளை கட்டிலில் அமர வைத்து, தோளோடு அணைத்துக் கொண்டு,
“சொல்லு. உன்னை மாதிரி மூஞ்ச தூக்கி வைச்சிருந்தா எல்லாம் சரி ஆகிடும்னா, நானும் அப்படியே இருக்கேன்” என்றான்.
“சும்மா பேசனும்னு எதையாச்சும் பேசக் கூடாது அஜ்ஜூ. நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியலையா?. நீ மூஞ்சத் தூக்கி வைக்கணும்னு ஒன்னும் நான் சொல்லலை. இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு. ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்தா நான் நடுத்தெருவுல அனாதையா நின்னிருப்பேன். அதை ஒரு நிமிஷமாச்சும் யோசிச்சுப் பார்த்தீயா?
நல்ல வேளை, கடவுள் புண்ணியத்தில கரெக்ட் டைமுக்கு ஆஸ்பத்திரிக்கு போனதால இப்ப இங்க இருக்க. இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு, உன்னைய வார்ன் பண்றதுக்கு?
சுகர் பார்டர்ல இருக்கு. ஹை பீபி, கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்குன்னு ரிப்போர்ட் வந்திருக்கு. வெயிட்டைக் குறைச்சே ஆகனும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. ஹார்ட் பிரச்சனைல ரொம்ப ஸ்டிரெயின் பண்ற மாதிரி எக்சர்சைஸ் எதுவும் பண்ணக் கூடாதுன்னு இன்னொரு பக்கம். என்ன பண்ணப் போறோம்னு நான் இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கேன்.
நீ என்னடான்னா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம மட்டன் வறுவல் பண்ணுன்னு சொல்ற? உங்கம்மா, எங்கண்ணன் எல்லாரும் என்னைய தான் காய்ச்சி எடுக்கிறாங்க.
ஏதோ வேண்டாம் வேண்டாம்னு சொன்ன ஆளை நான் தான் வாய்ல தினிச்சு சாப்பிட வைச்சிட்டேன்ற மாதிரி அவ்ளோ பேசுறாங்க. ஆனா நான் சொல்ற எதையாவது நீ காது கொடுத்து கேட்குறீயா?” என பொரிந்தாள்.
“ஹேய், இதுல வெட்கப்பட என்ன இருக்கு அம்மு? என் பசிக்கு நான் தானே சாப்பிடனும். காரமா நாக்குக்கு ருசியா ஏதாவது சாப்பிடணும்னு தோனிச்சு, அதுனால சொன்னேன். நீ இவ்ளோ டென்ஷன் ஆக இதுல என்ன இருக்குன்னு எனக்கு சத்தியமா புரியலை? ஆமா உடம்பு சரி இல்லை தான். அதுக்கு என்ன பண்ணனும்னு நீ நினைக்கிற?”
“டென்ஷன் ஆகாம என்ன பண்றது அஜ்ஜூ? நீ இனிமேல் ஃபுல் டயட்ல இருக்கனும். கண்டதையும் சாப்பிடக் கூடாது. உனக்கு நான் மெனு சார்ட் போட்டு வேளா வேளைக்கு என்ன தர்றேனோ அதை மட்டும் தான் சாப்பிடனும்”
“அவ்ளோ தானே டார்லிங். பண்ணிடலாம். நோ டென்ஷன். நீ என்ன சொல்றீயோ அது படி பண்ணிடலாம். நாளைலேர்ந்து கரெக்டா ஆரம்பிச்சிடலாம். இன்னிக்கு ஒரு நாள் சீட் டே. அப்பா வேற வாங்கிட்டு வந்திருப்பாங்க. அதெல்லாம் வேஸ்டா போய்டும்ல. அதுனால தான். உன்னோட சிக்னேச்சர் மட்டன் வறுவல் பண்ணிடு, பெப்பர் தூக்கலாப் போட்டு. மம்மீய இறால் தொக்கு பண்ண சொல்லு.
கடைசி கடைசின்னு இன்னிக்கு ஒரு நாள் திருப்தியா சாப்பிட்டுக்குறேன். நாளைல இருந்து நீ சொல்றது தான் மெனு. ஹேப்பி?”
“ம்க்கும்….ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சீட் டே. இதுல நான் ஹேப்பியான்னு வேற கேள்வி. எல்லாம் என் தலையெழுத்து” என்று மனைவி குறைபட,
“ரொம்ப சிலிர்த்துக்காத டார்லிங். ஹாஸ்பிட்டல் எல்லாம் போயிட்டு வந்துருக்கேன். மாமாவைப் பார்த்தா பாவமா இல்ல?” என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, அதற்குப் பின் எங்கே அழுத்தமாக மறுப்பது.
“சரி, இன்னிக்கு ஒரு நாள் சாப்பிட்டுக்கோங்க. ஆனா கம்மியான போர்ஷன் தான் சாப்பிடனும். ஓகேவா?” என்று அதிலும் ஒரு குண்டு போட,
“ஹேய், ப்ளீஸ், ப்ளீஸ். அதெல்லாம் முடியாது. இன்னிக்கு நோ ரெஸ்டிரிக்ஸன்ஸ். நான் கேட்டு எனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் எல்லாம் செஞ்சிட்டு, அதை கண்ல மட்டும் காண்பிக்கிறதெல்லாம் நியாயம் இல்ல சொல்லிட்டேன்” என்று புதிதாக நியாயம் பேசினான்.
“ம்ப்ச், இது தான் தப்புன்னு சொல்றேன் அஜ்ஜூ. எல்லாத்தையும் விளையாட்டாவே எடுத்துக்கிற” என்றவள் குரலில் இப்போது சலிப்பு.
எத்தனை முறை இது போன்ற உரையாடல்கள் நடந்திருக்கிறது என்ற கணக்கே இல்லை. இது வரை எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியே. அதனால் தானே இன்று இந்த நிலைமை. அது ஏன் இவனுக்குப் புரியவில்லை என்ற சலிப்பின் எதிரொலியே அவள் குரலில் வந்த தொய்வு.
அஜய் பொதுவில் எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கொண்டு புன்னகையுடன் கடந்து விடுபவன் தான். அவனுக்கும் அம்ருதாவுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும் ஒரே விஷயம்….உணவு.
ஆம் அஜய் ஒரு உணவுப் பிரியன். இப்போதெல்லாம் பெருமையாக ஒரு பட்டம் போல் சொல்கிறார்களே…’ஐ ஆம் அ ஃபுட்டி (foodie)’ என்று. அது போல் பல வகையான, சுவையான உணவுகளைத் தேடி உண்பதே ஒரு பொழுதுபோக்கு என்னும் அளவு உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.
உணவில் ஒரு நேர்த்தி, சரியான சேர்க்கை (combinations), சுவை, வகை என்று எதிர்பார்ப்பவன். திருமணத்திற்கு முன் பெரிதாக அதற்கான வாய்ப்புகள் இல்லை. திருமணத்திற்குப் பின் சென்னையில் தான் வேலை என்றாகி விட, அம்ருதாவும் சமையலில் ஆர்வம் காட்ட, அவர்களது கூட்டணி அவனுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது எனலாம்.
அவள் மிகச் சிறப்பாக பேக்கிங் (baking) செய்வதைப் பார்த்தவன், அவளை ஊக்குவித்து அவர்கள் வீட்டை ஒட்டியே ஒரு அடுமனை (bakery) ஆரம்பித்து நடத்தி உதவி செய்தான்.
அதை அவள் மேலும் விரிவாக்கி, வாரத்தில் சில நாட்கள் பேக்கிங் வகுப்புகளும் நடத்துகிறாள். அதோடு அவள் ஒரு காணொளி வலைப்பதிவாளாரும் கூட. வித்தியாசமான உணவுகளை சமைத்து தொடர்ந்து பதிவிட்டு, கடந்த சில வருடங்களில் அவளது சேனல் புகழ் பெற்ற ஒன்றாகி இருந்தது.
இதே கால கட்டத்தில் அஜயும் அவனது உணவுத் தேடல்களை பதிவிடத் தொடங்கி இருக்க, அவனது ஃபுட் விளாக்கும் (food vlog) மில்லியன் பார்வைகளைத் தாண்டி இருந்தது.
கணவன், மனைவி இருவருக்குமே இது ஒரு நல்ல உற்சாகத்தைத் தர, பல்வேறு உணவு திருவிழா, இந்தியாவின் பல பிராந்தியங்களுக்கு உணவுச் சுற்றுலா என்று அடிக்கடி செல்வது கூட ஒரு வித பொழுது போக்காகி இருந்தது.
இதில் அம்ருதா பசிக்கு மட்டுமே சாப்பிட, அஜய் ருசிக்கு சாப்பிட, மெதுவாக அவனது உடல்நிலையிலும் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பது, உடல் தேவைக்கு மீறிய உணவு என்று உடலின் சமநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது.
திருமணத்திற்கு முன்னர், நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்க, இளமையும் ஒரு வகையில் உடலைக் காத்தது எனலாம். செல்வி எல்லாம் கணக்காகத் தான் கொடுப்பார். ஒரு முட்டை ஆம்லெட், அண்ணன், தம்பி இருவருக்கும் சரி பங்காக பிரிக்கப்படிருக்கும்.
ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அதெல்லாம் தலை கீழாக மாறி விட்டது. திடீரென பெரும் உணவு வளத்துடன், சுதந்திரமும் சேர்ந்து கிட்டிய உணர்வு. அரை முட்டை ஆம்லெட், ‘டபுள் ஆம்லெட்’ ஆகி விட்டது.
விதவிதமான, அளவுக்கு அதிகமான, உணவு வகைகள், உடலுழைப்பு அதிகம் இல்லாத வாழ்க்கை முறை, நிறைவான வாழ்க்கையின் ஒரு பூரிப்பு என்பதில் கண் மூடித் திறப்பதற்குள் சட்டையின் அளவு மளமளவென ஏறி பலமுறை மாறி இருந்தது.
அவ்வப்போது அம்ருதா சொல்வதெல்லாம் அஜயின் ஒரு காது வழி நுழைந்து, அதைப் போல பல நூறு மடங்கு வேகத்தில் மறு காது வழி வெளியேறி விடும். அவனோ பேசி, கொஞ்சி, சிரிக்க வைத்து அவள் கவனத்தை திசை திருப்பி விடுவான்.
அந்த சலிப்பு தான் இன்றும். இந்த ஒரு விஷயத்தில் அவனை மாற்றுவது என்பது இயலாத காரியம்.