அத்தியாயம் 11
தன் அறையில், கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார் நரசிம்மன். ஒரு படத்தில் வரும், “சாவு பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!” என்ற டயலாக் இப்பொழுது அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.
“இவ்ளோ ஈசியா என்னையத் தூக்கிட்டானே!” தன்னையே திட்டிக் கொண்டார்.
என்னதான் அவருக்கு அம்பரீஷ் மேல் கோபம் இருந்தாலும், அவரை நெருங்க தன்னால் முடியாது, என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அம்பரீஷ் மேல் ஒரு கீறல் விழுந்தால் கூட, அவர் சொன்னது போல உள்ளூர் தாதாவில் ஆரம்பித்து, வெளிநாட்டு டான் வரை எவனை வேண்டும் என்றாலும் தன்னை நோக்கி ஏவி விடுவார். இது சர்வ நிச்சயம்.
தற்பொழுது ஆட்சி வேறு கையில் இல்லை. இருந்திருந்தால் அதை வைத்தாவது ஏதாவது செய்யலாம். அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.
வேறு வழியில்லாமல், அம்பரீஷ் மேல் உள்ள கோபத்தை, மதுவை கொண்டு அப்போதைக்குத் தனித்துக் கொண்டார் நரசிம்மன்.
ஆனால் அடுத்த நாள் இதற்கும் ஆப்பு வைத்தார் அம்பரீஷ்.
தன் மகளைக் கொல்ல முயற்சி செய்த நரசிம்மனின் மகனை, ஆள் வைத்து போட்டுத் தள்ளினார்.
நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தவனை, சத்தமில்லாமல் வெட்டி சாய்த்து விட்டார்.
விஷயம் தெரிந்து சாமி ஆடி விட்டார் நரசிம்மன். அவரின் ஒரே மகன், அவரின் அரசியல் வாரிசு, இதோ அடுத்தத் தேர்தலில் எம்.எல்.ஏ பதவிக்கு நிறுத்த வேண்டும், தான் மறைவதற்குள், அப்படியே அவனை மெல்ல கட்சிக்குள் நுழைத்து, ஆட்சியிலும் இடம் பிடிக்க வைக்கவேண்டும் என்று வானளவு கோட்டை கட்டி வைத்திருந்தார். ஆனால் ஒரே அடியில் அதைத் தவிடுபொடியாக்கி இருந்தார் அம்பரீஷ்.
“டேய்! ****** *******. பஞ்சம் புழைக்க வந்த நாய், என்னைத் தூக்குனது இல்லாம, இப்போ என் பையனையே போட்டுத்தள்ளிட்ட…..எங்க அப்பன் மேல சத்தியமா சொல்றேன் டா, உன்னோட சாம்ப்ராஜியத்தை வேரறுக்காம நான் சாக மாட்டேன்….இப்போ என்னால உன்னைத்தொட முடியாம இருக்கலாம். ஆனா உன்னை அழிக்கிறதுக்கு நிச்சயம் எனக்குச் சந்தர்பம் கிடைக்கும். அப்போ வச்சுக்கிறேன் டா, என் கச்சேரிய! ***** *******” ஆக்ரோஷமாக நெஞ்சில் அடித்துக் கொண்டார்.
அவருக்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அதில் அம்பரீஷின் தொழில் சாம்ப்ராஜியம் மட்டுமில்லை, அவரின் மகளின் வாழ்க்கையும் கருகி போனது!
மாதங்கள் ஓடியது, கூடவே மாதுரியின் காதலும்…!
அவரவர் வேலைக்கு மத்தியில் இருவரும் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் மாதுரியின் வீட்டில் அவளுக்குத் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தனர். வைர வியாபாரியின் மகன், தொழிலதிபரின் மகன், மத்திய அமைச்சரின் மகன், என விதவிதமாக ரகரகமாக, மாப்பிளைகளை அம்பரீஷ் தேடிக் கொண்டிருக்க, விஷயம் கேள்விப்பட்டுத் தன காதலை தந்தையிடம் சொன்னாள் மாதுரி.
“அப்பா! நந்தகுமாரை லவ் பண்றேன்.”
[the_ad id=”6605″]
“நந்தகுமார்ன்னு மொட்டையா சொன்னா, யார், என்னனு சொல்ல வேண்டாமா?!” சித்தார்த் பட்டென்று கேட்க,
“சென்னை கலெக்டரா இருக்கார்.” அமைதியாகக் கூறினாள்.
அதன்பின் அம்பரீஷ் எதுவும் சொல்லவில்லை. மகளை அறைக்குப் போகச் சொல்லிவிட்டார்.
“என்ன பாபுஜி இவ?! நாம எவ்வளவு அந்தஸ்தான மாப்பிளையைப் பார்த்துட்டு இருக்கோம். பப்பு என்னடான்னா…..” தன் அதிர்ப்தியை சித்தார்த் வெளிபடுத்த,
“பொறு சித்து. பணம் மட்டும் அந்தஸ்து இல்லை. பதவியும் ஒரு வகையில அந்தஸ்து தான். நம்மகிட்ட பணம் கொட்டி கிடக்கு. அங்க பணம் இல்லைனா என்ன, நாம செஞ்சுட்டா போச்சு. என் பொண்ணு ஆசைப்பட்டா எதையும் செய்வான் இந்த அம்பரீஷ். மொதல்ல பையன் குணம் எப்படின்னு விசாரிப்போம்.”
சொன்னபடியே, நந்தாவை பற்றி விசாரித்தார் அம்பரீஷ். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் ரகசியமாக இந்த வேலையைக் கொடுக்க, அவர்களோ பத்து நாளில் தங்கள் ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்தனர்.
ரிப்போர்ட்டை முழுவதும் படித்தார். மது, மாது என எந்தக் கெட்ட பழக்கமும் நந்தாவிடம் இல்லை. பதவியிலும் கண்ணியமானவன். லஞ்சம் போன்ற எந்தச் செயல்களும் அவனிடத்தில் இல்லை. வேலையைப் பொறுத்தவரை நல்ல பெயரோடு, வேகமாக முன்னேறி வருகிறான். இப்படியே சென்றால், கூடிய சீக்கிரத்தில் செயலாளர் பதவிக்கு வந்துவிடும் திறமை அவனிடம் இருந்தது. நந்தாவின் சம்பள பணத்தில் அவன் குடும்பம், முன்பிருந்த நிலைமையில் இருந்து தலையெடுத்து, தற்பொழுது ஓர் அளவுக்கு நல்ல நிலைமையில் உள்ளது. நூறு சவரன் போட்டு, பத்து லட்சம் ரொக்கமாகக் கொடுத்து, சொந்த நிறுவனம் வைத்திருக்கும் வரனுக்குத் தன் தங்கையை மணமுடித்துக் கொடுத்திருக்கின்றான் நந்தா. தற்பொழுது தான் சொந்தமாக ஒரு வீடும், காரும் வாங்கி இருக்கிறான்.
ரிப்போர்ட்டை படித்து முடித்த அம்பரீஷிற்கு, நந்தாவை பற்றி நல்ல அபிப்ராயமே தோன்றியது. தங்கள் அளவுக்கு இல்லை என்றாலும், குறை சொல்லும் அளவுக்கு எல்லாம் அவனின் பொருளாதார நிலை இல்லை என்று நினைத்தார். ரிப்போர்ட்டை பார்த்தால், கூடிய சீக்கிரம் சமூகத்தில் நல்ல அந்தஸ்துக்கு வந்துவிடுவான் என்று தான் தோன்றியது.
ரிப்போர்ட்டில் உள்ள விஷயங்களை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் அமப்ரீஷ். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ராஜேஸ்வரிக்கு கலெக்டர் பதவி என்பதே பெரிது தான். இதில் அவர் என்ன சொல்ல இருக்க. “எதுவும் கெட்ட பழக்கவழக்கம் இல்லனா, முடிச்சிடுவோம்ங்க.” என்று அவர் பச்சைக்கொடி காட்டியதும், மகனிடமும் ஒரு வார்த்தை சொன்னார்.
சித்தார்த்தோ, “நானும் விசாரிச்சேன் பாபுஜி. நல்லது கெட்டதைக் கண்டுக்கிறது இல்லையாம். அராசியல்வாதீங்களுக்குத் துணை போறதா சொல்றாங்க.”
“அரசாங்க பதவில இருக்கிறவங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க சித்து. என் வாழ்கையில எத்தனை பேரை பார்த்திருக்கேன். அரசியல்வாதீங்கள்ல பகைச்சுகிட்டு யாரால நிம்மதியா இருக்க முடியும் சொல்லு?! அவருக்குக் குடும்பம், தங்கச்சி எல்லாம் இருக்காங்க. சோ அப்படித்தான் இருந்தாகனும். இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை. இனி அவருக்கு அந்தப் பயம் வேண்டாம். அதை நான் பார்த்துப்பேன்.” ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் அம்பரீஷ்.
ஆனால் அவருக்குத் தெரியாது, நந்தா, அரசியல்வாதீகளை எதற்காக அனுசரித்துச் செல்கிறான் என்று. தன் லட்சியத்துக்காக என்றால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அவர் உணரவில்லை.
ஒரு சில ஆட்சியாளர்கள் மக்களின் குறைகளைப் பற்றி அக்கறை எடுக்கும்பொழுது, நந்தாவின் அதீத ஒத்து ஊதும் செயல், சித்தார்த்திற்கு மனம் ஒப்பவில்லை. நந்தா மேல் அந்த அளவுக்கு அபிப்ராயம் இல்லையென்றாலும், தங்கையின் காதலுக்காகவும், தந்தையின் முடிவுக்காகவும், மறுப்புச் சொல்லாமல் தன் சம்மதத்தைப் புன்னகையுடன் தெரிவித்தான்.
[the_ad id=”6605″]
அதன் பின் வேலைகள் வேகமாக நடந்தது. நந்தா மூலம் அவனின் வீட்டிற்கு விஷயம் சொல்லப்பட்டது. அதன் பின் ஒரு நல்ல நாளில் தமிழ்நாட்டு முறைப்படி, மாப்பிளை வீட்டார் மாதுரியை பெண் பார்க்க வந்தனர். அவளின் பணிவும், அழகும் நந்தாவின் வீட்டாருக்கு பிடித்துவிட, நந்தா, மாதுரி திருமணத் தேதி அன்றே குறிக்கப்பட்டது.
ஒரே மகளின் திருமணத்தைத் திருவிழா போலக் கொண்டாடினார் அம்பரீஷ். ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாட்டு முறையும், குஜராத்தி முறையும் ஒன்றே சங்கமித்து, நந்தா, மாதுரியின் திருமணத்தில்.
குஜராத்தி முறையில் ‘கோல் தனா’ என்று சொல்லப்படும் திருமண நிச்சயார்த்த சடங்கில் இருந்து, மெஹந்தி, சங்கீத், பித்தி (மஞ்சள் பூசும் சடங்கு), திருமணம் சடங்கு என், ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நடந்ததால், திருவிழா கோலம் பூண்டது, கல்யாண மண்டபம்.
நந்தாவின் தங்கை, “அண்ணி!” “அண்ணி!” என்று மாதுரியை சுற்றி சுற்றி வந்தாள். அவளுக்கு மாதுரியின் தைரியம், அழகு எல்லாம் மிகவும் பிடித்துப் போயிருந்தது. தன் அண்ணனின் அழகுக்கும், அந்தஸ்துக்கும் வரப்போகும் அண்ணி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்ததிற்கு மேலாகவே இருந்தாள் மாதுரி.
அவளுக்கு அப்படி என்றால், அவளின் கணவன் வீட்டாருக்கு, நந்தாவின் அதிர்ஷ்டத்தை நினைத்துப் பொறாமை தான்.
“பிடிச்சாலும் பிடிச்சான், பெரிய இடமாத்தான் பிடிச்சு இருக்கான். அவன் அந்தஸ்துக்கு, வைரத்தை எல்லாம் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாம இருந்தவன், இன்னைக்கு என்னடான்னா வைர கடைக்கே சொந்தகாரன் ஆகிட்டானே!” என்னமோ நாளைக்கே அவன் வைர கடை கல்லாவில் அமரப்போவது போல, பொறாமை தீயில் பொசுங்கி போயினர்.
[the_ad id=”6605″]
அவர்கள் மட்டுமில்லை, பலபேரின் பேச்சும் இதுவாகத் தான் இருந்தது. இருந்தும் இவை அனைத்தையும் நந்தாவோ, அவனின் குடும்பத்தாரோ காதில் போட்டுக் கொள்ளவில்லை.
சங்கீத் சடங்கின் பொழுதே தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தமும் நடந்தது. அதன் பின் திருமணம் சடங்கிலும், இரண்டு முறைப்படி தாலி கட்டப்பட்டது. அதன் பின்பான சடங்குகள் எல்லாம் முடிந்து, மணப்பெண் அரிசியைத் தலைக்கு மேலே பின்பக்கம் தூவ, அதைப் பெண்ணின் தாய் தன் முந்தானையில் பிடித்துக்கொள்ளும் ‘விடை’ என்ற சடங்குடன், தன் வீட்டில் இருந்து விடைபெற்று கணவனின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் மாதுரி.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் தங்கள் உயிரையே வைத்து வளர்த்த அன்பு மகளை, செல்ல பப்புவை கண்ணீருடன் அனுப்பி வைத்தனர் அம்பரீஷ், ராஜேஸ்வரி மற்றும் சித்தார்த்.
பின்னாளில் தன் மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரிந்திருந்தால், தன் உயிரை எப்படியாவது காப்பாற்றி இருப்பாரோ அம்பரீஷ்!