அத்தியாயம் 8
திருநெல்வேலி கலெக்டர் அலுவகம், திங்கள்கிழமை காலை மனுக்கள், அலுவக வேலைகள் எனப் பிசியாக இருந்தது. தன் அறையில் ஃபைல்களில் மூழ்கி இருந்தான் நந்தகுமார், IAS, திருநெல்வேலி மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர்.
நந்தகுமார், இளம் வயதிலேயே கலெக்டர் ஆனவன். சிறு வயதில் இருந்தே அவனுக்குக் கலக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. நாளடைவில் அது லட்சியமாக, இறுதியில் வெறியாக மாறியது. இளநிலை பட்டப்படிப்பு இறுதி வருடம் படிக்கும்பொழுதே, சிவில் செர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் ஒன்றரை லட்சம் கட்டி சேர்ந்து, இரவு பகல் பாராமல் படித்துப் பயிற்சி பெற்றான். கல்லூரி இறுதி தேர்வை எழுதி முடித்த கையோடு இந்திய ஆட்சிப்பணி தேர்வை எழுதினான்.
அவனின் ஆழ்மனதில் இருந்த வெறியோ, இல்லை நல்ல பயிற்சியோ, இல்லை கடவுள் அசீர்வாதாமோ, எதுவோ ஒன்று, முதல் முயற்சியிலேயே, IAS தேர்வில் இந்திய அளவில் ஐம்பதாவது ரேங்க்கும், தமிழக அளவில் நான்காவது ரேங்க்கும் எடுத்து வெற்றி பெற்று, இருவத்திஓர் வயதிலேயே IAS தேர்வில் வெற்றி பெற்று, அவன் பெற்றோருக்கும், தங்கைக்கும் வானளவு பெருமையைத் தேடி தந்தான்.
நந்தகுமாரின் தந்தை, ராஜேஷ், தமிழக அரசு ஊழியர். தாய் சகுந்தலா இல்லத்தரசி. தங்கை கார்த்திகா, பி.எஸ்.சி முதலாம் ஆண்டுப் படிக்கிறாள். மூவருக்கும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் ஆனதில் வானத்தில் மிதக்கும் அளவுக்கு மகிழ்ச்சி.
தேர்வி வெற்றிப் பெற்றதும் முதலில் உத்தரகான்ட் மாநிலத்தின், முசூர் பகுதியில் உள்ள, லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய நிர்வாக அகாடமி பயிற்சி மையத்தில், பத்து மாதங்கள் பயிற்சி மேற்கொண்டான். பின் ஒரு வருடம், நிர்வாகத் துறையில் பயிற்சியோடு, கிட்டத்தட்ட இரண்டு வருட பயிற்சி காலத்தை முடித்துகொண்டு அதிகார்பபூர்வ IAS ஆனான்.
பயிற்சி காலம் முடிந்ததும், முதலில் ஆந்திரா மாநிலத்தில் துணை ஆட்சியராகச் சில வருடங்கள் பணியாற்றியவன், அதன் பின் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டான். அவன் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராகிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது.
நந்தகுமார் நல்ல உயரம், திருத்தமான முகம், அடர்த்தியான மீசை, கோதுமை நிறம், உயரத்திற்கு ஏற்ற உடல் எனப் பார்பதற்குத் தெலுங்கு சினமாப்பட ஹீரோ போல இருப்பான். (ஹீரோவா, அப்போ சுதர்ஷன் இல்லையா?!!) சரி, அட்லீஸ்ட் வில்லன் ரோல் கொடுக்கிற அளவுக்கு ஜம்முன்னு இருப்பான்.
ஃபைலில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது, பியூனின் அழைப்பு.
“சர்!”
“உள்ள வாங்க பொன்னுசாமி.”
உள்ளே வந்தவர் அவன் கையில் ஒரு கவரை கொடுத்து, “உங்களுக்குப் போஸ்ட்ல வந்துச்சு சர்.” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, கவரின் முகவரியை பார்த்தான். தலைமைச் செயலத்தில் இருந்து, தமிழக அரசு முத்திரையோடு வந்திருந்தது. பிரித்துப் பார்த்தான்.
ஒவ்வொரு வரியாகப் படிக்கப் படிக்க, அவன் முகத்தில் பல்ப் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராகசமடைந்தது. அவனின் அடுத்தகட்ட லட்சியத்தின் முதல் படியை அடைவதற்கான செய்தி அடங்கிய லெட்டர் தான் அது.
[the_ad id=”6605″]
அந்த லெட்டர், சென்னை கலெக்டராக அவனை இடம்மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள அரசானை. உள்துறை செயலாளராக வேண்டும் என்ற அவனின் கனவின் முதல்படி, ‘சென்னை கலெக்டர்’ என்ற இந்த அரசானை.
சென்னை கலெக்டர் என்பது அரசுக்குப் பக்கத்தில், அதாவது ஈசனின் கைவளைவுக்குள் அமர்ந்திருப்பது போல! முதலைமச்சர் அலுவலகம், சட்டமன்றம் எல்லாம் இருக்கும் சென்னையின் கலெக்டர் என்றால், அடிக்கடி முதலமைச்சரை, அமைச்சர்களை வேலை நிமித்தம் சந்திக்க, பழக முடியும். அப்படி, இப்படி என்று சென்னை கலெக்டராகக் காலத்தை ஓட்டிவிட்டால், அமைச்சர்களின் கையைக் காலை பிடித்தாவது, செயலாளர் போஸ்டிங்கை வாங்கி விட வேண்டும், இப்பொழுதே மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான் நந்தா!
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கலக்டராகப் பணியாற்றியவர்களுக்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையின் தலைமை அதிகாரி, அதாவது செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் பின் ஒரு பதினைந்து, பதினேழு வருடங்கள் செயாலாளராகப் பணியாற்றினால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவி, அதாவது முதலமைச்சர் இல்லாத சமயத்தில் மாநிலத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் மிகப் பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
நந்தகுமாரின் வாழ்க்கை கனவு தலைமை செயலாளர் பதவி தான் என்றாலும், அவனின் தற்போதைய லட்சியம், செயலாளர் பதவி ஆகும். அதற்கான நுழைவு சீட்டு தான் அவன் கையில் தற்பொழுது இருப்பது.
உடனே தன் தந்தைக்கு அழைத்தவன் விவரத்தை கூற, அவரும் சந்தோஷப்பட்டார். ஏனெனில் அவர்கள் சென்னையில் தான் வசிக்கின்றனர். திங்கள்கிழமை வந்து பணியில் சேர வேண்டும் என்பதால், சீக்கிரம் அங்கு வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தான்.
பின் அலுவகத்தில் உள்ள நண்பர்கள் அனைவரிடமும் விஷயத்தைச் சொல்லிவிட்டு, அவர்களின் வாழ்த்துக்களையும், நினைவு பரிசுகளையும், பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து பிரியா விடைபெற்று அன்று மாலையே சென்னைக்குக் கிளம்பினான்.
அடுத்த நாள் தலைமை செயலகத்திற்குச் சென்று, பணியில் சேர்ந்துவிட்டுத் திரும்புகையில், தலைமை செயலாலரையும் ஒரு பார்வை பார்த்து, பேசிவிட்டு வந்தான். அவர் பேசிக் கொண்டிருக்க, நந்தாவின் பார்வையோ, அந்த அறையையும், அவரின் இருக்கையையும், அவருக்கு முன் இருந்த தமிழக அரசு சின்னம், பெயர் பலகை இவற்றை எல்லாம் தான் பார்த்துக்கொண்டு இருந்தன. அவரின் இருக்கையில், தான் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை அப்பொழுதே அவன் மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிட்டது.
ஒரு வழியாகப் பேசிவிட்டு விருப்பமே இல்லாமல் வெளியே வந்தவன், ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்த சென்னை கலக்டர் அலுவகத்திற்கு வந்து பணியில் சேர்ந்தான்.
நந்தா சென்னைக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தது. தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்றால், கொஞ்சம் அப்படி, இப்படி, விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும் என்று அவன் நன்றாக அறிவான். அதனால் ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களின் உறவினர்கள் அனைவரும் செய்யும் விதிமுறைகளுக்குப் புறம்பான செயல்களைக் கண்டும் காணாமல் போய் விடுவான். அதே நேரம் லஞ்சம் எல்லாம் வாங்க மாட்டான். அதில் சுத்தம் தான் அவன்.
அப்படித் தான், சென்னையின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில், தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்து, தன்னுடைய குடிநீர் கேன் தொழிற்சாலைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார், எம்.எல்.ஏவின் உறவினர் ஒருவர்.
[the_ad id=”6605″]
அதைப் பார்த்துவிட்டு, யாரோ நிலத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்க, அந்த இடத்துக்குச் சொந்தமானவர், நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டிருந்த ஆட்களிடம் வந்து கேள்வி கேட்க, அவர்களோ கண்டுகொள்ளாமல் இருக்க, ஒரு நாள் அங்கே வந்த எம்.எல்.ஏ உறவினரிடம் கேட்டார் நிலத்தின் உரிமையாளர். அவர்களோ இவரை மிரட்டி அனுப்பிவிட்டனர்.
அடுத்து அவர் சென்றது காவல் நிலையத்திற்கு. அங்கே சென்று அவர் பெட்டிஷன் கொடுக்க, அவர்களோ ஆதாரம் கேட்டனர். உரிமையாளரோ, தன் இடத்திற்கு வந்து போட்டோ, வீடியோ எல்லாம் எடுக்க, எம்.எல்.ஏ உறவினர் அவரைப் பார்த்து சிரித்தார்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆதாரங்களைச் சேகரித்துக்கொண்டு காவல் நிலையம் வந்தவர், அதை எல்லாம் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க, அவரோ பேருக்கு ஒரு FIR பதிவு செய்துவிட்டு, தக்க நடவடிக்கை எடுப்பதாகப் பொய் வாக்குறுதி கொடுத்து அனுப்பினார்.
அதன் பின் நாட்கள் தான் சென்றதே தவிர, காவல்துறை சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் என்று கேட்டாலும், இதோ எடுக்கிறேன், அதோ எடுக்கிறேன் என்று காலத்தைக் கடத்தினரே தவிர, கேஸ் ஒரு இன்ச் கூட நகரவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த இடத்தின் உரிமையாளர், சென்னை மாவட்ட ஆட்சியரான நந்தாவிடம் வந்துவிட்டார்.
பியுனிடம் சண்டை போட்டுத் தன்னைப் பார்க்க வந்தவரை அழைத்து உட்கார வைத்த நந்தா, “என்ன விஷயம்? சொல்லுங்க சர்?” என்று கேட்க,
“என்னோட இடத்தில இருந்து என் பெர்மிஷன் இல்லாம, நிலத்தடி நீரை எடுக்கிறாங்க சர். கேள்வி கேட்டா, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு திமிறா சொல்றாங்க. என்னால அவங்களை எதிர்த்து ஒன்னும் பண்ண முடியல சர். சரின்னு போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கயும் ரெஸ்பான்ஸ் இல்லை. Fir பைல் செஞ்சும், ஆக்க்ஷன் எடுக்காம, இழுத்தடிக்கிறாங்க. நீங்க தான் அவங்களுக்கு எதிரா அக்க்ஷன் எடுக்கணும்.” கலங்கிய குரலில் அவர் கூற, தன் தந்தை வயதில் இருக்கும் அவரின் வருத்தத்தைப் புறக்கணிக்க முடியாமல், “சரி சர். நான் பார்க்கிறேன்.” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
அதன்பின் வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள, நினைவு வந்ததும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை மூலம் அந்தப் பிரச்னையை விசாரித்தான். அப்பொழுது தான் தெரிந்தது, எம்.எல்.ஏ வின் உறவினர்கள் இதில் ஈடுப்பட்டு இருக்கிறார் என்று.
முதலில் தயங்கியவன், பின் எம்.எல்.ஏவை தனியாகச் சந்திந்து பேசினான்.
[the_ad id=”6605″]
“இடத்து ஓனர் கம்ப்ளெயின்ட் கொடுத்திருகிறார் சர். கொஞ்ச நாள் கழிச்சு பண்ணச் சொல்லுங்களே. ஆக்க்ஷன் எடுக்காட்டி, பிரச்சனை பெருசாக வாய்ப்பிருக்கு.”
“யோவ்! என்ன என்கிட்டையே சொல்ற? அதெல்லாம் முடியாது. இதைக் கண்டுக்காம அப்படியே விட்டுடு. போலீஸ் பார்த்துக்கும். மீறி ஏதாவது செஞ்ச, தலைவர் கிட்ட சொல்லி உன்னை வேற ஊருக்கு மாத்திடுவேன்.”
கட்சியில் முக்கிய எம்.எல்.ஏ வாக இருக்கும் அவர் சொல்லும்பொழுது, கட்சி தலைவராக இருக்கும் முதலமைச்சர் செய்யாமல் இருப்பாரா?!
அமைதியாக அவ்விடத்தை விட்டு வந்தவன், அந்தப் பிரச்னையை அத்தோடு விட்டுவிட்டான்.
இது தெரியாமல், இடத்தின் உருமையாளர், பல முறை நந்தாவை சந்திக்க முயற்சிக்க, அவனோ வேண்டுமென்றே அவரைத் தவிர்க்க ஆரம்பித்தான். அவருக்குப் புரிந்துவிட்டது, நந்தாவும் விலை போய்விட்டான் என்று.
மக்கள் பிரதிநிதி, காவல்துறை, நிர்வாகத் தலைவர் யாரும் நடவடிக்க எடுக்கத் தயங்கிய காரணத்தால், வேறு வழி இல்லாமல், சட்டத்தின் முன் தன் கோரிக்கையை வைக்கச் சென்றார் அவர்.
அங்கேயும் அவருக்கு ஏமாற்றங்களே மிஞ்சின! சின்ன லாயரில் இருந்து பெரிய லாயர் வரை சந்தித்துக் கேட்டு விட்டார். முதலில் சரி என்று சொன்னவர்கள் எல்லாம், இதில் எம்.எல்.ஏ ஈடுபட்டு இருக்கிறார் என்று தெரிந்ததும் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
இறுதியில் சலித்துப் போய் அவர் அமர்ந்த சமயம் தான், யாரோ ஒருவர் அவரிடம், மாதுரியை பற்றிச் சொன்னார்.
“நியாயமான பொண்ணு. ரொம்பத் திறமைசாலியும் கூட. அவங்க அப்பா வைர வியாபாரி. அதனால அந்து பொண்ணு யாருக்கும் பயப்படாது. அரசாங்கத்தையே எதிர்த்துக் கேஸ் போடணும்னா கூடத் தைரியமா போடும். போட்டு ஜெய்ச்சு காட்டும். இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கேஸ் அந்த மாதிரி, அரசாங்கத்துக்கு எதிரா போட்டு, ஜெய்ச்சு நியாயம் வாங்கிக் கொடுத்திருக்கு.”
கேட்க கேட்க ஏதோ ஒரு நம்பிக்கை பிறக்க, மாதுரியை தேடிச் சென்றார் அவர்.