இப்போது பிரஷாந்தும் அவனை பாட சொல்லி கேட்க, கடைசியில் பவித்ரா கூட பாட சொல்ல, லேசாக சம்யுக்தாவை பொய்யாய் முறைத்தவன், மேசை மீது இரு கைகளாலும் மெலிதாய் தாளமிட்டுக்கொண்டே மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.
“குளிச்சா குத்தாலம்… கும்பிட்டா பரமசிவம்!
குடிச்சா நீர்மோரு… புடிச்சா நீ…தாண்டி…!
சொக்குப்பொடி மீனாட்சி… சொக்கநாதன் நான் தாண்டி!” அவன் போடும் தாளம் போலவே பிரஷாந்தும் செய்ய, நால்வருக்குமே இறுக்கங்கள் தளர்ந்து புத்துணர்ச்சியாய் இருந்தது.
“அடுத்து யாரு?”
“எனக்கு பாட வராதுப்பா!” சம்யு சொல்லிவிட, “அப்ப ஆடு” என்றான் வித்தகன்.
“வாறே வா! உன் ஆட்டம் என்னும் ஆழ்கிணற்றுக்குள் ஆட்டுக்குட்டியாய் விழ வந்த என்னை ஏமாற்றாதே சம்சா… ஏமாற்றாதே!!!” ஜெமினிகணேசன் போல கெஞ்சினான் பிரஷாந்த்.
அவனை முறைத்தாலும், “எனக்கு தனியா ஆட ஒருமாதிரி இருக்கு” என்றதும், “தயவுசெஞ்சு என்னை கூப்பிட்டுடாத!” என்று இருகைகளையும் தூக்கி முன்ஜாமீன் வாங்கிவிட்டான் வித்தகன்.
சத்தமாய் சிரித்த பிரஷாந்த், “அப்ப என்னோட வா! ஆடலாம்!” என்று அழைக்க, வித்தகன் சரி என்றதும், வெகு ஆர்வமாய் எழுந்து போனாள்.
அவன் தன் மொபைலில் இருந்து ஒரு பாடலை ஆன் செய்துவிட்டு, “ஜஸ்ட் ட்ரை டு ஃபாலோ மை ஸ்டெப்ஸ்!” என்று சொல்ல, அவள் வெகு சிரத்தையாய் அவனை கவனிக்கலானாள்.
“நதியே…. அடி நைல் நதியே!!” அவன் ஸ்டைலாய் ஆரம்பிக்க, “ந..ன..ன..ன…னா” என்று அவனுக்கு ஈடாய் ஆட ஆரம்பித்தாள் சம்யு. அவர்களிடம் ஸ்டார்டிங் எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால், போக போக, அவள் நடனமாடுகிறேன் என்று இவன் காலை மிதிக்கவும், அவன் அவள் கையை பற்றி சுற்றுகையில், ‘ஐயோ’ என இவள் அலறுவதும், இறுதியாய் கைகளில் ஏந்த போனபோது அவள் ஒத்துழைக்காததில் தடுமாறி இருவருமே ‘பொத்தகடீர்’ என தரையில் விழுந்து புதையல் எடுத்தது என பார்க்க பார்க்க, வித்தகனுக்கும் பவித்ராவுக்கு அத்தனை சிரிப்பு!
சில வலிகளோடு இருவருமே ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு வந்து அமர, இன்னமும் சிரிப்பு தான் மற்ற இருவருக்கு.
பவித்ரா அதிகமாய் சிரிப்பதை பார்த்த சம்யு, “நெக்ஸ்ட் நீங்க தான்! என்ன பண்ண போறீங்க?” என்றாள். சிரிப்பு உடனே நிற்க, “எனக்கு பாட, ஆட எல்லாம் வராது!” என்றாள் பவி.
“பேசவாது வருமா?” சம்யு நக்கலாய் கேட்க, “சம்யுக்தா…!” என்று அழுத்தமாய் அழைத்தான் வித்தகன்.
அவள் வாயை மூடிக்கொள்ள, “எதாவது பேசுங்க அப்போ… ம்ம்ம்? கதை சொல்லுங்களேன்! விறுவிறுப்பா ஏதாவது!” வித்தகன் கேட்க, “டக்குன்னு கேட்டா ஒண்ணுமே வரலையே!” என்றாள் பவித்ரா பாவமாய்.
“இந்த வீடு, நம்ம சிச்சுவேஷன் இதெல்லாம் யோசிச்சா எதாவது தோணும் பாரு பவி!” பிரஷாந்தும் சொல்ல, சில நொடிகள் யோசித்தவளோ, “ஒரு கதை தோணுது” என்றாள்.
மூவரும் ஆர்வமாய் சொல்ல சொல்ல, “எல்லாருக்கும் குவீன் எலிசபெத் தெரியும்ல?” என்றாள் கேள்வியாய்.
“ம்க்கும்! கதைல கூட இங்கிலீஷ்கார கதை தான் சொல்வா இவ!” பிரஷாந்த் முனக, “இப்போ கூட ரீசென்ட்டா இறந்தாங்களே அவங்களா?” என்றாள் சம்யு.
“அவங்க இல்ல… அவங்களோட மூதாதையர் தான் நான் சொல்றவங்க! அவங்க வம்சாவளி தான் இப்போ இறந்துப்போன எலிசபெத்” என்றவள்,
“குவீன் எலிசபெத் பெலாங்க்ஸ் டு சிக்ஸ்டீந்த் செஞ்சுரி. பிஃபோர் ஹர், குவீன் மேரி ஒன்லி…..” அவள் ஆர்வமாய் ஆரம்பிக்க,
“இங்கப்பாரு! தஸ்ஸு புஸ்ஸு’ங்காத! ஒரு ஊருல எலிசபெத்ன்னு ஒரு ஆயா இருந்துச்சு! மேல சொல்லு!” என்று பிரஷாந்த் இடைபுக, அவனை அல்பமாய் பார்த்தாள் பவி. ஆனாலும் அடுத்து தமிழில் கதையை தொடர்ந்தாள்.
“அவங்க அக்கா குவீன் மேரி தான் முதல்ல ஆட்சிக்கு வந்தாங்க! அவங்க பார்க்க ரொம்ப சுமாரா இருப்பாங்கன்னு அந்த ஊருல யாருக்கும் அவங்களை பிடிக்கல! அப்போ, அந்த குவீன் ப்ரெக்னன்ட்’ ஆகிருக்காங்க… பத்து மாசம் ஆகியும் குழந்தை பிறக்கலையாம்! அப்புறம் தான் தெரிஞ்சுது, அவங்க உண்மையாவே கர்ப்பமா இல்ல, இது ‘ஃபெந்தோம் ப்ரெக்னன்சி’ன்னு!” என்று சொல்ல,
“அப்படின்னா?” என்றாள் சம்யுக்தா.
“அப்படின்னா, அவங்க வயித்துல ஒரு கட்டி உருவாகும்… அதை அவங்க கர்ப்பம்ன்னு நினைச்சுடாங்க! இப்போ மாதிரி அப்போ மருத்துவம் முன்னேறல தானே!?” என்றவள்,
“நம்ம காய்ச்சல் வரனும்ன்னு நினைச்சுட்டே இருந்தா, நம்ம உடம்பே அதுக்கான சிம்ப்டம்ஸ் உருவாக்கி நமக்கு காய்ச்சல் வர வச்சுடும்! அதுமாதிரி அவங்களும் கர்ப்பமாகனும்ன்னு தீவிரமா நினைச்சுட்டே இருந்ததால, அவங்களுக்கு ப்ரெக்னன்சி சிம்ப்டம்ஸ உடம்பு உருவாக்கிடுச்சு! இதை ‘சூடாசிஸ்’ன்னு சொல்லுவாங்க!” என்றாள்.
“ஓஹோ! அப்புறம் என்ன ஆச்சு?”
“ஊருல இருக்கவங்க எல்லாம் இதை வச்சு அவங்களை ரொம்ப மோசமா பேசிருக்காங்க! அதுல கோபமான குவீன், ஒரு மார்கெட் ப்ளேஸ்’ல வச்சு முன்னூறு பேரை உயிரோட எரிச்சுருக்காங்க!” என்று சொல்ல, கேட்டவர்களுக்கு பக்கென்றானது.
“நிஜமாவா?”
“எஸ்… அதனால ஹிஸ்டரி’லையே அவங்க பேரு, ‘ப்ளடி மேரி’ன்னு தான் இருக்கு!” என்ற பவி, “அவங்க கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க! ஆனா, ராத்திரி மூணு மணிக்கு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சு, கண்ணாடி முன்ன நின்னு…
‘ப்ளடி மேரி… ப்ளடி மேரி… ப்ளடி மேரி’ன்னு மூணு முறை சொன்னா, அந்த கண்ணாடில அவங்க முகமும் ரத்தக்கரையோட அவங்க கைகளும் தெரியும்ன்னு இன்னமும் நம்புறாங்க!” என்றாள்.
“அடப்பாவிங்களா? இது பன்னிமூஞ்சிவாயன் கதையால இருக்கு?” பிரஷாந்த் சிரிக்க, “இதுல இன்ஸ்பையர் ஆகிக்கூட அதை படமா எடுத்துருக்கலாம்!” என்றாள் சம்யு.
‘இருக்கலாம்!’ என தோளை குலுக்கிய பிரஷாந்த், “கேட்கவே சிரிப்பா இருக்குல? மூணு முறை கூப்பிட்டா அந்த அம்மா வருமா? பேசாம அந்த அம்மாவையே கூப்பிட்டு கதவை திறந்து விட சொல்லுவோமா?” என்றவனோ, சுற்றிலும் பார்க்க, மரத்தில் வேலைப்பாடுடன் அமைந்த அந்த ஆளுயர கண்ணாடி அவன் கண்களில் பட்டது.
“இதோ கண்ணாடி இருக்கு!” என்றவன், எழுந்து சென்று…
“இந்த கண்ணாடில கூப்பிட்டா வருமா அந்த ஆயா?” என்றான் கிண்டலாய்.
“பிரஷாந்த், இங்க வந்து உட்காருங்க…” வித்தகன் கண்டிப்புடன் அழைக்க,
“போர் அடிக்குது… சும்மா கூப்பிட்டு பார்ப்போமே ஜி…” என்ற பிரஷாந்த்,
கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை உற்றுப்பார்த்து,
“ப்ளடி மேரி…!” என்று சொல்ல, சில நொடிகள் எந்த சலசலப்பும் இல்லை.
தில்லாக சிரித்தவன், “ஐநூறு வருஷமா உலவிட்டு இருக்க மித்’த இன்னைக்கு நான் உடைக்கப்போறேன்” என்றவன், “ப்….” என ஆரம்பிக்க, அவன் தலைக்கு மேல் எரிந்த விளக்கு, சட்டென விட்டுவிட்டு எரிய ஆரம்பித்தது. கிலிப்பிடித்துக்கொண்டது மூவருக்கும்!
“டேய், வேணாம்!” வித்தகன் சொல்ல, ‘பயப்படக்கூடாது!’ என தங்களுக்குள் உருப்போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.
உதடுகள் லேசாய் நடுங்க, “ப்..ள..டி மேரி!” அடுத்தமுறை அவன் சொல்ல, வீட்டின் அத்தனை விளக்குகளும் விட்டுவிட்டு மின்ன ஆரம்பித்தது.
அமர்ந்திருந்தவர்கள் எழுந்து சுவர் ஓரமாய் ஒண்டிக்கொள்ள, கண்களை இறுக மூடியவன், “ப்..ப்…ப்ளடி மேரி” என்று சொல்லிமுடிக்கையில் விட்டுவிட்டு மின்னிக்கொண்டிருந்த அத்தனை விளக்குகளும், ஒரேயடியாய் நின்றுப்போய் வீடே காரிருளில் மூழ்கிவிட, கண்களை திறக்ககூட பயந்தவனாய் அஞ்சிக்கொண்டு நின்றிருந்தான் பிரஷாந்த்.
அவன் ஏன் இப்படி செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சுற்றிலும் எந்தவித சத்தமும் இல்லை. கண்கள் மூடியிருக்க, செவியும் உணர்வுகளும் செவ்வனே வேலை செய்தது அவனுக்கு.
ஏதோ ஒன்று தன் தலைக்கு பின்னால் நகர்ந்து வரும் அரவம்!
அது தன்னை நெருங்கிவிட்டது என்று புரிந்தது அவனுக்கு.
கழுத்து புரடியில் மயிர்கூச்சரிப்பு! ஏதோ உரசுகிறது என புரிந்தது.
இடப்பக்க காதுக்கு கீழே லேசான குளிர்காற்று வீச, உடலே சிலிர்த்து அடங்கியது அவனுக்கு.
அவன் முழு உடலையும் பின்னால் இருந்து ஒன்று உரசுவதை போல ஓர் பிரம்மை. அது பிரம்மை தானா என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
மெல்ல அவன் எச்சில் கூட்டி விழுங்க, அவனருகே ஒட்டி இருந்த ஒன்று இப்போது வந்த வழியே கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவதை அவன் புலன்கள் உணர்த்த, அவன் சற்றே ஆசுவாசமாகி கண்களை மெல்ல மெல்ல, மெதுவாய் திறக்கையில் அவன் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சுற்றிலும் இருட்டு.
சில வினாடிகளில் அவன் கண்கள் இருட்டுக்கு பழக, அவன் கண்ணாடி முன்னே நிற்பது தெரிந்தது. அவன் உருவத்தை அவனே ஊன்றிப்பார்க்க, இதோ… அவன் கழுத்துக்கு பின்னே…. என்னவோ… ஏதோ ஒன்று!!!
என்ன அது? என அவன் இன்னும் கண்ணாடியோடு ஒன்றி பார்க்க முயல, அவன் உருவம் அந்த கண்ணாடியில் எங்கோ தொலைவில் நகர்ந்துக்கொண்டிருந்தது. பீதியடைந்தவன், இன்னும் நெருக்கமாய் அந்த கண்ணாடியின் அருகே நெருங்க, நெருங்க…. கண்ணாடிக்கும் அவனுக்கும் ஒரு அரை அடி தொலைவு இந்த நேரம், விலகி சென்றுக்கொண்டிருந்த அவன் பிரதி உருவம் சடாரென அவனை நெருங்கி வந்து பிரதிபலிக்க, மூச்சடைத்தது அவனுக்கு.
மெல்ல கையை உயர்த்தியவன், தன் முகத்தை அக்கண்ணாடியில் தொட்டுப்பார்க்க முயல, அவனால் தொட முடிந்தது. மெல்லிய… மிக மெல்லிய ஆசுவாசம்! எச்சில் கூட்டி விழுங்கி அவன் பின்னால் நகர….
அவன் பிம்பம்! அது நகராமல் அப்படியே நிற்கிறதே!!!
ஐயோ?! என பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவன் உருவம் அவனை கண்டு விகாரமாய் தன் கோரை பற்கள் காட்டி சிரிக்க ஆரம்பித்தது. அவன் உருவே அவனை பேதலிக்க வைத்தது. அவன் மூச்சடிக்க பின்னால் நகரப்போன கணம், கண்ணாடிக்குள் இருந்த அவன் பிம்பம், அவனை கைநீட்டி, ஒரே கொத்தாய் உள்ளிழுத்து விழுங்கிக்கொண்டது.