‘சொந்த தங்கச்சி கல்யாணமாகி போய்டுவாளே, வீட்டுப்பொண்ணு ஆசைப்படுறாளேன்னு மனசு வருதா பாரு, என்ன இருந்தாலும் எங்க மாமா மாதிரி வராது’ என்று வஞ்சுளவல்லி கோபத்தில் பாத்ரூமின் அருகே நின்று திட்ட
பாத்ரூம் கதவைத் திறந்தவன்
“ஆமா, உன் மாமா மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது, என்ன இப்போ?” என்று அவன் கேட்க, வஞ்சி இப்போது பேசாமல் இருக்க
“உன்னிஷ்டப்படி என்ன வேணும்னாலும் செய்னு சொல்லிட்டேன் நான், நீ நல்லவன்னு சொல்லனும்னு என்னால எல்லாம் நடிக்க முடியாது” என்றவன் கதவை மீண்டும் சாற்றிக்கொண்டான்.
வஞ்சி ஒருவழியாய் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட, மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்துவிட்டாள், இளா அவளிடம் ஒன்றும் பேசவில்லை. மாதவி அவளிடம்
“இங்க பாரு வல்லி ஊர்ல உங்கம்மாவுக்கு சமைக்கிற மாதிரி என் புள்ளைக்கு சமைக்காத, என் மகனுக்கு நல்லா சமைச்சுப் போடு” என்றார் அதிகாரமாக.
“சரிங்கத்த” என்றவள் இரவிற்கு அவர்களுக்கு உணவு செய்தாள். இட்லி செய்து சட்னி வைக்க அவள் வெங்காயம் உரிக்க, கமலி அவளை ஒட்டிக்கொண்டு நின்றவள்
“என்ன அத்தாச்சி? என் கூட ஊருக்கு வர சொன்னேன் இல்லையா?” என்று ஆசையாய்க் கேட்க
இளந்திரையனின் மீது வஞ்சியின் பார்வை போனது, அவனோ அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். வஞ்சிக்குக் காலையில் இருந்த ஆசை இப்போது இல்லை, இளந்திரையனிடம் சண்டைப் போட்டது என்னவோ சஞ்சலமாய் இருக்க, அதற்கும் அவன் மேல் கோபம் கிளம்பியது.
‘என் ஆசையை ஸ்பாயில் பண்ணிட்டான்’ என்று அவனைத் திட்டினாள் மனதினுள்.
“உன்னைத்தானே கேட்கிறேன்” என்ற கமலியின் முகம் பார்த்தவள்
“என் கூடத்தான் இருக்கனும், இப்போ அம்மா அப்பா கூட பழைய ரூம்ல தூங்குறாங்க, நான் தனியாதான் இருக்கேன், நீ என்னோட ரூம்ல தங்கிக்கோ நம்ம நைட்டெல்லாம் தூங்காம முன்னாடி மாதிரி ஜாலியா பேசலாம்” என்றாள் தோழமையுடன்.
“வரேன் டி ஆத்தா படுத்தாத” என்று சிரிப்புடன் வஞ்சி சொல்ல, கமலியும் சந்தோஷமாய் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். அப்படியே அவர்கள் உண்டு முடித்து இளந்திரையன் அவர்களை ஊருக்கு வழியனுப்ப கிளம்பினான். மாதவியிடம் கமலி,
“ம்மா, அத்தாச்சியைக் கல்யாணத்துக்கு வரனும்னு கூப்பிடும்மா” என்று சொல்ல
“ஏன் நான் சொல்லனும்? அதான் உன் அப்பாவும் அண்ணனும் வந்து கூப்பிட்டவோளே, எலிசபெத் ராணி நான் கூப்பிட்டாதான் வருவாளா?” என்று நொடித்தவர் அவளை அழைக்கவே இல்லை.
கமலி கொஞ்சம் சிணுங்கியபடியே வஞ்சியைப் பிரியமுடியாமல் கிளம்பிச் செல்ல, இளந்திரையன் அவளிடம் ஒன்றுமே பேசாமல் அவர்களுடன் சென்றுவிட்டான். அவர்கள் சென்று பத்து நிமிடத்திற்கெல்லாம் காலிங் பெல் சத்தம் கேட்க பார்த்தால் கார்த்திக்கேயன் நின்றிருந்தான்.
“அண்ணா வாங்க வாங்க” என்று சந்தோஷமாய் வஞ்சி அவனை வரவேற்க
“எப்படி வல்லி இருக்க?” என்று கேட்டவாறே அவன் சோஃபாவில் உட்கார
“அண்ணியை அழைச்சிட்டு வரலாமில்ல, பாப்பா என்ன பண்றா?” என்று வஞ்சி ஆசையாய் அண்ணன் மகளைப் பற்றிக் கேட்க
“போன வாரம் வந்தது, இன்னிக்கு ஆபிஸ் முடியவும் உன்னை அப்படியே பார்க்கலாம்னு வந்துட்டேன், நீ வா வீட்டுக்கு” என்றவன்
“அப்புறம்..என்ன வீட்ல யாரையும் காணும், மாமியார்லாம் வந்திருக்காங்கன்னு அண்ணிக்கிட்ட சொல்லியிருக்க” என்றவனின் பேச்சில் என்னிடம் நீ சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்க
“ம்ம், வந்தாங்க கமலிக்குக் கல்யாணப்புடவை எடுக்க, இப்போதான் கிளம்புறாங்க” என்று சொல்ல, அவன் தலையசைத்து எல்லாம் கேட்டுக்கொண்டான். மீண்டும் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க
“அதுக்குள்ள வர முடியாதே” என்று யோசித்தபடியே அவள் கதவுப்பக்கம் போக, கார்த்தியும் வாசலில் பார்வை வைத்தான்.
ஸ்வீக்கியில் இருந்து உணவு வந்திருக்க
“நான் எதுவும் ஆர்டர் செய்யலையே” என்று வஞ்சி சொல்ல
“இல்ல மேம், இந்த அட்ரஸ்தான் இப்போ கூட ஸார் கிட்ட கேட்டுத்தான் வந்தேன்” என்றதும் ‘யார் பெயரென்ன’ என்று விசாரிக்க இளந்திரையன்தான் ஆர்டர் செய்திருந்தான்.
‘ஹோ! என் சாப்பாடு சாப்பிட மாட்டானோ?’ என்று கடுப்பில் அவள் வாங்கி வைக்க, கார்த்தியிடம்
“இல்லம்மா, ஒரு காஃபி தா, அப்புறம் சண்மு சமைச்சது வேஸ்டா போச்சுன்னு என்னைத் திட்டுவா” என்று சொல்ல வஞ்சி அண்ணனுக்குக் காஃபி எடுத்து வந்தாள். கார்த்தி காஃபியைப் பருக, இளந்திரையனிடமிருந்து வஞ்சிக்குப் போன்.
“சாப்பாடு வந்தாச்சா?” என்று எடுத்தவுடன் அவன் கேட்க
“வந்தாச்சு”
“சரி நீ சீக்கிரம் சாப்பிடு, சூடு ஆறிடும்” என்று இளந்திரையன் சொல்லி வைத்துவிட்டான். அதுவரை அவளை சூழ்ந்திருந்த சூடு ஆறியது போல, ஒரு சுகமான குளுமை மனமெங்கிலும் மையம் கொண்டது.
‘எனக்காக வாங்கினானா?’ என்ற எண்ணம் ஏகத்திற்கும் உச்சி முதல் பாதம் வரை உவகையினை தெளித்து செல்ல, மறைக்க் முயன்றும் வஞ்சியின் வதனத்தில் ஒரு வர்ணஜாலம்! வர்ணனனைக்குள் அடங்கா ஒரு வாத்சல்யம்! சொல்லுக்குள் அடங்கா சௌந்தர்யம்!
வஞ்சியின் முகத்தையே பார்த்திருந்த கார்த்திக்கேயனுக்கு தங்கையின் மாறுதல்கள் நன்றாய்த் தெரிந்தாலும் ஒன்றும் புரியாமல் இருக்க
“என்னாச்சு வல்லி?” என்றான் ஆவல் நிரம்பிய குரலில்.
“அ..அது எனக்காக ஆர்டர் பண்ணினாராம் அண்ணா” என்று அவள் கொஞ்சம் தயங்கியே சொல்ல
சிறிது நேரம் மௌனமாய் இருந்த கார்த்திக்கேயன்,
“பரவாயில்லையே உன் மேல அக்கறையாய் இருக்கான் இளா” என்று மெச்சுதலாகச் சொல்ல, அண்ணனின் பேச்சில் இன்னும் தித்தித்தவள்
“அதெல்லாம் இப்போ நிறைய அண்ணா, நான் ஆபிஸ் விட்டு வரும்போது காஃபி போட்டு வைச்சிருப்பார்” என்றாள் உடனடியாக. என்னவோ அவனைப் பற்றி இத்தனை நாள் பேசா பெருமையெல்லாம் பேச முயன்றாள் பாவை. அதில் கார்த்திக்கும் சந்தோஷம் பொங்கிட
“சண்மு முன்னாடி இதெல்லாம் சொல்லிடக் கூடாது, ஒரு நாள் தலைவலிக்குதுனு காஃபி கேட்டா, கரம் மசாலாவை போட்டுடேன், காஃபி தூளுக்குப் பதிலா, என்னை வைச்சு செஞ்சுட்டா” என்று கார்த்தி சொல்லி சிரித்தவன்
“அப்போ இளாவை உனக்குப் பிடிச்சிருக்குத்தானே?” என்று தங்கை மனம் அறிய கேட்க
“அது தெரியலை” என்று சொல்ல வந்தவள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவனுடன் தானே இனி வாழ்வு என்ற எண்ணம் ஆழமாய் எழ
“பிடிச்சிருக்கு” என்றாள் மனதினுள் அவனை எனக்குப் பிடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்.
“சரி உன் வீட்டுக்காரன் உனக்காக என்னவோ ஆர்டர் பண்ணியிருக்கான் நீ சாப்பிடு முதல்ல” என்று சொல்ல
“இல்லண்ணா, டைம் இன்னும் ஆகலையே, நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவள்
“கதிர் அண்ணாவுக்குப் பொண்ணு பார்த்தாச்சா?” என்று கார்த்தியின் தம்பி பற்றி விசாரிக்க அப்படியே இருவரும் பேச, இளந்திரையன் வந்துவிட்டான்.
வஞ்சி கதவைத் திறக்கவும் அவள் பார்வையைப் பார்த்தவன் கார்த்திக்கேயனைப் பார்த்துவிட்டு அமைதியாய் உள்ளே நுழைய
“வாங்க மாப்பிள்ளை” என்றான் கார்த்தி. அதில் இளாவின் பார்வை வஞ்சியைப் பார்க்க, அவள் அவனைப் பார்க்காமல் இருக்க, இளாவிற்கு கார்த்தியின் அழைப்பே அவனின் மாற்றத்தை சொல்லிவிட
“வாங்க மச்சான்” என்று சொல்லி அவனும் அருகே உட்கார
“அப்புறம் நான் கிளம்புறேன் வஞ்சி, உன் வீட்டுக்காரருக்கு வேற நடுவுல யார் வந்தாலும் பிடிக்காது” என்று சொல்லி இளாவை வம்பிழுக்க
“ஏன் இப்படி?” என்று இளாவும் புன்னகையுடன் கேட்க
“என்ன மாப்ள்? தங்கச்சிக்கு மட்டும் பிரியாணியெல்லாம் வந்திருக்க, மச்சானுக்கு ஒன்னுமில்லையா?” என்று கார்த்தி கேட்க
“அடப்பாவி! இன்னும் கிளம்பலையான்னு டீசண்டா கேட்கிறடா நீ?” என்று சொல்லி கார்த்தி பின் சீரியசாய்
“இளா, கமலி கல்யாணம் முடியவும் ஒரு நாள் இரண்டு பேரும் ஒன்னா வீட்டுக்கு வரனும் சரியா?” என்றவன்
“அன்னிக்குப் பேசினதெல்லாம் அவ மேல உள்ள அக்கறையாலதான், அம்மா அப்பா இல்லாத பொண்ணு, நல்லா பார்த்துக்கோ டா” என்று கார்த்தி சொல்ல
“நான் இருக்கேன்” என்றான் உடனே.
வஞ்சி எல்லாம் பார்த்தவள் அமைதியாய் இருந்தாள், கார்த்தி அவளிடம் சொல்லிவிட்டு கிளம்ப, இளந்திரையன் டீபாயைப் பார்க்க இன்னும் பிரியாணி பிரிக்கப்படாமல் இருக்க
“வஞ்சி! உனக்காகத்தான் ஆர்டர் பண்ணினேன், சாப்பிடு முதல்ல” என்று சொல்ல
“உங்களுக்கு என்ன சாப்பிடறதுக்கு” என்று கேட்க
“அதான் இட்லி இருக்கே” என்று சொல்ல, இரண்டு தட்டு எடுத்து வந்தவள் இரண்டிலும் பிரியாணியை வைக்க
“ஏய் நான் மதியம் சாப்பிட்டேன் டி, எனக்கு வைக்காத” என்று இளந்திரையன் மறுக்க
“என் கூட சேர்ந்து சாப்பிடனும்” என்று கட்டளையாய் சொன்னவள் பால்கனியில் போய் உட்கார்ந்து கொண்டாள். இளந்திரையன் அவள் பின்னால் போனவன் இட்லி, சட்னி, தண்ணீர் எல்லாம் எடுத்தவன் பால்கனியில் வைத்து அவளைப் பார்க்க, அவளோ வானில் தெரிந்த நிலவைப் பார்த்தாள்.
அந்த பால்கனியில் இருந்து பார்க்க, நகரமே அப்படி ஒரு ப்ரமாண்டமாய் வெளிச்சமாய் இருக்க, மொத்தமாய் ஒரு வர்ணஜாலம்! காற்று வேறு நன்றாய் வீச, அவள் வைத்திருந்த செடியில் இருந்து மல்லிவாசம் வேறு இன்னும் மஞ்சிமம் கூட்டியது.
“எனக்கு நைட்ல ரொம்ப வேண்டாம் வஞ்சி, நீ எடுத்துக்கோ” என்று சொல்லி அவளின் தட்டில் அவன் லெக்பீசை வைக்கப் போக
“வேண்டாம்” என்றவள் பிடிவாதமாய் இருக்க
“எங்க வைச்சிருந்த இவ்வளவு பிடிவாதம்” என்று திட்டியவன்
“சரி இவ்வளவு சொல்றதால கஷ்டப்பட்டு இந்த லெக் பீசை தத்து எடுக்கிறேன் நான்” என்றவன் மிகவும் கஷ்டப்பட்டு இரண்டே நிமிடத்தில் காலி செய்ய, அவனை புன்னகையுடன் பார்க்க அவள் பார்வையில் கொஞ்சம் கிண்டல் தெரிய
“பாவமா இருந்துச்சு டி, அதான் டக்குன்னு சாப்பிட்டேன்” என்றவன் அவன் தட்டில் இருந்த சாதத்தை எடுத்து அவள் தட்டில் வைத்துவிட்டு இட்லி சட்னியுடன் உண்டான்.
“என்ன சட்னிடி இது, செமையா இருக்கு”
“அது வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி வைச்சு வதக்காம அப்படியே பச்சையாய் அரைச்சேன், அதான் நல்லா காரமாய் இருக்கும்”
“இஞ்சி வைச்சியா?” என்று அவன் இழுக்க, வழக்கம் போல் வஞ்சி முறைக்க
“பிரியாணி எப்படி இருக்கு?” என்றவனின் கேள்விக்கு
“நல்லா இருக்கு, காலையில கத்தின, ஒருவார்த்தைப் பேசல, இப்போ என்ன பிரியாணி கொடுத்து சமாதானமோ?” என்றாள் மங்கை அவன் மனமறிய.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, ஊருக்குப் போறதுன்னா போயேன், பிரியாணி நான் வாங்கித்தரேன்னு காலையில சொன்னேன் இல்ல, அதான் வாங்கினேன்” என்றான் இளந்திரையன் இன்னும் அவள் காலையில் சொன்னதைக் கேட்டு மனம் ஆறாதவனாக.
“கமலி பாவமில்ல”
“ஒன்னும் கெட்டுப்போகலை, பிரியாணியை சாப்பிட்டு முடி, பத்து மணி பஸ் இருக்கும் ஜம்முன்னு போயிடு” என்றான் கடுப்பாக. அவன் சொன்னதைக் கேட்டவள்
“அப்போ சாப்பிட்டு கிளம்பவா?” என்று கேட்டு வைக்க, இன்னும் இளந்திரையனுக்குக் கோபம் கூடியது.