“இஞ்சியீய்!” என்று காதல் நிறைந்த குரலில் அழைத்தவன்
“இவ்வளவு மிஸ் பண்ணிட்டு இரண்டு நாள் முன்னாடி கொஞ்சமும் அலட்டிக்காம இருந்தியே டி, உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றான் கடுப்பாக.
பின்னே அவள் கொஞ்சம் அசராமல், ஒரு மாதம்தானே என்று சொல்லி பெரிதாய் அவனிடம் தன்னை வெளிப்படுத்தவில்லை, உண்மையில் அவளே இப்படி அவனுக்காக ஏங்கி நிற்போம் என்று நினைக்கவில்லை.
மனதிலோ மங்கைக்கு பெரும் மள்ளல் இருக்க, இரண்டரை வருடம் தனியே தானே இருந்தேன் என்ற எண்ணம்தான், சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்க, அப்போது எல்லாம் அவளைப் பொருத்தவரை இளந்திரையன் என்பவன் அவளின் வாழ்வில் இல்லாதவன், இப்போது வாழ்வென்பதே அவனாகிப் போக காதலாகினாள் பெண் கணவன் மீது!
அடுத்த இருபது நாளும் தினமும் இதனையே வாடிக்கையாக்கினார்கள் இளந்திரையனும் அவனின் இஞ்சியும். இடையே என்றாவது இளாவிற்கு வேலை அதிகமானால் அப்போது மட்டும் வஞ்சியை தனியே சமைத்துக் கொள் என்பவன் வீட்டிற்கு வந்து உணவை ஆர்டர் செய்து, அதனை அவளுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே உண்பான்.
எப்படியோ அவன் நினைத்தது போலவே சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்க, வஞ்சுளவல்லியிடம் வந்து சேர்ந்தான் இளந்திரையன். அன்று விடுமுறை தினமாக இருக்க, வஞ்சி இளா வந்ததும் அவனைக் கட்டிக்கொண்டாள்.
“இரு, இரு குளிச்சிட்டு வரேன் இஞ்சி” என்று சொல்லி அவன் விலகப்பார்க்க விடாது அவனைக் கட்டிக்கொண்டு
“நீ குளிக்கப் போனா அரை மணி நேரம் ஆகும்” என்று முகம் சுருக்கிச் சொல்ல
அவள் நெற்றியுடன் முட்டியவன் ”இஞ்சி! குளிக்கலன்னா எனக்கு அன்ஈசியா இருக்கும்” என்றவன்
“குளிச்சிட்டு வந்தப்புறம் உன்னை விடாம கட்டிக்கிறேன்” என்று சொன்னவன்
“அங்க பாரு அந்த பேக் இருக்குல, அதுல உனக்கு ஒரு கிஃப்ட் இருக்கு, நீ எடுத்துப் பாரு” என்றவன் குளிக்க போய்விட, அவன் சென்றதும் அதனைப் பிரித்துப் பார்க்க, ரொம்பவே மகிழ்ந்து போனாள்.
அவன் குளித்துவிட்டு வருவதற்குள், அவனுக்குப் பூஸ்ட் கலக்கி வைக்க
, குளித்துவிட்டு டீஷர்ட் ட்ராக்ஸ் சகிதம் வந்து நின்றவன் அந்த வாசத்தில் தன்னைத் தொலைத்து
“வாவ் வஞ்சி பூஸ்ட் குடிச்சு எத்தனை நாளாச்சு? புனே போய் பூஸ்ட் குடிக்கவே இல்ல” என்றபடி சோஃபாவிற்குச் சென்றவன் ரசித்துக் குடிக்க
“ஏன் புனேல பூஸ்ட் கிடைக்காதா என்ன?” என்றபடி அவன் அருகே உட்கார
“பூஸ்ட் கிடைக்கும், ஆனா பூஸ்ட் கொடுக்க பொண்டாட்டி கிடையாதே” என்று கண்ணடித்தவன்
“எங்கம்மாவே நான் வேலைக்குப் போனதும் பூஸ்ட் குடிப்பேன்றதையே மறந்துப் போய்ட்டாங்க, ஆனா நீ இத்தனை வருஷம் அப்புறம் மறக்கல” என்று சொல்லி ரசித்து ரசித்துப் பருகினான்.
ஒவ்வொரு முறை பூஸ்ட் குடிக்கும்போதும் அவன் சொல்லும் கதைதான், இன்றும் அப்படியே!
அவன் குடிப்பதையே பார்க்க,
“நீ காஃபி குடிச்சியா?” என்று கேட்க
“எனக்கு வேண்டாம்” என்றவள் அவனைக் கொஞ்சம் முறைத்தபடி
“இரண்டு பாக்கெட் பூஸ்ட் வாங்கி இருந்துச்சு, நீ இங்க கல்யாணம் முடிஞ்சு வந்த பின்னாடி ஒரு நாள்தானே இருந்த, நான் உனக்கு ஒருதடவ கலக்கினேன். அப்போ ஒரு பாக்கெட் இருக்கனுமே, கூடவே இன்னொரு பாக்கெட்லையும் கொஞ்சம் இருந்துச்சு” என்று கேள்வியாய் இழுக்க
“அது நான்தான், கொஞ்சம் பசிச்சதுன்னு எடுத்து சாப்பிட்டேன்” என்று சொல்லி அவளின் மீது கைப்போட்டு இழுத்து தன்னருகே அழைக்க, வாகாய் அவனுடன் சாய்ந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு
“உன் கிஃப்ட் சூப்பர், நிஜமா நான் எக்ஸ்பெக்ட் பண்ணல, பட் ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னவளின் வார்த்தையில் அவ்வளவு சந்தோஷம்! கூடவே இத்தனை நாளில் இல்லாத ஒரு மலர்வும் பொலிவும் பெண்முகத்தில்!
“அது வீட்டுக்கு வர வழியில, ஒருத்தர் மாட்டுவண்டியில வித்துட்டு வந்தார், புனேவுல இருந்து வரும்போது உனக்கு என்ன வாங்கினா நீ சந்தோஷப்படுவன்னு மனசுல ஒரே யோசனை, ஆனா ஒன்னும் தோணல, இங்க இதைப் பார்க்கவும் வாங்கினேன்” என்று சொல்ல
“நிஜமா வேற என்ன வாங்கியிருந்தாலும் இவ்வளவு சந்தோஷம் இருக்காது எனக்கு, எல்லாமே உயிரல்லாத பொருளாதான் இருந்திருக்கும், பட் இந்த செடி ஐடியா” என்று கண்களில் காதல் பொங்க சொன்னவள்
“இளா, நீ எங்கூட வாழனும்னு சொன்னப்போ எனக்கு உன்னைப் பிடிக்குமான்னு ரொம்ப பயம் இருந்துச்சு, ஏன்னா நமக்குள்ள எப்பவும் ஒத்துப்போனதில்ல, பட் இப்ப சொல்றேன் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி அவன் தோள் சாய்ந்தவள்
“பாரு, நீ குளிச்சிட்டு வரதுக்குள்ள அந்த செடியை அழகா தொட்டிக்குள்ள வைச்சிட்டேன்” என்று உற்சாகமாய் சொல்லவும்
“இன்னும் கூட உனக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றவன் புனேவில் இருந்து அவளுக்கென வாங்கி வந்த ஐந்து புடவைகளைக் காட்டினான். எல்லாம் விலையிலும் அதிகம், கலை நயத்திலும் அதிகம். மராத்தியர்கள் கட்டும் வகை எல்லாம்.
“நிறைய புடவை இருக்கே இளா, இப்போ ஏன்?” என்று சொன்னாலும்
“பட் நல்லா இருக்கு, எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சொல்ல,
“புடவை இல்லாம வேற டிரஸ் வாங்கலாம்னு பார்த்தேன் பட் எனக்கு சைஸ் தெரியாதுல்ல”என்று குறும்பாய் சொன்னவனின் இடையில் அவள் கிள்ளிவைத்தாள்.
“ஏட்டி என்னைக் கிள்ளுறியா?” என்றவன் அவளைப் பிடித்து இடையில் கிள்ளப் பார்க்க, அவள் துள்ளினாள்.
“என்னடி இந்த இஞ்சி இடையைப் பார்க்கலாம்னு பார்த்தா, இன்னிக்கும் இந்த டிரஸைப் போட்டிருக்க” என்று அவளின் மேக்ஸியைப் பார்த்து அவன் முறைக்க
இருவரும் உண்டு முடித்து எல்லாம் ஒதுங்க வைத்து அறைக்குள் போக, இளா வஞ்சியை அணைக்கப் பார்க்க, அவனைத் தள்ளிவிட்டவள்
“நான் நல்லா தூங்கி இருபது நாளாச்சு, நீயில்லாம என்னோட தூக்கமும் போச்சு, ஸோ இன்னிக்கு தள்ளி படு” என்று அவனைத் தள்ளிவிட
“கூட ஒரு நாள் இருபத்தொரு நாளா சேர்த்துக்கோ, இன்னிக்கும் உனக்கும் தூக்கமில்ல” என்றவன் இருவரின் இரவையும் தூங்கா இரவாக்கினான்.
வெட்கங்கள் பிறந்தனவா விலகினவா என்று தெரியா வண்ணம் வஞ்சியை வெட்கம் கொள்ள வைத்து அவளைக் கொள்ளைக் கொண்டான். தயக்கங்களும் மயக்கங்களும் கெஞ்சல்களும் கொஞ்சல்களுமாய் ஒரு கூடல்! கொஞ்சி கெஞ்சி அவனின் வஞ்சியிடம் மிஞ்சி என்று மொத்தமாய் அவளை சூழ்ந்தான் இளந்திரையன்.
‘இஞ்சி’ என்ற அழைப்பைத் தவிர ஒன்றும் பேசவில்லை இளந்திரையனிடம், அவளையும் பேசவிடவில்லை.
அடுத்த நாள் இருவருக்குமே அலுவலகம் இருக்க, காலையில் பரபரப்பாய்க் கிளம்பினாள் வஞ்சுளவல்லி. இளா இன்னும் உறக்கத்தில் இருக்க, அவனின் அலாரத்தையும் இன்னும் மாற்றிவைத்திருக்கவில்லை அவன், புனேவில் அவன் தங்கி இருக்குமிடம் அலுவலகத்திலிருந்து ஒரே கிலோமீட்டர்தான், நடந்தே சென்றுவிடுவான். இங்கு ஒன்றரை மணி நேரமாகும்.
எட்டு மணிக்கு அலாரம் அடிக்க, அரக்கப் பறக்க எழுந்தவன் பல் துலக்கிக் வஞ்சியிடம் வர, அவளைப் பார்க்கவும் பரபரப்பெல்லாம் போய் ஒரு துறுதுறுப்பு வந்துவிட, அவளின் இடையை வளைத்துப் பின்னால் நின்று அணைத்துக்கொள்ள
“ஒழுங்கா தள்ளிப் போய்டு இளா, எனக்கு இன்னும் வேலை இருக்கு” என்று கடுப்பாக அவள் பேச
“காலையில நோ டென்ஷன் இஞ்சி” என்று சொல்லி அவள் கன்னத்தை வருட
“என்னைத் தூங்கவிடாம செஞ்சிட்டு காலையில எழுந்து ஹெல்ப் ஆச்சும் செய்றியா?” என்று திட்ட
“எப்பவும் நீயேதானே டி செய்வ?” என்று அவன் இன்னும் வருடலை விடாமல் கேட்க
“அது நல்லா தூங்கி எழுந்து செய்வேன், எனக்கு டயர்டா இருக்கு” என்று சொல்லி அவன் மேலே சாய்ந்தாள் வஞ்சி.
“அப்போ லீவ் போடுறியா?” என்று அவன் கேட்க
“நோ! வொர்க் இருக்கு” என்றவள் வேகமாக வேலையில் ஈடுபட
“சரி நான் குளிச்சிட்டு வந்து உனக்கு ஹெல்ப் செய்றேன்” என்று சொல்லியவன் வருவதற்குள் எல்லாம் முடித்து வைத்திருந்தாள்.
“எவ்வளவு ஃபாஸ்ட் வஞ்சி” என்று அவன் பாராட்ட
“நீ குளிச்சிட்டு வரதுக்குள்ள நான் ஊருக்கே சமைச்சிடுவேன்” என்று திட்டியவள்
“உனக்கு என்ன வேணுமோ எடுத்து பேக் பண்ணிக்கோ, நான் கிளம்புறேன்” என்று சொல்லி அவள் கிளம்பிவிட, இளாவும் சிறிது நேரத்தில் கிளம்பிப் போனான்.
மாலை அவள் வருகையில் அவளுக்காக அவன் காஃபி போட்டுவைத்திருக்க, அந்த மணத்திலே எப்போதும் போல் மனம் நிறைய,
“நீ பூஸ்ட் குடிச்சியா?” என்று வஞ்சி கேட்க
“அது நீ போட்டுக் கொடுத்தாதான் எனக்குப் பிடிக்குது, நீ ஃப்ர்ஸ்ட் காஃபி குடிச்சிட்டு எனக்குப் பூஸ்ட் கொடு இஞ்சி” என்று சொல்ல, அவனை அதிகமாகவே பிடிக்க, காஃபியைப் பருகியவள்
அவனுக்குப் பூஸ்ட் கலக்கித் தந்தாள். பின் செடிகளுக்குத் தண்ணீர் விட்டவள் இரவு உணவினைத் தயார் செய்ய, இளந்திரையனும் அவளுக்கு உதவினான்.
அப்படியே உண்டு முடித்து அவள் பாத்திரங்கள் தேய்த்து முடிக்க, கையோடு அவளைத் தூக்கிக் கொண்டான்.
“இளா! இளா…அன்னிக்கு மாதிரி கொஞ்ச நேரம் பால்கனியில பேசிட்டு இருப்போம், அப்புறமா தூங்க போகலாம்” என்று சொல்ல
அவனும் அவளை இறக்கிவிட்டவன், குவில்ட் எடுத்துவந்து விரித்தான்.
“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் அது ஒகே இஞ்சி, ஆனா அடுத்த பாதி நடக்காது, நோ தூக்கம்” என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டு
“நிஜமா நீ என்னை மிஸ் பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்ல வஞ்சி, அன்னிக்கு நீ அழுதப்போ எனக்கு ஒருமாதிரி ஃபீலாகிடுச்சு, அதுவும் நீ ரொம்ப சுதந்திரமான பொண்ணு, ஐ மீன் உன்னை நீயே பார்த்துக்கிற அளவு தைரியமான பொண்ணு, என்னை நீ எதிர்ப்பார்க்கவும் ஐ அம் ஸோ ஹாப்பி”
“நேத்து இதெல்லாம் பேசனும் நினைச்சேன், ஆனா அதுக்கு சிட்டிவேஷன் இல்ல” என்று சிரித்தவன்
“நான் கூட என்னோட கம்பல்ஷனால மட்டும்தான் என்னோட இருக்கப்போலன்னு நினைச்சேன், நீ என்னை இவ்வளவு தேடுவன்னு நான் நினைக்கல” என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தான்.
“ஆரம்பத்துல வேணும்னா பை சாய்ஸ் அண்ட் சான்ஸ் உங்கூட வாழனும்னு நினைச்சேன் இளா, ஆனா நாளாக ஆக உன்னை ரொம்ப பிடிச்சிப்போச்சு, சில விஷயம் நீ செய்றது எனக்குப் பிடிக்காதுதான், ஆனாலும் எல்லாம் தாண்டி உன்னை பிடிக்குது, அது நானே எதிர்ப்பார்க்கல, ஒரு நாள் கூட உன்னோட பிரிவைத் தாங்க முடியல” என்று சொல்லி அவன் மேல் நன்றாக சாய, அவனும் அவளை இறுக்கிக் கொண்டான்.
“நீ திரும்பி வந்து எங்கூட வாழனும்னு நினைக்கலன்னா நிஜமா இப்படி நம்ம இருக்க வாய்ப்பே இல்ல, நான் கூட எனக்கு வேலை இருக்கு, வீடு இருக்குன்னு நினைச்சேன். எனக்கு வீடு மட்டும்தான் இருந்துச்சு நீ வந்துதான் அது குடும்பம் ஆக்கின, இந்த காதலுக்கும் நேசத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி அவனுக்கு முத்தமிட்டாள்.
முட்களால் உருவான திருமணம் என்றாலும் கூட இப்போது அது மலர்வனம்தான் மங்கைக்கு! உறவே வேண்டாம் என்றவளுக்கு மீண்டும் உறவாகி கொஞ்சம் காதலால் கொஞ்சும் நேசத்தால் வஞ்சியின் நெஞ்சமெல்லாம் நிறைந்தே போனான் இளந்திரையன்!