வஞ்சி அவன் விட்டால் போதுமென அறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து ஒரு காலர் நெக் சுடிதாரை அணிந்துகொண்டாள். பிறகு சார்ஜில் இருந்த தன் போனை எடுத்துப் பார்க்க கார்த்திக்கேயன் பலமுறை போன் செய்திருந்தான். நேற்று இளா வந்துவிட்டான் ஒன்னும் பிரச்சனையில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியதுடன் சரி. அதனால் அண்ணனுக்கு அழைத்தவள் அவனிடம் பேசினாள்.
“இன்னிக்கு நான் வரவா வல்லி, அவன்கிட்ட பேசுவோமா?” என்று கார்த்தி கேட்க
“இல்லண்ணா, நானே அவர் கிட்ட பேசிக்கிறேன்” என்றவளிடம்
“நேத்தே அவன் அப்படி கத்தினானேமா?” என்று கார்த்தி இளாவின் செயல்கண்டு சொல்லவும்
“அது நானா பேசலன்னுதானே கோவம், நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கையில்,
“இஞ்சி! வெளியே வா, நான் குளிக்கனும்” என்று இளந்திரையன் குரல் கேட்க,
“அண்ணா, அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லி வைத்தவள் கதவைத் திறக்கவும் இளா உள்ளே புகுந்தான். அவன் குளித்து வருவதற்குள் அவள் சமைத்து முடித்திருந்தாள். வஞ்சி அவனுக்கு முன்பாகவே உண்டு தட்டைக் கழுவி முடித்து சாமியின் முன் நின்றவள் குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டாள்.
உண்டு முடித்த இளந்திரையன் இவள் செயலைப் பார்த்துக்கொண்டே தட்டைக் கழுவிப்போட்டவன், இவளருகே வந்து
“ஓஹோ! அடையாளம்! என்று கிண்டலாய் சொன்னவன்
“இதெல்லாம் வைக்கிறது அடுத்தவங்களுக்காகவா இல்லை உன்னோட மனசுக்காகவா?” என்று கேள்வி கேட்டவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும்
“ஆனா பாரு எனக்கு இந்த அடையாளமெல்லாம் தேவையில்ல, மனசுல ஒருதடவ பதிஞ்சிடுச்சு எனக்குக் கல்யாணமாகிடுச்சுன்னு, சாகற வரைக்கும் போகாது” என்றவனிடம்
“ நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வைச்சுக்கலாம்னு சொன்ன ஞாபகம் எனக்கு, இப்போ போறோமா இல்லையா?” என்று அவன் வார்த்தைகளைக் கொண்டு மடக்கினாள் மங்கை.
‘எனக்கேவா?’ என்று சவாலாய் அவளைப் பார்த்தவன்,
“பார்டா! நான் தாலி கட்டின மனைவி… நோ நோ …நான் கட்டின தாலியைக் கழட்டிக் கொடுத்த மனைவி என் பேச்சைக் கேட்கிறா” என்றவனின் நக்கல் நங்கையை சுட
“ஆமா, எனக்கும் புருஷன் பேச்சைக் கேட்கனும்னு ஆசை வந்துடுச்சு” என்று அவனைப் போல் நக்கலாய்ப் பேசிட, இளந்திரையன் அவளின் பதிலில் ஆச்சரியம் அடைந்தான். வஞ்சியிடம் வாயாடியதெல்லாம் சின்ன வயதில்தான், அதன்பின் அவன் ஹாஸ்டல் போய்விட பெரிதாய்ப் பேச்சுகளே இல்லை, அடுத்து அவள் சென்னையில் படித்தபோதும் பெரிதான ஒட்டுதல் இல்லை, இதில் அவள் அம்மாவின் உடல் நிலை வேறு பாதிக்க வஞ்சியிடம் பேச்சுகள் குறைந்து போக, அவனைத் திருமணம் செய்த பின்னும் இன்னும் குறைவு. வஞ்சி தன்னிடம் பேசுபவர்களிடம் நன்றாகவே பேசுவாள், எல்லாரிடமும் சட்டென்று பேச வராது.
ஆனால் அவளுக்கு ரோஷம் அதிகம், சுயமரியாதை அவளினுள் ஊறியது! அவள் அப்பா மிலிட்டரிக்காரர் பெண்ணிடம் ‘எப்போதும் தைரியமாய் இருக்க வேண்டும், யாரிடமும் பயம் வேண்டாம், நீ செய்யும் செயல்களுக்கு மட்டும் பயம்கொள், அதனை ஒழுங்காய் செய்’ என்றுதான் அவளை வளர்த்தார். அம்மாவோ ‘எல்லாரிடமும் அன்பாய் இரு, அடுத்தவர் மனம் நோகச் செய்யாதே’ என்பதை சொல்லி வளர்த்திருக்க, இரண்டும் கலந்த கலவையாய் காரிகையானாள்.
இரண்டு நாளாய் அவனின் பேச்சுகளைக் கேட்டுப் பொறுத்து இருந்தவள், அம்மாவின் போதனையான பொறையுடமை அன்புடைமை எல்லாம் புதைத்து அப்பாவின் அறிவுரையான அஞ்சாமையைக் கையில் எடுத்து அவனிடம் பதில் பேசிவிட்டாள்.
இளந்திரையன் அவளை ஆச்சரியமாய்ப் பார்க்க, அவளோ வீட்டின் வெளியே நின்றிருந்தாள். உடனே அவனும் வெளியேற, அவள் வீட்டைப் பூட்ட
“கேப் புக் பண்ணப்போறேன், என்ன லேண்ட்மார்க் போட இந்த அட்ரஸுக்கு” என்று சொல்லி கேட்க அவள் சொல்லவும் அவன் வண்டி புக் செய்து விட்டு லிஃப்டில் நுழைய இவளும் அவனுடன் போனாள்.
இருவரும் கேப்காகக் காத்திருக்க, இளந்திரையன் வஞ்சியிடம்
“அப்பா நம்ம இரண்டு பேரும் வேலை வேற இடம் அதனால தனியா இருக்கோம்னு சொல்லி வைச்சிருக்காராம், ஸோ அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ” என்றவன் பின் அவனாகவே
“அதெல்லாம் நீ பிண்ணிடுவ இஞ்சி, குங்குமம் கூட பக்காவா இருக்கே” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன்
“ஆஹா! என்னடா புதுசா ஒரு சேஞ்ச் தெரியுதேன்னு பார்த்தேன் சேலைக் கட்டினா தாலி தெரியும், ஸோ சுடி அதுவும் காலர் சுடி” என்று அவன் வம்பு செய்ய, வஞ்சி பேசுவதற்குள் கேப் வந்துவிட உள்ளம் புகைந்தபடியே அவனுடன் போனாள் வஞ்சுளவல்லி.
ஸ்ரீனிவாசனின் வீட்டில் அவர்களுக்கு நல்ல உபசரிப்பு. அவனின் அம்மா பிருந்தா
“என்ன மா வல்லி நீ? இங்க இருந்திட்டா இவ்வளவு நாள் வரல நீ?” என்று அவர் வஞ்சியிடம் கேட்க, வல்லிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
உண்மை என்றால் உடனே சொல்லிவிடுவாள், பொய் அது அவளுக்கு வராது! தேவைப்பட்டதுமில்லை! சின்ன வயதில் எதாவது சொல்லியிருப்பாள் ஆனால் விவரம் தெரிந்து ஒன்றும் சொன்னதில்லை. கணவனின் முகத்தைத் தானாய்க் கண் நோக்கிட
“அது உங்களை மீட் பண்றப்போ இரண்டு பேரும் ஒன்னாதான் வரனும்னு ஆசை அத்தை” என்று இளா சமாளிக்க
“கல்யாணத்துக்கு இரண்டு பேரும் ஜோடியா இருக்கனும், லீவெல்லாம் முன்னாடியே சொல்லிடுங்க” என்றவர்
“உங்களுக்கு இந்த புதன்கிழமை ஃப்ரியா இளா? கமலிக்கு கல்யாணப்பட்டு எடுக்கனும், உங்கப்பா கிட்ட பேசிட்டேன் அவர் உங்க அம்மாவையும் கமலியையும் அனுப்பி வைக்கிறேன் சொன்னார், நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா வரனும்” என்று சொல்ல
“பட்டு எடுக்கிற வேலை மட்டும் முடிச்சிட்டா மீதியிருக்க பத்திரிக்கை எல்லாம் ஊர்ல வைச்சிடலாம்” பிருந்தா சொல்ல
“இன்னும் இருபது நாள்தான் இருக்கு, கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள வந்திடும்” என்றார் பத்பநாபன். சிறிது நேரம் அவர்களுடன் இருந்தவர்கள் காபி ஸ்னாக்ஸ் மட்டும் உண்டு விட்டு கிளம்பிவிட, வீட்டிற்கு வந்தவுடன் இளந்திரையன் மனைவியிடம்
“இஞ்சி! எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி சென்றுவிட
‘எங்கே? ஏன் போகிறாய்?’ என்று ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை வஞ்சி. அவன் போனதும் கதவை பூட்டியவள் அப்படியே சோஃபாவில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
வீடே அமைதியில் இருந்தது, அந்த அமைதி அவளின் அகத்திற்கும் தேவையாய் இருக்க, கண்கள் மூடிக்கொண்டாள். பின் உடையை மாற்றலாம் என்று நினைத்தவள் அறைக்குள் புகுந்து முகம் கழுவ, நெற்றியில் இருந்த குங்குமம் வழிந்தோட, கண்கள் கலங்க அதனைத் துடைத்தவள் அப்படியே மெத்தையில் உட்கார்ந்து கொண்டாள்.
குங்குமம் பார்க்கவும் இளந்திரையனின் பேச்சுகள் காதில் ரீங்காரமிட, உள்ளமெல்லாம் அவன் சொல்லும் ‘தாலியைக் கழட்டிய மனைவி’ என்ற வார்த்தை அவளை வதைக்கவே செய்தது. இப்படி வார்த்தையால் வதைப்பது அவன் அம்மாவைப் போல் என்று நினைத்துக் கொண்டாள். அவரின் வார்த்தைகள் இன்றும் அவளுக்கு மறக்கவில்லை.
இளந்திரையன் வஞ்சிக்குத் திருமணமான பத்தே நாளில் வஞ்சியின் அம்மா இயற்கை எய்திவிட, ஊரில் சென்று அவரின் இறுதி சடங்கை செய்ய முடிவெடுத்த சௌந்தர் ராஜன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். தங்கையின் புகுந்த வீட்டிலே எல்லா சடங்கும் நடக்க, அதுவரை வஞ்சியின் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் கயிறு யாரின் கவனத்தையும் கவரவில்லை. அவள் அன்று காலர் நெக் சுடிதார் அணிந்திருக்க, இறுதி சடங்கு முடித்து பெண்கள் எல்லாம் குளித்திருக்க வஞ்சிக்குத் திருமணம் ஆனதெல்லாம் அகத்தினில் பதியவே இல்லை.
அம்மாவிற்காக! அதுமட்டுமே அகம் நிறை உணர்வாய் இருக்க, இன்று அம்மா இல்லை என்பதனை தாங்கவே முடியவில்லை. கைக்கு அகப்பட்ட நைட்டியை மாற்றியவள் அறையில் அப்படியே முடங்கி உட்கார்ந்துவிட்டாள். நைட்டியைத் தாண்டி வெளியே அவளின் மாங்கல்யம் தெரிய, கமலிதான் முதலில் பார்த்தவள்
“என்ன அத்தாச்சி தாலி?” என்று அதிர்ச்சியில் கத்திவிட, அப்படியே அச்செய்திக் காட்டுத்தீயாய்ப் பரவ, சௌந்தர் ராஜன் வந்து விஷயம் சொல்லவும் வஞ்சியின் பெரியப்பா வீட்டினர் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை, தாய்க்கு அடுத்து தாய்மாமன்தான், அதுவும் அவரின் மகன் என்பதால் அவர்கள் அதனை எளிதாய் எடுக்க, மாதவிக்குத் தாளவே முடியவில்லை.
“நான் என்ன செத்தா போயிட்டேன்? யாரைக் கேட்டு என் புள்ளைக்கு இவளைக் கட்டி வைச்சீங்க?” என்று கத்திக் கூச்சலிட்டு சண்டையிட்டார். இறந்த போன வஞ்சியின் அம்மாவை வேறு திட்ட, ஏற்கனவே உளைச்சலில் இருந்த வஞ்சிக்கு அம்மாவைப் பேசவும் தாங்கவே முடியவில்லை. அழுதுகொண்டே இருக்க, சௌந்தர் ராஜன் மனைவியை மல்லுக்கட்டி இழுத்துப்போனார்.
இளந்திரையனையும் திட்டித் தீர்த்தார், அவரால் நம்பவே முடியவில்லை, தன் மகன் தன்னிடம் சொல்லாமல் திருமணம் முடிந்து வந்ததை ஏற்கவே மாட்டாமல் மறுகினார். அவனோ மூன்றாம் நாள் பால் தெளிக்கவுமே வேலையிருக்க சென்னை சென்றுவிட்டான். வஞ்சியை பதினாறாம் நாள் காரியம் முடியவும் சென்னைக்கு அழைத்துப்போய்விட்டார் சௌந்தர் ராஜன். அவர்கள் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, நான்காம் ஆண்டு என்பதால் தோழிகளுடன் தங்க ஏற்பாடு செய்தார்.
கடைசி செமஸ்டரில் அவளின் கல்லூரியில் ஒரே மாதத்தில் பாடம் நடத்தி முடித்துவிட விடுமுறைதான். சௌந்தர் ராஜன் வந்து அவளை ஊருக்கு அழைத்துப் போய்விட்டார். இதற்கிடையே இளந்திரையன் சென்னை செல்லவுமே அவனுக்குப் புனேவில் வேலை மாற்றலாகிவிட வாரத்தில் ஒரு நாள் வஞ்சியிடம் பேசுவான், அதுவும் அவன் அப்பா சொல்லிவிட்டிருந்தார்.
“முன்னாடி மாதிரி இருக்காத, வல்லி கிட்ட அடிக்கடி பேசுடா, இனிமே நம்மதான் அவளுக்கு” என்று சொல்லி இருந்தார்.
ஆனாலும் இளந்திரையனுக்குக் கணவனாய்ப் பேச வரவில்லை, திருமணம் ஆகிவிட்டது என்பது அழுத்தமாய் அகத்தினில் பதிந்து போனது, இருந்தும் கணவன் என்ற நிலைக்குள் அவன் மன நிலை போகவில்லை. கனவுகளுடனோ காதலுடனோ கரம் பற்றியிருந்தால் அவனுக்கும் அதுபோன்ற எண்ணங்கள் வந்திருக்கும், இக்கட்டான சூழ்னிலையில் திருமணம் முடிந்திருக்க, அவர்களின் மணவாழ்க்கையில் முன்னேற்றம் என்ன? முன்னுரை கூட நிகழவில்லை.
மாமன் மகனாய் அவளிடம் படித்தாயா? உண்டாயா? என்று நான்கு கேள்வி கேட்பான், வஞ்சியாலும் அவனுடன் ஒட்ட முடியவில்லை. அவன் கணவனாக உரிமையாக எதாவது பேசியிருந்தால், ஆறுதல் சொல்லியிருந்தால் அகத்தினில் அவனுக்கென ஒரு இடம் இருந்திருக்கும். அதுவெல்லாம் இளந்திரையனுக்கு வரவில்லை.
மனம் திறந்து மனதில் உள்ள வலியெல்லாம் வஞ்சி அவனிடம் பகிர்ந்திருப்பாள், அப்பாவுமின்றி அம்மாவுமின்றி இருக்கும் அந்த நிலையை அவளால் கடக்கவே முடியவில்லை.
இதில் இன்னும் வலிகள் அவளுக்குத் தீரவில்லை என்பதுபோல் இருந்தது மாதவியின் பேச்சு! தினமும் வஞ்சியைக் குத்திக் கொண்டே இருப்பார்.
சௌந்தர் ராஜனும், “அவளுக்கு சொல்லாம கல்யாணம் செஞ்ச கோவத்துல எதாவது பேசினா மனசுல வைச்சுக்காதம்மா” என்று சொல்லியிருக்க, வஞ்சி மாதவியின் பேச்சை பற்றி யாரிடமும் சொல்லமாட்டாள்.
அவருக்குத் தெரியாமல் திருமணம் நடந்த வருத்தம் அவருக்கு இருக்கும், அதனால் பேசுகிறார் என்று வஞ்சியும் பொறுமையாகவே இருந்தாள், பொறுத்து இருந்தாள். ஆனால் சில நாட்கள் கழித்து அவள் அவரின் மருமகளாய் இருப்பது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று புரிந்தது.
“யாருமில்லாத அனாதையைக் கட்டி வைச்சிருக்காரே இந்த மனுஷனை சொல்லனும்”
“என் புள்ளைக்கு நாளைக்கு சீர் செனத்தியெல்லாம் யார் செய்வா?”
“போற மகராசி அப்படியே போக கூடாதா? என் பையன் வாழ்க்கையைக் கெடுத்துட்டுப் போய்ட்டா”
“என் பையனை ஏமாத்தி கண்ணீர் விட்டே காரியம் சாதிச்சிட்டா உன் அம்மா, நோகாம உன்னை எங்க தலையில கட்டிட்டா” என்று ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாகப் பேசுவார்.
ப்ராஜக்ட் விஷயமாக அவள் சென்னை செல்ல வேண்டி வந்தால்,
“ம்ம், இவ அம்மா முடியலன்னு படுத்தே சொத்தை அழிச்சா இவ படிச்சு அழிக்கிறா” என்பார். இதில் வஞ்சிக்கு சமையல் பெரிதாக வராது, அதாவது ருசியாக செய்ய வராது, அவள் அம்மாவிற்கு எண்ணெய் குறைவாக, காரம் குறைவாக சமைத்து அப்படியே அவள் பழகியிருக்க அதற்கும் பேச்சுவாங்குவாள். சௌந்தர் ராஜன் எதாவது திட்டிவிட்டால்
“நிம்மதியா மருமகளைக் கேள்வி கேட்க முடியல, உடனே இவர் வந்துடுவார், இதே நான் பார்த்துக் கட்டி வைச்ச பொண்ணுன்னா என்னை மதிப்பா”
இப்படி வஞ்சி வாழ்க்கையில் அதுவரை வாங்காத வார்த்தைகளை வசவுகளை எல்லாம் நான்கு மாதத்தில் கேட்டிருக்க வாழ்க்கையின் மீது ஒரு விரக்தி வந்திருந்தது. கமலி மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருப்பாளோ? அந்த பெண் இவளுக்குத் தோழியாய் இருக்க மாதவியின் பேச்சுகளில் இருந்து தற்காலிக விடுதலையாய் உணர்வாள். அடுத்த மாதம் செமெஸ்டர் இருக்க, அப்போதுதான் இளந்திரையன் ஊர் வந்து சேர்ந்தான்.
திருமணம் நடந்த காரணத்தினால் தானே இவ்வளவு பேச்சுகளை நான் கேட்கிறேன் என்ற கசந்த உணர்வு அவளினுள் ஆழப்பதிந்து போனது. தாயற்று, தந்தையற்று நிற்கும் அவள் உண்மையில் பற்றற்ற நிலைக்குத்தான் தள்ளப்பட்டாள். எட்டு மாதங்கள் கழித்து கணவன் வருகிறான், ஆனால் அவளிடம் எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்றே இல்லை. அவனும் கணவனாக நடக்கவில்லை, இவளும் மனைவியாக நினைக்கவில்லை. எல்லாம் விட மாதவியின் பேச்சு!
“ஏன் டா இப்படி இவளை கட்டிக்கிட்டேன்னு கேட்டா, நான் என்ன பிடிச்சா கட்டிக்கிட்டேன்றான்” என்று அவள் காதுபட சொல்ல, அது உண்மைதான். இளந்திரையனை அவர் பேச அவனோ இருக்கும் எரிச்சலில்
“என்னமோ நான் அவளைப் பிடிச்சுக் கட்டின மாதிரி என்னைப் பேசுற, போய் உன் வீட்டுக்காரை கேளும்மா” என்று கத்திவிடுவான்.
ஊர் வந்தவனை கூட மனைவியுடன் தங்கவிடவில்லை மாதவி, அவர்கள் வீட்டில் இரு அறை மட்டுமே இருக்க, ஒன்றில் அப்பாவும் மகனும் தங்கிக்கொள்ள, பெண்கள் மூவரும் ஒரு அறை. மாதவி நினைத்திருந்தால் அவர்களை ஒரு அறையில் தங்க வைத்திருக்கலாம், ஆனால் அவர் செய்யவில்லை. சௌந்தர் ராஜன் கடைசிப் பரீட்சை எழுதட்டும் அதன்பின் இளாவுடன் வஞ்சியை அனுப்பிவிடலாம் என்று மனதில் எண்ணம் வைத்திருக்க, இளாவோ வேறு எண்ணத்தில் இருந்தான்.
இப்படி ஆளுக்கொரு எண்ணமிருக்க நடந்தவை முற்றிலும் வேறு!!