“ப்ச், ரொம்ப நேரமாச்சு. இப்படி எல்லாம் இவ்வளோ நேரம் தூங்கினதில்லை. சித்தி தேடிருப்பாங்க…” என்றவள் கட்டிலிலிருந்து இறங்கியதும் தனது காது கழுத்து என்று ஒருமுறை சரிபார்க்க அடக்கப்பட்ட சிரிப்புடன் ஆத்மா அவளை கவனித்தான்.
“நல்லவேளை…” என்றவள் சொல்லியதும் இன்னும் ஒரு அட்டகாச சிரிப்பு.
“என்ன? எதுக்கு சிரிக்கறீங்க? நீங்க செய்யகூடிய ஆள் தான். அதான் செக் பண்ணேன். ஆனாலும் உங்களை நம்பவே மாட்டேன்…” என்று சொல்ல,
“நான் கேட்டேனா என்னை நம்புன்னு? போடி…” என்றான் தலையணையை தூக்கி அவள் மேல் வீசி.
“வேஸ்ட்…” என்று அவனிடம் பேசுவதை குறிப்பிட்டு சொல்லி அவள் குளிக்க உடைகளை எடுத்துக்கொண்டிருக்க,
“என்னையா சொன்ன?…” என்று வேறு வம்பிழுக்கவும் வாயை மூடிக்கொண்டாள்.
ஒன்றும் பேசாமல் அவளிருக்க அவன் பேச பேச சிவக்கும் முகத்தை மறைக்க முடியாமல் உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் ஓடிவிட ஆத்மாவின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
ரிது குளித்து வரும்முன் தானும் வேறு உடைக்கு மாறி வெளியே செல்ல தயாராயிருந்தான்.
“கிளம்பிட்டீங்களா? இருங்க நானும் கூடவே வரேன், என்னை வெளில விட்டுடுங்க…” என்று வேகவேகமாய் தலையை துவட்ட,
“வெளிலயா? உன்னை வெளில விட்டுட்டு நீ என்கிட்டே மல்லுக்கு நிக்கவா? மாட்டவே மாட்டேன்…” என்று சொல்ல,
“உங்களுக்கு இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சு. போங்க…” என அவனை தள்ளிவிட்டு கண்ணாடி முன்னின்று பார்த்தவள் அப்போது தான் கண்ணாடி வழியே சுவற்றில் நிறைந்திருந்த புகைப்படங்களை கண்டாள்.
இருவருக்கும் திருமணமான புதிதில் ஏற்பாடு செய்திருந்த போட்டோ ஷூட். அதனை ரிது மீண்டும் சென்னைக்கு வரவும் சூட்டோடு சூடாய் எடுத்து முடித்திருந்தவன் அங்கேயும் கொண்டுவந்திருந்தான்.
“இப்பதான் மாட்டினீங்களா?…” என்று அதனருகே சென்று அதனை ரசித்தபடி கேட்டாள்.
“தாலி கட்டினதும் மாட்டிக்கிட்டேன்…” என்றவன்,
“ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு ரிது…” என்று பாடவேறு செய்ய கடுப்பாகிவிட்டாள்.
“இன்னைக்கு என்ன இவ்வளோ வெறுபேத்துறீங்க?…” என்று முறைக்கவும்,
“ரிது உன் ஜிமிக்கி…” என்றவனின் சத்தத்தில் படக்கென்று காதில் கை வைத்து பார்க்க,
“அப்படியே தான் இருக்குன்னு சொல்லவந்தேன்…” என்றவனின் மேல் ஈரமான டவலை தூக்கி எறிந்தவள்,
“இன்னைக்கு உங்களை சும்மா விடமாட்டேன்…” என்று கழுத்தை பிடிக்கவும்,
“அதை தான்ம்மா நானும் சொல்றேன். என்னை சும்மா விடாத…” அவன் கண் சிமிட்டி சொல்லியதில் அவனிடமிருந்து விலகி இடுப்பில் கைவைத்து நின்றாள்.
“எதாச்சும் உங்கட்ட பேசினேனா என்னன்னு கேளுங்க…” என முறைக்க,
“உன்னை யார் பேச சொன்னா?…” என்று அவளின் பின்னால் வந்து அணைத்தவன் கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்தான்.
தன் கையை கொண்டு அவளின் காது இரண்டையும் வைத்து மறைக்கவும் எடுத்து பார்க்கவுமாக இருந்தான் ஆத்மா.
“நான் கிளம்பறதா வேண்டாமா? ஏன் இப்படி பன்றீங்க? இந்த ஜிமிக்கில என்னதான் இருக்கோ? இன்னைக்கு பாருங்க கோவிலுக்கு போறப்போ வேற தோடு நான் மாத்தறேனா இல்லையான்னு…” என்று அவனின் அட்டகாசத்தில் சொல்லிவிட,
“ஜிமிக்கி போட்டா தான் கொஞ்சமாவது உன் முகத்தை பார்க்க முடியுது. அதுக்குத்தான் உடைஞ்சாலும் பரவாயில்லைன்னு போட்டுட்டே இருக்க சொல்றேன். நீ வேற மனுஷன் மனசை புரியாம…” என்று கிண்டல் பேசவும் ரிது அவள் பக்கம் திரும்பினாள்.
“என்ன?…” என்று அவனை திகைப்பாய் பார்க்க,
“என்னடா? என்ன என்ன?…” ஒன்றுமே சொல்லாததை போல அவன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும் கோபமாய் அவள் அறையை விட்டு வெளியேற போக,
“இருடி. இன்னும் கிளம்பவே இல்லை நீ. அதுக்குள்ளே எங்க போற?…” அவள் கையை பிடித்து தடுத்தான்.
“ஒன்னும் வேண்டாம், நான் நிக்க நிக்க என்னை வம்பு பண்ணிட்டே இருப்பீங்க…” என்றாள் ரிது.
“சரி ஒண்ணுமே செய்யலை. சைலண்டா இருக்கேன். நீ கிளம்பு…” என்று சொல்லியவன் கைகள் மீண்டும் அவள் கன்னத்திற்கு இடம் பெயர,
“ஏற்கனவே லேட். இப்ப…” என்று அவனை தள்ளியவள் வேகமாய் கதவை திறக்க,
“போ, போ, கீழே காபியோட ராணி வெய்ட்டிங்…” என்றான் கதவருகே ரிதுவிற்கு கேட்கும்விதமாய் சத்தமாக.
“டீ போடுங்கன்னு சொல்லி வாங்கி குடிச்சிப்பேன்…” என ரிதுவும் படியின் அருகே நின்று சொல்லி கீழே இறங்க சிரித்தபடி பின் தொடர்ந்தான் ஆத்மா.
ரிதுபர்ணா கீழே வரும் பொழுது டைனிங் டேபிளில் ஆனந்தி காலை உணவை உண்டுகொண்டிருந்தார்.
உடன் மனோவும் இருக்க விரிந்த கூந்தலுடன் ரிது இறங்கி வேகமாய் வந்ததை பார்த்த ஆனந்தி பேசும் முன் மனோ வந்துவிட்டாள்.
“வாங்கண்ணி, நேத்து கொஞ்சம் எனக்கு முடியல. அதான் படுத்துட்டேன். எப்படி இருக்கீங்க?…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், நல்லாயிருக்கேன்…” என்ற ரிது,
“இப்ப உடம்புக்கு பரவாயில்லையா?…” என கேட்டாள்.
கேட்க வேண்டாம் என நினைத்தாலும் உடல்நிலை சரியில்லாத பெண்ணை கேட்காமல் இருக்கமுடியவில்லை.
அதுவும் அவள் தன்னை தேடி வந்து விசாரித்ததற்கு பதிலாக தானும் விசாரிக்க மனோ அகமகிழ்ந்து போனாள்.
“வாங்க சாப்பிடலாம்…” என்று கை பிடித்து அழைக்கவும் அங்கே செல்வதா வேண்டாமா என நொடி பொழுது யோசனை தான்.
அதற்கு விசாலாட்சி வந்துவிட்டார் அங்கே ஆனந்தியை தேடிக்கொண்டு. அவர் வந்ததும் மனோவும், ரிதுவும் நிற்பதை பார்த்துவிட்டு,
“நல்லாருக்கு ரெண்டுபேரும் இப்படி நிக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்துல கோவிலுக்கு போகனும். எல்லாரும் அங்க ரெடியா இருந்தா இங்க ரெண்டும் பொம்பளைங்களும் இன்னும் கிளம்பாம இருக்கீங்க?…” என்று பேச,
“குளிச்சிட்டேன் பெரிம்மா, இப்ப கிளம்பிருவேன்…” என சொல்லிய ரிதுவை அவர் முறைக்க,
“கோவிலுக்கு போக இன்னும் டைம் இருக்கு தானே அத்தை?…” என்று வந்தான் ஆத்மா. அதற்குள் ஆனந்தியும் உண்டு முடித்து எழுந்து வந்தவர்,
“முதல்ல அவங்க சாப்பிடட்டும். சாப்பிட்டதும் கிளம்பத்தான? மனோவும், நானும் சாப்பிட்டாச்சு. உன் அண்ணன் கோவிலுக்கே வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். அப்பறம் என்ன படபடன்னு?…” என்ற ஆனந்தி,
“நீ போம்மா. நீயும் கண்ணாவும் சாப்பிடுங்க. நானும் மனோவும் கிளம்பறோம்…” என்று சொல்லி செல்ல மனோவும் தலையசைத்துவிட்டு சென்றாள்.
“பார்ரா, பச்ச மண்ணாட்டம் ஒரு பதவிச?…” என ஆனந்தியை சொல்லி விசாலாட்சி கேலியாய் அதிசயிக்க,
“பெரிம்மா…” என பல்லை கடித்தாள் ரிது.
“ம்க்கும், எப்ப நீ வந்து எப்ப தேங்காய்க்கு மஞ்சளை பூச? அங்க சுந்தரி எல்லா வேலையையும் முடிச்சுட்டா. கூட துணைக்காச்சும் தங்கச்சின்னு வந்து நில்லாத்தா…” என ரிதுவின் தலையில் லேசாய் குட்டியவர்,
“போய் சாப்பிடு. நான் எல்லாம் எடுத்தாச்சான்னு பார்த்துட்டு செண்பகத்தை பார்த்துட்டு வரேன்…” என்று கிளம்பிவிட்டார்.
ஆத்மாவுடன் சென்று சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் அறைக்கு சென்று கிளம்பி சித்தியின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
“அம்மா எங்க வித்யா?…” என வித்யாவிடம் கேட்க விசாலாட்சி வீட்டில் என சைகையில் கூறவும்,
“ஓகே, நீ ரெடியா? வா அத்தை வீட்டுக்கு போவோம்…” என்றாள்.
வித்யா அமைதியாக பார்க்கவும் என்ன என கேட்க, ‘கோவிலுக்கு வருகிறேன்’ என்று கையை கூப்பி அவளுக்கு விளக்கி சொல்ல,
“அத்தை வருத்தப்படுவாங்க. பரத் அண்ணா இந்நேரம் என்ன சொல்ல போறாங்க? நீ வா. நீ இங்க இருப்பன்னு தான் உன்னை கூட்டிட்டு போக வந்தேன்…” என்று ரிது அழைத்தும் வித்யா சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டாள்.
பரத்திற்கு வித்யாவும் பிடிக்காது. முருகேஸ்வரியும் பிடிக்காது. கல்யாண வேலையில் எல்லாம் முருகேஸ்வரி விசாலாட்சிக்கு துணையாக உதவ அதனை ஒன்றும் சொல்லமுடியாமல் பல்லை கடித்துக்கொண்டு மௌனமாய் கடந்துவிட்டான் பரத்.
ஆனால் நேரடியாக பார்க்கையில் அவனின் விருப்பமின்மையை தன் முகத்திலேயே காண்பித்துவிடுபவன்.
அதையெல்லாம் முருகேஸ்வரி பொருட்படுத்தமாட்டார். நீ எப்படியும் இருந்துகொள். என் சுபாவம் இது என்பதை போலவே அமைதி தான்.