அத்தியாயம் 20(1)
அது சென்னையின் பிரபல பெண்கள் கல்லூரி. ஈவ்னிங் காலேஜ் முடிந்து மாணவிகள், கூட்டம் கூட்டமாக, வெளியே வந்துக் கொண்டிருந்தனர். “பை டி.”, “பை – பை” என்றபடி தோழிகளிடம் விடைபெற்றுக்கொண்டு, கல்லூரிக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள் மிருதுளா. அவள் அந்தக் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் வருடம், கடைசிச் செம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
வழக்கம் போலக் கூட்டத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு அவள் தினமும் வீட்டிற்குச் செல்லும் பஸ் வந்து சேர, “ஹே! மிரு உனக்குப் பஸ் வந்துடுச்சு டி.” என்று ஒரு தோழி சொல்ல, ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டை தாண்டி சென்று நின்ற, பஸ்ஸை நோக்கி ஓடியவர்கள், முன்டியடித்துக்கொண்டு, ஒருவழியாகப் பஸ்சுக்குள் ஏறி உள்ளே சென்றதும், குனிந்து தன் தோழிகளுக்குக் கைஅசைத்து விடைபெற்றனர். கண்டக்ட்டரோ, “படிக்கட்டு கிட்ட நிக்காத, உள்ளே வா. வந்து டிக்கெட்டை எடு. உள்ளே வாங்க. எவ்ளோ நேரம் கத்துறது. உள்ளே வாங்கன்னு. அங்க படிக்கட்டு கிட்ட நின்னுட்டு என்ன பண்ற. உள்ள வாயா.” என்று கத்திகொண்டிருக்க, அந்தக் களேபரத்தில், மிருதுளாவும் அவள் தோழிகளும் பஸ் பாசை கண்பித்து இடம் பிடித்து நிற்பதற்குள், ‘ஷப்பா’ என்றாகிவிட்டது.
இதற்கே இப்படி என்றால், இறங்கும்பொழுது அடுத்தகட்ட போர் காத்திருக்கும். பஸ்ஸில் இருக்கும் கூட்டத்தில் நீந்தி, ஒருவழியாகப் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வருவதற்குள், துப்பட்டா ஒரு பக்கம் இழுபட, பேக் ஒரு பக்கம் இழுத்துக்கொண்டிருக்க, தலை முடி எல்லாம் நாளாபக்கமும் களைந்து போய்ச் சிலுப்பிக்கொண்டு நிற்க, கிட்டத்தட்ட ஒரு போரை முடித்துவிட்டு வந்தது போலத் தான், ஸ்டாப்பில் இறங்கினாள் மிருதுளா. இதில் மற்றொரு தொல்லை என்னவென்றால், இறங்குவதற்குள் பஸ்ஸை வேறு எடுத்துவிடுவார்கள், அதற்குள் வழியில் நிற்பவர்களிடம் திட்டுவாங்கிகொண்டு, அவர்களையும் மனதுக்குள் திட்டிக்கொண்டு, பஸ் நகர்வதற்குள் இறங்கிவிட வேண்டும். இல்லை என்றால், அதற்கும் கண்டக்டர் கொலை குற்றம் செய்தது போலக் குற்றம் சாட்டுவார்.
இவ்வளவு அக்கபோருக்கு பிறகு ஒருவழியாகத் தன் ஸ்டாப்பில் இறங்கிய மிருதுளா, இருட்டிவிட்ட தெருவிற்குள் வேக நடைபோட்டு வீட்டை வந்தடைய, வாசலிலேயே அவளை, கோழி அமுக்குவது போல அமுக்கிய அவளது தாய் சித்ரா, இழுத்து செல்லாத குறையாக வீட்டின் பின்பக்கம் அழைத்துசென்றவர், மூடி மறைக்கபட்டிருந்த ஸ்க்ரீனுக்கு அந்தப் பக்க வழியாக மகளின் அறைக்கு அழைத்துச் சென்று, “மொதல்ல முகம், கை கால் எல்லாம் கழுவிட்டு, இந்தப் புடவையைக் கட்டிட்டு வா மிரு.” என்று பரபரப்பாகச் சொல்ல, “எதுக்கு மா, இப்போ இதைக் கட்ட சொல்ற.” என்று அலுத்துக்கொண்டு பேகை கட்டிலில் போட்டுவிட்டு சோர்வாக அவள் உட்கார, சித்ரா பதில் சொல்லவருவதற்குள், “ஹம், உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க.” என்றாள் பக்கத்திலோ ‘உர்ர்’ என்று முகத்தை வைத்திருந்த, பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுப் படிக்கும் ஆராதனா.
தங்கை சொன்னதில் அதிர்ந்தவள், “என்னம்மா இதெல்லாம். நான் இன்னும் படிச்சு முடிக்கவே இல்லை. எனக்கு ph.d பண்ணும் மா. அதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்.” என்று மிருதுளா எரிச்சல்பட, “அதைதான் நானும் அப்போல இருந்து சொல்லிட்டு இருக்கேன் உன்னைப் பெத்த ஆத்தாகிட்ட. எங்க காதுல வாங்குனாதான. இந்த லட்சணத்தில இன்னொரு ஷாக்கும் இருக்கு. அதையும் கேட்டுட்டு, மொத்தமா ஷாக் ரியாக்க்ஷன் கொடுக்கா.” என்றவள் சிறு இடைவெளிவிட்டு, “மாப்பிள்ளை மதுரை சைட் ஏதோ ஊராம். கல்யாணத்துக்கு அப்புறம் நீ அங்க தான் போய் இருக்கணுமாம்.” என்று சொல்ல, “அம்மா!!!” என்று இரண்டாவது முறையாக அதிர்ந்தாள் மிருதுளா.
ஆனால் இவர்கள் பேசியது எதுவும், காதில் விழாதது போல, சேலைக்குப் பொருத்தமான, அணிகலன்களை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, ஒருவழியாகத் தேர்ந்தெடுத்துவிட்ட சந்தோஷத்தில், “இந்தப் புடவைக்கு, இந்தச் செட் மேட்ச் ஆகும்ல மிரு.” என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
“அம்மா நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க.” என்று மிருதுளா எரிச்சல் பட, “சத்தம் போடாதடி. எல்லோரும் ஹால்ல தான் இருக்காங்க. சீக்கிரம் மொதல்ல நான் சொன்னதைச் செய். இப்போ வெறும் நிச்சயம் தான். உனக்கு எக்ஸாம் முடிஞ்ச பிறகு தான் கல்யாணம்லாம்.” என்று அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே எல்லாவற்றையும் எடுத்துவைக்க, “அம்மா, நான் மேல படிக்கனும்ன்னு சொல்லிட்டு இருக்கேன். நான் சொல்றது காதுல விழுதா, இல்லையா.” என்று மிருதுளா கொஞ்சம் குரலை உயர்த்த, “அதெல்லாம் நல்லா விழுது. படிப்பெல்லாம் எப்போ வேணா படிச்சிக்கலாம் மிரு. ஆனா கல்யணம் எல்லாம் அந்ததந்த வயசுல நடக்கணும். நீ என்ன சின்னக் குழந்தையா மிரு. அதான் PG முடிக்கப் போற. இப்போ பண்ணாம, பின்ன எப்போ பண்றது. இந்தச் சம்பந்தம் ரொம்ப நல்ல சம்பந்தம். நாமலே தேடுனாலும் கிடைக்காது. டைம் வேஸ்ட் பண்ணாம. சீக்கிரம் ரெடி ஆகு. நான் போய் அவங்களுக்குக் காபீ எடுத்து வச்சுட்டு வரேன்.” என்று அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு சென்றுவிட, சோர்வுடன் கட்டிலில் அமர்ந்துவிட்டாள் இவள்.
“நீ சரியான வேஸ்ட்க்கா. நானா இருந்தன்னா, நேரே மாப்பிள்ளைகிட்டயே போய் எனக்குக் கல்யாணம் செய்துக்க இஷ்டம் இல்லைன்னு சொல்லிடுவேன்.” என்று கூறி, ஆரா வேறு கூடுதல் எரிச்சலை கிளப்பினாள். ஆம்! ஆராவை போல மிருதுளா அதிரடி பெண் இல்லை. எந்த விஷயமாக இருந்தாலும், ஓர் அளவுக்குத் தான் எதிர்த்து பேசுவாள். அதன்பின் அடங்கிப் போய்விடுவாள். இந்தத் திருமண விஷயத்திலும் அப்படிதான். முடிந்த அளவு தாயிடம் சொல்லி பார்த்தவள், வேறு வழியில்லாமல், தயாராகி, காபீ தட்டுடன் ஹாலுக்குச் சென்றாள்.
கையில் காபீ ட்ரேயுடன் குனிந்த தலை நிமிராமல் ஹாலுக்கு வந்தாள் மிருதுளா. ஹால் சோபாவில் மாப்பிளை சந்துருவும் அவனின் தாய் மீனாட்சியும் அமர்ந்திருந்தனர். சித்ரா சொல்லிவிட்டது போல அவர்களிடம் சென்று காபியை கொடுத்தவள், கொஞ்சம் தள்ளி வந்து நின்று கொண்டாள். முதல் முறை இந்த மாதிரி அடுத்தவர், அதுவும் ஓர் இளைஞன் முன் நிற்பதால், உள்ளுக்குள் உதறல் எடுக்க, கைவிரல் லேசாக நடுங்கி கொண்டிருந்தது மிருதுளாவிற்கு. எப்போதடா இங்கிருந்து ஓடலாம் என்ற மனநிலையில் நின்று கொண்டிருந்தாள்.
காபியை உருஞ்சிகொண்டே, கீழ்கண்ணால் மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு. அவன் தாயோ, அவளைத் தன் பார்வை என்னும் தராசில் அளந்து கொண்டிருந்தார். ‘ஹம், நம்மள விட வசதி கம்மினாலும், பொண்ணு பார்க்க லட்சணமா தான் இருக்கா. நம்ம பையன் பக்கத்தில நின்னா, ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும்.’ என்று மனதுக்குள் நினைத்தவர், மிருதுளாவிடம், படிப்பு, சமையல், போன்ற சில கேள்விகளைக் கேட்டவருக்கு, அவளின் அடக்கமும், மரியாதையும், திருப்தியாக இருக்க, தன் மகன் பக்கம் திரும்பி, “என்ன டா, பொண்ணைப் பிடிச்சு இருக்கா??” என்று கேட்க, அவனோ, “ஹம், பிடிச்சு இருக்கு மா.” என்று சத்தமே வராமல் சொல்ல, “அப்புறம் என்ன, என் பையனுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சு இருக்கு. கூடிய சீக்கிரம் கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்றவர், மோகனிடம், மேற்கொண்டு வரதட்சணை பற்றிப் பேசினார்.
சந்துருவின் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள அந்தப் பெரிய டவுன். கிட்டத்தட்ட நகரம் போல அனைத்து வசதிகளையும் கொண்டது. அந்த ஊரில் நாட்டாமை குடும்பத்தைச் சேர்ந்தவர் தான், முத்துபாண்டி. அவரின் மனைவி தான் மீனாட்சி. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் சந்துரு, பொறியியல் படித்துவிட்டுச் சென்னையில் வேலைப் பார்த்து வருகிறான். இவனுக்கு மூத்தவள், சுஜாதா. திருமணமாகி திருநெல்வேலியில் கணவனுடன் இருக்கிறாள். அவளுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இளையவள் மீனா. அதே ஊரை சேர்ந்த பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு, கணவனுடன் வசிக்கிறாள். அவளுக்கு ஒரு மகள்.
வீட்டின் ஒரே ஆண் வாரிசான சந்துருவிற்கு, ஊரெல்லாம் பெண் தேடி, கடைசியில் மிருதுளாவுடைய ஜாதகம் அமோகமாகப் பொருந்தி போக, இவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததில், ரொம்பவே திருப்தி அடைந்து பெண் கேட்டு வந்துள்ளனர். மிருதுளாவை பெண்கேட்டு வந்ததில் இரண்டு காரணம் உண்டு. அவர்களை விட வசதி குறைவாக இருக்கும் குடும்பத்தில் பெண் எடுத்தால், பெண் வீட்டில் உள்ளவர் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். அவர்களை அதிகாரம் செய்யலாம் என்று மீனாட்சிக்கு எண்ணம். அதேபோல மிருதுளா போல அமைதியான பெண் என்றால், அவளைத் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதோடு, தன் மகள்களும், தன் வீட்டில் எப்பொழுதும் போல ராஜ்ஜியம் செய்யலாம் என்று நினைத்திருந்தார்.
சந்துருவின் தந்தை, எப்பொழுதும் வீட்டு விஷயங்களில் கலந்துகொள்ள மாட்டார். பஞ்சாயத்து, தொழில், இப்படி வெளி வேலைகளில் மட்டும் தான் கவனம் செலுத்துவார். வீட்டில் மீனாட்சியின் ராஜ்ஜியம் தான். கணவனிடம் பவ்வியமாக இருப்பவர், பிள்ளைகளிடம் அப்படியே நேர் எதிர். குறிப்பாகச் சந்துரு விஷயத்தில் இவர் சொன்னதுதான் சட்டம். அதை மீறி ஒன்றும் செய்யமுடியாது. பெண் பிள்ளைகளிடம் மட்டும், கூடுதல் நெருக்கம் உண்டு.
பள்ளி படிப்பு வரை தாயின் கெடுபுடி கட்டுபாட்டில் வளர்ந்தவன், எப்படியோ கெஞ்சி கூத்தாடி சென்னைக்குப் படிக்க வந்தான். தன் வீட்டில் வசதி இருப்பதால், தாயை தாஜா செய்து, நண்பர்களுடன் தனியே வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்கு போய் வந்தான். பள்ளி படிக்கும் வரை, ஓர் அளவுக்கு நல்ல பையனாக இருந்தவன், குடும்பத்தை விட்டு தனியே வந்ததில் இருந்து, பெற்றோரிடம் படிக்கிறேன் என்று காட்டிக்கொண்டு, இல்லாத கெட்டபழக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டான். ஆனால் அவ்வபோது சென்னைக்கு மீனாட்சி அவனைப் பார்க்க வரும் நேரம் மட்டும், ‘இப்படி ஒரு நல்ல பையனா’ என்பது போல இருக்கும் அவன் செயல்கள்.
படிப்பை கற்றுக் கொண்டானோ இல்லையோ, மற்ற தேவை இல்லாத பாடங்களை நாள் தவறாமல் கற்றுக்கொள்ள, ஒரு வழியாகப் பீ.ஈ முடித்துவிட்டு, சென்னையில் ஒரு பொறியியல் கம்பனியில் வேலை செய்கிறான். அவனின் தந்தை, இவனை ஊரில் வந்து தொழிலை பார்த்துக்கொள்ளச் சொல்லி எத்தனையோ முறை அழைத்தும், பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் சுகந்திரமாக இருக்கும் இந்த வாழ்கையை விட்டு வர அவன் விரும்பவில்லை. பிறகு வருகிறேன் என்று காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.
இதனாலையே, இவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்து, வரபோகும் மருமகளைத் தங்களுடன் வைத்துக்கொண்டால், அதன் பிறகாவது, மகன் ஊருக்கு அடிக்கடி வருவதோடு, ஊரோடு வந்து இருக்கவேண்டும் என்று முடிவெடுப்பான் என்று நினைத்தார் மீனாட்சி. அத்தோடு வரபோகும் பெண் அமைதியான பெண்னாக இருந்தாள் தான், தனக்குக் கட்டுப்பட்டு ஊரில் இருப்பாள், இல்லையேல், அவனோடு சேர்ந்துகொண்டு, சென்னையிலேயே தங்க ஆசைப்பட்டு, தன்னிடம் இருந்து மகனை நிரந்தரமாகப் பிரித்துவிடுவாள் என்று கற்பனை செய்தார். இதற்காகவே அவர்கள் ஊரிலும், அக்கம் பக்கத்து ஊர்களிளும் எத்தனையோ பெண்களைப் பார்த்தார். ஆனால் எதுவும் பொருந்தி வரவில்லை. வசதி இருந்தால் ஜாதகம் பொருந்தவில்லை. ஜாதகம் பொருந்தினால் பெண்ணின் குணம் திருப்தியாக இல்லை. இப்படி இவர் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தான், தெரிந்தவர் மூலம் மிருதுளாவின் குடும்பம் பற்றித் தெரிய வந்தது. “அடக்கமான பொண்ணு. பெத்தவங்க கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா. அவ்வளவு அமைதி. தங்கமான குணம்.” என்று அவர் சொல்லவே, மீனாட்சிக்கு பிடித்துவிட, குடும்பத்தைப் பற்றி விசாரிக்கையில் அதுவும் திருப்தியாக இருக்க, உறவினர் மூலம் ஜாதகம் வாங்கிப் பார்த்துவிட, அதுவும் நன்றாகப் பொருந்திவிட, இதோ பெண் பார்க்க வந்துவிட்டார்.
மிருதுளா குடும்பத்தின் வசதி தெரிந்தும், பைக், இத்தனை பவுன் நகை, ரொக்க பணம் என்று வரதட்சணையைச் சட்டமாகக் கேட்டவர், “எங்க அளவுக்கு நீங்க வசதி இல்லைனாலும், எங்க சொந்தகாரங்க முன்னாடி நாங்க கவுரவமா சொல்ல வேண்டாமா, அதுக்குத் தான் இதெல்லாம். அதுவும் இல்லாம, என் பொண்ணுங்களுக்கு இதை விட அதிகமாவே செஞ்சு இருக்கோம். அதுல பாதியாவது எங்க வீட்டுக்கு வரபோற, உங்க பொண்ணு கொண்டு வந்தாதான உங்க பொண்ணுக்கும் நாத்தனார் முன்னாடி மரியாதையா இருக்கும்.” என்று வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொன்னவர், மிருதுளா திருமணம் முடிந்ததும் தங்களுடன் தான் இருக்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் மகனுக்கு மதுரைக்கு மாற்றல் வாங்க போவதாகவும், அதுவரை வாரம் தவறாமல் பையன் வந்து செல்வான் என்றும் கண்டிஷனாகச் சொல்லிவிட்டார். கிடைத்த இந்தச் சம்பந்தத்தை விட முடியாமல், ஒரு மனதாக அனைத்துக்கும் சம்மதித்தனர் மிருதுளாவின் பெற்றோர்.
“அப்புறம் என்ன, பொண்ணுக்குப் படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் தான இருக்கு. அதுக்கு அப்புறம் ஒரு நல்ல முஹூர்த்ததில கல்யாணத்தை வச்சுக்கலாம். ஊருக்குப் போய்ப் பையனோட அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்குச் சொல்றேன். நாங்க வரோம்.” என்றவர், “வரோம் மா.” என்று மிருதுளாவிடம் சொல்லிவிட்டு செல்ல, சந்துரு வாசல் வரை இவளை தான் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டு சென்றான். ‘மிருதுளா போன் நம்பர் வாங்கலையே.’ என்று நினைத்துக்கொண்டு சென்றான். அவன் கவலை அவனுக்கு.
இங்கே ஆராவோ, மிருதுளாவை கேள்விக் கணைகலால் துளைத்து எடுத்துவிட்டாள். “மாப்பிளை எப்படி இருக்காரு?” “உனக்குப் பிடிச்சு இருக்கா?” “தனியா பேசுனாரா?!” என்று வரிசையாகக் கேள்விகளைக் கேட்க, மிருதுளாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருந்தான். உயரமாக, அதற்கேற்ற எடை, டக்கின் செய்யப்பட்ட பார்மல் லுக் என்று ஸ்மார்ட்டாக இருந்தான். இருந்தும் பிடித்திருக்கிறதா என்று உடனே கேட்டால், மிருதுளாவுக்குச் சட்டென்று சொல்ல முடியவில்லை. “உடனே கேட்டா எப்படி ஆரு?! பிடிச்சிருக்கா? பிடிக்கலையா, எனக்குச் சொல்ல தெரியல டி.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். “இதென்னடா, புதுசா வெட்கபட்டுகிட்டு போறா!!! ஒருவேளை இப்படிதான் இருக்குமோ?!!” என்று நினைத்த ஆராவிற்கு மிருதுளாவை நினைத்துச் சிரிப்புதான் வந்தது.
இங்கே, ஊருக்கு சென்ற மீனாட்சி, தன் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்ல, அவரும் ஒருமுறை சென்னை வந்து மிருதுளாவை பார்த்துவிட்டு சென்றார். அவருக்கும் இவளை பிடித்திருந்தது. சம்மதம் சொல்லிவிட, மிருதுளாவின் இறுதிவருட தேர்வு முடிந்த சில நாட்களிலேயே திருமணம் தேதியை முடிவு செய்தனர். எல்லாம் முடிவான பிறகு இரண்டு மூன்று முறை மோகனுக்குப் போனில் அழைத்து நலம் விசாரிப்பது என்று அவ்வபோது பேசினான் சந்துரு.
இப்படியே நாட்கள் செல்ல, கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்திருந்தது. ஒருநாள் மிருதுளா கல்லூரி முடிந்து வீட்டிற்குக் கிளம்புகையில், அவளின் மொபைல் போனில் அழைப்பு வர, தெரியாத நம்பராக இருந்ததால், அழைப்பை இவள் துண்டிக்க, மறுபடியும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வரவும், யாராக இருக்கும் என்று நினைத்தவள், போனை ஆன் செய்யதாள்.
“ஹலோ! மிருதுளா?!”
“ஆமாம். நீங்க?!”
“நான் சந்துரு பேசுறேன்.” என்றதும், மிருதுளாவிற்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“நா…..நான் காலேஜ்ல இருக்கேன். நீங்க அப்பாக்கு போன் போடுங்க.” என்று மிருதுளா பதில் சொல்ல, அவனோ, “ஹ…..ஹலோ, போனை வச்சுடாதீங்க. நான் உங்ககிட்ட தான் பேசணும் மிருதுளா.” என்று அவன் பதிலளிக்கவும், ‘நம்மகிட்ட பேசணுமா?!’ என்று கூடுதல் படப்படப்பு இவளுக்கு. அதற்குள் அந்தப் பக்கம், “ஹலோ! லைன்ல இருகக்கீங்களா?!” என்று சந்துரு கேட்டதும், “ஹம்…ஆ…இருக்கேன். சொ…சொல்லுங்க.” என்பதற்குள் இவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
“எப்படி இருக்கீங்க?!”
“ம். நல்லா இருக்கேன். நீங்க?!”
“நல்லா இருக்கேன். ஒரு மாசம் கழிச்சு இப்போ கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சாரி, அன்னைக்கு உங்ககிட்ட கேட்க முடியாம போச்சு. உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருக்கா?!” என்று சந்துரு கேட்டதும், அவன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காதவளுக்கு, குப்பென்று வேர்த்துவிட்டது. எதுவும் சொல்லாமல் இவள் அமைதியாக இருக்க, “உங்களுக்குப் பிடிக்கலையா?!” என்றவனின் குரல் ஆயிரம் டன் சோகத்தை மறைமுகமாகக் காட்ட, “அப்படிலாம் இல்லை.” என்று இவள் சொல்ல, “அப்போ பிடிச்சு இருக்குங்களா?!” என்றவனின் குரலில் இப்பொழுது உற்சாகம் இருக்க, அந்தக் குரலே, இவளை சம்மதம் சொல்ல வைத்தது. “ம்ம்!” என்று சற்றே வெட்கத்துடன் சொல்ல, அந்தப் பக்கம், “யாஹூ!!!” என்று சத்தம் கொஞ்சம் தூரத்தில் இருந்து கேட்டது. இங்கே இவளோ, வெட்கத்துடன் புன்னகைத்து கொண்டாள்.
அதன் பின் வந்த நாட்களில், வாரத்திற்கு ஒருமுறை என்று அவ்வபொழுது மிருதுளாவிற்குப் போன் செய்து பேசிய சந்துரு, போகப் போக நாள் தவறாமல் பேச ஆரம்பித்தான். ஒன்றிரண்டு முறை, கல்லூரி வகுப்பு முடிந்ததும், மாலை அவளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கும் பீச்சிற்கும் சென்றுவந்தான்.
அப்படி ஒருமுறை பீச்சிற்குச் சென்றபொழுது, “சென்னையிலேயே வளர்ந்த நீ, கல்யாணம் முடிஞ்சதும், ஊரில போய் இருக்கணும்னு வருத்தபடாத மிருதுளா. ஒரு ஆரு மாசம் பொறுத்துக்கோ. எப்படியாவது வீட்டில பேசி உன்னையும் சென்னைக்கே என்னோட கூட்டிட்டு வந்துடறேன்.“ என்று சந்துரு அவளிடம் சொல்ல, அவளோ, “ஊரில போய் இருக்கிறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்லைங்க. நீங்க அதை நினைச்சு கவலைபடாதீங்க.” என்றாள் பதிலுக்கு. அதற்குச் சிரித்தவன் உள்ளுக்குள், ‘பச்சை மன்னா இருக்காளே!’ என்று நொந்துகொண்டான்.
இதற்கிடையே, மாதங்கள் வேகமாக நகர, இருவருக்கும் ஆடைகள் எடுப்பது, மிருதுளாவிற்கு நகைகள் வாங்குவது, பத்திரிக்கை அச்சிடுவது என்று நாட்கள் ரக்கைகட்டி பறக்க, திருமண வேலைகளில் இரு குடும்பங்களும் ரொம்பவே பிசியாக இருந்தனர். இங்கே மிருதுளாவிற்கும் தேர்வு நெருங்கியது. சந்துரு தினமும் அவளுக்குப் போன் செய்து, நன்றாகப் படிக்கச் சொல்லி அறிவுரை வழங்குபவன், தேர்வு நாட்களில் தினமும் அவளுக்கு அதிகாலையில் கால் செய்து ஆல் த பெஸ்ட் சொல்வான். இவனின் நல்ல விதமான நடவடிக்கைகளில், போகப் போக மிருதுளாவிற்கு இவனை மிகவும் பிடித்துப்போக ஆரம்பித்தது.
ஒருவழியாக இவளது தேர்வுகள் முடிந்து, திருமண நாளும் வந்தது. மாப்பிளை வீட்டின் வசதிக்கு ஏற்ப, ஊர் முழுவதும் பந்தல் போட்டு, கடா விருந்து ஏற்பாடு செய்து திருமணத்தை மிகப் பிரம்பண்டமாக நடத்தினர். சந்துருவின் சகோதரிகள், தங்களது அண்ணனின் திருமணத்திற்கு வந்திருப்பது போல இல்லாமல் ஏதோ தங்களது பணக்கார மவுசை காண்பிக்கக் கிடைத்த சந்தர்ப்பம் இந்தத் திருமணம் என்பது போலவே சுற்றிக் கொண்டிருந்தனர். மரியாதைக்கு வலிய வந்து பேசிய ஆராவை அவர்கள் பார்த்த பார்வையிலேயே, ‘நீ எங்களுக்குக் கீழ்.’ என்ற தலைகனம் தெரிய, அவளோ, ‘இப்போ எதுக்கு இந்த லுக்கு விடுதுங்க. சரிதான் போங்கடி.’ என்று நினைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.
சந்துருவின் வீட்டில் பெண்கள் ஒரு வகையில் இருந்தாலும், அவன் தந்தை முத்துபாண்டி, மிருதுளாவின் குடும்பத்திடம் நல்ல முறையில் மரியாதையாகவே பேசினார். இவ்வாறாக ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு எண்ணங்களுடன் திருமணம் இனிதே முடிவடைந்தது.