சூரியனின் சுடுகதிர்கள் வெம்மையை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அக்கதிர்கள் தன் மீது பட்டு தன்னை எங்கே கருகச் செய்திடுமோ என்ற பயத்தில் அவசரமாக அருகில் இருந்த நிழற்குடைக்குள் புகுந்து நின்றவனது காந்த விழிகள் மட்டும் எதிரில் தெரிந்த தார் சாலையை கூர்ந்து பார்த்தது, ஏதேனும் பேருந்து வருகிறதா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு.
தகித்திடும் சூரியனின் அனல்மின் கதிர்கள் தார்சாலையில் கானல் நீரை தோற்றிவித்தது. விவரமின்றி காண்போர் அதை நீரென்றே எண்ணுவர், அந்த அளவிற்கு அனல் தகித்திற்று.
“அடிக்கிற வெயில்ல கரைந்து தார் ரோட்டோட ஒட்டி போயிருவேன் போல, அந்த அளவுக்கு வெயில் போட்டு கொளுத்திக்கிட்டு இருக்குது. சூரிய பகவானே இன்னைக்கு ஏன்பா இவ்வளவு கோபம்? நாங்க எல்லாரும் பாவம் இல்லையா, உன்னோட வெப்பத்தை நாங்க எப்படி தாங்கிக்குவோம் சொல்லு பார்க்கலாம். வேலைக்கு போற டைம்ல இப்படி வெயிலை தூது விட்டு கொளுத்துறியே, வியர்வை சுரக்க கசகசன்னு இருக்கேப்பா இதெல்லாம் நல்லாவா இருக்குது. ஏற்கனவே நான் நிறம் கம்மி, இதுல நீயும் உன் பங்குக்கு கருக வக்கிறியே..” என்று புலம்பினான்.
அருகில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் தான் புலம்புவதை நிறுத்தி விட்டு திரும்பி பார்க்க, இவனை விட்டு சிறிது தூரத்தில் மூன்று பெண்கள் நின்றிருந்தனர். கல்லூரிக்கு செல்கிறார்கள் போல, அப்படியான தோற்றத்தில் தான் இருந்தனர்..
மூவரும் இவனது புலம்பலைக் கேட்டு விட்டு தான் சிரித்தார்கள். அதை கண்டு விட்டு முகம் இறுகியவன், மீண்டும் பார்வையை தார்ச்சாலையில் பதித்திட, ஆடி அசைந்து பேருந்து ஒன்று சாலையில் தவழ்ந்து வருவது போல் வந்து இவன் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஏற்கனவே நிரம்பி வழிந்த பேருந்தில் மேலும் சிலர் தொற்றிக் கொண்டார்கள். வேறு வழியின்றி இவனும் கூட்டத்தில் ஏறிக்கொள்ள, மீண்டும் ஆடி அசைந்து கிளம்பியது அந்த பேருந்தெனும் தேர்..
தான் செல்லும் இடத்திற்கான பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு ‘புட்போர்டில்’ தொங்கியவனின் முகத்தில் சட்டென்று கைப்பை ஒன்று வந்து மோத, அவன் சுதாரிப்பதற்குள்ளாகவே அந்த கைப்பையின் கூர்மையான முனை அவன் முகத்தில் பட்டு சிறுகோடாய் காயத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் ஏற்பட்ட எரிச்சல், ஏற்கனவே வெந்து நொந்து கொண்டிருந்தவனின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.
அவன் வாய் திறந்து பேசுவதற்கு முன்பே மீண்டும் அந்த கைப்பை அவன் முகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ‘யாரது?’ என்று அவன் தேட முயல, அதற்குள் கூட்டம் முண்டியடித்து அந்த கைபைக்கு சொந்தக்காரரான நபரை முன்னோக்கி தள்ளியிருந்தது.
‘ச்சே மேனர்ஸே தெரியாதவங்க. பஸ்ல இப்படித் தான் பண்ணுவாங்களா? வலி வேற உயிர் போகுது, ரத்தம் வருதான்னு தொட்டுப்பார்க்கவும் வழி இல்லாம இப்படி சிக்கி இருக்கனே. இதுக்கு தான் பைக் வாங்கணும்னு சொல்றது, கேட்டா வீட்ல வாங்கி கொடுக்குற நிலைமையா இருக்குது. வீட்டுக்கு பெரிய பையனா பொறந்துட்டாவே இதுதான் விதி போல’ என்று எப்போதும் ஏற்படும் சலிப்பு இப்போதும் இவனுள் தோன்றியது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு இவன் வந்து சேர வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் ‘அப்பாடா’ என்ற பெருமூச்சோடு கீழே இறங்கியவன், கசங்கி கந்தர் கோலமாக இருந்த தன் உடையையும், காற்றில் கலைந்து அலங்கோலமாக இருந்த தன் தலையையும், நேற்று பெய்த மழையினால் சிறிதாய் தேங்கியிருந்த நீரில் கண்டு விட்டு எரிச்சலுற்றவாறு, கைகளால் தலையை வாரிக் கொண்டு உடையை சரி செய்தவாறு நடக்க ஆரம்பித்தான் கவியழகன்.
பெரிதாக வசதி வாய்ப்புகள் அதிகம் கொண்ட மேல்வர்கம் கிடையாது. நடுத்தர வர்க்கத்தையும் விட ஒரு படி கீழான வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் தான் அழகனின் குடும்பம். அவனது தந்தை மரத்திலான பொருட்கள் செய்யும் பட்டறையில் உதவியாளராக இருக்கிறார்.
மாதம் எப்படியும் 6000திலிருந்து 6500 வரையில் சம்பளம் கிடைக்கும். தாய் இல்லத்தரசி, மூத்தவன் கவியழகன் அவனுக்கு பிறகு மூன்று ஆண் பிள்ளைகள், அடுத்த ஒரு பெண் பிள்ளை என பெரிய குடும்பம் தான். இவனுக்கு பிறகான மூன்று ஆண் பிள்ளைகளில் இருவர் பள்ளி படிப்பை முடித்திடாதவர்கள், ஒருவன் கல்லூரி படிப்பில் இப்போது தான் கால் பதித்திருந்தான். பெண் பிள்ளையோ இன்னும் எட்டாம் வகுப்பையே முடிக்காத நிலையில், பருவம் எய்தாது வேறு இருந்தாள்.
வசதி வாய்ப்பு இல்லையே எதற்கு இத்தனை பிள்ளைகள் என்று அனைவரும் கேட்கையில், “என்னால பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முடியும் அதனால பெத்துக்கிறேன்” என்று ஒவ்வொரு பிள்ளையை ஈன்றெடுக்கும் போதும் அவனது தாய், தந்தை இருவரும் கூறி இருந்தாலும், இப்போது முழு பாரமும் கவியழகனின் தோளில் சுமத்தப்பட்டு இருந்தது.
பெரிய குடும்பம் தான், இரு சம்பாத்தியம் தான் என்றாலும், கவியழகனின் சம்பளம் மட்டுமே முழுதாக அந்த குடும்பத்தை பசியாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். கவியழகனின் தந்தை குமரேசன், தாய் ஆகாயசெல்வி. அடுத்ததாக கவியழகன் அவனுக்கு பிற்பாடு பிறந்தவர்கள் முறையே அகிலன், இளம்பரிதி, கார்முகிலன். கடைசியாக பிறந்த பெண் பிள்ளை சங்கரி. வசதி வாய்ப்பில்லை ஆனால் வீட்டில் பாசத்திற்கு பஞ்சமில்லை.
இவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்கவே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு கிளம்பி விடுவான் அழகன். எப்போதும் போல் இப்போதும் பேருந்தில் முந்தியடுத்து தன் அலுவலகம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு அவசரத் தேவையாகவும், அவசிய தேவையாகவும் இருந்த, இருக்கும் பணத்தை அறவே பிடிக்காது.
“கணநேர புன்னகை கூட
காகிதம் பார்த்தே
மலர்கிறது..”
சிறிது நேரத்திலேயே அவனுடன் மேலும் இருவர் இணைந்து கொண்டார்கள். அவர்கள் வந்ததை அறிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தவனைக் கண்டு விட்டு அவன் அருகில் வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒரே நேரத்தில் சட்டென்று அவன் குரவளையைப் பிடித்து நெறிப்பது போல் வர, “உங்களுக்கு என்னடா வேணும்” என்று இவன் கடுகடுத்திட,
“இல்ல நாங்களும் தான் பஸ்ல வர்றோம் எங்க டிரஸ் எல்லாம் இன் பண்ணுன மாதிரி அப்படியே பர்ஃபெக்ட்டா இருக்குது. ஆனா நீ மட்டும் எப்படிடா இப்படி கசங்கி கருவாடு மாதிரி வர்ற” என்று கேலி கிண்டல் செய்தவர்களை முறைத்தான்.
“பஸ்ஸே கவிழ்ந்து போற அளவுக்கு இருக்கிற கூட்டத்துல வந்தா இப்படித்தான் இருக்கும். இல்ல எனக்கு ஒரு விஷயம் புரியல, நாம என்ன அழகன் போட்டிக்கா போறோம், வேலைக்கு தானே போறோம். அதுக்கு ஜஸ்ட் கொஞ்சம் நீட்டா இருந்தா போதும் பேசாம வாங்கடா” என்று அவர்களை அடக்கி விட்டு வேகமாக நடந்தான்.
அவனுக்கு ஈடு கொடுப்பது போல் நடந்தவர்கள், “நேத்து சொன்னதை யோசிச்சியா?” என்றனர்.
“இங்க பாருங்க உங்களுக்கெல்லாம் வீக் என்ட் ஜாலியா போகும் ஆனா எனக்கு அப்படி இல்லை. பஃன் பண்றதுக்கு பார்க் போலாம், பீச் போலாம்னு நீங்க யோசிக்கலாம், ஆனால் நான் அப்படி யோசிக்க முடியாது. என் ஃபேமிலியைப் பத்தி உங்கக்கிட்ட நான் சொன்னது கிடையாது, இனியும் சொல்லப்போறது இல்ல. ஆனாலும் எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பிடிக்காது. நேத்தே என்னோட முடிவைத் தெளிவா சொல்லிட்டேன், நான் எங்கையும் வரல நீங்க போறதுன்னா போங்கன்னு. மறுபடியும் ஏன்டா அதைப் பத்தியே கேட்குறீங்க”
“நீ வித்தியாசமா இருக்கடா. உன் வயசு தானே எங்களுக்கும், ஆனா நாங்க இந்த வயசுல எவ்வளவு ஜாலியா கலகலப்பா இருக்கோம். ஆனா நீ ஏண்டா எப்பவும் அழுத்தமாகவே இருக்கிற. சிரிக்கறதுக்கு கூட காசு கேட்கிற மாதிரி அளவா தான் சிரிக்கிற. யார்கிட்டையும் கலகலன்னு பேச மாட்டேங்குற, ஸ்கூல் பசங்க மாதிரி சாப்பாடு கொண்டு வந்துடற. நாங்களாவது அடிக்கடி வெளியில போய் சாப்பிடுறோம், ஆனா நீ வெளில போய் சாப்பிட்டு நாங்க பார்த்ததே கிடையாது, ஏன்டா இப்படி இருக்கிற”
“இதெல்லாம் செஞ்சா தான் வயசு பையன்னு ஒத்துக்குவீங்களா? எனக்கு இதெல்லாம் பிடிக்கல அவ்வளவு தான், பிடிக்காத விஷயத்தை போர்ஸ் பண்ணி செய்ய வைக்க முடியாது திலீப்”
“அட அது எங்களுக்குமே புரியுது. ஆனா கொஞ்சமாவது கலகலப்பா இருக்கலாமே, ஏன் எப்ப பார்த்தாலும் உர்ருன்னே இருக்கிற. எங்கக்கிட்ட மட்டும் இல்ல நம்ம கூட ஒர்க் பண்ற யார்கிட்டையும் நீ ஒழுங்கா பேசுறதே கிடையாது. உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா எங்கக்கிட்ட சொல்லலாமே”
“எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. நான் இங்க ஜாயின் பண்ணி எத்தனை நாள் ஆகுது?”
“கிட்டத்தட்ட மூணு வருஷம் முடியப்போகுது. ”
“இந்த மூணு வருஷத்துல உங்க யார்கிட்டையாவது லிமிட்டைத் தாண்டி பேசி இருக்கேனா, பழகி இருக்கேனா?”
“இல்லையே. அதுதானே எங்களுக்கும் இடிக்குது. நாங்க எப்படி ஃப்ரீயா பேசுறோம், பழகுறோம் அதே மாதிரி நீயும் ஏன் இருக்க மாட்டேங்குற” என்று மதன் கேட்க,
“எனக்கு பிடிக்கல அவ்வளவு தான். இதோட இந்த பேச்சை விடுங்க, ஆஃபீஸ் வந்துருச்சு உள்ள போலாம் வாங்க” என்று சொன்ன அழகன் அவர்களை முந்திக்கொண்டு அந்த வானொலி நிலையத்திற்குள் நுழைந்தான.
‘இன்னிசை பண்பலை 92.70’ நிலையத்தில் தான் மூன்று வருடங்களாக ஆர்.ஜேவாக வேலை செய்து கொண்டிருக்கிறான் அழகன். அவன் மட்டும் இன்றி மதன், திலீப் இருவரும் கூட இவனுடன் தான் பணிபுரிகிறார்கள். மொத்தம் இவர்களையும் சேர்த்து ஏழு பேர் பகலிலும், நான்கு பேர் இரவிலும் வேலை செய்கிறார்கள்.
உள்ளே நுழைந்த அழகனைக் கண்டு விட்டு சிரித்தான் சுபாஷ். அழகன், திலீப், மதன், தீபா, அபிநயா, சுபாஷ், மந்த்ரா இவர்கள் ஏழு பேரும் தான் தற்போது இங்கே பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திற்கு குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
தன் கேபினுக்கு வந்து பையை அதற்குண்டான இடத்தில் வைத்து விட்டு ‘அப்பாடா’ என்ற பெருமூச்சு விட்ட அழகனுக்கும் அவர்கள் சொல்வது போல் சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது தான். ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்கு மேல் பெரிதாக அவனை சிந்திக்க வைத்தது கிடையாது. (Alprazolam) எப்போதும் செலவு இருந்து கொண்டே இருந்தது. சிறிய பழச்சாறு வாங்க வேண்டும் என்றால் கூட யோசித்து வாங்கும் அளவிற்கு தான் அவர்களது நிலை இருந்தது.
ஆனால் அதை எப்போதும் அவன் வெளியில் காட்டிக் கொண்டது கிடையாது. ‘தன் நிலை இது தான், தான் இப்படிப்பட்ட சூழலில் தான் இருக்கிறேன், எனக்கு உதவி செய்யுங்கள் என்றோ, என் மீது பரிதாபம் காட்டுங்கள்’ என்றோ அவன் ஒருபோதும் மற்றவர்களிடம் கேட்டதும் இல்லை, அவர்கள் பரிதாபம் காட்டும் அளவிற்கு நடந்து கொண்டதும் இல்லை. எப்போதும் இறுக்கமாக இருப்பவன் மற்றவர்களிடம் ஒரு லிமிட்டை தாண்டி பேசுவது கிடையாது. அது மட்டுமே அவனை மற்றவர்களிடம் இருந்து சற்று வேறுபடுத்திக் காட்டியது..
அவன் அருகில் உள்ள கேபின் சுபாஷினுடையது. மற்றவர்களிடம் பேசிவிட்டு இருக்கைக்கு வந்த சுபாஷ், “என்ன வழக்கம் போல திலீப்பும், மதனும் உன்னை வம்பு இழுத்தாங்க போல” எனவும்,
‘ஆமா’ என்று தலையசைத்தான். “புரோகிராம் முடிஞ்சிடுச்சா? இன்னைக்கு நாள் எப்படி போச்சு”
“ரொம்ப நல்லா போச்சு. இன்னைக்கு வந்த முக்கால்வாசி கால் லேடிஸ் தான் தெரியுமா, செம ஜாலியா பேசுனாங்க” என்று வழிந்தவனைப் பார்த்து முறைத்தவன்,
“எப்படா இந்த எண்ணத்தை மாத்திக்க போற. பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருப்பாங்கன்னு நீயா ஒரு வரையறை வச்சுக்காத, பெண்கள் நாம வகுத்து வச்சுருக்கிற வரையறைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவங்க சரியா. அவங்க இப்படித்தான் இருப்பாங்க, இப்படித்தான் நடந்துப்பாங்க, இது தான் அவங்களோட நேச்சர்னு நாம ஒரு கணக்கு போட்டு வச்சா, அதை விட வேற மாதிரியான குணாதிசயங்களை கொண்டவங்களா அவங்க இருப்பாங்க. இதை புரிஞ்சுகிட்டா லைப் ஸ்மூத்தா போகும், இல்லன்னா எங்காவது மாட்டிக்குவ பார்த்துக்கோ”
“நீ சொல்றது சரி தான். ஆனா ஒருத்தரோட குரலை வச்சே அவங்களோட குணாதிசயங்கள் என்ன, பழக்க வழக்கங்கள் என்ன, எப்படிப்படவங்கன்னு எப்படி கணிக்க முடியும். நானும் கேஷுவலா தான் பேசுறேன், மத்தபடி நீ நினைக்கிற மாதிரி நான் கெட்ட பையன் எல்லாம் கிடையாது. ஜாலியா பேசினாங்க, அதனால ஷோ கலகலன்னு போச்சு அவ்வளவு தான். சரி அடுத்து அந்த மொக்க மதன் ப்ரோக்ராம் தான், கேட்க போறியா என்ன?”
“இல்லை நான் கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்குது..”
“உண்மைய சொல்லட்டுமா நம்ம ஏழு பேர்ல, நாலு பேர் எதாவது ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறோம், ரெண்டு பேர் சாங்ஸ டெடிகேட் பண்ற நிகழ்ச்சி, ஒருத்தர் திரைவிமர்சனம் மாதிரி பண்றாங்க, மத்தவங்களும் அது மாதிரி தான். ஆனா உன்னோட நிகழ்ச்சி ரொம்ப ஸ்பெஷலா இருக்குன்னு சொல்றாங்க. இன்னும் சொல்லப்போனா உனக்கு வர்ற போன் கால் எல்லாமே வயசானவங்க தான் பண்றாங்கன்னு பேசிக்கிறாங்க அப்படியா..?”
“ஏன் வயசு பொண்ணுங்க கால் பண்ணுனா தான் அந்த நிகழ்ச்சி நல்லா இருக்குமா? வயசானவங்க கால் பண்ணுனா நல்லா இருக்காதோ, நான் தொகுத்து வழங்குற நிகழ்ச்சிக்கு அதைப் பத்தி தெரிஞ்சவங்க கால் பண்றாங்க. சில விஷயங்களை ஷேர் பண்ணிக்கிறாங்க, அவங்களோட சந்தேகங்களைக் கேட்குறாங்க அவ்வளவு தான் இதுல நீ கேலி பண்ண என்ன இருக்குது சுபாஷ் ”
“இல்ல நாங்க நேயர் விருப்பத்தை கேட்டு சாங் ப்ளே பண்றோம். இல்ல ஒரு வேலன்டைன்ஸ்டே, சில்ரன்ஸ் டே, இல்லனா எதாவது ஒரு ஸ்பெஷல் நாளைப் பத்தி சில விஷயங்கள் சேகரிச்சு சொல்றோம். அது தொடர்பா ஏதாவது ஒரு கொஸ்டின் கேட்டோ? இல்லன்னா அவங்களோட கருத்துக்களை சொல்லுங்கன்னு சொல்லியோ நிகழ்ச்சியை சுவாரஸ்யமா நடத்திட்டு போறோம்.
ஆனா நீ அப்படி இல்லையே, நீ அதுக்கு ஹார்டு ஒர்க் போடுற, நிறைய விஷயங்கள் கலெக்ட் பண்ற. அந்த எல்லா விஷயத்தையும் நீ சொன்னதுக்கு அப்புறம் பர்டிகுலரா ரெண்டு கால், இல்லன்னா மூனே மூணு கால் மட்டும் தான் அட்டென்ட் பண்ணி அவங்க சொல்ற விஷயங்களை கேட்டுட்டு அதுக்குண்டான பதிலைச் சொல்ற. அப்படி இருக்கும் போது உன்னோட சோ எப்படி பாப்புலர் ஆகும்? எப்படி உன்னால இதை ஸ்மூத்தா ரன் பண்ண முடியுது, இதே கொஸ்டின் தான் இங்க இருக்கிற எல்லாருக்குமே இருக்குது”
“நீ எப்படி என்கிட்ட ஒரு கொஸ்டின் கேட்டியோ அதே மாதிரி எனக்கும் ஒரு கொஸ்டின் இருக்குது. அது என்னன்னா நீங்க எல்லாம் எப்படி ஸ்போட்டிவா ஜாலியா ப்ரோக்ராமை ரன் பண்றீங்க? அதுல எந்த ஒரு கன்டென்ட்டும் இல்லன்னு நான் சொல்ல வரல, ஆனால அதுல புதுசா கத்துக்க எந்த விஷியமும் இல்லைன்னு தான் நான் சொல்லுவேன். உங்களுக்கு எப்படி உங்களோட ப்ரோக்ராம் புடிச்சிருக்கோ, அதே மாதிரி என்னோட ப்ரோக்ராம் எனக்கு பிடிச்சுருக்குது அவ்வளவு தான்.”
“சரி சரி. டென்ஷன் ஆகாத, உன் ப்ரோக்ராம் நல்லதா தான் இருக்குது போதுமா. அதை விடு ஒரு விஷயம் கேள்விப்பட்டியா?”
“என்ன விஷியம்?” என்ற அழகனின் கவனம் வேறொங்கோ இருந்தது. அவன் விரல்கள் முகத்தில் இருந்த காயத்தை வருடிக் கொண்டிருந்தன.
“இன்னைக்கு யாரோ நியூ ஜாயினி வர்றாங்களாம் ”
“வந்துட்டு போகட்டும். இப்ப அதுக்கென்ன, ஏற்கனவே இருக்கிவங்க போறதும், புது ஆள் வர்றதும் இயல்பு தானே”
“அதுவும் பொண்ணாம்” மிகுந்த ஆர்வத்தோடு சொன்னான் சுபாஷ்.
“சோ வாட்..” அலட்சியமாக பதிலுரைத்தான் அவன்.
“நீ ஈஸியா சோ வாட் அப்படிங்கறது, பசங்கல்லாம் அதுக்குன்னு ஸ்பெஷலா தயாராகிட்டு இருக்கானுங்க. இருக்கிற மூணு பொண்ணுங்களோட மூஞ்சியையே எவ்வளவு நாள் தான் பார்க்கிறதுன்னு சொல்லி சலிச்சுக்குறானுங்க”
“அப்ப பாக்காதீங்க, ஏன் பாக்குறீங்க. இங்க வேலைக்கு தானே வந்தீங்க, அப்ப அந்த வேலையை மட்டும் செய்யிங்கடா. போடா டேய், போ போய் வேலையைப் பாரு எனக்கும் வேலை இருக்குது” என்று சொல்லி விட்டு அவனிடமிருந்து கவனத்தை திசை திருப்பி கணினியில் பதித்தவன் நொடியில் தனக்கு தேவையானவற்றை சேகரிக்க ஆரம்பித்தான். இன்னும் அரை மணி நேரத்தில் அவனது ப்ரோக்ராம் ஆரம்பிக்க இருந்ததால் அதற்குண்டான தரவுகளை எல்லாம் சேகரித்து வைத்து விட்டு ‘அப்பாடா’ என்று இருக்கையில் அவன் சாய்ந்தமர்ந்த, அதே நேரம் அந்த பண்பலையினுள் கால் பதித்திருந்தாள் கவித்தாரகா..