நெப்போலியனிடம் பேசிய பின் ஆர்கலிக்கு வழக்கம்போல் வலி மறைந்து வழி கிடைக்க, விழியோரம் இருந்த ஈரம் கூட காய்ந்திருந்தது. படிகளில் இருந்து எழுந்து கொண்டவள் சன்னதியில் வந்து நின்று கடவுளை வணங்கினாள். அவள் பின்னோடு நெப்போலியனும் கண்மூடி கடவுளை வேண்டினாலும் உள்ளுக்குள் ஒரு கனல் இருக்க அதை வெளிக்காட்டவே இல்லை.
பின் “தேங்க்ஸ்…” என்று சொல்லி விட்டு அவள் வீட்டிற்குப் போக, தலையசைத்தவன் எதுவும் பேசவில்லை. பின்னால் துணையாக வருவான் என்று அவள் எண்ணியிருக்க, ஏமாற்றம் தரும் வகையில் அவன் கோவிலிலேயே நிற்க,
“என்ன வரலையா…? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றாள்.
“ஒன்னுமில்ல நீ போ…” என்றவன் போகும் அவளையே வெறித்துப் பார்த்தான்.
வீட்டிற்குச் சென்ற ஆர்கலி முதலில் கண்டது மாணிக்கத்தையும் கவலை கொண்ட அவர் முகத்தையும் தான். அப்பாவைப் பார்க்கவும் மீண்டும் கண்கள் உடைப்பெடுக்க, உள்ளம் உடைந்தவள், அவர் அருகே கீழே அமர்ந்தவள் மடி சாய, மாணிக்கம் பேசவில்லை. எப்போதும் போல் மகளின் தலைகோத,
“ஸாரிப்பா….” என்றவளுக்குக் காய்ந்திருந்த கண்ணீர் மீண்டும் மீண்டு விட, “ஆழாதடா…” என்றார் மாணிக்கம்.
“ஸாரிப்பா நிஜம்மா ஏதோ கோவத்துல பேசிட்டேன்ப்பா… கொஞ்சம் டைம் கொடுப்பா…” என்றவளிடம் “சரிடா… நீ வா…. சாப்பிடலாம்…” என்று சொல்ல, தலை தூக்கி தந்தை முகம் பார்த்தவள்,
“ஸாரிப்பா….. என் மேல உனக்குக் கோவம் இல்லையா..?” என்று கேட்க, அவள் தலையில் கைவைத்தவர்,
“உன் மேல அப்பாவுக்கு கோவமே வராதுடா… உன் நல்லதுக்காகத் தான் பேசினேன்…. அது என்னமோ மாறிடுச்சு விடு… ஒரு இரண்டு நாள் போகட்டும்.. நம்ம அப்புறம் பேசலாம்…” என்று மகளை சமாதானம் செய்தார்.
அன்றிரவு எல்லாம் ஆர்கலிக்கு நெப்போலியன் சொன்னது தான் யோசனை. படுத்து இருந்தாலும் பாவை கண் சொருகவில்லை. யோசிக்கும் போது உறக்கம் எங்கிருந்து வரும். அவ்வளவு சோர்வு இருந்தும் கண்மூடினாலும் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. சத்தம் வராமல் எழுந்தவள் பின்வாசலின் கதவைத் திறந்து அங்கிருக்கும் கட்டையில் உட்கார்ந்து இருளில் வெளிச்சம் தேடினாள்.
நிசரும் நிசப்தமுமான அந்த பொழுதில் ஒரு நிலையான முடிவை எடுக்க முனைந்தாள். நெப்போலியன் சொன்னதும் அவளது அறிவுக்கும் மனதுக்குமான பெரிய போராகத் தோன்ற அதனோடு போராடினாள். மனம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தாலும், அவளால் அவளை மட்டுமே யோசிக்க முடியவில்லை. தன்னால், தன்னுடைய காதலால் யாருடைய வாழ்விலும் சிக்கல் வருவதை அவள் விரும்பவில்லை.
“என்னக்கா தூங்காம இங்க இருக்க..?” என்ற ரஞ்சித்தின் குரலில் பதறி திரும்பியவள், “ஏன்டா.. பயமுறுத்துற நீ தூங்காம என்ன பண்ற…?” என்று திட்ட
“நான் படிச்சிட்டு இருந்தேன்… அதை விடு… ஏன் கா கல்யாணம்னா இப்படி ரியாக்ட் பண்ற… பாவம்கா பெரியப்பா…நீ பேசினது ரொம்ப தப்பு…” என்றான்.
“தப்பு தான்டா… ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்…” என்று ஒத்துக்கொள்ள,
“என்ன டென்ஷன் ஒரு வேளை உனக்குக் கல்யாணம் ஆச்சுன்னா எங்களை எப்படி பார்க்குறது நினைக்கிறியா…. ஷாலினி காயு பத்தி கவலைப்படுறியா… இல்ல சினிமா சீரியல் மாதிரி தம்பி தங்கச்சிங்களுக்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டு தியாகி ஆகற ஐடியாவா..?” என்றான் கோபமாக.
அவன் சொல்வதைக் கேட்டு ஆர்கலிக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. அவளே காதல் கொண்டு அதனால் கவலை கொண்டு இருக்க, இவன் வேறு தியாகி அது இது என்று நினைத்தவள்,
“டேய் தம்பி பயலே… அதெல்லாம் இல்லடா… அக்கா என்ன அவ்வளவு நல்லவ நினைச்சியா…? எனக்குக் கல்யாணம் பண்ற ஆசையெல்லாம் இருக்கு… நீதான் என் குழந்தைக்கு எல்லாம் செய்யனும்..” என்றாள் புன்னகையோடு.
“எப்போ கல்யாணம் பண்ற ஐடியா உனக்கு…? ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன் க்கா… எல்லாருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை நமக்குப் பிடிச்சபடி வாழனும்… நீ தேவையில்லாம எங்களைப் பத்தி யோசிக்காத… உன்னோட சந்தோஷம் எதுவோ அதான் எங்களுக்கும் சந்தோஷம்….” என்றான் அழுத்தமாக.
“சரிடா ரஞ்சி….”
“உள்ளவா… பனியில உட்காராத…” என்றவன் அவள் உள்ளே வந்த பின்தான் விட்டான்.
அதன் பின் அறைக்குள் வந்து படுத்த ஆர்கலிக்கு மனதில் ஒரு தெளீவு ஏற்பட்டது. நெப்போலியன் பேசியது, இப்போது ரஞ்சித் பேசியது எல்லாம் அவளை தெளிய வைத்திருக்க, முடிவெடுத்த பின் தான் ஆர்கலியால் நிம்மதியாக மூச்சுவிடவே முடிந்தது. மையல் காதலாக மாறிப்போனது என்பது தெளிவாய்ப் புரிந்து விட, அதை தெரிவித்து விட முடிவு செய்தாள்.
காதல் தான்..! காதலே தான்..!!
அவனுடன் கைகோர்க்கும் காலம் எப்படி இருக்குமென தெரியாதுதான். ஆனால் அவனை விட்டு விலகி நிற்க முடியாது என்று உணர்ந்துகொண்டாள். உணர்தல் ஒரு சுகமான உறக்கத்தை தர,அப்படியே ஆழ்ந்து கண்ணயர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் உணர்ந்ததை உரைத்திடும் வேகமும் ஆவலும் அதிகமாக, அலுவலகம் சென்றவுடனேயே அவனுக்கு முதல் முறையாகத் போன் செய்தாள். நெப்போலியனுக்கு ஆர்கலியின் அழைப்பைப் பார்க்கவும் என்ன சொல்வாள் என்று ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்போடு எடுத்தான்.
ஆர்கலி “எனக்கு உங்கிட்ட பேசனும்..” என்று சொல்ல, “பேசு மார்கழி…” என்றான்.
“நான் நேர்ல பார்த்து பேசனும்…” என்றவளிடம் “அப்போ சாயங்காலம் கடைக்கு வா… இல்ல வீட்டுக்குக் கூட வா…” என்றான்.
ஆர்கலியோ ‘லூசு’ என்று மனதில் கடிந்தவள், “அங்கெல்லாம் வேண்டாம்…. என் ஆபிஸ் பக்கத்துல உன்னால ஈவினிங் வர முடியுமா…?” என்ற அவள் கேட்ட தோரணையே வர வேண்டும் என்று கட்டளையாகத் தோன்ற,
“அப்படி என்ன முக்கியமான பேச்சு.. போன்லயே சொல்லேன்..” என்று அவன் அவள் அகம் அறியும் ஆவலில் கேட்க
“முக்கியமான விஷயம்ன்றதால் தான் நேர்ல பார்க்கனும்னு சொல்றேன்… நீ வந்துட்டு கால் பண்ணு…” என்று வைத்துவிட, அவள் சொன்னது போல் மாலையில் அவள் அலுவலகத்தின் அருகிலேயே காத்திருந்தான்.
அவள் இடத்தை சொல்லவும் அவன் காரை அவ்விடம் கொண்டு வர, ஏறிக்கொண்டவள் அமைதியாக வர, “என்ன ஏதோ சொல்லனும்னு சொன்ன… சொல்லு..” என்று பரபரக்க
“சொல்றேன் வெயிட் பண்ணு… நீ நேரா வண்டியை ஓட்டு…” என்றவளை முறைத்தவன் வாகனத்தை அந்த நெடுஞ்சாலையில் செலுத்த, கொஞ்சம் போக்குவரத்துக் குறைந்த இடம் வரவும், நெடுஞ்சாலை ஓரம் பெரிய மரம் ஒன்று தென்பட, “ஏய் ஏய் அந்த மரத்து கிட்ட நிறுத்து..” என்று கத்தினாள்.
அவனும் நிறுத்தவும், காரை விட்டு இறங்கி மரத்தின் பக்கம் பார்த்து காரில் சாய்ந்து நின்றவள், அவனை இறங்கி வர சொல்ல, அவனும் வந்தான். அகம் கொண்டவன் ஆர்கலியின் அருகாமையில். ஆர்கலிக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. மனம் திறக்க, அதன் மடைத் திறக்க ஆவலோடு இருந்தாள்.
மைமல் பொழுதில் மையல் மொழியாக, அருகில் நின்றவனை ரசித்துப் பார்த்தாள். அவனை நினைக்க, அது அவளுக்கு இனிக்க, தாமாக ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள, ஆர்கலி அவனை பார்த்து கொண்டே நின்றாள். அவனுடனான அமைதி கூட ஆனந்தமாகத்தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அவ்வமைதியில் அவன் அமைதியடையாமல்,
“ஓய்… என்ன கூட்டிட்டு வந்து வேடிக்கைக் காட்டிறியா..?” என்றான் அவள் முன் வந்து நின்று.
அப்போதும் ஆர்கலிக்கு கோபம் எல்லாம் வரவில்லை. அந்த மாலைப்பொழுதின் லாளிதத்தில், அதன் லயத்தில் லயித்தபடி அவனை பார்த்தவள், “உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு…” என்று சொல்லிவிட்டாள்.
மனம் அவன் மொழியை எதிர்ப்பார்க்க, நெப்போலியனோ, ஆர்கலி முகம் பார்த்து மரத்தில் சாய்ந்து நின்று கை கட்டியபடி, “எனக்கும் தான் உன்னைப் பிடிக்கும்..” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
அவனுக்குப் புரிகிறதா என்று புரியாமல் இருந்தவள், “எனக்கு… .உன்னை கல்யாணம் பண்ற அளவுக்குப் பிடிச்சிருக்கு..” என்றாள் அழுத்தமாக உள்ளத்தை உடைத்து, உள்ளார்ந்த காதலுடன்.
அவளது ரசிக்கும் பார்வையை ரசித்து இருந்தவன் இப்போது அவளது ரசிகனாகி, அவளை ரசித்துப் பார்த்தபடி, காரில் சாய்ந்திருந்தவளின் இருப்பக்கமும் கரத்தால் அணைக்கட்டியவன், கண்களில் காதலை காட்டியவன்,
“அவ்வளவு தான் பிடிச்சிருக்கா? எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி பேரக் குழந்தையெல்லாம் எடுக்கனும்னு நினைக்கற அளவுக்குப் பிடிக்கும் டி…” என்று அவன் எண்ணத்தை வெளிக்காட்ட, அவன் வெளிக்காட்டல் இவளை வெட்கத்தினுள் தள்ள,விழிகளில் கொஞ்சமாக உவர் வெள்ளம் வேறு. அது காதல் பேறு..!!
“என்ன சொன்ன…?” என்று இவள் மீண்டும் கேட்க,
“ம்ம்… என் பொண்டாட்டியா எப்போ வரேன்னு கேட்டேன் டி.. என் சண்டி ராணி…” என்றான் இன்னும் காதலாக.
அவ்வளவு தான்…!! அதுவரையில் அகத்தின் அழுத்தங்கள் எல்லாம் கரைந்து ஒட,கண்ணீரில் கலந்தன அவை. இந்த ஆறு மாதமாக எவ்வளவு குழம்பி இருப்பாள்.. குமைந்து இருப்பாள். எத்துனை தூங்கா துன்பமான இரவுகள்..? இப்போது இவன் பதிலில் அவ்விரவுகளில் எல்லாம் நிலவுகளாகத் தோன்றியது.
அவள் அழுகை கண்டவன், “எதுக்குடி அழற…?” என்றான் கொஞ்சம் கோபத்துடன்.
“ஒண்ணுமில்ல போடா…” என்றாள் அழுகையும் மகிழ்வும் கலந்த கலவையாக.
அவன் காதல் சொன்ன கணம் அவளது கனத்தை எல்லாம் காணாமல் போக செய்திருக்க, உணர்ச்சிவசப்பட்டு இருந்தாள் ஆர்கலி.
“அழாதடி அல்லி ராணி…!” என்று இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்றவன், “இதை சொல்ல இத்தனை நாளா..?” என்றான் ஏக்கமும் கொஞ்சம் கோபமும் நிறைந்த குரலில்.
“என்ன சொன்ன…? அப்.. அப்போ… உனக்கு தெரியுமா…?”
“தெரியாம என்னடி? முதன்முதல்ல ஒருத்தன்ன பார்த்துட்டு பிடிக்கலன்னு என்ட்ட சொன்னியே, அன்னிலேர்ந்து உன் பார்வை என்னை பார்க்கும்போது ஒரு வித்யாசம் தெரிஞ்சது. இந்த கண்ணு இரண்டும் அப்படி என்னை சைட் அடிக்குமே…” என்றவனின் கண்களில் இப்போது காதலே..!
“தெரிஞ்சிட்டே சொல்லாம இருந்தியா…?” என்றாள் இனம் காணா ஒரு குரலில்.
உரையாமல் செல்லும் உணர்வாக அவன் இவள் உள்ளத்தை உரைக்காது உணர்ந்தது அவளுக்கு உளமகிழ்வானாலும் முழுதாக அதை அனுபவிக்க முடியவில்லை. அதுவும் தெரிந்தே அவன் சொல்லாமல் இருந்திருக்கிறான் என்பது அவளைக் காயப்படுத்தியது. அவளது அகப்போராட்டம் அப்படி.
“ஏன்… நீ சொன்னியா…?” என்றான் அவனும் அதே மாதிரி குரலில்.
“நான் எப்படி சொல்ல முடியும்…?” என்றவளிடம் “அட ஒன்னும் தெரியாத பாப்பாவா நீ…? ஊருக்குள்ள வந்த முத நாளே என்ட்ட தெருவுல வைச்சு சண்டை போட்ட தைரியமான பொண்ணு தானே..? இதை சொல்றதுக்கு என்ன..?” என்றான் கிண்டலாக.
“ப்ச்…. என்ன பேசுற நீ…? அது வேற…. இது நம்ம வாழ்க்கை இல்லையா… எனக்கும் உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே… அதையெல்லாம் நான் யோசிக்க வேண்டாமா…?” என்று அவள் உண்மை பேச, அது அவனுக்கு உறைக்கவில்லை.
“யோசிக்கிற அளவுக்கு அப்படி என்ன நான் குறைஞ்சிப் போய்ட்டேன்…” என்றான் கொஞ்சம் கோபமாக.
“குறைஞ்சுப் போயிட்டேன்னு நான் எப்போ சொன்னேன்… என் மனசு தெரிஞ்சும் நீயா ஏன் சொல்லாம இருந்த…. நான் எனக்குள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்… ஏன் நீயே நேத்து பார்த்த தானே..?” என்றவளிடம்,
“பார்த்தேன் தான். ரொம்ப எதிர்ப்பார்த்தேன்… நீ அப்பவாச்சும் என்னைப் பிடிச்சிருக்குனு சொல்வன்னு… ஆனா உன் திமிர் உன்னை சொல்ல விடல இல்ல..” என்றான்.
“என்ன சொன்ன திமிரா…?” என்ற ஆர்கலிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கழிவிரக்கம் தோன்ற, தன்மானம் தலைத்தூக்கியது. அவனுக்கோ தாழ்வு நிலைத் தலை தூக்க,
“ஆமா…. உனக்கு எப்பவும் நான் உன்னை விட கீழ்னு ஒரு எண்ணம்… உன் பார்வையே அப்படிதான் இருந்துச்சு…. நான் படிக்கல வேற, நீயே சொன்னியே யோசிச்சேன்னு.. இவன் கிட்ட நம்ம என்ன பிடிக்கும்னு சொல்றதுன்னு இருந்திருப்ப…” என்றான் அவள் நிலை உணராமல்.
அவளை உள்ளுக்குள் நொறுங்கச் செய்கிறோம் என்றே உணர்தலே இல்லாமல். நெப்போலியனுக்கு ஆர்கலியைப் புரியும் தான். ஆனால் புரிதல் வேறு, புரிந்து நடத்தல் வேறல்லவா…? அவன் அவளது மெல்லிய உணர்வுகளை காயப்படுத்துகிறோம் என்று புரியாமல் இயல்பு போலவே மனதில் பட்டதை மறைக்காமல் பேச, மங்கை மனம் பட்டுப்போவதை அவன் உணரவில்லை.
ஆர்கலிக்கு அதுவரை இருந்த உணர்வுகள் எல்லாம் வடிய, ஏற்கனவே மிகுந்த உளைச்சலில் இருந்தவள் இவனது பேச்சைக் கேட்டு கொதித்தாள். ஆர்கலியால் அவனது பேச்சைத் தாங்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஒரு பெண்ணாக அவள் எத்தனை மனப்போராட்டம் தாண்டி அவனிடம் மனதை திறந்திருக்கிறாள். ஆனால் அது எதையும் உணராமல் உளறுபவனை என்ன செய்வது என பார்த்திருக்க,
“அதான்….. நீயே உன்னோட திமிரையெல்லாம் விட்டு எப்போ சொல்வன்னு காத்திருந்தேன்… இன்னிக்கு தான் உனக்கு மனசு வந்திருக்கு…” என்றவனை பளாரென்று கன்னத்தில் அறைந்தாள் ஆர்கலி.
எதிரில் நின்றவன் அவளிடம் இருந்து அப்படி ஒரு எதிர்வினையை எதிர் நோக்கவில்லை. அதிர்வும் ஆத்திரமும் ஒருங்கே சேர, அவளது கையை கோபத்துடன் பிடித்தவன் அவளை முறைத்து நிற்க, ஆர்கலியும் அவனுக்கு சற்றும் குறையாத கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்ன சொன்ன என் திமிர் விட்டு உங்கிட்ட வந்தேனா… உனக்கு தான்டா திமிர் ஈகோ எல்லாம்….” என்று அவள் பொங்க,
“யாருக்குடி திமிர்…? எனக்கா…? எவனையும் பிடிக்கலன்னு உன் அப்பா கிட்ட சொல்லத் தெரிஞ்ச உனக்கு… என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ல வாய் வரல தானே..? என்னை அந்த பேச்சு பேசுவ, ஆனா பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியல… அப்படி இருக்கப்ப.. நானா உன் பின்னாடி வருவேனா…?” என்றான் கோபமாக.
‘நான் அவன் பின்னாடி வந்தேன்னு சொல்றானா..?’ என்று அவன் சொல்லாமல் சொன்ன சொல்லின் அர்த்தம் படித்தவளுக்கு மனது தாளவே இல்லை.
நிரந்தரனாய் நீங்காது தன்னுடன் வருவான் என்று எண்ணியவன் தன் நிலை உணராது கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கூராய் அவளுள் இறங்கியது. நெப்போலியனின் நிலையோ வேறு.
ஒரு வருடமாக அவளின் விழிமொழி என்று வாய்மொழியாக வரும் என காத்திருந்தவன். அத்தனை மாப்பிள்ளைகளையும் வேண்டாம் என்று சொன்னவள் தான் வேண்டும் என்று சொல்லவில்லையே என்று தாழ்வு மனப்பான்மை அவனுள். அதுவும் முதன்முதலில் ஆர்கலி அவனுள் விதைத்திருந்த பார்வை பெரும் தாக்கத்தை உண்டு செய்திருக்க, அவனால் முதல் அடி வைக்க முடியவில்லை. இல்லையென்றால் அவனாகவே சொல்லி இருப்பான். நேற்று கூட அவ்வளவு அழுதும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லை என்ற கோபம் தான் அவள் மீது.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் அவ்வளவு பிடித்தது. ஆனால் அதை காட்ட தெரியாமல், அதற்கு முயலாமல் கோபத்தைப் பிடித்துத் தொங்கினர்.
“எப்படி சொல்ல முடியும்…? ஒரு வருஷமா என்னைத் தெரிஞ்சும் கூட உன் விருப்பத்தை நீ எங்கிட்ட சொல்லவே இல்ல. அது தெரியாம எப்படி என்னால பேச முடியும்…?”
“ஆமா ஆமா…. உனக்கு நான் சரி வருவேனா இல்லையான்னு யோசிக்கனுமே…!” என்றான் கிண்டலான குரலில்.
அவன் சொன்னதை விட சொன்ன த்வனி அவளைத் தாக்கிட, “ஆமாடா யோசிச்சேன்… அதுல என்ன தப்பு…. உன்னைக் காதலிச்சுட்டு கழட்டி விடனும்னு நினைச்சிருந்தா யோசிக்கத் தேவையில்ல… ஆனா உன்னோட கல்யாணம் செஞ்சு வாழனும்னுன்றதுக்காக யோசிச்சேன்டா…” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
“ஆனா நீ.. ச்ச என்னைப் புரிஞ்சிக்கவே இல்லை இல்ல…. உன்னை…….” என்றவளுக்கு அழுகை அடைக்க, அவன் முன் பேச்சே வரவில்லை.
ஆனாலும் உள்ளுக்குள் இருந்த ஆதங்கம் உடைபட, “வேண்டாம்…. நீ வேண்டாம்… இந்த காதல் வேண்டாம்…. எப்போ நீ இப்படியெல்லாம் பேசினியோ எதுவுமே எனக்கு வேண்டாம்…” என்றாள் அழுகையை அடக்கியபடி.
காரின் கதவைத் திறந்து தனது பையை எடுத்தவள்,சாலையில் நடக்கத் துவங்க, “ஹே..! நில்லுடி…” என்று அவள் பின்னே போனவன்
“இப்ப என்ன நான் உண்மையைத் தானே சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு சீன் காட்ற நீ…?” என்றவனை வெறித்தவள் நடக்கத்துவங்க, அவள் கையைப் பற்றியவன் அவள் விலகும் முன்னே இழுத்து காருக்குள் தள்ளினான்.