தான் சொன்னதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சி விலகாமல் இருக்கும் தன் அண்ணனை தோள் தொட்டு உசுப்பியவன், “அண்ணா என்ன ஆச்சுங்கண்ணா?” என சிறு பயத்தோடு கேட்டிட,
“நீ எப்ப இதைக் கேட்ட?”
“இப்பதான்ணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி”
“என்ன கேட்ட தெளிவா சொல்லு. உண்மை தெரியாம நாமளா ஒரு முடிவுக்கு வர முடியாது” என்று அவனுக்கு சொன்னானா அல்லது தன் மனதிற்கு சொல்லிக் கொண்டானோ அவனுக்கு தான் தெரியும்.
“இல்ல நான் அண்ணன்கிட்ட டீ வேணுமான்னு கேட்க போன போது, ‘இல்ல புஜ்ஜிமா உங்கிட்ட பேசாம இருப்பேனா. சடனா அண்ணா ஒரு வேலை கொடுத்ததால வெளியில போயிட்டேன். தங்கச்சி வேற பெரிய மனுஷி ஆகிட்டா செல்லம் அதனால தான் உன்கிட்ட பேச முடியல. தினமும் ஆபீஸ்ல பார்த்துக்குறோம் தானே அப்புறம் என்ன, மத்த விஷயத்தை எல்லாம் நாளைக்கு வந்து பேசிக்கலாமே யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க. ப்ச்ச் அம்மு அப்படி இல்லைடா, வீட்டுல நிறைய பேர் இருக்காங்கடா. அப்பா, அண்ணா, பக்கத்து வீட்டுக்காரங்கன்னு எல்லாருமே இருக்காங்க இப்ப போய் கேட்கிறியே’ அப்படின்னு பேசிகிட்டு இருந்தாரு. ஆனா அதுக்கு மேல என்னால கேட்க முடியல, ஆயிரம் தான் அண்ணனா இருந்தாலும் அவங்களுக்கும் பிரைவசி இருக்கும் இல்லையா அதனால தான் வந்துட்டேன்” என்று சொல்ல,
இப்போது அகிலன் என்ன மாதிரியான நிலையில் இருக்கிறான் என்பது அழகனுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்து போனது.
அது மட்டும் இன்றி வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் பரிதிக்கே இப்படி என்றால், இன்னும் கல்லூரி படிப்பை முடித்திடாமல் இருக்கும் முகிலனுக்கு இது தெரிய வந்தால் பிரச்சனை தான். அதுமட்டுமின்றி இப்போது தான் தங்கை வயதிற்கு வேறு வந்திருக்கிறாள் அப்படி இருக்கும் போது இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை தேவையா என்று தான் நினைத்தான்.
“சரி பரிதி இதை பத்தி நீ அப்பாகிட்ட சொல்லிட்டியா என்ன?”
“இல்லைங்கண்ணா சொல்லல. அப்பாகிட்ட சொன்னா அப்பா எப்படி எடுத்துக்குவாருன்னு தெரியல. அது மட்டும் இல்லாம அகில் அண்ணா இப்படி பேசுனது வேற யார்கிட்டயாவதா இருந்து நான் அதை சரியா புருஞ்சுக்காம எல்லார்கிட்டயும் சொன்னா, நான் வேணும்னே தப்பா சொன்ன மாதிரி ஆகிடும் இல்லையா அதனால தான் அண்ணா சொல்லல”
“சரி இதைப் பத்தி நீ அகில்கிட்ட எதுவும் கேட்டுக்க வேண்டாம். நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு சாப்பாட்டை அள்ளி வாயில் அடைத்து மெல்லாமலே விழுங்கினான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. மென்று சாவகாசமாக ரசித்து ருசித்து சாப்பிடும் மனநிலையில் அவன் இல்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவனுக்கு அப்படி ஒரு சூழ்நிலை இருந்ததில்லை.
இப்போதோ சாதாரணமாகக் கூட சாப்பாட்டை விழுங்க அவனுக்கு மனநிலை ஒத்துக் கொள்ளாமல் இருந்தது. ஆனால் தான் சாப்பிடாமல் சென்றால், தான் சொன்ன விஷயத்தால் தான் அண்ணன் சாப்பிடவில்லை என்று இளம்பரிதி கவலை கொள்வான் என்பதற்காகவே தட்டில் இருந்ததை தொண்டைக்குள் அடைத்தான். அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவும் வரை அங்கே நின்றிருந்த இளம்பரிதி,
“அண்ணா..” என்று மீண்டும் அழைத்திட,
“என்ன பரிதி”
“நான் இப்படி சொன்னதுனால நீங்க அகில் அண்ணாக்கிட்ட கோபப்படாதீங்க. ஏன்னா அண்ணாக்கும் வயசாகுது இல்லையா, அவருக்கும் சில விஷயங்கள் பிடிக்கும், சில விஷயங்கள் பிடிக்காது இல்லையா. இது அவரோட லைஃப், யாரை சூஸ் பண்ணனும், என்ன முடிவு எடுக்கணும்னு அவருக்கும் தெரியும் இல்லையா. அதனால அவரோட விருப்பத்துல நீங்க தலையிட வேணாம்னு நான் சொல்ல வரல, அதே மாதிரி தலையிடாம இருக்கிறதும் நல்லதுன்னு தோணுது அண்ணா. எங்களுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொணாணையும் நீங்க செஞ்சு இருக்கீங்க நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அதையும் தாண்டி அவங்கவங்களுக்குன்னு ஒரு பர்சனல் விஷயம் இருக்கும் இல்லையாண்ணா, அதனால தாண்ணா சொல்றேன் அகில அண்ணாக்கிட்ட தெளிவா பேசிட்டு எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க” என்றதும்,
அதைக் கேட்டு கசந்த சிரிப்பொன்றை உதிர்த்தான் அழகன். “அவன் மட்டும் கிடையாது நீயுமே அப்படி ஒரு சூழ்நிலையில இருந்தா உங்க விருப்பத்துக்கு தான் நான் மதிப்பு குடுப்பனே தவிர உங்க வாழ்க்கையில் நான் தலையிடணும்னு நினைக்க மாட்டேன். இதுவரைக்கும் அது மாதிரி நான் நெனச்சதில்லை, இனிமேல் நினைக்கவும் மாட்டேன் சரியா, பயப்படாம போ” என்றவன் சிறிது இடைவெளி விட்டு, “ பரிதி” என்றழைத்திட்டான்.
அவன் கை கழுவி இருந்த தட்டை எடுத்துக் கொண்டிருந்த பரிதி என்னவென்று நிமிர்ந்து பார்க்க, “இந்த கேள்வி அவனுக்கானது மட்டும் இல்ல, உனக்கும் சேர்த்து தான்னு தான் எனக்கு நல்லா புரியுது. உனக்கு யாரை பிடிச்சு இருந்தாலும் தாரளமா நீ சொல்லலாம், உங்க வாழ்க்கையில் நான் குறுக்கிடமாட்டேன். அகில் கேட்டா இப்பவே கூட அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் ரெடி. ஆனா அவன் வாயை திறந்து அவனா கேட்கணும் இல்லையா, ஏன்னா இதுல அவனோட வாழ்க்கை மட்டும் இல்லை உங்களோட வாழ்க்கையும் இருக்குது.
அவனுக்கு அப்புறம் நீ இருக்கிற, உனக்கு அப்புறம் முகில், சங்கரி இருக்காங்க. அதனால எல்லாரோட வாழ்க்கையும் பாதிச்சுடுமோன்னு பார்த்து யோசிச்சு தான் என்னால முடிவெடுக்க முடியும் சரியா” என்றதும் சரி என்று தலையை உருட்டி விட்டு பாத்திரங்களைக் கொண்டு சென்று சமையல் அறையில் வைத்து விட்டு உறங்க சென்று விட்டான் இளம்பரிதி.
ஆனால் அழகனோ பூஜை அறையில் இருந்த தாயின் புகைப்படத்தை பார்த்தவாறு உடைந்து போய் நின்று இருந்தான். அழகனுக்கு உடல் அசதி இருந்த போதும் உறக்கம் பறிபோய் இருந்தது. எப்போதும் சில பல நினைவுகள் அவனைத் தூங்க விடாமல் செய்யும் தான், ஆனால் நாள் முழுவதும் செய்த வேலையால் தோன்றிய அயர்வின் காரணமாக சிறிது நேரத்திலேயே உறங்கி விடுவான். ஆனால் இப்போது உடம்பில் இருக்கும் அயர்வையும், உடல் வலியையும் தாண்டி நெஞ்சில் சுருக்கென்று வலியை விதைத்திருந்தது இளம்பரிதி கேட்ட வார்த்தைகள்.
“என்னம்மா சொல்றான் அவன்? இவங்களோட வாழ்க்கையில நான் தலையிட்டு, அவங்க விருப்பத்தை தடுத்துட்டு இருக்கேனா? இவங்களுக்கு பிடிக்காத ஏதாவது ஒரு விஷயத்தை செஞ்சுருக்கனா? அப்படி இருக்கும் போது எப்படிம்மா இப்படி ஒரு வார்த்தையை என்னைப் பார்த்து அவனால கேட்க முடிஞ்சுச்சு. என்னோட வாழ்க்கை பெருசுன்னு நினைச்சிருந்தா என்னைக்கோ நான் இவனுங்களையெல்லாம் நிர்கதியா விட்டுட்டு போயிருந்திருப்பேனே, ஆனா அப்படி நான் போகவே இல்லையே அம்மா, அதை ஏன்மா இவன் புரிஞ்சுக்கல. பேசாம நீ என்னையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்’ என்று மானசீகமாக புகைப்படத்தில் இருந்த தன் தாயிடம் கேட்டுக் கொண்டு நின்றிருந்தவனது விழியோரம் கசிந்த கண்ணீர் மெல்ல அவன் கன்னத்தில் இறங்கி தாடை வழியே கழுத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.
அழகனோ மானசீகமாக தன் தாயிடம் தன் கவலையை இறக்கி வைத்துக் கொண்டிருக்க, அதே நேரம் தன் உடன் பணி புரியும் பெண்ணுடன் அலைபேசியில் அளவலாவிக் கொண்டிருந்தான் அகிலன். அண்ணன் ஒருவன் திருமணமாகாமல் இருக்கிறான், தங்களுக்காக தன் ஆசை அனைத்தையும் துறந்து விட்டு ஓய்வின்றி உழைக்கிறான் என்றெல்லாம் அவன் எண்ணத்தில் பதியவே இல்லை. அப்பெண்ணைப் பார்த்த நொடியில் பிடித்து விட இருவரும் தற்போது நேசத்தை பகிர்ந்து கொண்டு அதை வார்த்தை வழியே உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தம்பியின் வாழ்க்கைக்கும் சரி, அவர்களது நலனுக்கும் சரி தான் குறுக்காக நிற்பேன் என்று நினைக்கிறார்களோ என்ற எண்ணம் இப்போது இளம்பரிதி பேசியதிலிருந்து அழகனுக்கு தோன்றியது.
‘என் கூட பிறந்தவங்க தானேன்னு அவங்கவங்க விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா எனக்கும் ஒரு மனசு இருக்கும்னோ அதுல ஒரு விருப்பம் இருக்கும்னோ, எனக்கும் சில ஆசைகள் இருக்கும்னோ யாருமே புரிஞ்சுக்கல இல்லையா. புரிஞ்சுக்க வேண்டியவளே புரிஞ்சுக்காம போயிட்டா, இவங்க புரிஞ்சுக்கிட்டா என்ன புரிஞ்சிக்காம இருந்தா என்ன’ என்ற நினைவோடு வந்து தரையில் விழுந்தவனுக்கு உறக்கம் தான் வர மறுத்தது.
ஏனோ கட்டிலில் அனைவரும் சொகுசாக உறங்க வேண்டும் என்று அனைவரது அறைக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தாலும் இவன் அறையில் இருந்ததெல்லாம் மிக சொற்பமான பொருட்கள் தான். தரையில் விரித்துப் படுக்க ஒரு பாய், போர்த்திக்கொள்ள ஒரு பெட்ஷீட், இரண்டு தலையணைகள், இவற்றை வைக்க ஒரு சின்ன டேபிள், சுவற்றில் ஆங்காங்கே குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் புகைப்படம், பெரிதாக ஒரு சுவர் முழுக்க புத்தகங்களும்,அலங்கார பொருட்களும் வைக்கும் கண்ணாடியிலான ஷோகேஸ் கபோர்ட், அதில் பாதியளவு நிரம்பயிருந்த புத்தங்கள். இவ்வளவே அவனது அறையில் இருக்கும் பொருட்கள்.. இதைத் தவிர சொகுசாக அனுபவிக்கும் பஞ்சு மெத்தையும் கிடையாது, சோபா போலான தேவையற்ற ஆடம்பர அலங்கார பொருட்களும் கிடையாது.
இவன் அவற்றை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்தானே தவிர, வாங்க முடியாமல் எல்லாம் இல்லை. இவனை பொருத்தமட்டில் அளவுக்கு அதிகமாக இருக்கும் எதுவும் தேவையற்ற பொருள் என்று எண்ணுவான். ஆனால் தன் தம்பி தங்கைக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்திருந்தான்.
இப்போதும் தரையில் விட்டதை பார்த்தவாறு படுத்துக் கொண்டிருந்தவனின் விழிகள் மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைக் கண்டாலும் கூட அவன் கவனம் இங்கு இல்லை, எண்ணங்களும் கூட வேறெங்கோ சிறகின்றி பறந்து கொண்டிருந்தது. வாழ்க்கை அவனுக்கு ஏகப்பட்ட பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும் கூட ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு நெருக்கடியில் அவன் எதையோ இழந்துவிட்ட உணர்வு அவ்வபோது அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. அது ஏன் என்று புரிந்தாலும் கூட மீண்டும் தொலைத்ததைத் தேடிச் செல்ல வேண்டும் என்றோ, அது தொலைந்து போன கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீட்டி பார்க்க வேண்டும் என்றோ அவன் நினைத்தது கிடையாது.
தனக்கு வேதனையைப் பரிசாக தந்து சென்ற ஒன்றை மீண்டும் தேடிச்சென்று மீண்டும் மீண்டும் அந்த வேதனையை பெற்றுக் கொள்ள அவன் விரும்பவில்லை. தனக்கு பிடித்த ஒன்று தொலைவதற்கு முன் தனக்கு கொடுத்த இன்பமான நிகழ்வுகளை மட்டும் மனதில் பதித்துக் கொண்டு காலத்தை கடத்தியிருக்கிறான்.
மறுநாள் விடிந்தும் விடியாததும் எழுந்து ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார் குமரேசன். அலைபேசியில் தகவலை சொல்வதற்கு, அவர்களது அலைபேசி எண் கூட இவர்களிடம் இல்லை. அதனால் தான் நேரில் சென்று கையோடு அழைத்து வர புறப்பட்டார்.
செல்லும் முன், “நான் கையோட அவங்களைக் கூட்டிட்டு வர முயற்சி செய்யிறேன். அப்படி அவரு வர மறுத்துட்டாருன்னா உனக்கு அலைபேசியில தகவல் தர்றேன் நீ இங்கிருந்து ஆக வேண்டிய மத்த வேலைகளைப் பாரு” என்று அழகனிடம் சொல்லி விட்டு தான் புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரம் கழித்து எழுந்த அழகன் எப்போதும் போல் காய்கனி கமிஷன் மண்டிக்கு சென்று காய்களை எல்லாம் வாங்கி அந்தந்த கடைக்கு அனுப்பி வைத்தவன், ஏழு மணி போல் வீட்டிற்கு வந்தான்.
தம்பிகள் மூவரும் எழுந்து தங்கைக்கு துணையாக அமர்ந்திருப்பதைக் கண்டவன், “யார் இன்னைக்கு சமையல் செஞ்சீங்க” என்றிட, இளம்பரிதி முன்னே வந்து தலையை நீட்டினான்.
“சரி. அகில் இன்னைக்கு நீ வேலைக்கு போக வேணாம், லீவு போட்டுட்டு கடையை பார்த்துக்க. தங்கச்சிக்கு சடங்கு சுத்தணும்னு அப்பா சொல்லிட்டு போயிருக்காரு, சப்போஸ் அப்பா ஊருக்கு போன காரியம் நிறைவேறாம போயிடுச்சுன்னா இங்க இருந்து மத்த வேலையைப் பாக்கிறதுக்கு நான் வீட்டுலையே இருக்கலாம்னு நினைக்கிறேன்” என்றிட, அகிலோ திருதிருவென விழித்தான்.
‘இன்று அவனும், அவன் காதலிக்கும் பெண்ணும் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியில் செல்லலாம்’ என்று முடிவு செய்திருந்தார்கள். ஆதலால் தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் திருத்திருவென்று விழிக்க, அவன் அப்படி முழிப்பதற்கான காரணத்தை இளம்பரிதியும் கண்டு கொண்டான், அழகனும் கண்டு கொண்டான்.
ஆதலால் அவனே எதுவாக இருந்தாலும் முடிவு செய்யட்டும் என்று அழகன் அமைதி காக்க, “சரி.. சரிங்க அண்ணா கடைக்கு போறேன்” என்று சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தவன் இந்த செய்தியை தன் காதலியிடம் கூற, அவளோ அலைபேசியில் காச்சு மூச்சென்று கத்தியவள், “உனக்கு என்னை விட உன் குடும்பம் தான் முக்கியமா போச்சு இல்லையா? ஏன் உங்க அண்ணனை எதிர்த்து நீ பேச மாட்டியா? அண்ணா எனக்கு வேலை இருக்குதுன்னு நீ சொல்லி இருக்க வேண்டியது தானே. எப்ப பார்த்தாலும் அண்ணன், அண்ணன்னு என்கிட்டே அண்ணன் புராணம் பாட வேண்டியது.
இப்ப உங்க அண்ணா அது சொன்னாரு இது சொன்னாருன்னு சடனா நாம போட்டிருந்த பிளானைக் கேன்சல் பண்ண சொல்ற. அதெல்லாம் எனக்கு தெரியாது நான் உனக்கு வேணும்னா, மரியாதையா உடனே கிளம்பி வா இல்லன்னா எப்பவுமே என் மூஞ்சியில முழிக்காத” என்று சொல்லி விட்டு அவள் அலைபேசியைத் துண்டித்து விட இவன் தான் விக்கித்து போய் நின்று இருந்தான்.
‘கடைக்கு போறேன்’ என்று சொன்ன பிறகு அண்ணனிடம் மறுத்து பேசவும் முடியாது,
அதேபோல் ‘நீ வந்தால் தான் நம் காதல் நிலைக்கும்’ என்று சொல்லும் காதலிடம் தன் நிலையை விளக்கிச் சொன்னாலும் அவள் புரிந்து கொள்ள போவது கிடையாது’ என்பதால் இருதலைக்கொல்லி எறும்பாய் தவித்தவன், ‘எப்படியாவது தன் காதலியைச் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கடைக்கு கிளம்பி விட்டான்.
சோர்வாக அமர்ந்திருந்த சங்கரியிடம் வந்த அழகன், “என்னம்மா வயிறு ரொம்ப வலிக்குதா?” என்று அக்கறையாக கேட்க,
“இல்லண்ணா இப்ந வயிறு வலிக்கல. அம்மா ஏன் இந்த டைம்ல நம்ம கூட இல்லாம போனாங்கன்னு ரொம்ப பீல் பண்றேண்ணா” என்றவளுக்கு முனுக்கென்று விழிகளில் நீர் கோர்த்திருந்தது.
“அட எதுக்கு இப்ப அழுகிற. ஏன் அம்மா இல்லன்னா என்ன, நாங்கல்லாம் இல்லையா? அம்மா ஸ்தானத்திலிருந்து அப்பா எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யிறாரு அப்படி இருக்கும் போது நீ இப்படி சொல்லலாமா?”
“என்னணா இப்படி சொல்லிட்டீங்க? அப்பா மட்டும் இல்ல நீங்களுமே எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மாவா இருந்து எல்லாத்தையும் செய்யறீங்க நான் அதுக்கு சொல்லல. சில விஷயங்களை அம்மாட்ட சொல்ல முடியும், சில விஷயங்களை உங்ககிட்ட சொல்ல முடியாது அதுதான்..” என்று அவள் தயங்கிட,
“என்ன செய்யணும் சொல்லுடா நான் செய்யிறேன்”
“அண்ணா அது வந்து நேத்து ஒரு ஆன்ட்டி ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்துட்டு போனாங்க, ஆனா எனக்கு இன்னும் சரியா அதை ஹேண்டல் பண்ண தெரியலண்ணா” என்று முழுதாக விஷயத்தை சொல்ல முடியாமல் தயங்கினாள்.
“இருமா இதோ வந்துடுறேன்” என்று விட்டு அலைபேசியோடு உள்ளே சென்றவன் சிறிது நேரம் கழித்து வந்தவன், “என்னம்மா பேட் எப்படி சேஞ்ச் பண்றதுன்னு தெரியலையா?” என்றான்.
அவன் முகத்தில் தெரிந்த கனிவைக் கண்டு விட்டு, “ஆமா அண்ணா” என்றாள் சங்கடமாக.
“இங்க பாருமா நான் உனக்கு அண்ணன் மட்டும் கிடையாது. நானும் உங்களுக்கு அம்மா அப்பா மாதிரி தான்னு நீ கூட இப்ப சொன்னல்ல, அப்ப எப்படி உன் நிலைமை புரியாம போகும். அண்ணா உனக்கு ஒரு வீடியோ வச்சுத் தர்றேன் நீ போய் அது மாதிரி பார்த்து பழகிக்கோ சரியா” என்றவன் சங்கோஜம் சிறிதும் இன்றி தங்கைக்காக ஏற்கனவே டஜன் கணக்கில் எடுத்து வைத்திருந்த உள்ளாடைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான், கூடவே சிறு கவரையும் கொடுத்தான்.
கூடவே அதில் சானிட்டரி நாப்கினை எப்படி வைப்பது என்ற வீடியோவை பிளே செய்து காட்டினான். இதை நேற்று அந்த பக்கத்து வீட்டுப்பெண் சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக நாப்கினை உள்ளாடையில் வைத்துக் கொடுத்து இருந்ததால், இப்போது அதை எப்படி மாற்றுவது என்று சங்கரிக்கு தெரியவில்லை.
தாய் இருந்தால் தாயிடம் கேட்டிருப்பாளோ என்னவோ தாய் இல்லாததால் தயங்கியவாறே அண்ணனிடம் சொல்லி வைக்க, அவனோ அது தொடர்பான வீடியோக்களை யூட்யூபில் தேடி எடுத்து, அதை அவளுக்கும் காட்டினான்.
“அண்ணா நான் பெரிய பிள்ளை ஆகலன்னு என் கூட படிக்கிற பிள்ளைங்க யாருக்கும் தெரியாது. இங்க நமக்கு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தானே அது தெரியும். இதை வெளியில சொல்ல சங்கடமா இருந்துச்சு அண்ணா, என்னை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஏஜ் அட்டென்ட் பண்ணிட்ட போது, நான் மட்டும் ஏஜ் அட்டென்ட் பண்ணலையேங்கிற வருத்தம் எனக்கு இருந்துச்சு. அப்படி இருக்கும் போது இதை கேட்டா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களோன்னு தான் நான் யார்கிட்டையும் கேட்கல” என்று சோகமாக சொன்னாள்.
“சரிமா டிவியில தான் அவ்வளவு காட்றாங்களே அப்பவாவது கத்துக்கிட்டு இருந்துருக்கலாமே”
“டிவியில காட்டுறாங்களே தவிர அதை எப்படி யூஸ் பண்றதுன்னு டெமோ காட்டலையே அண்ணா..”
”சரி யூட்டியூப்லயாவது பார்த்து கத்துகிட்டு இருந்து இருக்கலாமே”
“இல்லண்ணா எனக்கு அதை கத்துக்கணும்னு தோணல. வயசுக்கு வந்தா பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் அண்ணா. இதுக்காக அண்ணாங்கக்கிட்ட போன் கேட்க பிடிக்கல. நீங்க தானே முதல் செமஸ்டர் முடிஞ்சதும் போன் வாங்கி தர்றதா சொன்னீங்க அப்ப பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்” என்று தலை குனிந்து சொன்னவளின் மனநிலை அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.
‘தோளுயரத்துக்கு வளர்ந்து விட்டாளே தவிர இன்னும் குழந்தையின் மனப்பான்மையில் தான் இருக்கிறாள்’ என்பது அவனுக்கு புரிந்து போனது. ஆகையால், “சரிம்மா வெளியில இருக்கும் பாத்ரூம்மை யூஸ் பண்ணிக்கிறியா?” என்றதும்,
“சரி அண்ணா” என்று சொல்லி விட்டு சங்கரி எழுந்து சென்றதும், பெருமூச்செறிந்த அழகனுக்கோ ‘தங்களது தாய் இருந்திருந்தால் தங்கை இவ்வளவு சங்கடப்பட்டு இருக்க மாட்டாள்’ என்றே எண்ணம் எழுந்தது, பெண் பிள்ளைகள் சில விஷயங்களுக்கு தாயையே தேடுகிறார்கள். தாயில்லா பெண் பிள்ளைகள் இதுபோலான சூழ்நிலையில் சில தவிர்க்க முடியாத சங்கடங்களில் சிக்க வேண்டியுள்ளது…