“சரியாக மணி காலை 11… இப்பொழுது நமது இன்னிசைப் பண்பலையின் அடுத்த நிகழ்ச்சிக்கான நேரம் வந்து விட்டது நண்பர்களே, மீண்டும் நாம் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திக்கலாம். இப்படிக்கு உங்களிடம் இருந்து மொக்கையோடு விடை பெறுவது உங்கள் மொக்கை மதன், இது இன்னிசைப் பண்பலை 92.70. இசையால் இணைவோம், இன்னிசை மழையில் நனைவோம் ” என்று கூறி மதன் தன் ப்ரோக்ராமை முடித்துக் கொள்ள, அடுத்தது அழகனின் ப்ரோக்ராம் ஆகையால் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ரெக்கார்டிங் அறைக்குள் நுழைந்தவன், மதனைப் பார்த்து புன்முறுவல் ஒன்றை உதிர்க்க,
“ஆல் த பெஸ்ட்” என்று கட்டைவிரலை உயர்த்தி காண்பித்து விட்டு மதன் அந்த அறையில் இருந்து சென்றதும், இருக்கை ஒன்றில் நன்றாக அமர்ந்து அமர்ந்து கொண்டு காதில் போடப்படும் கருவியை மாட்டியவாறு மைக்கை சரி செய்த அழகன் எதிரில் இருந்த நபரிடம், “ஓகேவா ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றதும்,
எதிரில் இருந்த நபரோ, “ஜீரோ, ஒன், டூ, த்ரீ ஸ்டார்ட்” என்று சைகையால் சொன்னதும் தன் பேச்சை தொடங்கினான் அழகன்.
“ ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ இதற்கான அர்த்தம் ஒருத்தருக்கு நாம உணவு வாங்கி கொடுக்கிறது அவங்களுக்கு உயிர் கொடுத்ததுக்கு சமம்னு சொல்லுவாங்க. நாம வாழ்றதே இந்த உணவுக்காக தான், சாப்பிட்டா தான் உயிர் வாழ முடியுங்கிற சூழ்நிலை.
அப்புறம் எதுக்காக இத்தனை ஓட்டம்?
எதுக்காக இத்தனை போராட்டம்? எதுக்காக இத்தனை வஞ்சம் வன்மம், துரோகம், பழி, பொறாமை? உருவமற்ற இத்தனை உணர்வுகளுக்கா ஒரு உயிரைக் கொன்று பணம் சேர்க்கிறோம் சிந்தியுங்கள் மக்களே, உங்கள் வாழ்வும் ஒரு நாளில் மாற்றம் பெறும்…
ஹாய், ஹலோ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்னிசைப் பண்பலை 92.70. வாயிலாக உங்களுடன் இணைந்திருப்பது அழகன், கவியழகன்.. இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’
இன்னைக்கு நான் சொல்லப் போறது சிலருக்கு தெரிஞ்சி இருக்கலாம், சிலர் எப்பவோ எங்கையோ படிச்சி இருக்கலாம். ஆனா இப்ப கேட்டா அதை பத்தி உங்களுக்கு கண்டிப்பா தெரியாது. எனக்கும் தெரியாதுன்னே வச்சுக்கோங்க, சரி ஆரம்பிப்போமா?
‘மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு 5 உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப், பிணியுறு முரசம் கொண்ட காலை நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய! 10 முலைபொலி அகம் உருப்ப நூறி, மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல், ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, அவிர்அறல் கடுக்கும் அம்மென் குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே..’
– இந்த செய்யுள் நிறைய பேரோட வாழ்க்கையோட இணைந்தது. எப்படி சொல்றேன்னு பாக்குறீங்களா, இப்ப உங்களுக்கு சம்மந்தம் இல்லாத சூழ்நிலையில, உங்க எதிர்க்க திடீர்னு ஒரு பிரச்சனை வருதுன்னு வையுங்களேன் என்ன பண்ணுவீங்க, ஒண்ணு முடிஞ்ச வரைக்கும் அந்த பிரச்சனை உங்களை பாதிக்கக் கூடாதுன்னு வேகமாக அங்க இருந்து போயிடுவீங்க.
ஒரு சிலரோ யாருக்கு பிரச்சனை வந்தா என்னன்னு வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்க. ஆனா நம்மளோட ஒதுக்கம் ஒரு உயிரையே போக வச்சா உங்களுக்கு அது உறுத்தாதா? அந்த குற்ற உணர்வு உங்களுக்கு இருக்காதா?
உங்களுக்கு தட்டிக் கேட்க தைரியம் இல்லன்னு சொல்ல வரல, ஆனா தட்டிக் கேட்டா எங்க நமக்கும் பிரச்சனை வருமோன்னு நெனச்சு விலகிப் போறீங்க, அமைதியா அதை கடந்து போறீங்க இது தான் உண்மை.
விலங்குகளையும் மனிதர்களிலும் வேறுபடுத்தி காட்டுறது ஆறாவது அறிவுன்னு சொல்லுவாங்க, அதாவது சிந்திக்கும் திறன், நல்லது எது, கெட்டது எதுன்னு பகுத்தறிஞ்சு சொல்ற விஷயங்கள், படிக்கிறது, நாகரீகமா இருக்கிறது, கலாச்சாரத்தை பின்பற்றுறது, இது மட்டும் இல்லாம இன்னும் எவ்வளவோ விஷயங்கள் விலங்குகள்கிட்ட இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுது. அதுல ஒன்னு மனிதாபிமானம், இன்னும் சொல்லப்போனா சில விலங்குகள்கிட்ட கூட மனிதாபிமானம் இருக்குது.
ஆனா மனிதர்கள்கிட்ட இப்ப மனிதாபிமானம் இருக்கா? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சவங்க கண்டிப்பா கால் பண்ணலாம் பேசுவோம் சரிங்களா. இப்ப இந்த செய்யுளுக்கான அர்த்தத்தை நான் சொல்றேன், ஆனா இந்த செய்யுளுக்கான பொருளுக்கு ஏற்ற மாதிரி இந்த காலத்துல எந்த விஷயங்கள் தொடர்புடையதா இருக்குது, அந்த விஷயங்கள் எப்படி நம்மளோட கனெக்ட் ஆகி இருக்குதுங்கிற விஷயத்தை இந்த நிகழ்ச்சியோட கடைசியில் நான் சொல்றேன், அதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு பாடல் கேட்டு மகிழுங்கள். நீங்கள் இணைந்திருப்பது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்களை அழகன், கவியழகன், இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’ தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று சொல்லி விட்டு அவன் மைக்கை அணைத்திட பாடல் ஒளிபரப்பப்பட்டது.
பாடலைக் கேட்டவாறு கண்மூடி இருந்த அழகனோ அந்த செய்யுளுக்கான அர்த்தத்தை ஒரு நிமிடம் மனக்கண் முன்பு ஓட்டி பார்த்தவன், இடையில் ஏதோ சந்தேகம் தோன்றவும் விழிகளை திறந்து தான் குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பரைப் பார்த்து விட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான்.
பாடல் முடிவுற்றதும் சட்டென்று தன் குரலை சரி செய்து தயாரானவன், “மீண்டும் இணைவோம். இது இன்னிசைப் பண்பலை 92.70, நான் உங்கள் அழகன் கவியழகன் இது உங்கள் சிந்தனைகளைத் தட்டி செல்லும் நிகழ்ச்சி ‘செய்யுள் வழி ஒரு கருத்து’
விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்; அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின.
இதுதான் இந்த செயலோட அர்த்தம்னு அதை மொழிபெயர்த்தவங்க சொல்லி இருக்காங்க. ஆனா உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா போர்ல இரு நாட்டைச் சேர்ந்த அரசர்கள், ஒரு அரசரால் சிறை பிடிக்கப்படறாங்க அல்லது கொல்லப்படறாங்கன்னு வச்சுக்கங்க. கொல்லப்பட்டவர்களோட மனைவிகள் நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழறாங்க. தங்களுடைய முடியை வெட்டிக்கிட்டு கைமை சடங்கை செய்யறாங்க. அதாவது அந்த காலத்துல ‘கைமை’ என்கிற நோன்பு வழக்கத்துல இருந்துச்சு.
இறந்து போன கணவருக்காக பெண்கள் கடைபிடிக்கிற ஒரு சம்பிரதாயம் தான் இந்த கைமை நோன்பு. அப்ப அதை பார்க்கிற அந்த வெற்றி பெற்ற அரசர் அதுக்கப்புறம் தன்னோட ஆயுதங்களால அந்நாட்டு மக்களையோ, பெண்களையோ, வீரர்களையோ காயப்படுத்தல, போரை நிறுத்திட்டாருன்னு சொல்றாங்க, இதுதான் இந்த செய்யுளோட அர்த்தம்.
இதுக்கும் இப்ப நடந்துட்டு இருக்கிற நிகழ்கால விஷயத்துக்கும் என்ன தொடர்புன்னு நீங்களும் சொல்லலாம். முடிவுல அதுக்கான விளக்கத்தை நான் சொல்றேன், இப்ப ஒரு நேயர் தொடர்புல இருக்காரு அவர் யாருன்னு பார்த்திடுவோம்” என்றவன்,
“ஹலோ சொல்லுங்க, யார் நீங்க எங்கிருந்து பேசுறீங்க?”
“ஹலோ.. நான் சிவா தூத்துக்குடியில இருந்து பேசுறேன்.”
“ஹாய் சிவா.. நீங்க பேசுறது கேட்குது தொடர்ந்து பேசுங்க. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம், என்ன தெரிஞ்சுக்கணும் நினைக்கிறீங்க, எதுவா இருந்தாலும் தாராளமா கேட்கலாம் ”
“நீங்க ஒரு செய்யுளை சொல்லி அதுக்கான அர்த்தத்தை சொன்னீங்க இல்லையா, அதுல எனக்கு புருஞ்சது இது தான். நீங்க சொல்ற மாதிரி அந்த காலத்துல புருஷன் இறந்ததும் பொண்டாட்டிங்க அந்த மாதிரி நோன்பு போல எதேதோ செஞ்சு இருக்காங்க. இவ்வளவு ஏன் புருஷன் இறந்ததும், தானும் உடன்கட்டை ஏறி செத்துப் போற மனைவிகளும் இருக்கத்தான் செய்யிறாங்க. ஆனா இப்ப அதெல்லாம் காணோம், எப்படா புருஷன் இறந்து போவான், எப்படா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு தானே எல்லா பெண்களும் நினைக்கிறாங்க”
“ஓ.. நீங்க அப்படி எடுத்துக்கிட்டிங்களா? சரி உங்களுக்கு தங்கச்சி இருக்காங்களா?”
”இருக்காங்களே, ஏன் கேட்குறீங்க”
“அப்ப நீங்க சொன்ன அந்த எல்லா பெண்களுங்கிற வார்த்தையில உங்க தங்கச்சியும் வர்றாங்க, உங்க அம்மாவும் வர்றாங்க, உங்க சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு எல்லாருமே வர்றாங்க தானே. அப்ப எல்லா பெண்களும் அப்படித்தான்னு சொல்ல வர்றீங்களா..?”
“அய்யோ நான் அப்படியெல்லாம் சொல்ல வரல. சில பேர் தான் அப்படி இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்” பதற்றத்தோடு அவன் கூற,
“அதைத்தான் நானும் சொல்றேன். சில பேர் அப்படி இருக்காங்கிறதுக்காக எல்லாரையும் நாம குறை சொல்ல முடியாது மிஸ்டர் சிவா. அதே மாதிரி நீங்க எடுத்துக்கிட்ட அர்த்தத்துக்கும், நான் சொல்ல வர்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது.
அதாவது நான் இதுல இருந்து கேட்க வர்றது என்னன்னா, வெற்றி பெற்ற அரசர் ஏன் அந்த பெண்களைக் கொல்லவில்லை?” என்று வினவினான்.
“ஏன்னா அவங்க பொண்ணுங்க. அந்த காலமா இருந்தாலும் சரி, இந்த காலமா இருந்தாலும் சரி பொண்ணுங்களைக் கண்டு ஆண்கள் மயங்கி தானே போவாங்க” என்று சிவா சொன்னதும்,
சிறிய நகைப்பொலியை சிதறவிட்ட அழகன், “உண்மை தான் அந்த காலத்துலையும், இந்த காலத்துலையும் பெண்களுக்கு ஆண்கள் மயங்க தான் செய்யறாங்க. ஆனால் அந்த காலத்துலையே வேலு நாச்சியார் போல வீரமான பெண்மணிகளும் இருக்கத்தான் செஞ்சிருக்காங்க. அந்த வீரமான பெண்மணிகள்கிட்ட ஆண்கள் தோற்கவும் செஞ்சிருக்காங்க, அதையும் நீங்க மறக்கக்கூடாது. பெண்களை மதிக்கணும் சரிங்களா, நீங்க கேள்வி கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்.
இன்னும் உங்களுக்கு வேற ஏதாவது கேள்வி கேட்கணும்னு தோணுனாலோ, இல்ல உங்க கேள்விக்கான பதில் கிடைக்கலன்னு நெனச்சாலோ தொடர்ந்து பண்பலையோடு இணைந்து இருங்க இந்த நிகழ்ச்சியோட இறுதியில என் கருத்தை நான் சொல்லுவேன். அழைத்தமைக்கு நன்றி சிவா,
இது உங்கள் சிந்தனைகளைத் தட்டிச் செல்லும் , ‘செய்யுள் வழி ஒரு கருத்து” நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நான் உங்கள் அழகன், கவியழகன். இது இன்னிசைப் பண்பலை 92.70. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திக்கலாம் இணைந்திருங்கள், மீண்டும் தொடர்வோம்..” என்று சொன்னதோடு மீண்டும் மைக் துண்டிக்கப்பட்டு இடைவெளிக்கான விளம்பரங்கள் ஓட விடப்பட்டது.
பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்ட அழகனிடம், “சூப்பர்” என்றான் அவனுடன் இணைந்து பணியாற்றும் நண்பன் ஒருவன்.
“இல்லை நான் சொல்ல வர்றதை இவர் புரிஞ்சுக்கல. இன்னும் ரெண்டு கால் இருக்குது, அவங்க எப்படி பேசப் போறாங்களோ தெரியல”
“அவங்க எப்படி எடுத்துக்கிட்டா என்ன, ஆனா நீ சொன்ன இந்த செய்யுளும், அர்த்தமும் எனக்கு வேற ஒரு எண்ணத்தைக் கொண்டு வருது”
“என்ன எண்ணம்? நீ என்ன சொல்ல வர?”
“பெண்களை மதிக்கணும் இல்லையா?”
“ஆமா”
“அவங்களுக்கு மரியாதை தரணும் இல்லையா, அதை ஏன் நீ தெளிவா சொல்ல நினைக்கல”
“நான் பெண்களை மதிக்கணும், மரியாதை தரணும்னு வாய் வார்த்தையா சொல்ல நினைக்கல, அதை அவங்களுக்கு புரிய வைக்க நினைக்கிறேன்”
“அப்ப இப்ப இருக்கிற ஆண்கள் பெண்களுக்கு மரியாதை தரலைன்னு சொல்லுறியா?”
“அடேய் நான் எப்ப அப்படி சொன்னேன். ப்ரோக்ராம் முடியிறதுக்கு முன்னாடி நீயே இப்படி டவுட் கேட்டா எப்படி? இதுல நேயர்கள் நான் சொல்ல வர்றதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல.”
“ஆனா உன்னோட ஒவ்வொரு ப்ரோக்ராமும் ரொம்ப வித்தியாசமானதுடா அழகா. நான் கவனிச்ச வரைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்கணும்னு நீ நினைக்கிற, ஆனா அதை மாத்தி அர்த்தம் பண்ணிக்கிட்டவங்க தான் இங்க அதிகம், பார்ப்போம் இன்னைக்கு என்னாகுதுன்னு. உன்னோட ப்ரோக்ராம்கு இதுவரைக்கும் எவ்வளவு நெகட்டிவிட்டி வந்தாலும் சார் கண்டிப்பா இந்த ப்ரோக்ராமை பண்ணனும்னு தெளிவா இருக்காரு. ஓகே விளம்பரம் முடிய போகுது ஸ்டார்ட் பண்ணலாம்” என்றதும் மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது..
– கானகமயில் கவிபாடும்..
இந்த செய்யுள் வழி அழகன் சொல்ல வருவது புரிந்தால் சொல்லுங்க மக்களே..
முடிந்தால் இன்றே மற்றொரு பதிவையும் தர முயல்கிறேன்…