”என்னங்க இப்படி கேட்குறீங்க சொல்லித்தானே ஆகணும், நம்ம பெத்த புள்ளையா இல்லாம இருந்தாலும் கூட இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வளர்த்துருக்கோம் அவளைப் பத்தின உண்மைகளை சொல்லி தானே ஆகணும்.”
“உண்மை தெரிஞ்சா அடுத்த நிமிஷமே இங்க இருந்து கிளம்பி போயிருவா பரவாயில்லையா” என்றதும் அமைதியாகிய ராகவி சிறு விம்மலோடு, “நமக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது. நம்ம பெத்த பிள்ளை எங்க இருக்கான்னே தெரியல” என்றிட,
கரிகாலனுக்கும் அதே எண்ணம் தோன்றினாலும் கூட, தங்கள் பிள்ளையைக் கண்டறிய வேண்டும் என்று தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் அவரது முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்ததால் தான் இப்போது கவியை மட்டும் தங்கள் மகள் என நினைத்து வாழ பழகி விட்டார்..
அறைக்குள் வந்து அடைந்து கொண்ட கவிக்கும் கூட இவர்கள் தன்னை பெற்றெடுத்தவர்கள் இல்லை வளர்த்தவர்கள் என்று தெரிந்த கணத்தில் இருந்து கவலை தான். இறக்கும் தருவாயில் கரிகாலனின் தாய் சொல்லிவிட்டு சென்ற நொடியில் இருந்து துடித்துப் போனாள். ஆனால் தன் தாய் தந்தை யார் என்று அறிந்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு வரவில்லை.
மாறாக இப்படிப்பட்டவர்களுக்கு தான் ஏன் மகளாக பிறக்கவில்லை என்ற ஏக்கமும், கவலையும் தான் அவளைப் பிடித்துக் கொண்டது. அதே நினைவில் கிடந்தவள் இரவு உணவை தவிர்த்து விட்டு உறங்கி விட்டாள்.
ஆனால் மறுநாள் விடியலில் அலாரம் எப்போதும் போல் அவள் உறக்கத்தைக் கெடுத்து வைக்க சோர்வோடு எழுந்து அமர்ந்தவளுக்கு அப்போதே பசி வயிற்றைக் கிள்ளியது. இருந்தும் காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து முடித்து அவள் வேலைக்கு செல்ல தயாராகி வருகையிலேயே அரக்கபறக்க சமைத்து வைத்திருந்த ராகவ, “சாப்பிடு பாப்பா நைட்டும் சாப்பிடல” என்ற அக்கறையாக சொல்ல,
அவரது அக்கறை மீண்டும் கண்ணில் நீர் துளியைத் துளிர்க்க செய்ய பார்த்தது. கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு அவர் சமைத்த சாப்பாட்டை ஆகா ஓகோ என்று புகழ்ந்தவாறு சாப்பிட்டவளை, விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராகவி, “அழுகை வந்தா அழுதுடுமா, இப்படி அழுகையை அடக்கி வைக்க முயற்சி பண்ணாத. உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது நீ அழுகையை அடக்குறது ” என்றதும் அடுத்த கணம் அவள் கன்னங்களில் உருண்டோடியது கண்ணீர்.
அதை துடைத்து விட்ட கரிகாலன், “நாங்க உயிரோட இருக்கும் போது நீ ஏன் அழுகணும். பெத்தா தான் பிள்ளையா, ஏன் இவ்வளவு பாசத்தை கொட்டி வளர்க்கிற நாங்க உனக்கு அப்பா அம்மா கிடையாதா. இல்ல நாங்க பெத்தவங்க இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் வாய் நிறைய அம்மா அப்பான்னு கூப்பிட்டு, எங்க மேலே பாசமா இருக்கிறியே நீ எங்க பிள்ளை இல்லையா. யாரோ ஏதோ சொன்னாங்கன்னு அதையே மனசுல வச்சிக்கிட்டு தினம் தினம் கஷ்டப்படுவியா?”
“தினம் தினம் அதை நெனச்சு கஷ்டப்படணும்னு எனக்கு ஆசை இல்லைப்பா. ஆனா அதை நினைக்காம இருக்க முடியலையே”
“சரி நினைச்சுக்கோ. ஆண்டவன் உன்னோட அப்பா அம்மாவை எடுத்துக்கிட்டு அந்த இடத்துல எங்களைக் கொடுத்து இருக்கான்னா எங்களால தான் உன் லைஃப்ல ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு அர்த்தம்” என்றதும்,
விழி விரித்து அவரைக் கண்டவள், “என்னப்பா இப்படி சொல்றீங்க”
“ஆமா என் பொண்ணோட வாழ்க்கையில ஏதோ ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்க போகுது, அது எங்க மூலமா தான் கிடைக்கணும்னு ஆண்டவன் எழுதி வச்சிட்டான். அதனால தான் இப்படி எல்லாம் நடந்துருக்குன்னு நெனைச்சுக்கோ..
எப்பவும் நாம பாசிட்டிவா நினைச்சா பாசிட்டிவா நடக்கும். ஐயோ நெகட்டிவா ஆகிடுமோன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா அந்த நெகட்டிவிட்டியே நமக்கு வரப்போற பாசிட்டிவிட்டியை தள்ளி விட்டுரும். அதனால முடிஞ்ச வரைக்கும் எல்லாமே நல்லதா நடக்கும் நேர்மையா நடக்கும்னு யோசி கண்டிப்பா நல்லது தான் நடக்கும். இப்போ சமத்து பொண்ணா வேலைக்கு கிளம்பி போ, உன்னோட வாய்ஸை கேட்குறதுக்காக அப்பா ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றதும்,
“நிஜமாவா அப்பா. ஆனா எனக்காக என்ன ப்ரோக்ராம் ரெடி பண்ணி வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியல. இன்னைக்கு எப்படியும் சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன், நான் என்ன நிகழ்ச்சி பண்றேன்னு சொல்ல மாட்டேன். அதனால இன்னிக்கு ஃபுல்லா நீங்க எல்லா நிகழ்ச்சியையும் கேட்கிறீங்க சரியா!” என்று சொன்னவள் உணரவில்லை இந்த ஒரு வார்த்தையால் தான் தன் மனதில் அழகனின் உருவம் அச்சாய் பதிவதற்கு தானே வழிவகை செய்யப் போகிறோம் என்பதை..
அழகி இன்னிசை பண்பலையினுள் நுழையும்போது அனைவரும் இவளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் மார்த்தாண்டமோ ஒரு பேப்பரை அவள் கையில் கொடுத்து, “உனக்காக நாங்க எல்லாருமே ஒரு ப்ரோக்ராமை யோசிச்சு வச்சிருக்கோம்மா. இந்த ப்ரோக்ராமை எப்படி கொண்டு போகணுங்கிறது முழுக்க முழுக்க உன்னுடைய கற்பனையா தான் இருக்கும். ஏன்னா நீ எழுதுற கவிதையை வைத்து தான் அந்த ப்ரோக்ராமே போகப்போகுது” என்றதும் குழம்பியவள்,
“புரிலங்க் சார் கவிதையை வைத்து ப்ரோக்ராமா?”
“ஆமாம்மா இதுக்கு தலைப்பு கூட கவிதையோடு கலந்திடுவோம்னு தான் வச்சுருக்கோம். இதுல நீ ஒரு கவிதையைச் சொல்லி அதுக்கான அர்த்தத்தை அவங்க கிட்ட கேட்கலாம் இல்ல, நீ சொல்லலாம். இப்போ சோகத்துல நீ ஒரு கவிதை சொன்னா, அவங்க அவங்களோட சோகத்தை ஷேர் பண்ணிக்குவாங்க, இல்ல வேற ஒருத்தவங்க லைப்லையோ, நண்பர்களோட லைஃப்லையோ நடந்ததை சொல்லுவாங்க.
அவங்களுக்கான ஆறுதலா நாலு வார்த்தை சொல்ல முடிஞ்சா அதுவே நாம அவங்களுக்கு செய்யிற பெரிய உதவி தானே. இப்படி ஒரு ப்ரோக்ராமை தான் உனக்காக ஆர்கனைஸ் பண்ணலாம்னு இருக்கோம். அது மட்டும் இல்லாம ஏற்கனவே செய்யுளை வச்சு ப்ரோக்ராம் பண்ணிட்டு இருக்கோம் அதுவும் இதுவும் ஒரே மாதிரி கூட நினைக்கலாம். பட் செய்யுள் யாரோ ஒருத்தர் எழுதி அதன் மூலமா ஏதாவது ஒரு கருத்தை இந்த உலகத்துக்கு சொல்ல முடியுமான்னு நம்ம முயற்சி பண்றோம்.
ஆனா இது முழுக்க முழுக்க உன்னோடு கற்பனை, நீ எழுதப் போற கவிதைகள்ல இருந்து உருவாகப் போறது, உனக்கு பெரிய சுமையை தலையில இறக்கி வைக்கிறதா நினைக்க வேணாம். நீ யூனிக்கா தெரியணும், நீ எல்லாருக்கும் ரீச் ஆகணும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரிஸ்கை நீ எடுத்து தான் ஆகணும், என்னமா பண்ணிடுவ தானே” என்றிட தலையை ஒரு மாதிரி ஆட்டி வைத்தவள்,
“பண்றதைப் பத்தி ஒண்ணும் இல்ல சார் ஆனா எந்த அளவுக்கு இது ஒர்க் ஆகும்னு தெரியலையே”
“கண்டிப்பா இது நல்லா ஒர்க் ஆகும்மா. இவ்வளவு நாளா எல்லாரும் எப்படி ப்ரோக்ராம் பண்றாங்க, எல்லாரும் எப்படி பேசுறாங்கன்னு நீ பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். ஒரு டைம் ரிகர்சல் பண்ணிக்கிட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றதும் அதிர்ந்து விழித்தாள்.
“ம்..ஸ்டார்ட் பண்ணிடலாம் எப்ப சார்?”
“மதனோட ப்ரோக்ராமை டைம் மாத்தி வச்சாச்சு. மதன் பண்ணுன, 10- 11 டைம்ல நீ தான் பண்ண போற” என்றதும் பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் சரி என்று தலையாட்டி வைக்க,
மார்த்தாண்டமோ, “ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு மற்றவர்கள் அவளை சூழ்ந்து கொண்டு ‘ஆல் த பெஸ்ட்’ என்று கூறினாலும் கூட இவளுக்கு நெஞ்சம் படபடக்கத்தான் செய்தது.
அனைவரும் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்று விட தன் கேபினில் வந்து அமர்ந்தவளுக்கு இன்னும் படபடப்பு போகவில்லை. வேறு ஏதாவது செய்யச் சொல்லி இருந்தால் கூட தைரியமாக சொல்லியிருப்பாளோ என்னவோ ஆனால் புதிதாக ஒன்றை அவர்கள் செய்யச் சொன்னது அவளுக்கு பதற்றத்தையும், பயத்தையும் கொடுத்திருந்தது.
அதிலும் கவிதை அவளுக்கு எழுத வரும் தான் ஆனால், இது போலான ஒரு சூழ்நிலையில் யோசித்தால் நிச்சயம் கவிதை வருமா? என்று அவள் குழம்பிக் கொண்டிருக்கையிலேயே அவள் முகத்தை வைத்து அவள் மனநிலையை அறிந்து கொண்ட அழகன் தன் இருக்கையில் எழுந்தவன் அவள் கேபினை கடந்து செல்லும்போது கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை சட்டென்று அவள் கேபினில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.
எதோ யோசனையில் இருந்தவள் படக்கென்ற சத்தத்தோடு டேபிளில் வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் அதிர்ந்து விழித்து திரும்பி பார்க்க, அழகன் கதவை நெருங்கி இருந்தான். அவன் தான் தண்ணீர் வைத்து விட்டு சென்றிருக்கிறான் என்பதை உணர்ந்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.
வெளியே வராண்டாவில் நின்று பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த அழகனின் அருகில் சென்று நின்றவள், “எதுக்கு தண்ணி வச்சிட்டு போனீங்க?” என்று கேட்க.
“நீங்க டென்ஷனா இருக்குற மாதிரி இருந்துச்சு. தண்ணி குடிச்சா கொஞ்சம் டென்ஷன் குறையும் அதே மாதிரி கோபமா இருந்தா கூட தண்ணி குடிச்சா கோபம் குறையும்னு சொல்லுவாங்க. அதுக்காகத் தான் வச்சிட்டு வந்தேன். புதுசா ஒரு விஷயத்தை செய்ய சொல்லும் போது பயமா தான் இருக்கும், எனக்கும் ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. நமக்குன்னு ஒரு நேயர்கள் வட்டம் வரும் போது அந்த பயம் போயிரும். போகப்போக எல்லாருக்கும் நம்ம ப்ரோக்ராம் பிடிச்சுரும், அப்ப நம்மளை அறியாமையே ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்யறோம் அதான் எல்லாருக்கும் பிடிச்சிருக்குங்கிற கான்ஃபிடன்ட் நமக்குள்ள வரும். நீங்க வேணா முயற்சி பண்ணி பாருங்களேன்.”
“முயற்சி பண்றதைப் பத்தி எதுவும் இல்லைங்க கொஞ்சம் படபடப்பா இருக்குது”
“ நீங்க கவிதை நல்லா எழுதுறிங்க அப்படி இருக்கும்போது பயப்படவோ இல்ல இது மாதிரி தயங்கவோ தேவையில்லை. கண்டிப்பா உங்களால முடியும், வேணும்னா கொஞ்சம் நோட்ஸ் மாதிரி இப்போதைக்கு எடுத்து வச்சுக்கோங்க போகப்போக உங்களுக்கே பழகிடும்” என்றதும் சரி என்று தலையாட்டியவள் மறக்காமல் தண்ணீர் குடித்து விட்டு அவன் பொத்தலை அவனிடம் கொடுத்து விட்டு தான் உள்ளே சென்றாள்.
தன் கையில் இருந்த பொத்தலையும், அவள் செல்லும் திசையையும் பார்த்திருந்த அழகனின் இதழ்களோ வழக்கத்திற்கு மாறாக சற்று தாராளமாய் புன்னகை ஒன்றை உதிர்த்திட, அதை மறைந்து இருந்து பார்த்த மதனுக்கு பெரும் ஆச்சரியமும் அதைத்தொடர்ந்து சிறு புன்முறுவலும் வந்து சேர்ந்தது. கடந்த கால நிகழ்வில் இருந்து மீண்ட அழகன், அதே புன்னகையோடு உறங்கிவிட்டிருந்தான்.
பனிக்காலத்தில் மலைபோல் கொட்டி தீர்க்கும் வெள்ளை பனி துகள்களை ஒன்றாய் சேர்த்து வானில் ஓவியம் தீட்டியது போல் வெண்மையாய் பளிச்சென்று வானம் பரந்திருக்க, அதில் சூரியன் பொட்டாய் மேலெழுந்து தன் செங்கோல் ஆட்சியை புரிந்து கொண்டிருந்த காலை வேளை, அழகன், மகேஷ் இருவரும் இருந்த அறைக்கதவை தட்டி தட்டி சலித்து போனார் கலைவாணி.
கதவை தட்ட முடியாமல் ஓய்ந்து போன கரத்தோடு கீழே வந்தவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் தன் கணவர் இளங்கோவிடம், “அவங்க ரெண்டு பேரும் ரூம்குள்ள நைட் போனவனுங்க இன்னும் எந்திரிச்சே வரல கொஞ்சம் போனாவது பண்ணி பாருங்களேன்.”
“போன் பண்ணுனா மட்டும் எழுந்து வந்துருவானுங்களா? அவங்களா எழுந்து வருவாங்க கலை நீ ஏன் உடம்பைப் போட்டு ஸ்டிரைன் பண்ணிக்கிற”
”இல்லங்க பிசினஸ்ல ஏதோ புதுசா செய்யப் போறேன்னு சொல்லிட்டு இருந்தான் உங்க பையன். திடீர்னு பார்த்தா அந்த அழகன் பையனைப் போய் கூட்டிட்டு வந்து இருக்கான். அந்த பையன் முகமே சரியில்ல, என்னடா தனியா கூட்டிட்டு வந்துருக்க, அவன் பொண்டாட்டி எங்கன்னு கேட்டதுக்கு என்னமோ என்னைத் தனியா கூட்டிட்டு போய் அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டதா சொல்றாங்க.
கல்யாணம் ஆகி அப்படி என்னங்க ரெண்டு பேரும் வாழ்ந்து இருப்பாங்க, கல்யாணமாகி நாலு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள எப்படிங்க பிரிஞ்சி இருக்க முடியும். குழந்தை இருக்கான்னு கேட்டா அதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குறான் எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குது” என்ற மனைவியை கூர்ந்து பார்த்த இளங்கோவன்,
“அவங்க லைஃப்ல என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியாது கலை. அதுவும் உன் பையன் நண்பன்கிற முறையில எல்லாத்தையும் கேட்கலாம் ஆனா நம்ம கேட்க முடியாது கேட்டா சங்கடம். மகேஷ் எப்படி நமக்கு பையனோ அதே மாதிரி கவியழகனும் நமக்கு பையன் தான். இவ்வளவு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கான்னா வீட்ல பிரச்சனை இல்லாம இருக்காது.
நான் விசாரிச்ச வரைக்கும் கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக எல்லாத்தையும் செஞ்ச பையன் எல்லாத்தையும் விட்டுட்டு இப்ப வந்து இருக்கான்னா ஏதோ பிரச்சனைன்னு எனக்கு தோணுது. ஏன்னா மகேஷ் பிறந்தநாளுக்கு கரெக்ட்டா நாலு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டு இருந்தவன் வீட்டுக்காக உழைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வரவே இல்ல .கிட்டத்தட்ட நாலு வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கான்னா ஏதோ பிரச்சனைன்னு புருஞ்சுக்க சரியா” என்றார்.
சரியென்று தலையாட்டி விட்டாலும் கூட கலைவாணிக்கு உள்ளே ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அந்த உறுத்தல் அழகனின் வாழ்வைப் பற்றியதா அல்லது அழகனுடன் சேர்வதால் தன் மகனுக்கும் ஏதேனும் இதுபோல் பிரச்சனை வந்து விடுமோ அல்லது இவன் பேச்சைக் கேட்டு தன் மகனும் இதேபோல் எதையாவது செய்து வழிதவறி சென்று விடுவானோ என்ற உறுத்தலோ, அவரைத் தவிர வேறு யாருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிட்டத்தட்ட வெகு நேரம் கழித்து முதலில் அழகனுக்குத் தான் விழிப்பு தட்டியது. தன் மேல் கை, கால்களை போட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மகேஷை ஒரே தள்ளில் கீழே தள்ளி விட்டவன் எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து விட,
அவன் தள்ளியதில் சுவற்றில் போய் தடாலென்று முட்டிய மகேஷ் தலையை தேய்த்து விட்டுக்கொண்டு எழுந்தவன், “பிசாசு எதுக்கு தான் இப்படி உருட்டி விடுவானோ தெரியல” என்று புலம்பியவாறு கட்டிலில் அமர்ந்தான்.
அரக்கப்பறக்க குளித்து முடித்து வெளியே வந்த அழகன், “ஏன்டா எழுப்பி விடமாட்டியா? ஐயோ கடைக்கு வர டைம் ஆயிடுச்சே. எப்படி இவ்வளவு நேரம் தூங்குனனோ தெரியல. ஏண்டா வீட்டுக்கு வந்தா பார்த்துட்டு போக மாட்டியா, என்னோடவே தங்கிடுவியா, உன்னால தான் லேட்டா எழுந்துருக்கேன்” என்று சொன்னவன் கபோர்டைத் திறந்த வேளையில் தான் நிதர்சனத்தை உணர்ந்தான்.
‘இது தன் அறை இல்லை’ என்பதை உணர்ந்தவனுக்கு அடுத்தடுத்த நிகழ்வுகளும் கண்முன் வந்து செல்ல ஓய்ந்து போய் அப்படியே நின்று விட்டான்.
நண்பனின் மனநிலை அறிந்த மகேஷ் எழுந்து சென்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தவன், “வேண்டான்டா பழசை நினைக்காத“ என்றதும்,
பளிச்சென்று புன்னகையை இதழில் சூடிய அழகன், “அட இதுக்கு மேலே அதைப் பத்தி நான் யோசிச்சு என்ன பண்ண போறேன். அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதை அவங்க நல்லபடியா வாழட்டும். யாரோட வாழ்க்கையிலையும் நான் குறுக்கிட நினைக்கல, இதுக்கு மேல குறுக்கிடவும் மாட்டேன்.” என்றான் நிதானமாக.
சரியென்று தலையை உருட்டிய மகேஷிற்கு ஏனோ அழகனை என்று நினைத்து பாவமாகவும், கவலையாகவும் இருந்தது. அதே நேரம் அவன் குடும்பத்தாரை நினைத்து கோபம் வந்தது.
‘நன்றி கெட்ட ஜென்மங்கள்’ என்று திட்டிக்கொண்டே குளித்து முடித்து வந்தான். அதற்குள் அழகன் வேறு உடைக்கு மாறி இருக்க, இருவரும் கீழே வந்த போது இளங்கோவன் அலுவலகம் செல்ல தயாராகி இருந்தார்.
கலைவாணியோ, “இப்ப தான் உங்க ரெண்டு பேருக்கும் விடிஞ்சுதா” என்று கேட்க,
“அதான் ஒரு வழியா விடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன விடுங்க மா. சாப்பாடு எடுத்து வைங்க வெளியில போகணும்” என்று சொன்னது மகேஷ் தான்.
அழகன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நண்பர்கள் இருவரும் கலைவாணி தட்டில் எடுத்து வைத்ததை சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்று விட, கலைவாணிக்கு தான் இவர்களது நட்பு நன்மையைக் கொண்டு வருமா, அல்லது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருமா? என்ற எண்ணம் எழுந்தது..