“என்னடா பண்றது கஷ்டமோ நஷ்டமோ, நல்லதோ கெட்டதோ, என்னோட சோகமோ மகிழ்ச்சியோ எல்லாத்தையும் அம்மாகிட்டையே ஷேர் பண்ணி பழகிட்டேன். அப்படி இருக்கும் போது என் பெஸ்ட் பிரண்டுக்கு ஒரு நல்லது நடந்திருக்கும் போது அதை எப்படிடா என்னால சொல்லாம இருக்க முடியும். வாய் தவறி சொன்னேனோ, இல்ல சந்தோஷத்துல சொன்னேனோ தெரியல ஆனா சொல்லிட்டேன். இப்ப அம்மா அதை வச்சு கேள்வி கேட்குறாங்கடா.”
“எந்த விஷியத்தடா சொன்ன?”
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிற விஷயத்தை சொல்லிட்டேன்டா” என்றதும் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்த அழகன்,
“ஏண்டா இப்படி பண்ற? இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த நம்பிக்கையை இப்படி போட்டு உடச்சுட்டியே.”
“அதைத் தான்டா சொன்னேன். எனக்கு தெரிஞ்சு சொன்னேனோ, தெரியாம சொன்னேனோ தெரியல ஆனா அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். இப்ப நீ தனியா வந்ததைப் பார்த்துட்டு அம்மா கேட்குறாங்க எங்கடா அவனோட பொண்டாட்டின்னு, நான் என்ன பதில் சொல்லட்டும்”
“உண்மைய சொல்ல வேண்டியது தானே” என்ற அழகனின் முகம் நொடியில் இறுகிப் போனது.
அவன் முக மாற்றத்தைக் கண்டு சட்டென்று வலது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு இடது கையால் அவன் தோளில் தட்டிக் கொடுத்த மகேஷ்,
“எப்பவும் எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியா அமையிறது கிடையாதுடா. அதே மாதிரி நாம நினைச்சதெல்லாம் நமக்கு கிடைக்கணும்னு விதி இருந்தா கண்டிப்பா கிடைக்கும். ஆசைப்படுறதுக்கு நமக்கு உரிமை இருக்குது, ஆனா அதை அடையறதுக்கு கண்டிப்பா ஆண்டவன் துணை வேணும்டா. இது நீ என்னைக்கோ எனக்காக சொன்னது.
என்னோட ஃபர்ஸ்ட் லவ் பிரேக்கப் ஆனப்ப நீ எனக்கு சொன்ன அறிவுரை. நீங்க பிரிஞ்சுட்டதால இதை நான் சொல்லல. நீங்க நினைச்சா எப்பவோ சேர்ந்துருக்கலாம். ஆனா சிஸ்டரா வரணும்னு நீ நினைக்கிற, நீயா வரணும் சிஸ்டர் நினைச்சுட்டு இருக்காங்களோ என்னவோ. இப்படி ரெண்டு பேரும் ஈகோவா பிடிச்சிட்டு தொங்கினா கடைசி வரைக்கும் இப்படி தனித்தனியாக இருக்க வேண்டியது தாண்டா.”
“ஓ அவளுக்காக நான் இப்படியே இருந்துடுவேன்னு நினைச்சுட்டு இருக்கியா? ஏன் எனக்குன்னு வாழ்க்கை இல்லையா? எனக்குன்னு ஒரு வைஃப் வேணும், குழந்தைகள் வேணும்னு நான் நினைக்க மாட்டேன்னா என்ன?”
“ஓ அப்படியா அப்ப நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கியா?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் அழகன்.
என்னதான் வாய் வார்த்தையாக அவள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்று சொன்னாலும் அவளைத் தவிர என் வாழ்வில் இன்னொருத்தியை கொண்டு வர முடியும் என்று வார்த்தையாகக் கூட அவனால் சொல்ல முடியவில்லை.
அவனையே கூர்ந்து பார்த்த மகேஷ், “உன் மனசுல என்ன இருக்குங்கிறது எனக்கு நல்லா தெரியும். மத்தவங்க வேணா நீ சொல்றதை எல்லாம் நம்பலாம், ஆனா நான் நம்ப மாட்டேன். ஏன்னா உங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டது நான் மட்டும் தான். அதனால இப்ப நாம எடுத்திருக்க பிசினஸ் டீல் முடிஞ்சதும். நீ வேலை பார்த்த இடத்துக்கு போறோம் சிஸ்டர் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்றோம். மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும். என்னோட கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வரணும் சரியா” என்றான் எதிர்பார்ப்போடு. ஆனால் அழகனோ எந்த பதிலும் பேசவில்லை. ஆனால் அவனது மௌனம் சம்மதம் என்று இவன் எடுத்துக் கொண்டான்..
எங்கே விழிகளை மூடினால் நினைவுகள் பின்னோக்கி சென்று விடுமோ என்று கஷ்டப்பட்டு விழிகளை திறந்தவாறு அமர்ந்திருந்தவனது நினைவு முழுவதும் அவள் மட்டுமே நிறைந்து இருந்தாள். மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அனுதினமும் அவளைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான். வாழ்வில் அவனுக்கு இருந்த ஒட்டுமொத்த மகிழ்வும் அவள் தான். ஆனால் நொடியில் அந்த ஒட்டுமொத்த மகிழ்வையும் கையோடு எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டாள்.
அவனது தாய் இருக்கும் போது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தானோ அதே அளவிற்கு அவளுடனான நாட்கள் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அவள் சென்ற போது மொத்த மகிழ்வையும் உயிரிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். ஏனோ தம்பிகளுக்காக தந்தைக்காக, தங்கைக்காக நடைபிணமாய் வாழ்ந்தவனின் வாழ்க்கையில் சூறாவளியாய் சுழன்று அடித்தது அகிலனின் செயல்களும், அவனைப் பற்றிய அகிலனின் எண்ணங்களும். ஏனோ அந்த வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக இங்கே ஓடி வந்து விட்டான்.
ஆனால் எவ்வளவு காலம் தான் ஓட முடியும். எதை எதையெல்லாம் கண்டு ஓட முடியும். ஓடும் வரை ஒவ்வொன்றும் துரத்த தான் செய்யும். தொட்டதிற்கெல்லாம் ஓடாமல் எதிர்த்து நின்று போராட முயன்றால் தான் ஒவ்வொன்றையும் சமாளிக்க தைரியமும், தன்னம்பிக்கையும் வரும். அதை எப்போது அழகன் உணரப்போகிறானோ தெரியவில்லை.
இருவரும் மகேஷின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த போது அரக்கப்பறகக அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எல்லாம் தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இணைந்து உள்ளே வருவதைக் கண்டு விட்டு எழுந்து அனைவரும் வணக்கம் வைத்து விட்டு தங்கள் அன்றாடப் பணியை செய்தார்கள்.
அதிலும் இந்த அலுவலத்தின் திறப்பு விழாவிற்கு வந்த அழகன் அதன் பிறகு இப்போது தான் வருகிறான். இப்போது புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் பழைய ஆட்களுக்கு தெரிந்து இருந்தது. அவர்களும் அழகனுக்கு வழக்கம் வைக்க புன்சிரிப்போடு அதை ஏற்றுக்கொண்டு நகர்ந்தான்.
இருவரும் அவர்களுக்கான அறைக்கு வந்த பிறகே ‘அப்பாடா’ என்று பெருமூச்சோடு சோபாவில் சாய்ந்தமந்த அழகன், “இங்க ரூம் முழுக்க ஏசி தான் இல்லையா, ஜாலியா இருக்கலாம்ல” என்றான் குளுமையை உள்ளிழுத்தவாறு.
“அப்படி சொல்ல முடியாதுடா ஏசி இருக்குது தான் இல்லன்னு சொல்லல. ஆனா அதே நேரம் வேலையும் இருக்குது இல்லையா. நாம எந்த அளவுக்கு கடின உழைப்பு போடுறோமோ அந்த அளவுக்கு நமக்கு லாபம் கிடைக்கப் போகுது.”
”அது உண்மைதான். குடும்பத்துக்காக ஒவ்வொன்னும் செய்றேன்னு என்னைய நானே மெழுகா உருக்கிக்கிட்டாலும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் இல்லையா, சரி அதைப் பத்தி பேச என்னாகப் போகுது” என்ற போது கதவை தட்டும் சத்தம் கேட்டது.
இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டு கதவின் புறம் பார்க்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் மகேஷின் பி.எ பூங்குன்றன்.
அவர், “சார்..” என்றதும்,
“சொல்லுங்க நான் சொன்ன டீடைல்ஸ் எல்லாம் வந்துருச்சா”
“வந்துருச்சு சார். ரொம்ப பக்கம்னு சொல்ல முடியாது, அதே மாதிரி ரொம்ப ரொம்ப தூரம்னு சொல்ல முடியாது. ஒரு 9, 10 மணிநேர டிராவல்ல ரொம்ப பக்காவான ஃபாரஸ்ட் ஏரியாஸ் எல்லாம் இருக்குது. அங்க தான் அதிகமா மலைவாழ் மக்கள் இருக்கிறதா தகவல் வந்துருக்குது. நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் இதுல இருக்குது சார்” என்று ஒரு பென் டிரைவை நீட்ட, அதை வாங்கிக் கொண்ட மகேஷ், “சரி ஏதாவது டீடைல்ஸ் தேவைன்னா கூப்பிடுறேன். அந்த ரோஸ் பெட்டல்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணியாச்சா, சீக்கிரம் பேக் பண்ணி அனுப்பிடுங்க”
“அந்த வொர்க் தான் போயிட்டு இருக்கு சார்.”
“ம். எல்லாத்தையும் டீடைலா செக் பண்ணிட்டு ப்ராப்பரா பேக் பண்ணி அனுப்புங்க. நம்மளோட கஸ்டமர்ஸ் தான் நமக்கு ரொம்ப முக்கியம். அவங்க கொஞ்சம் டிசப்பாயிண்ட்மென்ட் ஆனா கூட நம்மளால கம்பெனியை ரன் பண்ணவும் முடியாது, மேற்கொண்டு இதை முன்னேற்றப் பாதையில கொண்டு போகவும் முடியாது பி கேர்ஃபுல் சரியா” என்றதும் சரி என்று தலையாட்டி விட்டு அவர் சென்றார்.
அவர் சென்றதும், “வாடா முதல்ல என்னென்ன ஊர் இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு அப்புறம் எங்க போலாம்னு முடிவு பண்ணலாம்” என்றவாறு எழுந்து வந்து அழகன் அருகில் அமர்ந்தான் மகேஷ்.
பென்டிரைவை லேப்டாப்பில் போட்டு இருவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்த அழகன், ஓரிடத்தை காட்டி நிறுத்த சொன்னவன், “இந்த ஊருக்கு போலாமா?” என்றான்.
“ஏன் இந்த ஊர்ல மட்டும் என்ன ஸ்பெஷல்?”
“எல்லா ஊர்லையும் கொஞ்சமாச்சும் நாகரிக வளர்ச்சி இருக்குது ஆனா இந்த ஊர்ல இல்ல. அப்படின்னா முழுக்க முழுக்க இங்க இருக்கிறவங்க, விளைச்சலுக்கு மழையை நம்பித்தான் இருப்பாங்க. அங்க அதிகப்படியான வித்தியாசமான மூலிகை செடிகள் கிடைக்கலாம், இல்ல கிழங்கு வகைகள் சம்திங் ஸ்பெஷலா ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்குது. ஏன்னா நாகரீகம் அடைஞ்சிட்டாவே கையில எது கிடைச்சாலும் அதை பணமா மாத்தணும்னு நினைக்கிற அளவுக்கு மக்களோட குணம் மாறிடும். எதுவும் தெரியாம இருந்தவங்க கூட அதுக்கப்புறம் மாறிடுவாங்க. எல்லா விஷயத்தையும் தாண்டி ஸ்மார்ட்போனுன்னு ஒண்ணு இருக்கு இல்லையா, அது மூலமா எது புதுசா, வித்தியாசமா கிடைச்சாலும் எல்லாருக்கும் தெரியப்படுத்திருவாங்க.
ஆனா எந்த வெளியுலக தொடர்பும் இல்லாம இருக்கும் மக்கள் நிச்சியம் அங்க இருக்கிற இயற்கை வளத்தை பொத்தி பாதுகாக்கணும்னு நினைப்பாங்க. அவங்களோட ஒர்ஜினாலிட்டியை காப்பாத்தணும்னு நினைப்பாங்க. இது மாதிரி இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்குது, அதனால எனக்கு இங்க போறது பெட்டர்னு தோணுது. இங்க போய் விசிட் பண்ணிட்டு இங்க எதுவும் உருப்படியா கிடைக்கலன்னா வேற பிளேஸ் செலக்ட் பண்ணிக்கலாமே.”
“ம்..நீ சொல்றதும் சரின்னு தான் தோணுது. ஆனா உடனே நாம அங்க போகவும் முடியாது. இது பார்க்குறதுக்கு மலை மாதிரி தான் இருக்குது. அடிவாரத்துல ஏதாவது ஊர் இருக்கா, அங்க தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு விசாரிக்கணும். நான் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு சொல்றேன் நீ அதுவரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடு, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்குது முடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டான் மகேஷ். அவ்வளவு நேரமும் அவன் உடன் இருந்ததில் மற்ற நினைவுகளை ஒதுக்கி வைத்திருந்த அழகனுக்கு, தனித்து விடப்பட்டதும் மீண்டும் தலை தூக்கியது அவளின் நினைவுகள்.
கனவுகள் முழுவதும்
அவளே
நினைவுகள் முழுவதும்
அவளே
நிஜத்தில் மட்டும்
அவளெங்கே?
@@@@@@@@@@@@@@@@@
அதேநேரம் ஒரு புகழ்பெற்ற ஸ்டேடியத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
“ஹாய் ஹலோ வணக்கம் வணக்கம்.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நான் உங்கள் சுமந்த், இப்ப நாம பார்த்துட்டு இருக்கிறது பல துறைகளில் சாதித்த, சாதித்துக் கொண்டு இருக்கிற சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா. அடுத்ததா எந்த கேட்டகிரியில விருது கொடுக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுக்க உங்களை மாதிரி நானும் ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கேன். அடுத்து நாம பார்க்கப் போற கேட்டகிரி ரேடியோ ஜாக்கி.
இந்த கேட்டகிரியில நிறைய விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் முதலாவதாக கொடுக்கப் போற விருது பேமஸ் ரேடியா ஜாக்கி அவார்ட். அதுக்கான நாமினீஸ் பாத்துடலாம்..” என்று அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சொல்லி முடித்ததும், திரையில் புகைப்படத்தோடு சிலரது பெயர்கள் காண்பிக்கப்பட்டன.
“அது யார்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி பேமஸ் ஆக்டரும், முன்னாள் ஆர்.ஜேவுமான மிஸ்டர் வருண் பிரசாத் அவர்களை பரிசு வழங்கி கௌரவிக்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்..” என்று தொகுப்பாளர் கூறியதும் மிதமான நடையோடு மேடையில் வந்து நின்றான் வருண் பிரசாத், வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகன்.
அவன் கரத்தில் இருந்த அட்டையில் அந்த விருதை பெறப் போகும் நபரின் பெயர் இருக்க, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடந்த ஐந்து வருடமாக ஒரே ஒருவர் தான் அந்த பட்டத்தை தட்டி செல்கிறார். இப்போதும் நாமினிஸ் தொகுப்பில் அவர் இருக்கிறார், ஆகையால் அவருக்கு தான் கிடைக்கும் என்று அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க,
“பேமஸ் ரேடியோ ஜாக்கி அவார்ட் கோஸ் டூ மிஸ். கவித்தாரகா, ஃபிரம் இன்னிசைப் பண்பலை..” என்று சொல்லி முடித்த வேளையில் ஆரம்பித்த கைத்தட்டல் சத்தம் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆனது.
பெயர் வாசிக்கப்பட்டதும் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கவி சட்டென்று எழுந்து நின்றாள், மறுகணம் அவள் மீது வெளிச்சம் படர்ந்தது. பாந்தமாய் உடலைத் தழுவி இருந்த கருப்பு நிற புடவை அவளை அழகாக காட்டியது. ஆனால் முன்பு முகத்தில் இருந்த புன்னகையும், குதூகலமும் எப்போதோ தொலைந்து சென்றிருந்தது.
முகத்தில் கடுமையைத் தாங்கியவாறு மேடை ஏறியவள் இதழ் பிரியா புன்னகையோடு விருதை வாங்கிக் கொண்டாள். ஏதேனும் இரு வார்த்தைகள் பேசுமாறு தொகுப்பாளர் கேட்டதும், “இது எனக்கு கிடைத்த விருது மட்டும் கிடையாது, என்கூட இணைந்து என்னோட வேலை பார்க்கிற என்னோட நண்பர்களுக்கும், என் குரலை ஏத்துக்கிட்டு தொடர்ந்து ஆதரவு தரும் என்னோட நேயர்களுக்கும் கிடைத்த விருது. இதை அவங்க எல்லாருக்கும் சமர்ப்பிக்கிறேன் நன்றி” என்றதோடு இறங்கி சென்று விட்டாள்.
உடன் பணிபுரியும் அனைவரும் அவளை பெருமையோடு பார்த்திருக்க, இரு விழிகள் மட்டும் அவளை வன்மத்தோடு பார்த்திருந்தது. அடுத்தடுத்து வேறு சிலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது.
“அடுத்ததாக பேமஸ் கிரியேட்டர் ஆர். ஜே அவார்ட் கோஸ் டூ மிஸ்.கவித்தாராகா” என்று மீண்டும் அவள் பெயர் அழைத்ததும், இப்பொழுதும் அதே இதழ் பிரியா புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டு, “நன்றி” என்ற சொல்லோடு கீழே இறங்கி வந்தவளை அவள் குழுவில் இருந்தோர் அணைத்துக் கொண்டார்கள்.
மார்த்தாண்டமும் கூட, “உன்னோட ஹார்ட் வொர்க்குக்கு கிடைச்ச வெற்றி தான்மா இது. ஆல் த பெஸ்ட், நல்லாயிருமா” என்று வாழ்த்த, அவர் பாதம் பணிந்து எழுந்து நின்றவள், “நன்றி சார்” என்று சொல்லோடு விலகி நின்று கொண்டாள்.
அடுத்தடுத்து இதே பிரிவுகளிலும், வேறு வேறு கேட்டகிரியிலும் விருதுகள் வழங்கப்பட, “சரி சார் கிளம்பலாம் எனக்கு டைம் ஆகுது” என்றாள் கை கடிகாரத்தை பார்த்தவாறு.
“போலாமே. நீங்க எல்லாரும் பார்க்கிங் ஏரியாவுல இருங்க முக்கியமான ஒருத்தரைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்ற மார்த்தாண்டம் சொன்னதும் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
அனைவரும் முன்னே செல்ல, கவி மட்டும் பின்தங்கி சென்று கொண்டு இருந்தாள். அவள் கையில் இருந்த விருதுகள் ஒருபோதும் அவளை மகிழ்விக்கவில்லை. மாறாக எப்போதும் இருப்பது போல் வாழ்க்கை விரக்தியாக செல்வது போல் தான் தோன்றியது.
சரியாக அவள் வாயிலை அடைந்த வேளையில்,
“ரொம்ப சந்தோஷமா இருக்க போல. சந்தோஷமா இருக்க தானே செய்வ, அடுத்தவங்களைக் கீழே தள்ளி விட்டுட்டு, ஏறி மிதிச்சுட்டு போற உன்னை மாதிரி ஆளுங்க, யாரு எப்படி போனா என்னன்னு கண்டுக்காம சந்தோஷமா இருக்கத்தானே செய்வீங்க. அப்படிப்பட்டவங்களைத் தான் சுயநலவாதின்னு சொல்லுவாங்க. நீ ரொம்ப சுயநலவாதி தான் கவி” என்ற சொல் கேட்டு ஆடாது அசையாது நின்றவள், தடதடக்கும் உள்ளதோடு பின்னே திரும்பிப் பார்க்க அவளை முறைத்துக் கொண்டு நின்றான் மதன்..