அதிகாலையிலேயே அந்த வீடு பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. தாமரை அனைவரையும் அவரவர் வேலைகளை செய்ய விரட்டிக் கொண்டு இருந்தார். “மணி எத்தன ஆகுது, சீக்கிரம் கிளம்புனாதான் சரியா இருக்கும். அங்க மதியம் இருந்தா தான் சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு போக டைம் கரெக்டா இருக்கும்.” என்று குரல் கொடுத்தப்படியே தன் கணவர் அவ்வீட்டின் தலைவர் செல்வத்தை நோக்கி வந்தார். தன் கைப்பேசியில் உடனுக்குடன் நடக்கும் செய்திகளை காணொளி வலைத்தளம் மூலம் பார்த்துக் கொண்டு இருந்தவர் தன் மனையாளின் குரல் கேட்டு, அவசர அவசரமாக “நான் குளிக்க போய்ட்டேன் தாமர!” என்று கூறிக் கொண்டே குளியலறைப் புகுந்தார்.
தற்போது குடும்பப் பொறுப்பை சுமந்துக் கொண்டு இருக்கும் தன் மகனின் அறைக்குள் நுழைந்தவர் அவன் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து பொய்க் கோபத்துடன் அவனருகே சென்று எழுப்பினார். “கண்ணா, எழுந்திரி!. மணி ஆச்சு பாரு. நாலு மணி கிளம்புனாதான்டா சீக்கிரம் போக முடியும். ஆல்ரெடி நேரம் ஆகிட்டு கண்ணா, எழுந்திரி”
“மா, ஒரு அஞ்சு நிமிசம் மா. ப்ளீஸ்!”
“அஞ்சு நிமிசம் தான் மறுபடியும் வந்து நான் கூப்பிடுறதுக்குள்ள எந்திரிச்சு இருக்கணும். புரிஞ்சுதா?”
“ம்ம்ம்…” என்றபடி தன் நித்திரையை தொடர்ந்தான் சிவமாறன்.
சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான் செல்வராகவன். ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டு இருந்தவர், வாழ்க்கையில் பல அடிகளை சமாளித்து இன்று ஒரு சிறிய அச்சு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார்.
அவருக்கு பக்கபலமாகத் திகழ்ந்து என்றும் சோர்ந்துபோகாமல் இன்னும் தன் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் தாமரை. எட்டாம் வகுப்பே நிறைவு செய்து திருமணம் செய்து கொண்டவர், தற்போது கணவனின் உதவியாலும் தொடர் முயற்சியாலும் படித்து, அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த இணைப்பிரியா தம்பதிகளுக்கு இரு செல்வங்கள். சிவமாறன், தமிழ்ப்பிரியா.
சிவமாறன் குணநலன்களை இனி அடுத்து அடுத்து காணலாம். தற்போது அவனைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய செய்தி, பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஒன்றில் டீம் லீடராகவும், பயிற்சியாளனாகவும் (ட்ரைனர்) பணியாற்றி வருகிறான். தங்கை, தமிழ்ப்பிரியா இளங்கலை முதலாமாண்டு பயின்று வருகிறாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து தாமரை சிவமாறன் அறைக்கு வந்து பார்க்க, சொல்படி அவன் குளியலறைக்குள் புகுந்து இருந்தான். தமிழ்ப்பிரியாவிற்கு தற்போது தேர்வு நடந்து கொண்டு இருப்பதால் அவளால் தன் அண்ணனின் பெண் பார்க்கும் வைபவத்திற்கு செல்ல முடியவில்லை என்பதே அவளின் பெரும் கவலை.
“மா, நான் ரெடி.” என்றபடியே அடர்நீல மேல்சட்டையுடனும், அதற்கு தகுந்த ஜீன் கால்சராயுடன், கைக்கடிகாரத்தை கட்டியபடி வெளியே வந்தான் சிவமாறன்.
தன் கைகளை கன்னத்தில் வைத்து கிளம்பும் மூவரையும் கவலையுடனே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா. “நல்ல விசயத்துக்கு போறப்போ, ஏன்டி கப்பல் கவுந்த மாதிரி இப்டி இருக்க? அடி வாங்கப் போற பாரு.”
“ஏம்மா லோட்டஸ், உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா.? இது ஜஸ்ட் மாடல் எக்ஸாம் தானே. இதுக்கு போகலன்னா ஒன்னும் இல்லன்னு அவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொல்றேன்ல. என்ன ஏன்மா விட்டுப் போறீங்க?”
“மாடல் எக்ஸாமோ, செமஸ்டர் எக்ஸாமோ. எக்ஸாம் எக்ஸாம் தான். இப்போ தான் கொரோனாலாம் முடிஞ்சு ஒழுங்கா காலேஜ், ஸ்கூல்லாம் நடக்க ஆரம்பிச்சு இருக்கு. இப்ப நீ மாடல் ஒழுங்கா பண்ணா தானே, செம்ல ஒழுங்கா பண்ண முடியும். இதுக்கே சலுப்புபட்டா எப்டிடி?”
“லோட்டஸ் வர வர எனக்கு நீ ஸ்டிரிக்ட் மம்மியா மாறிட்டு வர. சரி பொழச்சு போங்க. பெரிய மனசு பண்ணி விடுறேன். டேய் அண்ணா, வரப்போ எனக்கு ஏதாவது வாங்கிட்டு வாடா. வளந்து கெட்டவனே”
“அடிங்.. நீ வளராமா இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். குள்ளக்கத்திரிக்கா. நல்லா பூசணிக்கா மாதிரி இருந்துட்டு என்ன சொல்லுது பாரு. உனக்கெல்லாம் ஏதும் கிடையாது பே” என்று வம்பிழுத்தான் சிவா.
“மா.. பாருங்க மா.. இவன.! நான் ஒன்னும் ரொம்ப குண்டாலாம் இல்லடா எரும. நீ போடி, வர அண்ணிய வச்சு உன்ன என்ன பண்ண போறேன்னு பாரு.” என்று வஞ்சகம் கொண்டாள் பிரியா.
இவர்களின் சம்பா~ணைகளை கேட்டபடியே தன் அறையில் இருந்து வந்தார் செல்வராகவன். அதுவரை வாயாடிக் கொண்டிருந்த பிரியா அமைதியாகிவிட, சிவமாறன் புன்னகையுடன் அவர் கொண்டு வந்த பொருட்களை வாங்கிக் கொண்டான். “ஏன்பா, எல்லாத்தையும் கொண்டு வரீங்க? கூப்பிட்டு இருந்தா வந்து இருப்பேன்ல”
“பரவாலடா மாறா. இதுல என்ன? சரி எல்லாம் எடுத்து வச்சாச்சா? அப்ரோம் அங்க போய்ட்டு அது இல்ல, இது இல்லன்னு சொல்லக்கூடாது. என்ன தாமர எல்லாம் எடுத்துக்கிட்ட தான?”
“ம்ம்.. எல்லாம் எடுத்து வச்சிட்டேன்ங்க.”
“சரிமா. பிரியா பத்ரமா இரு. யாரும் கவனிக்க இல்லன்னு காலையில சாப்டாம போகக் கூடாது. என்ன? நல்லா எக்ஸாம் எழுதிட்டு வா. ரெண்டு நாள்ல வந்துடுவோம். பத்திரம். வீட்ட தொறந்து போட்டு தூங்கிடாத.” என்றார்.
‘இந்த வீட்ல மட்டும் தான் எல்லாம் உல்ட்டாவா இருக்குது. நான் மாம்ஸ் லிட்டில் பிரின்சஸ்சா இருக்கேன். அவன் டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்சா இருக்கான்’ என்று நினைத்தவள், “ம்ம்.. சரிப்பா” என்றாள் சமத்துப் பிள்ளையாக.
அனைவரும் வெளியே கிளம்ப, தாமரை “பிரியாமா, பத்திரமா இரு.. மறக்காம போன் பண்ணு சரியா” என்றபடி அவர் அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு சென்றார். செல்லும் அனைவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் தமிழ்ப்பிரியா.
அழகனூர் கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையினை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தனர் தாமரைக் குடும்பத்தினர். பல நாட்கள் கழித்து தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு அடியெடுத்து வைப்பதை எண்ணி உள்ளம் பூரித்துத்தான் போனார். ‘பரபரப்பான அந்த நகர வாழ்வில் இந்த அமைதியான சூழல் எங்கு அமையும?’; என்ற வினா சிவமாறனின் மனதில் எழாமல் இல்லை. தானும் சிறுவயதில் வந்தது தான். ஆனால் தற்போது இந்த புது அனுபவம் அவனுள் தென்றலைச் சுகந்தமாக தழுவி சென்றது.
அந்த ஓட்டு வீட்டின் முன்னே தன் மகிழுந்தை நிறுத்தினார் செல்வராகவன். “ஆத்தா, அயித்த வந்துப்புட்டாக” என்று சத்தமிட்டப்படியே தன் பாவடையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள் அந்த பைங்கிளி. தன் தள்ளாத வயதிலும் மூன்று காலின் உதவியோடு வெளியே வந்தார்கள் இரண்டு பெரியவர்கள். அவர்களை கண்டதும் “எப்டி சின்னாத்தா இருக்கீங்க.? சித்தப்பா, இப்போ உடம்பு எப்டி இருக்கு?” என்று கேட்டவாறே நெருங்கினார் தாமரை.
“அங்கனயே நில்லு தாமர. எம்புட்டு வருசம் கழிச்சு வந்து இருக்குறவ. அப்டியேவா உள்ளார வரது.? செத்த இரு” என்றவர், அதனைத் தொடர்ந்து உள்ளே குரல் கொடுத்தார் “அடியே, சின்னக்குட்டி உன் ஆத்தாள ஆராத்தி கலந்து எடுத்தாற சொல்லுட்டி. எம்மவ பட்டணத்துல இருந்து அவ புருசன் மக்காவோட வந்து இருக்கா.”
“தோ, வந்துட்டேன் அத்த. அதுக்குள்ள சத்தம் அடுப்படி வர கேட்குது” என்றபடி ஆராத்தி தட்டுடன் வந்தார் மல்லிகா. ஆராத்தி சுற்றியவுடன், “சின்னக்குட்டி, இத தெரு முச்சந்தில ஊத்திப்புட்டு வெரசா வாட்டி” என்றிட, தன் இரு கோலிக்குண்டு கண்களை உருட்டி சரி என்றவள் அதனை கீழே ஊற்ற சென்றாள். செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் சிவமாறன்.
“எப்டி அண்ணி இருக்கீங்க? அண்ணாவும், பெரியவளும் எங்க?” என்றபடியே கீழே விரிக்கப்பட்ட கோரப்பாயினில் அமர்ந்தார் தாமரை.
செல்வராகவன் மற்றும் சிவமாறனுக்கு நாற்காலியைப் போட்டப்படியே பதில் கூறினார் மல்லிகா. “அவுக வயக்காட்டு வர போய் இருக்காவ தாமர. நாங்கலாம் நல்லா இருக்கோம். நீ எப்டி இருக்கவ?. எம்புட்டு இளச்சிப் போய்ட்ட பாரு. நீங்க உட்காருங்க. பெரியவ, ஏதோ மெயிலு பாக்கணும்னு டவுன் வர போய் இருக்கா. அவளும் வந்துடுவா”
பெரியவர்கள் மற்ற விசயங்களை பேசிக் கொண்டு இருக்க தாமரையால் சின்னாத்தா என்று அழைக்கப்பட்ட மீனாட்சி அம்மாள் தன் மகளோடே அமர்ந்து கொள்ள, அவரின் கணவர் இன்றும் அந்த கம்பீரம் குறையாமல் அங்கு கிடத்தப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார். தான் பெறாத மகளின் பேச்சிலே பூரித்துத் தான் போயினர் அந்த மூத்தக்குடிகள்.
“எனக்கு நிரம்ப சந்தோசம் தாமர. என்ன தான், கல்லாணம் ஆகி, நீ வேறயா போனாலும், இப்போ கூட, சொந்தம் விட்டுப் போய்டக் கூடாதுன்னு அண்ணன் பொண்ணயே பாக்க வந்து இருக்கப் பாத்தியா, மனசு குளுந்து போச்சு தாயீ” என்று அகம் மகிழ்ந்தார் மீனாட்சி.
“என்ன சின்னத்தா அப்டி சொல்லிட்டிங்க? என்னதான் இருந்தாலும், சொந்தம் இல்லன்னு ஆகிடுமா.? மாறனுக்கு ஜாதகம் வெளிய விடலாம்னு முடிவு பண்ணப்போவே, இவர்தான் சொன்னாரு, சொந்தத்துலயே பொண்ணு இருக்கப்போ, எதுக்கு அசல்ல பாக்கணும்னு. அதான், உடனே அண்ணனுக்கு போட்டு கேட்டுப்புட்டேன். இதுல உங்களுக்கு சம்மதமா மதினி?”
“அட, என்னத் தாமர, இப்புடி கேட்டுப்புட்ட? என் அண்ணண் பயனுக்கு என்ற மவள கொடுக்க கசக்குமா என்ன?” என்றார் மல்லிகா, தன் முழுச் சம்மதத்தயும் கண்களில் மகிழ்ச்சியாய் காட்டி.
“மாமா தான் எதுவுமே சொல்லாம இருக்காரு?” என்றபடி அவரின் சம்மதத்தயும் கேட்க ஆவல் கொண்டார் செல்வம்.
“அட என்னங்க மாப்பிள்ள, இதுல சொல்ல என்ன வேண்டிக் கிடக்கு.? தாமரய எப்படி பாத்துக்கிட்டிங்கன்னு எங்களுக்கு தெரியாதா? இப்போ தான் என்ற மதினி கையால அவள வாங்குன மாதிரி தெரியுது. ஆனா, அதுக்குள்ள பாருங்க, அவளோட புள்ளைக்கு கல்லாணம் பன்ற அளவுக்கு வந்துட்டா. இன்னும் என்ற கண்ணுக்குள்ளேயே நிக்குது இவள உங்க கைல புடிச்சு கொடுத்தது. என்ற பேத்தியயும் இப்போ தான் கைல வாங்குன மாதிரி தெரியுது. அதுக்குள்ள இந்தா என்ற பேரன் வந்துப்புட்டியான் அவள தூக்கிட்டு போவ. காலம் ரொம்ப வெரசா போகுதுங்களே. அத தான் நினச்சிக்கிட்டு கிடந்தேன்.” என்றபடி தன் தங்க நினைவுகளை அசைப்போட்டார் அந்த பெரியவர் கதிரவன்.
மாறன் ஏதும் பேசாமல் அந்த பழங்காலத்து வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஏற்கனவே வந்த வீடு தான் என்றாலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தது. முன்னே பார்ப்பதற்கு மட்டுமே ஓட்டு வீட்டின் சாயல். உள்ளே நவீன முறையும் பழங்கால முறையும் கலந்தவாறே மேல் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இவற்றையெல்லாம் தாண்டி அவனின் கண்கள் எதையோ தேடிக் கொண்டே இருந்தது. வீட்டைப் பார்வையிட்ட படியே வந்தவன், அவன் கண்ட காட்சியில் லயித்து விட்டான். இத்தனை நேரம் தான் காணத் துடித்தவளின் தரிசனம் கிட்டியதால் மனமோ ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. சிவப்புத் தாவணியில் அதற்கு தோதாக நீல வண்ண ரவிக்கையில் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருந்தாள் அவனின் தக்காளி என்ற பெயர் கொண்ட ஸ்ரீவதனா.
“என்ன மாமா, வந்ததும் வாராதுமா என்ற அக்காவ சைட் அடிக்கிறியளா?” என்றபடி அவனருகே வந்தாள் அனைவராலும் சின்னக்குட்டி என்று அழைக்கப்படும் அனுவதனா. அவளின் குரலில் திடுக்கிட்டவன், அவளின் காதைப் பிடித்துத் திருகியபடி “ஏய், வாயாடி, வந்துட்டியா? தெரு முச்சந்திக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா?”
“நான் என்ன உங்கள மாதிரி சும்மாவா இருக்கேன். எனக்கு எம்புட்டு வேல கிடக்குன்னு தெரியுமா?”
“ஆஹான். அப்டிங்களா பெரிய மனுசி. அப்டி என்ன வேல?” அவள் சொல்ல வாயெடுப்பதற்குள், “சின்னக்குட்டி இங்கன வா. அயித்த கூப்டுறாக” என்ற குரல் கூடத்தில் இருந்து ஒலித்தது. “வந்து நம்ம பஞ்சாயத்த வச்சிக்கலாம்” என்றபடியே அங்கிருந்து ஓடினாள் அனு. “வாயாடி…” அவனின் உதடு புன்னகையுடன் முணுமுணுத்தன.
அவனும் அவளைத் தொடர்ந்து அங்கு வர, தன் அத்தையின் அருகில் அமர்ந்து கதையளந்துக் கொண்டு இருந்தாள் அனு.
“இப்ப என்னமா படிச்சுட்டு இருக்க?”
“பிபிஏ முடிக்க போறேன் அத்த.”
“நல்லது மா. இன்னும் ஏன் அக்காவ காணோம்?”
“தெரியலயே… இருங்க நான் என்ன ஏதுன்டுன்னு பாத்துட்டு வாரேன்” என்றபடி ஓடினாள் அனு.
இங்கு நடந்த எதுவும் சிவமாறனின் விழிகளில் பதிந்தாலும் கவனத்தில் பதியவில்லை. அவன் இன்னும் அவளுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறான்.
வேகமாய் வெளியே ஓடிய அனு, பின்பக்கமாக வந்து அடுப்படியில் இருந்த தன் அன்னையிடம், “அம்மா, இன்னும் ஸ்ரீய காணோம்மா. நான் ஒரெட்டு அவள பாத்துப்போட்டு வாரேன். அப்பாவோட வண்டி சாவி தா” என்றாள்.
“இந்தாடி, அத அயித்த கிட்டயே சொல்லிட்டுப் போக என்ன? சுத்திட்டு வந்து என்னன்ட சொல்றவ?”
‘சொன்னா, அந்த வளந்த மாடும்ல கூட வாரேன்னு சொல்லும்’ என்று நினைத்தவள், “எப்டிமா வந்தவங்க கிட்ட இன்னும் அக்காள காணோம்னா சொல்றது? நீ பேசாம இரு. நான் வெரசா போய்ட்டு வந்துடுறேன்” என்றபடி சாவியை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தாள்.
“இந்த சின்னக்குட்டிக்கு எம்புட்டு தடம் சொன்னாலும் புரியாது. ஏந்தான் இப்டி ஊர் சுத்துறதுல குறியா இருக்காளோ. பெரியவள நினச்சு கூட வெசனமா இல்ல. இவள நினச்சு தான் மனசு கிடந்து அடிச்சுக்குது. இந்த புள்ளய நல்லவனா பாத்து கட்டிக் கொடுத்துப்புட்டா நிம்மதியா இருக்கும்” என்றபடி வந்தவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் மல்லிகா.
தன் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பறந்தாள் அனுவதனா. வேகம் என்றால் அத்தனை வேகம். அந்த மண் சாலையில் புழுதி பறக்க வண்டியை செலுத்தினாள் அவள். தூரத்தில் தன் உடன்பிறந்தவளின் வருகையைக் கண்டவள் முகம் சுழித்தபடியே அவள் அருகே வண்டியை நிறுத்தினாள்.
“இந்தாடி, அறிவுக்கெட்டவளே இப்டியா வண்டிய நிறுத்துவ. மெதுவா வந்தா என்ன உனக்கு?” என்று அவளின் வேகத்தைக் கண்டு பயந்தவளாய் சீறினாள் ஸ்ரீவதனா.
“ம்ம்ம், மெதுவா வந்தா இந்நேரம் அப்பா உன்ன தேடிட்டு வந்துருப்பாக. அம்புட்டு வேகமால்ல வர நீனு” என்றபடி பதிலுக்கு வாயாடினாள் அனு.
“ஐயா வந்துட்டாங்களா அனு?” என்றபடியே தங்கையோடு வண்டியில் ஏறினாள் ஸ்ரீ.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாகடி. அயித்தயும் அவுக வீட்ல இருந்தும் ஆளுக வந்துட்டாக. காத்தாலயே சொன்னேன்லா பேண்ட் சர்ட் போடாத. ஒழுங்கா சுடிதாரயாவது போட்டுட்டுப் போன்னு. கேட்டியா? இப்போ இந்த கோலத்துல ஆத்தா பாத்தா உன்ன வைஞ்சே கொன்னுபோடும்.”
“இங்க பாரு அனு, யாருக்காகவும் என்ன நான் மாத்திக்க முடியாது. நான் இப்டி தான். யாரு வந்தா எனக்கு என்ன? சென்னைல இப்டி தான் இருந்தேன். நீ இங்கயே இருக்குறதுனால அங்க இருக்குற கல்ச்சர் உனக்கு தெரியல. பட்டிக்காடு” என்று கோபமாக ஆரம்பித்து இறுதி சொல்லினை முணுமுணுப்போடு முடித்தாள் ஸ்ரீ. அதனைக் கேட்டும் அதனை மூளைக்குள் கொண்டு செல்லாத அனு, “ஒழுங்கா பின்பக்கட்டுப் போய் குளிச்சுப்புட்டுத், தாவணி பாவடை இல்லன்னா அட்லீஸ்ட் சுடிதாரயாவது போட்டுட்டு ஹாலுக்கு வா. இல்லன்னா அப்பா கத்துவாக. நெனப்புல வச்சிக்கோ.” என்றபடி வண்டியை நிறுத்தினாள்.
“இந்த வீட்ல யாரு அக்கா, யாரு தங்கச்சின்னே தெரியல” என்றவாறே குளிக்கச் சென்றாள் ஸ்ரீ.
இங்கு அனுவைப் பற்றியும், ஸ்ரீயைப் பற்றியும் தெரிந்துக் கொள்வது அவசியம். ஸ்ரீவதனா எம்.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவள், தற்போது ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் ப்ராஜக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறாள். படிப்பிற்காக சொந்த மண்ணை விட்டு சென்றவள், படிப்பு, வேலை என மூழ்கி அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டவளால் தற்போது அதிலிருந்து வெளியே வர மறுக்கும் மனது. தன் வருங்காலத் துணைவன் பற்றி பல்வேறு கனவுகளோடு சுற்றுபவள். மெத்தப் படித்ததால் தன்னை என்றும் மேலே நினைத்து யோசிக்கும் சுபாவம் வந்து விட்டது போலும்.
அனுவதனா, அக்கைக்கு நேர் எதிரானவள். பிபிஏ முடிக்கப் போகும் பெண்ணவள். இவளும் சென்னையில்தான் தன் படிப்பை மேற்கொள்கிறாள். ஆனால், மண் வாசம் மாறாது சுற்றும் மங்கை. தான் செய்ய நினைக்கும் செயலை எப்பேற்பட்டாவது செய்து முடிக்கும் வல்லமையை அவள் பேச்சில் கொண்டவள்.
ஸ்ரீ குளிக்கச் சென்ற பிறகு, தானும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், அடுக்களையில் இருக்கும் தன் அன்னையிடம் சென்றாள். “அம்மா, உன் பிள்ளை வந்துட்டா. அயித்த, மாமாலாம் எங்கன காணோம்?”
“அவுக களப்பா இருப்பாகல்லடி. அதான் ரெண்டு ரூம சுத்தப்படுத்திக் கொடுத்தேன். குளிச்சிட்டு தூங்கிட்டு இருக்காவ. நான் ராத்திரிக்கு ஆக்கிட்டு இருக்கேன். நீ இந்த காபிய குடிச்சுப்புட்டு ஐயன கூட்டியாந்துடு என்ன?” என்றபடி தன் வேலைகளை தொடர்ந்தாள். இவளும் சரி என்று விட்டுத் தன் அறைக்கு சென்றவள், தன் கல்லூரி ப்ராஜக்ட்டில் மூழ்கிப் போனாள்.
குளித்து முடித்து கடமையென சுடிதாரை மாட்டிக் கொண்டு, தன் அன்னையைத் தேடி வந்தாள் ஸ்ரீ. “அம்மா, சூடா காப்பி கிடைக்குமா? செமயா தல வலிக்குது”
“வந்துட்டியா! ஏன் கண்ணு, டவுனுக்குப் போய்ட்டு வெரசா வரலாமுல. என்னத்துக்கு இம்புட்டு நேரம் கழிச்சு வரவ?” என்று வாய் வார்த்தையாக கூறினாலும், கை என்னவோ மகளுக்கு செய்ய வேண்டிய பணியை செவ்வனே செய்து குழம்பியைக் கலக்கி கொண்டு இருந்தது.
“ப்ச். அம்மா, அங்க கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. அதான் லேட். அப்ரோம், இன்னும் ரெண்டு நாள்ல நான் சென்னைக்கு போறேன். லீவ் முடியப் போகுது. அப்பா வந்தா என்ன கூப்டுங்க.” என்று விட்டு செல்ல இருந்தவளை, “ஸ்ரீம்மா, அயித்தயும் மாமனும் வந்து இருக்காவ. சிவாவும் வந்து இருக்கான். உன்னை தான் அவுக கேட்டாக. ஒரெட்டு பாத்துப்போட்டு ரூம்க்கு போவேன்.” என்று தடுத்தார். அம்மாவின் செயலில் சற்றே எரிச்சலடைந்தவள், ஏதும் பேசாது தன் மாமனை காண சென்றாள்.
அவனிடம் இருக்கும் அந்த ஈர்ப்பு இவளிடமும் இருக்கத்தான் வேண்டும் என்பது அவசியமில்லை தானே?
குறிஞ்சியா? நெய்தலா? விடையறிய காத்திருப்போம்.