தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
அர்ஜுன், வேதா உறவு இன்னும் தாமரை இலை நீராய் மட்டுமே இருந்த போதிலும் அவர்களின் நாட்கள் உறவினர் கூட்டத்திலும் கல்யாண விருந்திலும் பரபரப்பாய் சென்று கொண்டிருந்தது.
“டேய் அண்ணா இன்னுமா நீ ஹனிமூன் எங்கன்னு சொல்லாம சர்ப்ரைஸா வச்சிருக்கப் போற? கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு, நீ இன்னும் எங்கேயும் போகிற மாதிரி எனக்குத் தெரியலை. இந்த வீக்கெண்ட் நானும் ஊருக்குக் கிளம்பிடுவேன்.” ஆர்வம் மேலிட இன்று மனதில் இருப்பதைக் கேட்டேவிட்டாள் அவன் தங்கை ஸ்ரீ விஜயா.
“ம்ஹும், எனக்கும் எதுவும் தெரியாது ஸ்ரீ. உங்க அண்ணா தான் சொல்லுறாங்க.”
“இல்ல இல்ல ஸ்ரீ, நீ அவளை விடாத கேளு, அவ சொல்லுவா.” கண்களிகள் குறும்பு மின்ன தங்கையைத் தூண்டினான் அர்ஜுன்.
“சும்மா சொல்லுங்க அண்ணி அதான் அர்ஜூனே சொல்லியாச்சே, இனி என்ன?”
தெரியாத ஒன்றைச் சொல் சொல் என்று கேட்க என்னவென சொல்வது எனத் தெரியாமல் முழித்தாள் வேதா.
“ஹ்ம்ம், அண்ணா ஆனாலும் நீ அண்ணியை இவ்வளவு மிரட்டி வைக்கக் கூடாது. பாரு பயந்துட்டாங்க போல.”
“சரி விடு வேதா, நானே இவளுக்கு சொல்லீடறேன். நான் மறுபடியும் U.S போறேன் ஶ்ரீ. அதுவும் இந்தத் தடவை பொண்டாட்டியோட. நேத்து தான் சொன்னாங்க. இன்னும் ஆஃபீசியலா கன்பார்ம் பண்ணலை.”
தன்னிடம் எதுவும் சொல்லாமல் அர்ஜுன் இங்கு எல்லோரிடமும் தங்களின் அமெரிக்கப் பயணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது உள்ளுக்குள் எங்கோ ஒரு ஏமாற்றம் பரவத்தொடங்கியது.
“ஹையோ அண்ணா, நான் ஹனிமூன் போகலையான்னு கேட்டா, நீ பொண்டாட்டியோட U.Sக்கு தனிக் குடித்தனம் போறதப் பத்தி சொல்ற?”
“அது தனிக் குடித்தனம் இல்ல, லாங் ஹனிமூன் ட்ரிப், அப்படீன்னு சொல்லு. நான் அங்க போனதும் நானும் என் பொண்டாட்டியுமா நாள் கணக்கா கை கோர்த்துக்கிட்டு நயாகரா பால்ஸ் எல்லாம் டே வியூ அண்ட் நைட் வியூல பார்ப்போம். அப்படியே கரீபியன் கடற்கரை அது இதுன்னு இன்னும் சில பல பிளான்ஸ் இருக்கு. அதெல்லாம் உனக்குச் சொல்ல முடியுமா? இதெல்லாம் விட்டுட்டு இப்பவே இங்கயே ஹனி மூன் போகணுமா என்ன?”
“டேய் நல்லவனே நான் ஏதோ நாள் கணக்குக்குப் போகிற ட்ரிப் பத்தி கேட்டா, நீ ஏதோ வருஷக்கணக்குக்குச் சொல்ற? ஹ்ம், நீ நடத்து அண்ணா.”
சாகரி இவர்களை நோக்கி வருவதைப் பார்த்த ஸ்ரீ “அம்மா, அம்மா அண்ணா தனிக் குடித்தனம் போறானாம். சொல்லுறான் என்னன்னு வந்து கேளுங்க.” எனப் போட்டுக் கொடுத்தாள்.
“யாரு தனிக் குடித்தனம் போறா?” கேட்டபடி வந்தார் சாகரி.
“அம்மா உன் பையன்தான் மறுபடி அமெரிக்கா போறானாம்.”
“என்ன டா அர்ஜுன் இது? கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வாரம் ஆகலை, இப்படி சொல்ற. எப்பப் போகணும்?”
“ம்மா இன்னும் டூ மந்த்ஸ்ல போகணும். பட் இந்தத் தடவை தனியா இல்ல. வேதாவையும் கூட்டிகிட்டு.” சொல்லியவன் அமைதியாய் அமர்ந்திருந்த வேதாவைப் பார்க்க, அவள் யாருக்கு வந்த விருந்தோ என இவர்களின் பேச்சில் கலக்காமல் வெறும் பார்வையாளராய் மட்டுமே அமர்ந்திருந்தாள்.
“சரி சரி, இப்போதைக்கு வேதா வீட்டுல சொல்லுறதோட நிறுத்திக்கிங்க. வேற யாருக்கும் சொல்லிக்க வேண்டாம். த்ருஷ்ட்டி படும்.” சொல்லியவர் மீண்டும், “ஸ்ரீ நீயும் அண்ணியும் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க. உங்க சித்தப்பா வீடு வர்றதுக்குள்ள சமையல் முடிக்கணும்.” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தார்.
“அண்ணி கலக்குங்க, இனி அமெரிக்கா வாசம் ம்ம்”
“ம், பார்க்கலாம்.” என்றபடி இருவரும் சாகரியைத் தேடிச் சென்றனர்.
அடுக்களையில் உதவி செய்யும் நேரம், சமையல் வாசனையில் ஸ்ரீவிஜயாவிற்குள் ஏதோ ஒரு ஒவ்வாமை. உடலில் தோன்றிய சிறு மாறுபாட்டில் அவள் மனம் நாட்களைக் கணக்கிட, மனதினில் சந்தோஷமாய் ஒரு சந்தேகம்.
யாரிடம் முதலில் சொல்ல? எப்படிச் சொல்ல? என எண்ணம் தோன்றி சிந்திப்பதற்குள், காலையில் உண்ட மொத்தமும் வெளியில் வந்துவிடும் நிலை தோன்றக் கழிவறை நோக்கி ஓடி இருந்தாள்.
அடுத்த சில மணி நேரத்தில் அர்ஜுன் வீட்டில் அடுத்த கொண்டாட்டம் தொடங்கியது.
“வாழ்த்துக்கள் கர்ணா”, “வாழ்த்துக்கள் ஸ்ரீ” என வாழ்த்துக்கள் குவிய இருவருக்கும் வெட்கம் கலந்த புன்னகை.
மருத்துவமனையில் சென்று பரிசோதித்து வர தாங்கள் பெற்றோர் ஆகப் போகும் மகிழ்ச்சியில் தம்பதிகள் இருவரும் அந்த நாளை ஆனந்தமாகக் கொண்டாடினர்.
அருணாசலத்தின் தம்பி சதாசிவம், அவரின் மனைவி சாரதா மற்றும் அவர்களின் பிள்ளைகள் கணேஷ், ஆனந்தி என அனைவரும் வர அர்ஜுன் வீடு ஒரே ஆட்டமும் பாட்டுமாக இருந்தது.
“மாப்பு எனக்கு எல்லாம் சிறப்பு கவனிப்பு வேணும் சொல்லீட்டேன். இன்னைக்கு வீட்டில், நாளைக்கு XXX ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் சீரகச் சம்பா மட்டன் பிரியாணியோட நண்டு வறுவல், இறால்னு வெளுத்துக் கட்டுறோம்.” என்றான் அர்ஜுன்.
“கண்டிப்பா மச்சான், உனக்கு இல்லாததா. இன்னைக்கு நான் பார்ட்டி குடுத்தா இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ இதே மாதிரி ஒரு பார்ட்டி நீ எனக்கு குடுக்க மாட்ட?” எனச் சொல்லிய கர்ணா, அர்ஜுன் வேதா இருவரையும் கிண்டலாய் பார்த்தான்.
இருவரும் புன்னகைத்தாலும் அவர்களுக்குள் ஒரு ரகசிய பார்வைப் பரிமாற்றம். நாம் நம்மைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டார்கள் போலும்.
இளையவர்கள் இப்படி இருக்க சமயலறையில் அம்மாக்களின் கொண்டாட்டமோ வேறு மாதிரி இருந்தது.
“அக்கா, இனி மூணு மாசம் கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும். மாப்பிளைகிட்ட சொல்லீட்டு விஜியை இங்கயே வச்சுக்க வேண்டியது தானே?”
“ம்ம் சரிக்கா. இன்னைக்கு வீடே ஒரே கொண்டாட்டமா இருக்கு. ராத்திரிக்குச் சுத்திப் போடணும். கல்யாணம் முடிய அடுத்தடுத்து சந்தோஷமான செய்தியா வருதுல்ல. கண்ணு பட்டுடும்.”
“கண்டிப்பா. மறக்காம செய்யணும், எல்லாம் மருமக வந்த நேரம்னு சொல்லனும். எப்பவும் அவ முகத்துல ஒரு சிரிப்பு. எல்லாரோடையும் நல்லாப் பேசுறா. நல்ல குடும்பம். இனியும் இப்படியே பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா நல்லது.”
“ஆமாக்கா.”
இவ்வாறான பேச்சுக்களோடு அண்டைய நாள் அழகாய் முடிந்து அனைவரும் உறங்கச் சென்றனர்.
எல்லா கொண்டாட்டங்களும் முடிய அர்ஜுனும் வேதாவும் தங்களது அறைக்குள் வந்தனர்.
“வேதா, என்ன செய்யப் போற?”
“டிரஸ் மாத்தீட்டு தூங்கணும், அவ்வளவு தான்.”
“ஓஹ் ஓகே. மாத்தீட்டு வா.”
வேதா இரவு உடைக்கு மாறி வர அர்ஜுனும் உடை மாற்றிக் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
“வேதா கொஞ்ச நேரம் பால்கனிக்குப் போலாமா?”
“தூக்கம் வருது. இன்னைக்குக் கொஞ்சம் டையர்ட்.”
“இல்லல்ல வா போகலாம், இன்னைக்கு நிலவு நல்லா இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல பௌர்ணமி. பால்கனில லைட் இல்லாமலே நல்லா இருக்கும்.”
“ஹ்ம்ம் சரி போகலாம்.”
இருவருக்கும் இந்த இடைவெளியைச் சரி செய்யும் எண்ணம் இருந்தாலும், தடுமாற்றங்களும் தயக்கங்களும் தாண்டி வர முடியாதபடி தடை செய்தன.
மேல் மாடத்துக் கதவைத் திறந்த அர்ஜுன் மின்விளக்கை அணைத்து விட்டு ராதா கிருஷ்ணரின் அருகிலிருந்த சிறு நீரோட்டத்துடன் கூடிய மின்சார விளக்கை மட்டும் எரிய விட்டான்.
“இப்ப சொல்லு வேதா, எப்படி இருக்கு இந்த இடம்?”
“இங்க இவ்வளவு வெளிச்சமா இருக்குமா? இந்த நிலா வெளிச்சத்தோட இந்தத் தண்ணி சத்தம் அங்க இருக்க சின்ன மஞ்சள் வெளிச்சத்துல தெரியிற கிருஷ்ணர் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.”
“எனக்கு இந்த நிலா வெளிச்சத்துல படுத்துக்க ரொம்பப் பிடிக்கும்.”
“இந்த மாதிரி நிலவு வெளிச்சத்துல தூங்குறது எல்லாம் அங்க அப்பத்தா வீட்டுக்குப் போனா மட்டும் தான் கிடைக்கும். இந்த இடமே ரம்யமா மனசுக்குச் சந்தோஷமா இருக்கு அஜூ.” சில நாட்களுக்குப் பிறகான அஜூ என்ற அழைப்பு அவளின் மகிழ்ச்சியை அவனுக்கும் கடத்தியது.
“ஊஞ்சலுக்கு வாடா சக்கர.”
அருகில் அழைத்துக் கொண்டவனின் இறுகிய அணைப்பில் இருவருக்கும் மொழி மறந்தது.
இருவரின் கை விரல்களும் பின்னிப் பிணைந்திருக்க, வேதா மெல்லத் தொடங்கினாள்.
“அஜூ,.. “
“சக்கரக்கட்டிக்கு இன்னைக்கும் என் மேல கோவமா டா?”
“ஹ்ம்ம், ஏன் அப்படிப் பண்ணீங்க அஜூ. என்கிட்ட சொல்லாம எல்லாருக்கும் சொல்றீங்க. அதுவும் எனக்குத் தெரியும்னு”
“நீ அன்னைக்கு நான் சொல்லும்போது கேக்கலை. அதான் நானும் உன்கிட்ட சொல்லல.”
“அன்னைக்கு இதுனாலதான் எதுவும் வேணாம்ன்னு பாதில எழுந்து வந்தீங்களா?”
“ஹும், ஆமா. அப்புறம் குழந்தைன்னு வந்திட்டா உன்னால கண்டிப்பா இவ்வளவு தூரம் எல்லாம் டிராவல் பண்ண முடியாதில்ல. அதெல்லாம் யோசிச்சுத்தான் அன்னைக்கு வேண்டாம்னு சொன்னேன்”
“ஏன் என்னாச்சு? என் சக்கர இனி எப்பவும் என்கூடத் தானே இருப்பா. இத எதுக்காக உன்கிட்ட கேக்கணும். இது எனக்கே தெரியுமே.”
“இல்ல நீங்க என்கிட்ட கேட்டிருக்கணும். எனக்கான என்னோட பிளான்ஸ் என்னன்னு. கேட்டிருக்க வேண்டாமா?” குரல் அமைதியாய் வந்தாலும், அதில் ஒரு அழுத்தம், அந்த அழுத்தம் அவள் முகத்திலும் பிரதிபலித்தது.
“வேதா ப்ளீஸ் மறுபடியும் தொடங்காத.”
“நான் தப்பா எதுவும் சொல்லல அஜூ. ப்ளீஸ். ஆனா நீங்களே ஏன் எனக்கும் சேர்த்து டிசைட் பண்ணுறீங்க? U.S போற பிளான் கண்டிப்பா உங்களுக்கு முன்னாடியே தெரியும். ஆனா என்கிட்ட சொல்லல.
குறிஞ்சியா முல்லையான்னு நீங்க கேட்ட அன்னைக்கு நான் நெய்தல்னு சொன்னேன். உனக்குப் பிடிக்கும்ன்னா கண்டிப்பா நெய்தல் தான்னு சொன்னீங்க. நீங்க இன்னைக்கு நயாகரா, கரீபியன் கடல்னு பேசும் பொது எனக்குப் புரிஞ்சுது. எனக்காகத் தான் நீங்க சொல்றீங்கன்னு.
ஆனா…” இன்னும் என்ன சொல்லி இருப்பாளோ அதற்குள் அர்ஜுன் தொடங்கி இருந்தான்.
“வேதா இப்ப உன்னோட பிரச்சனை என்ன? நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுங்கிறதா? என்ன? என்ன பிளான்ஸ் உனக்கு? சொல்லு கேட்போம்.”
“நான் முதல்லே சொன்னேன் அஜூ, நான் Ph.Dக்கு ப்ரிபேர் பன்றேன்னு.”
“இன்னமும் ப்ரிபேர் தானே பண்ற. ஸ்டார்ட் பண்ணல தானே? இந்த Ph.Dய இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பண்ணினா ஆகாத?”
“என்ன பேசுறீங்க, தொடர்ந்து படிச்சா ஈஸியாப் படிக்கலாம். கேப் ஆச்சுன்னா எப்படி முடியும்?” அவளின் எரிச்சல் குரல் அவனின் வேகத்தை இன்னும் தூண்ட மீண்டும் இருவரின் நிதானமும் எல்லை கடந்திருந்தது.
“ஓஹ், அப்ப ‘உனக்கு உன் படிப்புதான் முக்கியம்’ன்னு போய் உங்க அம்மாகிட்ட சொல்லு. என்னை அன்னைக்கு எங்க அம்மாகிட்ட பேசுன்னு ஈஸியா சொன்னல்ல? இப்ப நீ போய் உங்க அம்மாகிட்ட சொல்லு. சொல்லுவியா?”
“ஏன் சொல்லாம, கண்டிப்பா சொல்லுவேன். எங்க அம்மா மட்டும் இல்லை உங்க அம்மாகிட்டயும் சேர்த்துச் சொல்லுவேன்.”
“போடி போ போய் சொல்லு போ. எனக்கு என் புருஷன் கூடப் போகப் பிடிக்கலன்னு. சொல்லு ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷாப்படுவாங்க.”
“இன்னும் நான் உங்க கூட வர முடியாதுன்னு சொல்லவே இல்லை அஜூ. புரிஞ்சுக்குங்க ப்ளீஸ். ஏன் நீங்க என்கிட்டே சொல்லாம, என்னோட ஒப்பீனியன் கேட்க்காம நீங்களே டிசைட் பண்ணீங்கன்னு தான் கேட்டேன்?”
“வேதா, நீ என்கூட U.S வர்றேன்னும் இன்னும் சொல்லல. இப்படித் தேவை இல்லாத வாக்கு வாதம் வேண்டாம்ன்னு தான் அப்பவே உன்னை நிறுத்தச் சொன்னேன். ச்ச. என் சந்தோஷமே போச்சு உன்னால.” சொன்னவன் சட்டென எழுந்து அறைக்குச் சென்றிருந்தான்.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிய வேண்டிய இரவு, மீண்டும் கண்ணீரில் கரைந்து தூங்கா இரவாகிப் போனது.
கணவன் மனைவியாய் வாழ்க்கையில் வெல்ல அன்பும் காதலும் மட்டும் அல்ல, அளவு கடந்த பொறுமையும் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனமும் கூட தேவையாய் இருக்கிறது. இளம் இதயங்கள் இதையெல்லாம் உணருமா?
கண்ணுக்குப் புலப்படும் பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. அன்பும் காதலும் இருவரிடமும் கொட்டிக் கிடக்கிறது. பின் எது இவர்களைத் தடுக்கிறது? தான் எனும் அகந்தையா? இல்லை ஏதேதோ எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமா? தங்களுக்கு முன் இருக்கும் பனித்திரையை விளக்குவது எவ்வாறு?
ஒன்றாய் இணைந்த இவர்களின் வாழ்க்கையில் இதயங்கள் விலகி நிற்க, அங்கு விலகி இருக்கும் இரண்டு இதயங்கள் இணையத் துடித்துக் கொண்டிருந்தன.
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீா்வதற்கு இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
(திரைப்படம்: மௌன ராகம் – பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு
திரைப்படம்: அலைபாயுதே – பாடல்: எவனோ ஒருவன் வாசிக்கிறான்)