அவள் பதட்டத்துடன் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவளுக்கு மேலும் வியர்க்கத் துவங்கியது. அவள் காத்துக் கொண்டு இருந்த தருணம் நெருங்கிக் கொண்டு இருந்தது.
இதோடு முப்பது தடவை ஜன்னல் திரையை விலக்கி வெளியில் பார்த்து இருப்பாள். அந்த பெரிய மாளிகை வீட்டைச் சுற்றி பாதுகாவல் பலமாக இருந்தது. கையில் பெரிய துப்பாக்கியுடன் இரு காவலர்கள் அந்த பெரிய கேட் அருகிலேயே அமர்ந்து இருந்தார்கள்.
அடுத்த நொடியே சோர்ந்து போனாள். இது சாத்தியமா?. நினைக்கையிலே மலைப்பாக இருந்தது. இத்தனை தடைகளையும் மீறி அவள் கனவு நிறைவேறக் கூடுமா?.. என்ற பயம் மறுபடியும் அவள் மனதுக்குள் குடியேறி இருந்தது.
அப்போது அவள் கைப் பேசி சிணுங்கியது. அடுத்த நொடியே அவள் மனதுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவனாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கத் துவங்கி இருந்தன.
துள்ளித் தாவிச் சென்று ஆவலுடன் அதை எடுக்க. அவளை அழைத்தது என்னவோ அவள் தந்தை நீலகண்டன் தான்.
மறுபடியும் சோர்ந்து போனாள். “ஐயோ இவ்வளவு நேரம் லெக்சர் கொடுத்தது போதாது என்று திரும்பவுமா??” என்று மனதுக்குள் புலம்பிய படி போனுக்கு உயிர் கொடுத்தாள்.
“ஜானு.. ஏன் இன்னும் தூங்கலை?. உன் ரூம் லைட் ஏன் இன்னும் எரிஞ்சிகிட்டு இருக்கு. டுமாரோ இஸ் கோயிங் டூ பீ எ பிக் டே ஃபார் யூ. வேகமா தூங்கினா தான் ஃப்ரெஷ்ஷாக எழுந்திரிக்க முடியும். லைட்டை அமத்திட்டு சீக்கிரம் தூங்கு. குட் நைட் “.. என்ற தந்தையின் குரலைக் கேட்டவளுக்கு அப்படி ஒரு எரிச்சல் அவர் மீது.
அடுத்த நொடியே விளக்கை அணைத்து வந்து அமர்ந்து கொண்டாள். “ஐயோ இந்த வீட்டில் எதுக்குமே சுதந்திரம் இல்லையா!!. இந்த ஹிட்லர் இன்னும் தூங்காம என்னை நோட்டம் விட்டுட்டு இருக்கிறதைப் பாரு. ச்ச.. என்ன தான் வாழ்க்கையோ?
இவனை வேற இன்னும் காணோம். மனசு வேற பக்கு பக்குன்னு இருக்கு. அதுவும் இவ்வளவு செக்யூரிட்டி கார்ட்ஸைக் கடந்து அவன் என்னைத் தேடி வரணுமே!!.. இந்த அப்பா வேற.. என்னை ஒரு மனுஷியாகக் கூட மதிக்காம அவருக்குப் பிடிச்சதை மட்டுமே பண்ணிட்டு இருக்கார்.“
கைப் பேசியின் டார்ச் மூலம் தன் பேக் பேகில் ஏற்கனவே பேக் செய்து வைத்ததை இரண்டாவது முறையாக சரி பார்த்தாள்.
“ம்.. எல்லாமே ரெடி. அவன் வந்ததும் போயிடலாம். தூக்கம் வரும் சாத்தியமே இல்லாத போதும் படுக்கையில் தலை வைத்து சாய்ந்து இருந்தாள். ஆனால் ரெண்டு நாளாக டென்ஷனில் தூக்கத்தை மறந்து இருந்தவள் தன்னை அறியாமல் கண் அயர்ந்து விட்டாள்.
மணி அதிகாலை ரெண்டைத் தொட்டு இருக்க.. அவள் கைப் பேசி சிணுங்கியது. பதறிப் போய் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தவள் அதற்கு உயிர் கொடுத்தாள்.
அவளை அழைத்தது என்னவோ அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் அவள் காதல் ரோமியோ தான்.
அவன் அழைப்பைப் பார்த்ததுமே அவள் முகம் பிரகாசிக்கத் துவங்க..
“விக்கி.. எங்கடா இருக்க”.. என்றாள் ஆசையாக.
“ஜானு.. கிட்ட வந்துட்டேன். உன் ரூம் ஜன்னலை மட்டும் திறந்து வை. ஐ வில் பீ தேர் சூன்”.. என்று அவன் வைத்து இருந்தான்.
அதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும்? மெல்லச் சென்று ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள். இரு காவலர்களும் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள். “தேங்க் காட்!!. நான் கூட அவனை என்னமோன்னு நினைச்சேன். அசத்திட்டானே!!..”
“எங்க அப்பாவையே கண்ணுல விரல விட்டு ஆட்டுற ஜித்தனை தான் பிடிச்சு இருக்கேன். ஜானு!!.. இனி உன் வாழ்க்கை எங்கேயோ போகப் போவுது.!! முக்கியமா அந்த நீலகண்டன் முகத்துல கரியைப் பூசனும். என்னை மீறி உன்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு மிரட்டிக் கிட்டே இருந்தார்ல.
அவர் நம்பி வச்ச செக்யூரிட்டி மொத்தத்தையும் என் சூரக்குட்டி தூங்க வச்சி இந்த இளவரசியைத் தூக்கிட்டுப் போக வந்துட்டானே!!. இனி எனக்கு என்ன கவலை? கலக்கிட்ட டா விக்கி.”.. என்று மனதுக்குள் மெச்சியவள்.. அவன் சொன்னது போலவே அரவம் இல்லாமல் அவன் உள்ளே வர வசதியாக அவள் அறை ஜன்னலை திறந்து வைத்தாள்.
இருள் சூழ்ந்த அறையில் அவனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து இருந்தாள். அப்போது யாரோ பால்கனியில் குதித்து ஜன்னலைத் திறக்கும் சத்தம் கேட்டது.
“அட நம்ம ஹீரோ வந்தாச்சு போல.. விக்கி..”.. என்று குதூகலித்தவள். அவன் பத்திரமாக உள்ளே வரட்டும் என்று காத்து இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே சத்தம் இல்லாமல் அவனும் உள்ளே நுழைந்து இருந்தான். அவன் முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்து இருந்தான்.
உடம்பை இறுகப் பற்றி இருந்த கருப்பு பனியன், கருப்பு ஜீன்ஸ் என்று இருட்டோடு இருட்டாக இருந்தான். அவன் கண்கள் மட்டும் தான் பளிச்சென்று தெரிந்தது.
“விக்கி.. ஏண்டா இவ்வளவு நேரம்? சரி. வா நாம உடனே இங்க இருந்து போயிடலாம் என்று அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அவனோ மவுனமாகவே நின்று இருந்தான்.
எப்படிடா வந்த?.. என்று அவனை ஆராய்ந்தவள்.. அவன் முதுகோடு கட்டப்பட்டு இருந்த கயிறைப் பார்த்து.. அதிசயித்தவள்.. “ஓ.. ஜிப் வயர் மாதிரி ரோப் மூலமா வந்துட்டியா!!. பிரில்லியன்ட் ஐடியா டா. சோ நாம திரும்பவும் அப்படியே வயர் மூலமா போகப் போறோமா!!.. வாவ் த்ரில்லிங் ரைட்!!.. சூப்பர் டா. அப்ப என்னையும் சேர்த்து உன்னோட கட்டிக்கப் போறியா!!”..
என்று அவள் அவனை நெருங்கி அவனோடு எவ்வாறு தொத்திக் கொண்டு எப்படி தப்பிக்கப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையில் இருக்க..
அவர்கள் ஜன்னல் வழியாக யாரோ வரும் சத்தம் கேட்டது. தூக்கிப் போட்டது ஜானுவிற்கு. ஒரு வேளை தந்தையின் ஆட்களாக இருக்குமோ என்று பதறியவள்..
விக்கி வா. நாம அங்க ஒளிஞ்சிக்கலாம் என்று அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போக.. அந்த அறைக்குள் மற்றொரு உருவம் மாஸ்குடன் வந்து இறங்கி இருந்தது.
தைரியத்தை வரவைத்துக் கொண்டவள்.. “டேய்.. யாருடா நீ!!.. மினிஸ்டர் வீட்டுக்கே திருட வர்றியா “.. என்று அவள் கேட்க..
அந்த புதியவனோ சட்டென்று தன் மாஸ்கைக் கழட்டி.. “ஜானு!!.. நான் விக்னேஷ் டீ”.. என்று அவன் சொல்ல..
அப்போது தான் அவன் முகத்தை நிலவொளியில் உன்னிப்பாக கவனித்தவள்.. “விக்கி நீயா.. அப்ப இது யாரு??.. என்று பதறியவள் அப்போது தான் இவ்வளவு நேரமாக பற்றி இருந்த அந்த அந்நியனின் இரும்புக் கரத்தை விட்டு இருந்தாள்.
“ஏய்.. நீ யாரு.. என்று பதறிய ஜானு.. அவன் சுதாரிக்கும் முன் அவன் முகக் கவசத்தை பற்றி இழுத்து இருந்தாள்.
அவள் இதுவரை அந்த புதியவனை பார்த்ததே இல்லை. இவனுக்கு எதுக்கு மாஸ்க்? அதுதான் தாடியே அவன் மூஞ்சை மறச்சிட்டு இருக்கே”.. என்ற சிந்தனையை ஒதுக்கியவள்.. மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. இவனுக்கு அவள் அறையில் என்ன வேலை என்று பதறிப் போனவள்.. விக்னேஷ் அருகில் செல்லப் போக..
அவள் கரத்தை இறுகப் பற்றி இருந்தான் அந்த இரும்பு மனிதன்.
இருவருக்குமே அதிர்ச்சி. “டேய் அவள் கையை விடுடா“.. என்ற விக்னேஷ் அவன் அருகில் செல்லப் போக.
அந்த புதியவனோ.. அவள் சுதாரிக்கும் முன் அவளைத் தன்னோடு இறுக்கிப் பிடித்து.. ஒரு கையால் அவள் கழுத்தில் கத்தியை வைத்து இருந்தான்.
பதறிப் போனார்கள் இருவரும். ஜானு இப்படி ஒரு தாக்குதலை கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவள் கழுத்தை ஒட்டி இருந்த அந்த கூர்மையான கத்தி இருளிலும் மின்னி அவளை மிரளச் செய்தது.
அவளுக்கு ஒரு பக்கம் அவன் என்ன செய்து விடுவானோ என்ற பயம் உலுக்க. மறுபக்கம் இப்படி முன் பின் தெரியாதவனைப் போய் கையைப் பிடித்து.. கிட்டத்தட்ட அணைத்துப் பிடித்து.. என்னை அழைத்துப் போ.. என்று சொன்னதை நினைத்தால் அவமானமாக இருந்தது.
அவனாவது அவளை உதறி இருக்கலாமே. இந்த எமபாதகனும் அவள் தொடுகையை ரசித்தபடி கடைசி வரை வாயே திறக்கவில்லையே. முதலில் போய் அவன் தொட்ட இடத்தைக் கழுவி வர வேண்டும்”.. என்று அவள் மனதுக்குள் எண்ண..
விக்னேஷோ ஜானு கழுத்து அருகில் மின்னிய கத்தியைப் பார்த்து பேச்சு இழந்து விட்டான்.
“சார்.. முதல்ல அவள் கழுத்தில் இருந்து கத்தியை எடுங்க. எதுனாலும் நாம பேசித் தீர்த்துக்கலாம்”. என்று அவன் ஒரு அடி நெருங்கி வர.
“அங்கே நில்லு.. அசஞ்ச.. இவள் கழுத்துல இருக்க கத்தி ஸ்ட்ரெயிட்டா உன் இதயத்துக்கு உள்ளே இறங்கிடும்”.. என்று அவன் முதல் முறையாக வாய் திறந்து மிரட்ட..
அவன் கணீர்க் குரலில் இருவரும் ஊமையாகி நின்றனர்.
“சார்.. அப்படி எல்லாம் எதுவும் பண்ணிராதீங்க. நீங்க யாரு சார். உங்களுக்கு என்ன சார் வேணும்?”.. என்றான் பவ்யமாக..
ஜானுவுக்கு அந்த புதியவனை விட விக்னேஷ மீது கோபம் பொங்கியது. அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறானே. எதாவது செய்து இந்த கொடியவனின் பிடியில் இருந்து காப்பாற்ற மாட்டானா.. என்று மனம் ஏங்கியது.
அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்ற அவனது அக்கறை புரிந்தாலும் அவளுக்கு இப்போது நேரம் முக்கியம் ஆயிற்றே. இந்த கிறுக்கனால் அவர்கள் வெளியே செல்ல வேண்டிய நேரம் தாமதம் ஆகிறதே.
அது மட்டும் அல்லாது, எந்த நொடி வேண்டுமானாலும் அவள் தந்தையின் ஆட்கள் அங்கு வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் அவர்கள் இங்கு இருந்து வெளியேறியாக வேண்டும். அப்போது தான் விடிவதற்குள் இந்த ஊரை விட்டு அவர்கள் தப்பிச் செல்ல முடியும்.
“சார்.. உங்களைப் பார்த்தா ரொம்ப நல்ல மனுசனா தெரியுது. இந்த மாதிரி பொம்பளைப் பிள்ளை கழுத்துல போய் கத்தியை வச்சு மிரட்டலாமா”.. என்று விக்னேஷ் கேட்க..
“சரி.. அப்ப நீ கிட்ட வா.. அவளுக்குப் பதிலா உன் கழுத்துல கத்தி வைக்கிறேன்.”.. என்று அவன் அசால்ட்டாக அழைக்க..
பதறிப் போனவன், “நான் அப்படி சொல்லலை. கத்தி ரொம்ப ஷார்ப்பா இருக்கு. தெரியாம பட்டுருச்சு என்றால் என் ஜானுவால் தாங்க முடியாது. அப்புறம் அவளுக்கு வலிச்சா எனக்கு இங்க வலிக்கும்“ என்று அவன் தன் இதயத்தைக் காட்ட..
“இப்ப இந்த காதல் வசனம் எல்லாம் தேவையா.. ஒரு கையால் கத்தியைத் தள்ளி விட்டு. இன்னொரு கையால் அவன் கையைப் பின்னால் திருப்பி வளைச்சுப் பிடிச்சா போதும். பையன் சரன்டர் ஆயிடுவான். இதை விட்டுட்டு கதை பேசி கெஞ்சிட்டு இருக்கான்” என்று ஜானுவோ மனதுக்குள் அவனை கரித்துக் கொண்டு இருந்தாள்.
“இந்த வீட்ல பீரோ எங்கே இருக்கு”.. என்று அந்த அறையை நோட்ட மிட்டபடியே அந்த புதியவன் கேட்க.
இருவரிடமும் பதில் இல்லை. “சொல்லுடா.. பீரோ எங்க இருக்கு?.. நீ இப்ப சொல்லலை, உன் காதலி கழுத்தை உன் கண்ணு முன்னாலேயே அறுத்துப் போட்டு போயிட்டே இருப்பேன்”என்ற அவனது மிரட்டலில் இருவரும் நடுங்கி விட்டனர்.
“நோ நோ அவசரப் படாதீங்க.. ஜானு.. சொல்லு டீ!!. உன் வாயில் என்ன கொழுக்கட்டையா இருக்கு!!”.. என்று விக்னேஷ் அவளைப் பார்த்து மிரண்ட படி கேட்க..
“திருடன் சார், அந்த கத்தியை கொஞ்சம் தள்ளி வைக்கிறீங்களா.. நான் நீங்க கேட்டதைச் சொல்லிடறேன்”.. என்றாள் ஜானு மெல்லிய குரலில்.
“வாய் தான சொல்லப் போவுது இதுக்கு எதுக்கு கத்தியை எடுக்கணும். நீ சும்மா அப்படியே சொல்லு“ என்றான் அவன் அசராமல்.
அவன் இரும்புக் கரம் பற்றி இருந்த இடம் அவளுக்கு கடுக்கத் தொடங்கி இருந்தது.
“சார்.. கை ரொம்ப வலிக்குது. ப்ளீஸ் கொஞ்சம் கையை விட்டுட்டு பேசுறீங்களா”.. என்று அவள் குரலிலும் அவள் வேதனை அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் குரல் அவனை என்னவோ செய்தது. ஒரு பெண்ணிடம் வீரத்தைக் காட்டுவது அழகு இல்லை என்று நினைத்தவன் சிறைப்பிடித்து இருந்த அவள் கரத்தை விட்டதோடு, கத்தியை அவள் கழுத்தில் இருந்து எடுத்து இருந்தான்.
ஜானு கன்றிப்போய்ச் சிவந்து இருந்த அவள் கரத்தைத் தேய்த்து விட்ட படி விக்னேஷிடம் ஓட நினைக்க.
அவள் எண்ணம் புரிந்தவன். “நில்லு, ரெண்டு பேரும் நான் செல்றதைச் செஞ்சா அரை மணி நேரம் தான். நான் இங்க இருந்து போய் விடுவேன். அதை விட்டு விட்டு இங்க இருந்து தப்ப நினைச்சா.. “ என்று அவன் மிரட்டலுடன் நிறுத்த..
“அறுத்துப் போட்டு போயிட்டே இருப்பீங்க”.. அப்படி தான சார்”.. என்று விக்னேஷ் முடித்து வைக்க.
ஜானுவோ அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“சொல்லு.. இது உங்க வீடு தான. இங்க சேஃப்டி லாக்கர் எங்க இருக்கு”.. என்று அவன் அவளிடம் கேட்க..
“எதுக்கு சார் கேட்குறீங்க??. “ என்றாள் ஜானு புரியாமல்.
“ஹான்.. நாங்க இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்து இருக்கோம்!!”.. என்று அவன் நக்கலாகச் சொல்ல.
“போங்க சார்.. யாராவது ராத்திரி ரெண்டு மணிக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வருவாங்களா??.. அதுவும் மாடி ஏறிக் குதிச்சு?”.. என்று கேட்க..
“தெரியுதுல அப்புறம் என்னடீ கேள்வி.. போய் முதல்ல பீரோவைத் திற”.. என்று அவன் அதட்ட..
“டீ யா??.. என்றவளுக்கு அவன் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. கையில் கத்தி வைத்து இருக்கிறானே என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அமைதியாக இருந்தாள்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.