இத்தனை கேள்விக்கும் தகவலுக்கும் என பதிலாய் ஒரு தலையசைப்பு கூட இல்லை ஆர்யனிடம் இருந்து. தலைவாரிக் கொண்டு மொபைலை கைகளில் எடுக்க,
“ம்ம் போலாம் டா!” என எழுந்தான் புகழும்.
“அத்தை கிளம்புறோம்!” கீழே வந்ததும் ஆர்யனை முந்திக் கொண்டு புகழ் சொல்ல,
“ம்மா!” என்று பல்லைக் கடித்தான் ஆர்யன்.
“காலையிலேயே என்ன பஞ்சாயத்து? கிளம்புங்க டா!” என்றார் மீனாட்சி.
“இவனுக்கு வேலைவெட்டி எதுவும் இல்லையா? எதுக்கு பத்து நாளா என் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்கான்?” ஆர்யன் அன்னையிடம் கேட்க,
“வேலை எல்லாம் இருக்கு. வெட்டியா உன் பின்னாடி சுத்தணும்னு விதியும் இருக்கு!” என்ற புகழ்,
“இவர் நார்மலா இருந்தா ஏன் இவரு கூடவே அலைய போறோம்? போற இடத்துல எல்லாம் உக்காந்து கண்ணை மூடிக்கிட்டா பிசினஸ் பிச்சிக்காது?” என்றான்.
“அது என் கவலை. உனக்கெதுக்கு? உன் வேலையை மட்டும் பாரு.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத!”
“இதுவும் என் வேலை தான். நீ நார்மல் இல்லைனு தெரிஞ்சும் உன்னை எப்படி தனியா விட முடியும்?. என்னால முடிஞ்சது கூடவே சுத்தறது தான்.” என்றான் புகழ்.
“ஏன் டா அடிச்சுக்குறீங்க? இப அவன் கூட வர்றதுல என்ன பிரச்சனை உனக்கு? அதான் அவன்கிட்ட பேச மாட்ட இல்ல? என்னவும் பண்ணிட்டு போறான்னு விடேன்!” என்றார் மீனாட்சி.
“ஆமா கேட்க மறந்துட்டேன்.. நேத்து மதியை பார்க்க போறதா சொன்னிங்க? போகலையா அத்தை?” என்ற புகழுக்கு,
“நான் ஏன் பாக்காம இருக்கனும். ம் வேண்டாத வேலை பார்த்து வச்சுட்டு முகத்தை தூக்கி வச்சிருக்கவங்க தான் பாக்காம சோறு தண்ணி இறங்காம இருக்கனும்.. எனக்கென்ன? கோவில்ல வச்சு மனசு நிறைய பார்த்து சந்தோஷப்பட்டு அப்படியே சாமிகிட்டயும் வேண்டுதல் வச்சுட்டு தான் வந்தேன்!” என்றார் இருவருக்கும் பரிமாறிக் கொண்டு.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான் ஆர்யன். எதுவும் கேட்கவில்லை. வெள்ளிக் கிழமைகளில் கடந்த இரு வாரங்களாக இது தான் நடக்கிறது. ஸ்வேதா மூலம் உஷாவை தொடர்பு கொண்டு அவள் மூலம் திகழ்மதி செல்லும் அவள் வீட்டின் அருகே இருக்கும் கோவிலை தெரிந்து கொண்டு அவளே அறியாமல் பார்த்து விட்டு வருகிறார்.
கிண்டலாய் என்றாலும் மகனையும் அழைக்க தான் செய்தார் மீனாட்சி. ஆர்யன் தான் மறுத்துவிட்டான். பார்க்க வேண்டும் தான் ஆனால் பார்த்தால் மட்டும் போதாதே அவனுக்கு.
உஷாவே நேரில் பார்த்த பின்பு தான் நம்பினாள் புகழ் சொல்லிய அனைத்தையும். மீனாட்சி ஆர்யன் புகழ் மூவரும் சேர்ந்து உஷா இருக்கும் ஷூட்டிங் தளத்திற்கே நேராய் சென்றிருந்தனர் திகழ்மதி சென்ற மூன்றாம் நாளில்.
வேண்டாம் என்று தான் ஆர்யன் கூறினான். மீனாட்சி தான் திகழ்மதி வீட்டு நிலைமையை அறிய என அழைத்து வந்திருந்தார். மீனாட்சியின் மன்றாடும் குரலுக்கு பின் உஷா யோசிக்கவே இல்லை. திகழ்மதி சொல்லியதை எல்லாம் அப்படியே மீனாட்சியிடமும் சொல்ல, ஆர்யனின் செவிகளும் அதை உள்வாங்கிக் கொண்டது.
“நான் உன்கிட்ட பேசினது மதிக்கு தெரிய வேண்டாம் டா!” என உஷாவிடம் மீனாட்சி சொல்லி இருக்க, அவளுமே அவர்களை மதித்து சம்மதித்திருந்தாள். அதன் பின்னும் கூட அவ்வபோது அவளிடம் விசாரித்துக் கொள்வார் மதியை.
“மாமா என்ன சொல்றாங்க அத்த? இன்னும் அதே தான் சொல்றாங்களா?”
“அவருக்கு என்ன வேலை? அதான் அன்னைக்கே நாலு கேள்வி கேட்டேனே! அப்புறம் இன்னும் பேசல!” என்றார்.
பெண் பார்க்க வேண்டும் என்று ஆரம்பித்து அடுத்த கட்டத்தையும் நெருங்கப் பார்த்தார் விஷ்வநாதன். பட்டம்மாள் சொல்லை வைத்து தான் இப்போது அவர் அமையதியாய் இருப்பதும்.
இன்னும் விஷயம் வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் ஏன் பட்டம்மாள் முதல் புகழ் பெற்றோர் வரை திகழ்மதி ஆர்யன் இடையே சிறு பிரச்சனை என்ற அளவில் கூறி அதனால் தான் அவள் சென்றுவிட்டதாயும் கூறி என சமாளித்தது மொத்தமும் மீனாட்சி தான்.
“சீக்கிரமே வந்துடுவா.. ஆர்யா கூட்டிட்டு வந்துடுவான்.. அதுக்குள்ள மதி அவங்க வீட்டையும் பேசி சரி பண்ணட்டும்.. “ என்று என்னென்னவோ சொல்லி நிலைமையை கைக்குள் வைத்திருக்கிறார்.
ஆர்யன் சாப்பிட்டு முடித்தவன் எதுவும் பேசாமல் எழுந்து கிளம்பப் பார்க்க, “நாளைக்கு காலைல வந்துடு புகழ். நீயும் நானுமா மதி வீட்டுக்கு போய் வளைகாப்புக்கு அழைச்சுட்டு வந்துடுவோம்!” என்று சொல்ல, சில நொடிகள் நின்றவன் மீண்டும் கிளம்பிவிட்டான்.
“பாவம் த்த ஆர்யா! பத்து நாள் ஆச்சு. ஆனா இன்னும் முதல் நாள் இருந்த மாதிரியே தான் இருக்கான். இவனுக்காக மட்டுமே மதி வந்துடனும் இங்க!” என்றான் புகழ் மீனாட்சியிடம்.
“நிச்சயமா வருவா! கோவில்ல பார்த்தேன். அவளும் சந்தோசமா எல்லாம் இருக்குற மாதிரி தெரியல. அதுக்காக அவளும் ராஜாவை காதலிக்கிறானு சொல்ல வர்ல. அவளும் மனசு கஷ்டத்துல தான் இருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு.” என்றவர் கவலையாய் ஒரு பெருமூச்சைக் கொடுத்தார்.
“எங்க எப்போ யாரை எப்படி சேர்த்து வைக்கணும்னு கடவுளுக்கு தான் தெரியும்.. அவன் கையில தான் இருக்கு. மதி இப்படி தான் நம்ம வீட்டுக்கு வரணும்னு இருக்கு. இனியாவது எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம்!” என்று சொல்லி தான் அனுப்பி வைத்தார் .
**************************
அனன்யா சென்றதை கவனித்தாலும் பெரிதாய் கண்டு கொள்ளாத அரவிந்த் அன்பரசன் அருகில் அமர்ந்து திகழ்மதி கைகளைப் பற்றினான்.
“க்கா! இங்க பாரு!” என்று தனது அலைபேசியை அவள் கைகளில் அரவிந்த் கொடுக்க, வாங்கிப் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“அர்வி?” என்று ஆனந்தமாய் அதிர்ந்தவள்,
“மாமா! அர்விக்கு வேலை கிடைச்சிருச்சி மாமா!” என்றாள்.
“அப்படியா? சூப்பர் டா அரவிந்த். எங்க வேலை? எவ்வளவு சம்பளம்?” என அவர் கேட்க, கனகாவும் அசட்டையாய் கேட்டபடி அமர்ந்திருந்தார்.
“முப்பதாயிரமா? படிச்சி முடிச்ச உடனே அவ்வளவு கிடைக்குமா என்ன?” அங்கலாய்ப்பாய் கேட்டார் கனகா.
“திறமைக்கான ஊதியம் நிச்சயம் உண்டு கனகா!” என்றார் அன்பரசன்.
“ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா!” என அமர்ந்திருந்தவர் கால்களை அரவிந்த் கைகளில் தொட்டு ஒற்றிக் கொள்ள,
“நல்லா இரு டா.. ரொம்ப சந்தோசம். உன் அம்மா அப்பா எப்பவும் கூட இருந்து வழி நடத்துவாங்க..” என்றவர்,
“மதி இதுக்கு தான் ஆசைப்பட்டா. பாரேன் அவ முகத்துல எவ்வளவு சந்தோசம்னு!” என்று சொல்ல, திகழ்மதியும் பூரித்து தான் அமர்ந்திருந்தாள்.
“ஆமா மாமா! என்ன சொல்ல? ரொம்ப ரொம்ப சந்தோசம் அர்வி!” என்று அவன் சிகை வருட,
“எப்ப டா போகணும்? இன்னும் ரெண்டு மாசம் இருக்குல்ல?” அன்பரசன் கேட்க,
“இல்ல மாமா! உடனே ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க.. இந்த மாசம் மட்டும் தானே! அடுத்த வாரம் ஜாயின் பண்ணிட்டு காலேஜ் முடியிற வர வந்து போகணும்!” என்றான்.
“உடனேவா?” என்ற திகழ்மதி முகம் சட்டென வாடிவிட,
“ஆமா க்கா!” என்றவனும் எப்படி சொல்ல என யோசிக்க,
“அட இங்க இருக்கு சென்னை. இதுக்கு போய் கலங்கிகிட்டு. மதியை கொஞ்ச நாள் உன்கூட கூட்டிட்டு போ அரவிந்தா. நீ அங்க பழகுறத பார்த்துட்டா அவளும் நிம்மதியா இருப்பா இல்ல.. நீ போய்ட்டு தங்குறதுக்கு எல்லாம் பார்த்துட்டு வா.” என்றார் அன்பரசன்.
இதுவும் சரி என்றே தோன்றியது அரவிந்திற்கு. உடனே இருவரையும் அழைத்து செல்கிறேன் என்று கூறுவதற்கு பதில் இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பேசி அழைத்து சென்று கொள்ளலாம் என்று நினைத்தவன்,
“என்னோட வர்றியா க்கா?” என்றான்.
“நிச்சயமா அர்வி.!” என்றாள் புன்னகைத்து.
“நாளைக்கே போய் பார்த்துட்டு வர்றேன் க்கா” என்றான் உடனே சந்தோசமாய்.
“மகி பாப்பாவையும் கூட்டிட்டு போ டா. இல்லைனா வீட்டை ரெண்டு பண்ணிடுவா!” என்று சொல்லி அன்பரசன் சிரிக்க, திகழ்மதி அரவிந்த்துமே புன்னகைத்தனர் ஆமாம் என்று சொல்லி.
“சகிக்கல.. முப்பதாயிரம் ஒரு சம்பளம்.. அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்!” என்று முணுமுணுத்த கனகா இன்னுமே திகழ்மதியை சினிமாவில் அனுப்பிவிட தான் யோசித்துக் கொண்டிருந்தார்.
கதவருகே உள்ளே நின்று கேட்டுக் கொண்டிருந்த அனன்யாவிற்கு அழுகையோடு மகிழ்ச்சியும் தான். தன்னிடம் சொல்ல மாட்டான் என தெரியும் தான். பழைய மாதிரியாய் இருந்தால் கனகா இல்லாத நேரம் விளையாட்டாய் பேசும் போது கூறி இருப்பான். இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போய் விட, அவனின் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் மகிழ்ச்சியும் பாராமுகத்தில் கவலையும் என தவித்து நின்றிருந்தாள்.
“நீ பஸ் ஏறினதும் கால் பண்ணினான்னா நீ அங்க போய்ட்டு ரிட்டர்ன் வர்ற வரைக்கும் அரை மணி நேரத்துக்கு ஒரு டைம் உனக்கு போன் பண்ணிட்டே இருப்பா. சும்மா பேச்சு தான்!” என்றாள் திகழ்மதியும்.
“அதான் தெரியுமே! எங்க போனாலும் டார்ச்சர் விடாதுன்னு!” என அரவிந்த்துமே கிண்டல் பேசினான்.
அதையெல்லாம் கண்டு கொள்ளாதவளாய், “ஆமா! பத்து நாளா நானும் பாக்குறேன் உனக்கு பூவே வர்ல? அப்புறம் நீ சென்னை போய்ட்டா அந்த பூ பார்ட்டி என்ன பண்ணும்? இனி யாருக்கு பூ குடுக்கும்? ச்சே! ரொம்ப பீல் பண்ணும் இல்ல?” என்றாள் மகிழினி.
“பெரிய தொல்லை ஒன்னு இனி இல்லை மகி. இனி தான் நமக்கு நிம்மதியே!” என்றான் நிஜமாய் மனதில் இருந்து.
அடுத்த நாள் காலை ஞாயிறு அன்று திகழ்மதி வீட்டில் அனைவரும் நேரம் கழிந்தே எழுந்திருக்க, சாப்பிடும் நேரம் திகழ்மதி, அரவிந்த், மகிழினியோடு கீழே வர, அங்கே புன்னகை முகம் கூட பளிச்சிட்ட கண்களோடு கனகா காபியை கொடுத்துக் கொண்டிருந்தார் மீனாட்சிக்கு.