“உன்னைத்தான் கேட்கிறேன், பதில் சொல்லு. அவரை நீ லவ் பண்றியா? யார் அவர்?” என்று கனி விடாது கேட்க
“அவர்தான் என்னை லவ் பண்றார். அவர் நம்ம கோகியோட லவ்வர் ஸ்டாலின் அண்ணா ப்ரண்ட்” என்று சொல்ல
“அப்போ நீ லவ் பண்ணல?..” என்று கனி சந்தேகமாய்க் கேட்க
“இல்லடி” என்றாள் உடனே.
“அப்போ ஏன் அழுதுக்கிட்டே அவரைப் பார்க்க அப்படி ஒரு ஓட்டம் ஓடின? அவர் என்னடான்னா அரவிந்தன் பூரணியைப் பார்க்கிற மாதிரி உன்னைப் பார்க்கிறார், இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா நிலவைப் பிடித்து சிறு கறைகள் துடைத்துன்னு கவிதையே எழுதியிருப்பார் போல..” என்று கனி குறிஞ்சி மலர் நாயகன் நாயகியை சொல்ல
யமுனா “அப்படி சொல்லாதடி கனி!” என்றாள் அதட்டலாக.
“ஏன் என்னாச்சுடி இவ்வளவு கோவப்படுற? அவர் உன்னை அப்படி காதலா பார்த்தார்னு தானே சொல்றேன்” என்று கனி விளக்கம் சொல்ல,
“அந்த கதையில ஹீரோ செத்துருவார்னு சொல்லிட்டு அவரை அப்படி சொல்லுவியா?” என்றாள் கோபத்துடனும் கலக்கத்துடனும்.
“சாத்துக்குடி! என்னடி லவ் பண்ணலன்னு சொல்லிட்டு, இப்படி தவிக்கிற?” என்று கனி சரியாய் யமுனாவைப் பிடித்துக் கேட்க
“லவ் பண்ணலன்னா அக்கறைப்படக் கூடாதா? உன்னை இப்படி சொன்னாலும் நான் அப்படித்தான்டி சொல்லுவேன், சும்மா ஏன் காதல், லவ்னு என் உயிரை வாங்குறீங்க?” என்று கத்தியவள் அழுகையுடன் படுக்கையில் போய் சாய்ந்துகொண்டாள்.
சூர்யாவின் காத்திருப்பும் அவன் தனக்காக மீண்டும் மெட்ராஸ் வந்தது என்று எல்லாம் யமுனாவை என்னவோ செய்தது. அதிலும் அவனை தானும் தேடுகிறோம் என்று புரிய, இந்த தேடல்தான் காதலா என்று கவலையாய் இருந்தது.
சூர்யாவை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. அதிலும் இன்று அவன் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் இவளுக்காக காத்திருந்தது இவளை அசைத்துப் பார்த்தது. படுக்கையில் அழுகையுடன் அவள் கிடக்க, அருகே வந்தாள் கனிமொழி. அவளின் அறைத்தோழி சுமதியும் யமுனாவைப் பார்த்து அருகே வர,
“யமுனா? என்னாச்சு?” என்று கேட்க பதிலில்லை பெண்ணிடம்.
“ம்ம், நான் சொல்றேன். கேட் க்ளோஸ் பண்ற நேரத்துக்கு முன்னாடி என்னை இந்தம்மா இழுத்துட்டு போய் பஸ் ஸ்டாண்ட்ல ஒருத்தர் கிட்ட போய் நின்னா, அந்த ஆள் இவளைப் பார்த்தாரே ஒரு லுக், எம்மாடியோ என்ன ஒரு ரொமாண்டிக் லுக்ன்ற. இரண்டு பேரும் என்னவோ பேச, டைம் ஆச்சுன்னு நான் கூப்பிட்டு வரப்போ ப்ரியத்தம்மான்னு ஒரு சவுண்ட்…இவ அப்படியே பாரதிராஜா ஹீரோயின் மாதிரி ஸ்லோ மோஷன்ல திரும்பி நின்னு பார்த்தா, நாளைக்கு ஹீரோ ஸார் வெயிட் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போறார்” என்று கதையாய் சொன்னாள் கனிமொழி.
“அந்த தெலுங்குக்காரர்தானே இவ சொல்ற ஆளு?” என்று கேட்டாள். யமுனா தலையசைக்க,
“என்ன செய்யப்போறடி நீ?” என்றாள் சுமதி.
“தெரியல சுமதி, அவரை நான் கஷ்டப்படுத்துறேன்” என்று வருத்தமாய் யமுனா சொல்ல,
கனிமொழி உடனே “அவருக்கு லவ் இருக்கு பிடிச்சிருக்கு சொல்றார். உனக்குப் பிடிச்சா பிடிக்கும்னு சொல்லு, இல்லையா வேண்டாம்னு சொல்லிடு. அதை மீறி பிரச்சனை பண்ணினா என்னோட மாமா இன்ஸ்பெக்டரா இருக்காங்க, அவர்கிட்ட சொல்லிடலாம்” என்றதும் படுத்திருந்த யமுனா அவசரமாய் எழுந்து
“அதெல்லாம் வேண்டாம்” என்றாள் படபடப்பாய்.
“சரி வேண்டாம், அப்போ உனக்கு அவரைப் பிடிச்சிருக்குத்தானே?” என்று கேட்க, யமுனாவின் பதில் மௌனம்!
“மௌனம் சம்மதம்னு எடுக்கிறதா நான்? நீ என்ன நினைக்கிறன்னு உனக்குத்தான் தெரியனும் யமுனா. ஒன்னு புரிஞ்சிக்கோ, உனக்கு இஷ்டம்னா அவரோட பேசு, பழகு. இல்லை அவர் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா மொத்தமா விலகிடு. இன்னிக்கு மாதிரி நீ அவருக்காக தவிச்சுப் போய் ஓடினா, அவரோட விருப்பம் இன்னும அதிகமாகும். அதைப் புரிஞ்சு நடந்துக்கோ” என்று சொன்னவள் வெளியே சென்றுவிட்டாள்.
அன்று இரவு முழுவதும் யமுனாவிற்கு உறக்கமற்றுப்போனது.
தோழிகள் சொன்னது போல் தன்னையே ஆராய்ந்தாள். சூர்யாவைப் பிடித்தது, அவனைக் காணாமல் இருந்தால் தவிப்பாக இருக்கிறது.
பொழுது விடிந்தது. யமுனாவுக்கு சூர்யாவைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம். அவனுக்கோ யமுனாவைப் பார்க்க வேண்டும் என்ற திண்ணம்!
Murphy இல் ‘இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டு’
‘பொங்கும் பூம்புனல்’
‘பாலத்தடிச்சேனையில் இருந்து ரமேஷ், கமலா, ராதிகா’
‘தேவிபுரம் அம்பிகாபதி, பாண்டியன், விஜயா, கலா, பிலிப்’ இவர்களுக்காக நாம் பெறுவது ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்திலிருந்து மலேஷியா வாசுதேவன் ஜானகி பாடிய ‘வான் மேகங்களே’ பாடல் என்று ‘ராஜேஸ்வரி சண்முகம்’ அறிவிப்பில் பாடல் ஒளிபரப்பானது.
சூர்யா மிகவும் உற்சாகமாக இருந்தான்.
இசையை ரசித்தப்படி அந்த காலைப்பொழுதில் விசில் அடித்துக்கொண்டு கிளம்பிய சூர்யாவைக் கண்ட ஸ்டாலின்
“இவ்வளவு எக்ஸ்பெக்டேஷனோட போகாதடா சூர்யா, ஏற்கனவே நீ சொல்லி ரெண்டு தடவ அந்த பொண்ணு வராம இருந்தது. மறுபடியும் எதிர்பார்த்து ஏமாந்துடாத” என்றான் மிகவும் சீரியஸாய்.
“இத்தனை நாள் இல்லாத ஒன்னு யமுனாட்ட நான் பார்த்தேன். அவளுக்கு என் மேல் பீலிங்ஸ் இருக்கு ரா. எனக்கு தெரியுது, நேத்து நான் சாப்பிடலன்னு அவ்வளோ டென்சனோட செப்பல் கூட போடாம வந்து நின்னா. ஷி ஹிஸ் மை ப்ரியத்தம்மா. அவளுக்கு லவ் மேல பயம். இன்னிக்கு அதை பேசிடனும்” என்றான் தன் முழுக்கை சட்டையை மடித்து விட்டப்படி.
“ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி டா ஸ்டாலின், அந்த பொண்ணுக்கு நிறைய பேசி பழக்கமில்லாம இருக்கலாம்” என்றான் ராமு.
“அட போடா!” என்று அலுத்துக்கொண்டான் ஸ்டாலின் ஸ்ரீனிவாசன்.
“இவன் காதலை வைச்சு நம்ம பட்டிமன்றம் நடத்துறோம், இவன் பாரு ஹம்மிங் பண்ணிட்டு தலைவாரிட்டு இருக்கான்” என்று சூர்யாவை முறைத்தான். நண்பர்கள் எல்லாம் ஒருவழியாக கல்லூரி சென்றனர்.
யமுனாவின் அலைப்புறுதல் இன்னும் நிற்கவே இல்லை. அலைகளாய் எண்ணங்கள் எழும்பின. நிச்சயம் தெரியும் அவன் வருவான் என்று. அவனிடம் என்ன பேசுவது என்று யோசனையில் உழன்றாள். இரவெல்லாம் உறக்கமற்று போயிருக்க, வகுப்பில் தூங்கி வழிந்தாள் யமுனா.
தூக்கத்தில் யமுனா மேஜையில் இருந்த கோகிலாவின் டிபன் பாக்சைத் தட்டி விட அது கீழே விழுந்து ‘நங்’ என சத்தம் எழுப்ப, வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியை
“கேர்ள்ஸ்! க்ளாஸ் வேண்டாமா? யார் தட்டிவிட்டா? கெட் அப்!” என்றார் சத்தமாக. யமுனா தூக்க கலக்கத்தில் எழுந்து நிற்கவும்
“இஷ்டமில்லனா கோ அவுட்!” என்று திட்டினார்.
“சாரி மேம்!” என்ற யமுனாவின் குரல் சோர்ந்து ஒலிக்க,
“முடியலைன்னா ஹாஸ்டல் போ யமுனா” என்றார். இதுவரை யமுனா சத்தமாக பேசிக்கூட பார்க்காதவர். சோர்வாய் கலங்கிய கண்களுடன் அவள் நிற்க அவர் சொல்லவும் ஹாஸ்டல் சென்றுவிட்டாள். ஹாஸ்டலில் உணவு உண்டவள் தன் பர்ஸை எடுத்துக்கொண்டு வகுப்பு நேரம் முடியவும் வெளியே வர, கோகிலா பேருந்து நிறுத்தத்தில் நின்றவள் யமுனாவை ஆச்சர்யமாய்க் கண்டு,
“பரவாயில்லையே பயப்படாம வந்துட்ட” என்றதற்கு யமுனா பதில் சொல்லவில்லை. சூர்யா எங்கே இருக்கிறான் என விழிகள் தேடின. எதிர்த்திசையில் நின்றபடி இவளைத்தான் பார்த்திருந்தான். அத்தனை புன்னகை அவன் முகத்தில்! இருந்த அவ்வளவு அலைப்புறுதலிலும் அவனின் புன்னகை முகம் யமுனாவை ஈர்த்து அவன் பக்கம் இழுத்ததென்னவோ உண்மை.
அவனைப் பார்க்கும்வரையில் பலவித யோசனைகள் பாவைக்குள் ஓடினாலும் அவனைக் கண்டதும் கனிகின்ற மனதின் விசித்திரத்தில் திண்டாடிப்போனாள் யமுனா. இவள் சாலையைக் கடந்து அந்த பக்கம் போக,
சூர்யா “சாப்பிட்டியா யமுனா?” என்றான் முதல் கேள்வியாக.
“இல்லை, நீங்க சாப்பிடுங்க. நான் வெயிட் பண்றேன்” என்று யமுனா சொல்ல, சூர்யாவின் விழிகள் ஆராய்ந்தது அவள் விழிகளை.
நேற்றே தன்னால் அவன் மதியம் பட்டினி கிடந்தான் என்பது யமுனாவை உறுத்தியது. தனக்காக அவனின் ஊரை விட்டு வந்திருக்கிறான். நிச்சயம் இவன் வினோதமானவன்! தன்னிடம் பேசும் தன்மையும் அதனால் தான் உணரும் தண்மையும் யமுனாவால் மறுக்கவே முடியாது. இன்றும் தனக்காக அவன் உண்ணாமல் காத்திருக்க, அந்த செயலில் இவள் மனம் வருந்தியது.
“அப்புறம் சாப்பிடுறேன்” என்று சூர்யா மறுக்க, யமுனாவுக்கு சட்டென கோபம் எழ
“நீங்க சாப்பிட்டு வாங்க சூர்யா, நான் பேசுறேன்” என்றாள். இருவரும் வாக்குவாதம் செய்து, ஒருவழியாக ஆட்டோ பிடித்து உணவகம் சென்றனர். அவன் உண்டு முடித்து, இருவரும் கடற்கரை சென்றனர். வெயில் கொளுத்தியது.
நிழல் தேடி இருவரும் உட்கார, யமுனாவின் அருகாமை அனுராகமாய் இசைக்க சூர்யா அமைதியாக இருக்க, அவளுக்கோ அவனின் அருகாமை அவஸ்தையாக இருந்தது.
“என்ன பிரச்சனை யமுனா? எதுனாலும் டெல் மீ, நான் இருக்கேன் டா” என்று சூர்யா சொல்ல, யமுனாவுக்கு அப்படியே அவனிடம் மனதைக் கொட்டும் வேகம், இருந்தாலும் இயல்பு விடவில்லை. வஞ்சிக்கு வார்த்தை வறட்சி!
“யமுனா, உனக்கு என்னைப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுதோ இல்லையோ நாக்கு தெலுசுரா..” என்று வேகத்தில் சொன்னவன்
“ஐ கேன் ஃபீல் இட், பட் ஏன் அதை சொல்ல இவ்வளவு பயப்படுற நீ?” என்று கேட்க யமுனாவிடம் பதில் இல்லை.
“என்னைப் பாரு, யமுனா!” என்று கொஞ்சம் சத்தமாய் அழைக்கவும் முகம் பார்த்தாள் மங்கை.
அவள் முகத்தைப் பார்த்தவன் “போன வருஷம், உன்னைப் பார்த்தேன் யமுனா, ஜஸ்ட் பார்த்தேன் அவ்வளவுதான்! தென் நம்ம அடிக்கடி என்சிசி கேம்ப்ல பார்த்துருக்கோம், ஐ மீன் நான் உன்னைப் பார்த்துருக்கேன். அன்னிக்கு அந்த கேம்ப் ஃப்யர்ல நீ பேசி கேட்டேன், என்னவோ ஒரு அட்ராக்ஷன் உன் மேல. அப்புறம் பேச நினைச்சேன், பேசினோம் we got to know each other, என்னோட இன்ட்ரஸ்ட் உன் மேல ரொம்ப டீப்பா போயிடுச்சு யமுனா, நீ பேசி பழகவும் ரொம்ப நல்ல பொண்ணு. அதனால நேனு நின்னு ப்ரேமிஸ்துன்னானு, ரொம்ப நாள் சொல்லாம இருக்க முடியல, சொல்லிட்டேன். உன்னோட விருப்பம் கேட்டேன்” என்று நிறுத்தியவன்
“நீ எனக்குப் பதில் சொல்லவே இல்லை யமுனா, நிஜமா அன்னிக்கு எனக்கு அவ்வளவு கோபம் உன் மேல. இங்க பாரு ரா, எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு ரைட்ஸ் இருக்கு, உனக்கும் பிடிச்சா பிடிச்சிருக்கு சொல்லு, லேதண்டே வேண்டாம் சூர்யா சொல்லிடு”
“உனக்கு இந்திரா காந்தி தெரியும்தானே? bold and charismatic லேடி! எப்படி இரண்டு வார் சிட்டிவேஷன் ஹாண்டில் பண்ணினாங்க, stubborn அஹ் ஆக்ஷன் எடுத்தாங்க. எனக்கு அப்படித்தான் பிடிக்கும் யமுனா. நுவ்வு நா ப்ராணம்டாம்மா! இப்படி நீ அழுது கஷ்டப்பட்டா இட்ஸ் ஹர்டிங் மீ எ லாட்”
“அன்னிக்கு என்னைப் பார்க்க முடியலன்னு அழுதிருக்க, நான் பார்க்க வந்தா அதுக்கும் அழுற? வாட் இஸ் திஸ்? எங்கம்மா படிக்கல, ஸ்கூல் கூட போகாதவங்க, ஆனா அவங்க ரொம்ப தைரியம் தெரியுமா? நீ ஊர்ல இருந்து இங்க வந்து படிக்கிற, டீச்சர் ஆகனும் இஷ்டம்ன்ற, இப்படி மனசுல உள்ளதை சொல்லக்கூட யோசிச்சா எப்படி ரா? இப்படி பேசவே யோசிச்சா எப்படி டீச்சர் ஆவ நீ?” என்றவன் அவளையே பார்க்க, யமுனாவின் பார்வை மொத்தமும் அவன் மீதுதான்.! அவன் பேச்சில் ஆழ்ந்திருந்தாள்.
இவனைத் தவிர யாரிடமும் இத்தனை பேசிய நினைவில்லை, அப்படியொன்று நிகழவுமில்லை. இவ்வளவு நிதானமான பேச்சுகள் எல்லாம் அவளை மதித்து யாரும் பேசியதில்லை. அவன் பேச்சுகள் பிடித்தது, பேச்சின் போது
இவள் கவனிக்கிறாளா என்று பார்க்கும் அவனின் கண்கள் பிடித்தது. இப்படியே இருந்துவிட்டால் போதுமென்று தோன்றியது.
யமுனா தன்னை விடாது பார்க்க, அந்த பார்வையில் இவனுக்கு வெட்கம் மிகுந்துவிட,
“என்ன ரா பார்த்துட்டே இருக்க?” என்று கேட்டான். அவனின் பேச்சு நின்று, பார்வை இவள் மீது இருக்க, அவனின் கேள்வியில் தடுமாறினாள்.
“அ….அ..து?” என்று திணற,
ரசனையுடன் யமுனாவைப் பார்த்து “என்னைப் பார்க்கனும்னா பார்த்துட்டே இருக்கலாம், நோ ப்ராப்ளம்! நா கேஸீ சூடுரா” என்றான் வசீகரப்புன்னகையுடன். ஆவல் மிகுந்த காதல் பார்வை அவன் பார்க்க, அந்த பார்வைகள் புதிது! அதில் தடுமாறி மயில் விழிகள் அசைந்தாட
“சூ..சூர்யா..!” என்றாள் தயக்கமாக. அவனின் பார்வைக்குப் பதில் சொல்லவே முடியவில்லை. எத்தனையோ முறை அவனிடம் பேசியிருக்கிறாள், அவளிடம் ஒரு இடைவெளி விட்டு பேசுவான். பார்வைகள் கூட மிகுந்த கண்ணியமாக இருக்கும். இன்றும் கண்ணியத்திற்குக் குறைவில்லை, ஆனாலும் காதலால் நிறைந்திருந்தது!
“இங்க பாரு யமுனா, நீன்னா எனக்கு சால சால… ரொம்ப இஷ்டம்ரா ப்ரியத்தம்மா, பட் உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத, நம்ம இன்னும் படிக்கனும். வேலைக்குப் போகனும், உனக்கான என்னோட பாசம் வெயிட் பண்ணும், எத்தனை வருஷமானாலும். ஸோ நீ டென்ஷன் ஆகவே வேண்டாம்டா. நீ படிச்சு முடி, அப்புறம் பார்த்துக்கலாம். அப்படியும் உனக்கு நான் டிஸ்டர்ப் பண்றன்னு நினைச்சா நான் குண்டூர் போயிடவா யமுனா?” என்று அவன் கேட்க, முதலில் அவன் பேசியதை கவனமாகக் கேட்டவள் அவன் போகவா என்று கேட்ட நொடி அதிர்ந்து போனாள். சில நொடிகள் அதிர்வில் இருந்தவள் திரும்பிப் பார்க்க, சூர்யாவைக் காணவில்லை.
சட்டென கண்ணீர் கசிய, அவளது அழுகை அவளுக்கே பிடிக்கவில்லை. சூர்யாவுக்கு அழுதா பிடிக்காது என்று மனம் சொல்ல, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பார்வையை ஓட்ட, கையில் பஞ்சு மிட்டாயுடன் அவளிடம் வந்துகொண்டிருந்தான்.
“எங்க போய்ட்டீங்க சூர்யா சொல்லாம?” என்று கொஞ்சம் கோபமும், கவலையும் சேர யமுனா கேட்க
“சொல்லிட்டுத்தானே யமுனா போனேன்” என்றவன் “டேக் இட்!” என்று பஞ்சு மிட்டாயை நீட்ட, அவன் வந்துவிட்டான் என்ற ஆசுவாசத்துடன் அவள் பார்த்து நிற்க
“எடுத்துக்கோ மா, உனக்குப் பிடிக்குமேன்னுதான் வாங்கினேன். இதுக்காக எல்லாம் என்னை லவ் பண்ண சொல்ல மாட்டேன்” என்றான்.
உடனே அவன் கொடுத்த பஞ்சு மிட்டாயை வாங்கிக்கொண்டாள். அவளை பஞ்சுமிட்டாய் சாப்பிட சொல்லி, அவள் முடிக்கவும் பேசினான்.
“உனக்கு என்னைப் பிடிச்சாலும் பிடிக்கலனாலும் எனக்கு எப்பவும் உன் மேல இருக்க ப்ரியம் மாறாது யமுனா, இட்ஸ் ஃபாரெவர். உன்னோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம். எனக்கு சான்ஸ் கொடுரா. டூ இயர்ஸ் இருக்கு, படிச்சு முடி, அப்புறம் என்னைப் பிடிச்சா சொல்லு” என்றவன்
“முன்னாடி ப்ர்ஸ்ட் டைம் ப்ரோபோஸ் பண்ணினதால என்ன சொன்னேன் கூட நாக்கு தெல்லேது, இப்போ க்ளீயரா சொல்லிட்டேன். இப்பவாச்சும் பேசு யமுனா” என்றான் பொறுமையாக.
பதில் பேசாமல் இருப்பது தவறு என்று நினைத்தாள் யமுனா. சூர்யாவின் மீது நம்பிக்கை வந்தது, இத்தனை பேசினாலும் என்னை விட்டு விலகிடுவேன் என்ற வார்த்தை மட்டும் அவனிடம் வரவில்லை என்று குறித்துக்கொண்டது மனம்.
காதலிக்கிறேன் என்கிறான்! காத்திருக்கிறேன் என்கிறான்! விலகுகிறேன் என்ற வார்த்தை வரவில்லை. விலகவும் மாட்டான் என்று அவனின் உறுதியான வார்த்தைகளில் புரிந்தது.
சூர்யாவுடன் இருக்கும் பொழுதுகள் தீரவே கூடாதென மனம் யாசிக்கின்றது, இந்த உணர்வின் எதிர்காலம் என்னவென்று மனம் யோசிக்கையில்தான் பயம் சூழ்கிறது பாவையை.
“சூர்யா, எனக்கும் உங்களை பிடிக்கும்” என்று யமுனா சொல்ல, என்னதான் உணர்ந்தாலும் அவள் வார்த்தையில் உயிர்த்தான் அவன்.
“நா ப்ரியத்தம்மா!” என்று காதலாய் இதழ்கள் முணுமுணுக்க
“என்ன?” என்று யமுனா பார்க்க
“பேசும்மா” என்றான் புன்னகையுடன்.
“நீங்க என்னைத் தப்பா நினைக்க மாட்டீங்கதானே சூர்யா?” என்று கலக்கமாய் அவள் கேட்க
“என் யமுனாவை அப்படி நினைப்பேனா? நான் என்ன நினைச்சாலும் நீ நினைக்கிறதை சொல்லு. உனக்கு நான் எல்லா ரைட்ஸ் கொடுத்திருக்கேன்மா. எதுனாலும் பேசு” என்று அவன் ஊக்குவிக்க குனிந்து மண் மீது பார்வையைப் பதித்தவள்
“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு சூர்யா, உங்களோட பேச பிடிச்சிருக்கு. உங்க கூட இருக்கும்போது சந்தோஷமா இருக்கு, ஆனா பயமா இருக்கு சூர்யா. நீங்க எங்கிட்ட காதல் சொல்றீங்க, கல்யாணம் செய்ய இஷ்டப்படுறீங்க, எனக்கு அப்படியெல்லாம் யோசனை இல்லை சூர்யா. அப்பாவை மீறி என்னால யோசிக்க முடியாது. அவர் கொன்னே போட்டுடுவார்”
“உங்களைப் பார்க்கலன்னா இதெல்லாம் தோணாதுன்னு நினைச்சேன், பார்க்காம இருக்கும்போதும் உங்களைத்தான் நினைச்சேன். ஒருதடவயாச்சும் உங்களைப் பார்த்துட மாட்டோமான்னு ரொம்ப ரொம்ப தவிச்சேன். என்னால இதை யார்கிட்டவும் சொல்ல முடியல. இது தப்பா சரியான்னு கூட தெரியல” என்றபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
யமுனா தன்னைத் தேடியிருக்கிறாள் என்பது சூர்யாவின் தவிப்புகளை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்க, இன்னும் இன்றியமையாதவள் ஆகிப்போனாள் யமுனா.
“அவுனா? என்னை தேடினியா?” என்று ஆனந்தத்துள்ளலுடன் அவன் குரல் வர, யமுனா அவன் சொன்னது புரியாது விழித்தாள்.
“இஸீட்?” என்றான் ஈர்க்கும் புன்னகையுடன்.
“ம்ம்” என்றாள் முணுமுணுப்பாக.
“என்னைத் தேடியிருக்கன்னு நீ சொல்லும்போது ஐ ஃபீல்…” என்று தன் கையை நெஞ்சில் வைத்தவன் “எனக்கு சொல்லத் தெரியல” என்றான் காதலாக.
விழிகளே அத்தனை பாவம் காட்டின, தனது தேடல் அவனை இவ்வளவு பாதிக்குமா? தான் என்றால் இவ்வளவு இஷ்டமா? அவனின் பூரித்த முகமும், நெஞ்சத்தில் கைவைத்து இவளைக் காதலாய்ப் பார்த்த கண்களும் அவனின் உணர்வுகளை உரைக்க அதிசயித்துப்போனவளுக்கு அனுபவிக்கத்தான் முடியவில்லை.
அப்பாவை நினைத்தாலே உடல் அதிர்ந்தது. அவரை மீற முடியுமா உன்னால் என்ற கேள்வி முன் நிற்க,
“சூர்யா! நீங்க வேற மொழி பேசுறீங்க, அது கூட எனக்குப் புரியல, இதெல்லாம் என் வீட்டுக்குத் தெரிஞ்சா உங்களை எதாவது செஞ்சிடுவாங்க, இந்த கஷ்டமெல்லாம் வேண்டாம்” என்றாள் தெளிவாக. அழுகையின் ஆரம்ப நிலையில் இருந்தது அவள் குரல்.
“ஏன்ட்டீம்மா? நான் நல்லாதானே தமிழ் பேசுறேன்” என்றவனின் தமிழில் அந்த சூழ்னிலையையும் மீறிய ஒரு சிறு முறுவல் அவளிடம். பின்னே தெலுங்குவாசம் வீசும் அவன் பேச்சில், என்னதான் தமிழில் வார்த்தைகள் வந்தாலும் உச்சரிப்பும் பாவனையும் அவன் தமிழன் இல்லை என்று கேட்பவருக்கு சொல்லிவிடும்.
“எந்துக்கு சிரிக்கிற? நான் உனக்காக டெய்லி தமிழ் பாட்டு கேட்கிறேன் தெரியுமா?” என்ற சூர்யாவின் பேச்சில் யமுனாவின் கண்கள் பனித்தன.
“சூர்யா! நீங்க ரொம்ப நல்லவர், அறிவாளி. எனக்காகன்னு நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். உங்களைப் பிடிச்சிருக்கு, ஆனா கல்யாணம்ன்றது எல்லாம் பெரிய விஷயம். நீங்க விலகிப்போனாலும் எனக்கு வலிக்குது, எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல சூர்யா. ப்ளீஸ் என்னை மறந்துடுங்க சூர்யா. நீங்க என்னை நினைக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சா கூட என்னை நானே சமாதானம் செஞ்சுப்பேன். இதெல்லாம் யோசிச்சு எனக்கு தூக்கமே இல்லை, இன்னிக்குக் க்ளாஸ்ல தூங்கி மேம்ட்ட திட்டுவாங்கினேன் தெரியுமா?” என்றாள் அழுகையுடன்.
யமுனாவால் உணர்வுகளில் பாரம் தாங்கமுடியவில்லை. சூர்யாவின் காதல் என்பதை விட அவன் தரும் அந்த புது உணர்வு, தன்னை மதித்து பேசும் அவனின் குணம், தன்னிடம் காட்டுகின்ற பேரன்பு எல்லாம் வேண்டும் என்ற பேரவா பேரலையாய் உள்ளத்தில் எழுந்தது. அதே நேரம் அப்பாவை நினைத்தால் மனம் தடதடத்தது. அம்மா பேச்சால் தன்னைக் கொன்றுவிடுவார் என்று நினைக்க நினைக்க அழுகை அதிகமாகியது. உடனே சூர்யா
“அழாத யமுனா! ப்ளீஸ்!” என்று சமாதானம் செய்ய, அவளின் அழுகை அடங்கவில்லை. இத்தனை நாள் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித்தீர்த்திருக்க, அழுகையில் ஆசுவாசம் கொண்டாள்.
“அழாதடா!” என்று அவன் சமாதானம் செய்ய, இவனின் அன்பை எதிர்க்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூட தைரியமற்று இருக்கிறாயே என்ற சுய இரக்கத்தில் கரைந்தாள்.
“யமுனா, நான் வேணும்னா போய்டவா?” என்று அவன் அவளின் அழுகைத்தாங்காமல் கேட்க
“வேண்டாம் சூர்யா!” என்றவள் அவன் போய்விடுவானோ என்று பயத்தில் அவனின் கைப்பற்றிக்கொண்டாள். யமுனா தன் கைப்பற்ற, சூர்யாவின் கைகளும் விடாமல் தன்னவளைப் பற்றிக்கொண்டது.
‘அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்..!’